கோவிலிலிருந்து கிளம்பும்போது, சித்ரஞ்சன் கொஞ்சம் தயங்கியே
“வசு! நீ வண்டி ஓட்டுறியா?” என்று கேட்டான்.
பல வருடங்களாக வசுந்த்ரா இப்படியான வண்டிகள் ஓட்டுவதில்லை. ஏனோ ஒரு கோபம், பிடிவாதம். ‘எங்கப்பாவோட வண்டிதான் ஓட்டுவேன்’ என்ற எண்ணம். சித்ரஞ்சன் சில முறை ஆசையாய்க் கேட்டும் மகனை பள்ளியில் விட, அழைக்க என்று ஸ்கூட்டி வாங்கி ஓட்டியவள் சித்ரஞ்சன் வண்டியைத் தொட மாட்டாள்.
‘உனக்குப் பிடிச்சதை செய்ய மாட்டேன்’ என்ற பிடிவாதம்.
இப்போது அப்பா, அண்ணனிடம் உண்மையைப் பேசிய பின் மனம் நிறைவின் லயத்தில் லாளிதமாக பயணிக்க, கணவன் ஆசையை நிறைவேற்றினாள். வெறும் பத்து நிமிடம் பயணம்தான். சித்ரஞ்சனுக்கு அப்படியொரு சந்தோஷம்! சிறகின்றி பறந்தான்!
“நான் வண்டி ஓட்டி நீங்க பின்னாடி உட்கார்ந்தா எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்க, பரவாயில்லையா ரஞ்சன்?” என்று வண்டியை ஸ்டார்ட் செய்து வசுந்த்ரா கேட்க
“நீ ஒட்டுறதை விட எனக்கு பெரிய சந்தோஷம் கிடையாது. எவன் என்ன சொன்னாலும் எனக்குக் கவலையில்லை” என்று சட்டென்று சொன்ன சித்ரஞ்சனை அத்தனை காதலோடு பார்த்தாள் வசுந்த்ரா.
“அப்போ எனக்கு ஓகே” என்ற வசுந்த்ராவுக்கு ஒரு உற்சாகம் தொற்ற, பறந்துவிட்டாள்.
“ஹேய்! கேர்புல்” என்று சித்ரஞ்சன் கத்த, வசுந்த்ரா பெரும் சிரிப்போடு வண்டியெடுத்தாள். கவனமாகவே ஒட்டிவந்தாள். சரோஜினி இதனை ரசித்தபடி பின்னால் வர, மகள் வந்ததும் சித்ரஞ்சன் சுதந்திர விலாசத்தின் கதவைத் திறக்க ஸ்கூட்டியை நிறுத்தினாள் சரோஜினி.
“சித்தப்பா! நீங்க உள்ள நிறுத்துங்க. சித்தி என்னை வச்சு ஒரு ரவுண்ட்” என்று சரோ ஆவலாகக் கேட்டாள்.
“நீயே ஓட்டு” என்று வசுந்த்ரா சொல்ல
“எனக்குத் தெரியாது சித்தி, பயமா இருக்கும். இந்த லாலா ஸ்கூட்டிதான் பொண்ணுங்களுக்கு ரைட்னு சொல்லி இதைத்தான் கத்துக்கொடுத்தான்” என்றதும்
“சரி வா” என்று வசுந்த்ரா சொன்னதும் சரோஜினி பின்னால் ஏறி உட்கார்ந்தாள்.
திண்ணையில் நின்ற லாலா இதனை வேடிக்கைப் பார்க்க
“டேய் உன் தங்கச்சி என்னை வெறுப்பேத்த பண்றாளாடா? நான் அவ்வளவு தூரம் சாரி கேட்டும் எனக்குப் பதில் சொல்லல. உங்க சித்தப்பா என்னடான்னா பொண்டாட்டி பின்னாடி ஜாலியா உட்கார்ந்துட்டு வரார்” என்றான் கோபமாக.
“ஆனாலும் மாப்ள எங்க சித்தப்பாவைப் பார்த்தெல்லாம் பொறாமை படுறியேடா. அவர் பொண்டாட்டி பின்னாடி அவர் வரார். நீயும் சரோவைக் கூட்டிட்டு சுத்தேன்” என்றான் லாலா.
