“எங்கப்பா கிட்ட காலையில என்ன பேசுனீங்க? சக்தி விஷயமா?” என்று குறுகுறுவென்ற பார்வையோடு கேட்க
“சும்மா பேசினேன். சக்தி விஷயம் பேசுற அளவெல்லாம் நானும் மாமனாரும் ராசியாகலயே” என்ற சித்ரஞ்சன்
“நான் டியுட்டிக்குக் கிளம்புறேன் வசு” என்று மாடியேறினான்.
லாலா அவன் அறையில் அரைத் தூக்கத்தில் படித்துக்கொண்டிருந்தான்.
“டேய் லாலா!” என்று உற்சாகமாக அண்ணனை அழைத்த சரோஜினி,
“நம்ம தாத்தா என் லவ்வுக்கு ஓகே சொல்லிட்டார். சக்தி தாத்தா வந்து பேசினா எனக்கு சம்மதம்னு சொல்லிட்டார் தெரியுமா?” என்று புன்னகை நிறைந்த முகத்தோடு சொல்ல
“சூப்பர்டி! எனக்கு டீரிட்” என்று லாலா கேட்க
“சக்தி தாத்தாவும் ஒத்துக்கட்டும் உனக்கு என்ன வேணுமோ வாங்கித் தரேன்” என்றாள் சரோஜினி.
“அதெல்லாம் அவர் ஒத்துப்பார்டி. நம்ம தாத்தா மாதிரி ஸ்டீரிக்ட் கிடையாது, நீ கவலைப்படாத” என்று லாலா சொல்ல
“தேங்க்ஸ்டா” என்றாள் சரோஜினி. வீட்டினரை எதிர்த்துதான் திருமணம் என்ற எண்ணத்திலிருந்தவளுக்குத் தாத்தாவின் சம்மதம் அத்தனை சந்தோஷம் கொடுத்திருந்தது.
“சரி சரி நான் ஸ்கூலுக்குக் கிளம்புறேன்” என்று சரோஜினி சென்றதும் லாலாவின் விழிகள் புத்தகத்தை வெறித்தன. வாழ்க்கையில் எல்லாரும் அடுத்த கட்டம் நோக்கி செல்ல, தான் மட்டும் தேங்கி தேய்வது போல் ஒரு எண்ணம். எப்படியாவது இந்த முறை தேர்ச்சி பெற்றே ஆக வேண்டும் என்று நினைத்தவன் முகம் கழுவிவிட்டு மீண்டும் படிப்பில் ஆழ்ந்தான்.
சக்திவேலின் வீட்டில் அவன் வேலைக்குக் கிளம்பியதும் பாஸ்கரன் மனைவியிடம்,
“ஏன் சசி அவன் டல்லா இருக்கான்?” என்று போகும் மகனைப் பார்த்துக் கேட்டார்.
“ரெண்டு நாளா உங்க மகன் மூஞ்சி அப்படித்தான் இருக்கு” என்ற சசிகலா மதிய உணவுக்குக் காய்கறி வெட்டினார்.
“எப்படி இந்த சக்தி லவ் பண்ணினான்?” பாஸ்கரன் மனைவியிடம் கேட்க
“நீங்க என்ன இன்னும் காலேஜ் கிளம்பாம இருக்கீங்க?” என்று கணவனை ஆராய்ச்சியாகப் பார்த்தார்.
“சக்தி பத்தி பேசலாம்னுதான். நமக்கு அவன் சந்தோஷம்தானே முக்கியம், அப்பா கிட்ட பேசணும் சசி. அவன் டல்லாயிருக்கிறது பார்க்கவே எனக்குக் கஷ்டமா இருக்கு”
பாஸ்கரன் மகன் மீதான பாசத்தில் பேச, சசிகலா உடனே
“ரொம்ப கவலைப்படாதீங்க, உங்க மகன் ரெண்டு நாள் அப்படி முகத்தை வச்சுட்டு சுத்துவான் அப்புறம் அடம்பண்ண ஆரம்பிச்சிடுவான். நான் பொண்ணு பிடிக்கலன்னு சும்மா சொன்னேன், நல்ல புள்ள என்ன செய்யணும் என்னை சமாதானம் செய்யாம அவன் கோச்சுக்கிட்டு போறான். அப்படியென்ன பிடிவாதம் கொஞ்சம் கூட இறங்கிப்போறதோ விட்டுக்கொடுக்கிறதோ கிடையாது. அவன் இஷ்டத்துக்கெல்லாம் நம்ம போகக் கூடாது” என்றார் மகனைத் தெரிந்தவராக.