“ஆத்தாடி! இதென்ன கூத்து அடிக்கிறாளுங்க” என்று அஞ்சம்மா முன்பக்கம் வந்தவர் மருமகளும் பேத்தியும் வண்டியில் செல்வதைப் பார்த்து வாயில் கைவைக்க
“என்னம்மா பிரச்சனை?” என்றான் சித்ரஞ்சன்.
“டேய்! நீ என்ன வேடிக்கைப் பார்க்கிற? போடா” என்று அவனையும் விரட்டினான்.
“அவன் வாடா’ன்றான் இவர் போடா’ன்றார். என்னைப் பார்த்தா எப்படி தெரியுது உங்களுக்கெல்லாம்” என்று கோபமாக முணுமுணுத்தபடியே சென்றான் லாலா லஜபதி ராய்.
“ஏண்டா வயசுப்பொண்ணு வண்டியில போய் கை கால் உடைஞ்சிட்டா என்னடா பண்றது?” அஞ்சம்மா மகனிடம் கேட்க
“வசு என்னை விட நல்லா ஓட்டுவா. நீ போய் உன் சீரியலைப் பாரும்மா” என்று அவரை அனுப்பிய சித்ரஞ்சன் உற்சாகமான மனதோடு அறைக்குச் சென்றான்.
சக்தியோ சரோஜினி பதில் சொல்லாத தவிப்பில் திணறியபடி கடுப்போடு உறங்கினான்.
வீடு வரவும் “லேட்டாச்சு சரோ, உன் சித்தப்பா சாப்பிட்டு கிளம்பணும் சொன்னார்” என்று அரக்க பறக்க சமையலில் ஈடுபட்டாள் வசுந்த்ரா.
ஏற்கனவே சோறு வடித்துவிட்டுத்தான் கோவிலுக்குக் கிளம்பியிருந்தனர். வாஞ்சிநாதனுக்கும் பகத்’க்கும் மட்டும் கொஞ்சமாக குழம்பு வைத்து சித்ரா காலையில் கொடுத்துவிட்டிருந்தார். வசுந்த்ரா பருப்பு வேகவைத்திருக்க, சரோஜினி காய்கறிகள் நறுக்கினாள்.
இருவரும் வேகமாக சமையல் செய்ய, சரோஜினி சித்தியிடம்,
“உங்களுக்கு சித்தப்பா மேல ரொம்ப லவ் இல்ல சித்தி?” என்றாள்.
“என்ன திடீர்னு இப்படி கேட்கிற?’
“எனக்கு முன்னாடி நீங்க லவ் மேரேஜ் சொன்னப்ப கூட அப்படி தோணினதில்ல. இப்போ தோணுது! சித்தப்பா செஞ்ச மாதிரி சக்தி செஞ்சிருந்தா என்னால தாங்கியிருக்க முடியாது. நானும் சக்தியும் லவ் பண்றோம், அவன் அப்படி செய்ய மாட்டான். இருந்தாலும் கூட எனக்குப் பிடிக்காத மாதிரி அப்படி செஞ்சிருந்தா நான் உங்களை மாதிரி பொறுமையா இருந்திருக்க மாட்டேன் சித்தி” என்றாள் சரோஜினி.
“நீ சொன்னியே சக்தி இப்படி செய்ய மாட்டான்னு. அப்போ உன் சித்தப்பா நான் லவ் எல்லாம் பண்ணினதில்ல, ஆனாலும் ஒரு நம்பிக்கை அவர்மேல இருந்தது. எனக்கு அவரை சின்ன வயசுல இருந்தே தெரியும், உங்கப்பா கூட பார்த்தாலும் பேசாம போவார். நாங்க ஒரே ஸ்கூல் பார்க்கிறப்ப தலையாட்டிட்டு உன் சித்தப்பா தெரிஞ்சமாதிரி ஒரு சிரிப்பு சிரிச்சிட்டு போவார். அப்புறம் எப்பவாச்சும் பேச கூட செய்வார். அவர் லவ் சொன்னப்போ கூட எனக்கு ஆச்சரியமா இருந்தது.”
“எங்கப்பா கிட்ட கேட்டிருந்தா கூட யோசிச்சிருப்பார். ரஞ்சன் மாமா அப்படி பண்ணுவார்னு நான் நினைச்சே பார்த்ததில்ல சரோ…” என்றபோது வசுந்த்ராவின் கண்கள் கலங்கியிருந்தன.
“ஒரு அடிப்படை மரியாதை இருந்தது அவர்மேல். பக்கத்து வீட்டுப் பையன் தெனைக்கும் ஒரு தடவாச்சும் பார்க்கிற மாதிரி இருக்கும். என்னால கொஞ்சம் கூட அவர் செஞ்சதை அந்த நிமிஷம் நம்பவே முடியல..” என்றாள் அந்த நாளின் நினைப்பில்.
“ரஞ்சன் மாமா?” சரோ கேள்வியாக நிறுத்த
“அப்போ அப்படித்தான் சொல்லுவேன்” என்ற வசுந்த்ராவுக்கு நேற்றைய நிகழ்வு, இன்று காலை கோவிலுக்குப் போனது, சரோஜினியின் கேள்வி எல்லாம் மனம் திறக்க வைத்தது.
“உண்மைதான் சரோ! எங்கப்பாவுக்கு விஷயம் தெரிஞ்சு அங்க வராம இருந்திருந்தா நான் அதான் செஞ்சிருப்பேன். ரொம்ப நாள் யோசிச்சிருக்கேன் உங்க சித்தப்பா கிட்ட அப்போ சண்டை போடாம தாலியைத் தூக்கிப்போட்டு சட்டுனு வந்திருக்கணும்னு.” என்ற சித்தியைப் புரிந்துகொள்ள முடியாது பார்த்தாள் சரோஜினி.
வசுந்த்ராவுக்கு அன்றைய அதிர்ச்சியில், சித்ரஞ்சனின் செயல் கொடுத்த திகைப்பிலிருந்தே மீள முடியவில்லை. அதற்குள் ஊரார் வந்துவிட பேச்சு, சண்டை என்று போக அவளால் எதையும் சொல்லவோ செய்யவோ முடியவில்லை.
“உன் சித்தப்பாவை எனக்குக் கொஞ்சமாச்சும் தெரியும். எங்கண்ணாவும் சொல்லியிருக்கான், என்கிட்ட கூட ப்ரோபோஸ் பண்ணியிருந்தார். அதெல்லாம் விட நம்ம ரெண்டு குடும்பத்துக்கும் சண்டை. என் விஷயம்’ணா எங்கப்பாவும் அண்ணனும் சும்மா விடுவாங்களா? நமக்கு முடிவெடுக்க முடியாத நேரத்துல எடுக்க கூடிய சிறந்த முடிவு என்ன தெரியுமா சரோ?” என்று கேட்ட வசுந்த்ரா அவளே பதிலும் சொன்னாள்.
“முடிவெடுக்காம இருக்கிறதான்! என் பெர்மிஷன் இல்லாம இவ்வளவு பெரிய செய்வானா இவன்னு அவ்வளவு கோவம், அதை காட்டுறதுக்குள்ள ரெண்டு வீட்டுக்கும் விஷயம் தெரிஞ்சு எல்லாரும் நாங்க லவ் பண்ணினோம் நினைச்சிட்டாங்க.. எனக்கு அந்த நிமிஷம் எங்கப்பாவோட கோவம்தான் தெரிஞ்சது. இதே எனக்குத் தெரியாத, வேற யாரோ ஒருத்தன் இப்படி செஞ்சிருந்தா கம்பி என்ன வச்சிருப்பேன்” என்ற வசுந்த்ராவின் கோபம் கண்ட சரோஜினி
“சாரி சித்தி! நான் ஏதோ கேட்க போய் நீங்க டென்ஷன் ஆகாதீங்க” என்றாள் பயத்தோடு.
“ஹேய்! அதெல்லாம் ஒன்னுமில்லடி சரோ” என்ற வசுந்தராவின் புன்னகை முகம் பார்க்கவும்தான் சரோஜினிக்கு நிம்மதியானது.
“இவ்வளவு கோவத்துக்கு அப்புறமும் எப்படி சித்தி சமாதானமானீங்க?”
புதிரின் விடை கேட்பது போல் அத்தனை ஆர்வமாக இருந்தாள் சரோஜினி.
“காதலிக்கிறது ரொம்ப ஈசி சரோ. காதலிச்சிட்டே இருக்கிறதுதான் கஷ்டம்! உன் சித்தப்பா இதுல ரெண்டாவது கேட்டகரி. எனக்கு கல்யாணமாகி ஒரு வருஷம் வரைக்கும் தப்பு பண்ணிட்டேன் தோணும், பேசாம எங்கப்பா கிட்ட சொல்லியிருக்கணும் தோணும். அன்னிக்கு ஒன்னும் சொல்லாம இருந்துட்டு அடுத்து இவரோடதானே வாழ்க்கை, அதை அப்போ யோசிக்க முடியல எனக்கு. கோவம், கோவம், கோவம்.”
“உன் சித்தப்பா நல்லவர், நல்ல கணவர் இல்லனு சொல்லல. பட் அவரோட அவசரத்தால, கொஞ்சம் தைரியமா உங்க தாத்தா கிட்ட பேசாததால நான் என் அப்பாவை, அண்ணாவை இத்தன வருசம் பிரிஞ்சிருந்தேன். அவசரப்பட்டு உண்மை சொல்லியிருந்தாலும் உங்க சித்தப்பாவை எங்கப்பா என்ன வேணும்னாலும் செஞ்சிருப்பார்.. எப்பவும் கொஞ்சம் நிதானமா இருக்கணும்.”
உச்சபட்ச உணர்வுகள் உன்மத்தம் கொடுப்பவை. எந்த பரவசமானாலும் அது தற்காலிமானதுதானே? சித்ரஞ்சனின் காதல், வயதுக்குரிய ஒரு வேகம், அவசரம் அதுதானே வசுந்த்ராவைக் காயப்படுத்தியது. அதே வேகத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை வசுந்த்ரா.
“இந்த மிருகங்க எல்லாம் ஹை ஸ்டேட் போனா மதம் பிடிச்சது சொல்றொமில்லை. அப்படித்தான் மனுசங்களோட அதீதமான பீலிங்க்ஸும், ரொம்ப சந்தோஷம் ரொம்ப துக்கம் அப்போ எதுவும் முடிவெடுக்கக் கூடாதுனு எங்கப்பா சொல்லிக்கொடுத்திருந்தார். ஒன்னு அன்னிக்கே நடந்ததை சொல்லியிருக்கணும் இல்ல இந்த லைப் ஏத்துட்டு வாழணும். உங்க சித்தப்பா சில நேரம் கோவப்பட்டாலும் பல டைம் என்னை அப்படி பார்த்துப்பார்.”
“அப்போ எல்லாம் அவர் செஞ்சதை சொல்லி ஹர்ட் பண்ணி நானே என்னை சமாதானம் பண்ணிப்பேன். உங்க சித்தப்பா கூட வாழ ஆரம்பிச்சதும் எனக்கு அவரை புரிஞ்சது. ரொம்ப ரொம்ப சாப்ட் அவர், மன்னிக்க முடிஞ்சது. எனக்கே தெரியாது சரோ எனக்கு ஒருத்தரை இப்படி பிடிக்கும்னு.”
“இந்த பட்டிமன்றத்துல பொண்டாட்டியைக் கிண்டல் பண்ணி பாடாவதி காமெடி பண்ணி எல்லாரும் சிரிப்பாங்க இல்ல, அது மாதிரி கூட உன் சித்தப்பா செஞ்சதில்லை. கல்யாண விஷயத்துல என்னை மதிக்கல, என் விருப்பம் கேட்கலனு எனக்கு வருத்தம் அப்படியே இருந்தாலும் அதுக்கு அப்புறம் என்னை கேட்காம அவர் எதுவும் செஞ்சதில்லை. விளையாட்டா கூட சில விசயம் பேசவோ, செய்யவோ மாட்டார் உன் சித்தப்பா. எனக்கே சில நேரம் தோணும் இந்தாளா அப்படி செஞ்சாருன்னு.. அப்படி தோணுற அன்னிக்கு உன் சித்தப்பா சிக்கினார்” என்று சிரித்தாள் வசுந்த்ரா.
“ஆனாலும் உங்க லவ் ரொம்ப பெருசு சித்தி. சித்தப்பாவை இவ்வளவு பிடிக்குது அப்பவும் அவர் உங்களை கல்யாணம் பண்ணினது தப்புனு சொல்றீங்களே.. நமக்குப் பிடிச்சவங்க செஞ்சா, அதுவும் நமக்காக செஞ்சா..” என்றதும் சரோஜினியின் காதை திருகினாள் வசுந்த்ரா.
“பிடிச்சவங்க செஞ்சாலும் தப்புன்னா தப்புதான்! அப்படியே உங்க சித்தப்பா மாதிரி பேசக்கூடாது” என்று சொல்ல
“ஆஹ்.. வலிக்குது சித்தி” என்று காதைத் தேய்த்தாள் சரோஜினி.
“உன் சித்தப்பாவே இப்போதான் செஞ்சது தப்புன்னு முழு மனசோட அக்செப்ட் பண்ணியிருக்கார். நம்ம செய்ற விஷயத்தை நம்ம பசங்க செய்றதை நம்ம விரும்பல, நம்மளால அவங்க கிட்ட அதை பெருமையா சொல்ல முடியலன்னா அது தப்புதானே சரோ? உன் சித்தப்பா இப்போல்லாம் அதை நினைச்சுத்தான் பீல் பண்றார்.”
பேசிக்கொண்டே இருவரும் சமைத்து முடித்திருந்தனர்.
“உனக்கும் சக்திக்கும் என்ன பஞ்சாயத்து? ரொம்ப நேரம் ஒரே சத்தமா இருந்தது?”
“அது லாலா விஷயம் சித்தி. எனக்கு அவன் எப்ப பாசமாயிருக்கான் இல்லனு புரிய மாட்டேங்குது. நான் நினைக்கிறப்ப என்னை கண்டுக்க மாட்டேங்கிறான், திடீர்னு என்னை விட்டுக்கொடுக்காம பேசுறான்.” என்று சரோஜினி புலம்பினாள்.
“யாராலையும் யாரையும் எப்பவும் நேசிச்சிட்டே இருக்க முடியாது சரோஜினி. அதை புரிஞ்சிக்கோ. அண்ட் கல்யாண வாழ்க்கை எப்பவும் பிப்டி பிப்டி கிடையாது. அதோட எதிர்ப்பார்ப்பு வேற, நடக்குறது வேறயா இருக்கும். நமக்கே நம்மை எல்லா நேரமும் பிடிக்கறதில்லை. அப்படியிருக்க இன்னொருத்தங்களை எப்படி எல்லா நேரமும் பிடிக்கும்? ஒரு நேரம் முழுசா வெறுப்ப கூட காட்டுவோம், நம்ம பார்ட்னர் அப்ப புரிஞ்சிக்கிட்டு பாசமா இருக்கணும். அவங்க அப்படியிருக்க நம்ம புரிஞ்சு நடக்கணும், எல்லா நேரமும் ஒரே மாதிரி இருக்காது. இந்த விஷயத்துல உங்க சித்தப்பா மாதிரி காதல் கிறுக்கா இல்லாம கொஞ்சம் சித்தி மாதிரி இரென் டி” என்று வசுந்த்ரா சொல்ல சரோஜினியும் யோசித்தாள்.
“ஏடிஎஸ்பி ஒட்டுக்கேட்டது போதும் சமையல் ஆகிடுச்சு. சாப்பிடுறீங்களா இல்ல டீ போடவா?” என்று கேட்க
“சித்தப்பா மாடியில தானே இருந்தார்.” என்றபடி சரோஜினி சமையலறை வாசலில் நின்று எட்டிப்பார்க்க சித்ரஞ்சன் நடுவீட்டில் நின்றிருந்தான்.