“எல்லாம் ஒரே புள்ளன்னு நீதான் செல்லம் கொடுத்த, இப்போ பிடிவாதம் பிடிக்கிறான்” பாஸ்கரன் மனைவியைக் குற்றம் சொல்ல
“ஆமா! நான் மட்டும்தான் செல்லம் கொடுத்தேன், நீங்க உங்கப்பா எல்லாம் அவனை திட்டிட்டே இருந்தீங்க பாருங்க. இப்போ கூட மகன் முகம் வாடினதும் வீட்ல உட்கார்ந்துட்டு என்னை சொல்ல வந்துட்டாரு வாத்தியாரு” என்று திட்டியபடி சசிகலா எழுந்து சமையல்கட்டுக்குள் சென்றார்.
“பக்கத்து வீட்டுப் பொண்ணையே விரும்பிட்டு இத்தனை நாளா நம்ம கிட்ட சொல்லாம இருந்திருக்கான். கொஞ்சம் கூட உங்களுக்குக் கோவமேயில்லையா? எனக்கு அவன் அன்னிக்கு சரோஜினி கையைப் பிடிச்சிட்டு நிக்குறத பார்த்ததும் ஒன்னுமே ஓடல. எப்ப பாரு சண்டைப்போடுவான் எங்கயிருந்ததுதான் வந்துச்சோ இந்த லவ்வு எல்லாம்” என்ற மனைவியின் பேச்சில் சிரித்த பாஸ்கரன்
“அவன் சரோஜினியை லவ் பண்றேன் சொன்னப்போ எனக்கும் ஷாக்தான்! ஆனா பசங்க என்னைக்கு லவ் பண்ணினா அப்பா அம்மா கிட்ட சொல்லியிருக்காங்க? காலேஜ்ல எவ்வளவு பார்க்கிறேன் நான்? நம்ம பையன் அந்த பொண்ணுக்கு ஒன்னுன்னா உடனே போய் நின்னான்ல உண்மையாவே அவனுக்கு ரொம்பப் பிடிச்சிருக்குப் போல.. நீ நான் வேலைக்குப் போனதும் பொறுமையா அப்பா கிட்ட பேசி அவர் என்ன நினைக்கிறார்னு எனக்குப் போன் பண்ணி சொல்லுடி” என்றார்.
“அதானே பார்த்தேன், அப்பனும் பிள்ளையும் இந்த விஷயத்துல ஒன்னு. அவன் உங்ககிட்ட கேட்க வேண்டியதை என்கிட்ட கேட்டுட்டு உங்ககிட்ட அமைதியான புள்ளையா நடப்பான். நீங்களும் மாமா கிட்ட நேர கேட்காம என்னை கேட்க சொல்றீங்க” என்று முறைக்க
“சக்தி விஷயமிருக்கட்டும், வசுந்த்ரா விஷயம் யோசிச்சீங்களா?” என்று சசிகலா கேட்க, சார்ஜிலிருந்த போனை எடுத்தவர் அப்படியே நின்றார்.
“வசுக்கு என்ன?” என்று புரியாது பார்க்க
“சித்து தம்பி நம்ம வீட்டுக்கு வரவே இல்லை. முறைப்படி நம்ம கூப்பிடணும்தானே?” என்றதும் பாஸ்கரன்
“அந்த ராஸ்கல் செஞ்சதுக்கு முறை வேற” என்றார் முறைப்பாக.
“நம்ம வசுவுக்காகப் பார்க்க வேண்டாமா?”
“அவளை யார் என்ன சொன்னா? அவ வீடு வந்துட்டு போக வேண்டிதானே? பகத் கூட தெனமும் வரான் தானே? நான் பார்த்து வளர்ந்த பய இன்னிக்கு ஏடிஎஸ்.பி ஆகிட்டா நான் போய் அவனை கூப்பிடணுமா? அவனா வர வேண்டிதானே?”
“வந்தவனை அடிக்க போய்ட்டு வரலன்னா? தம்பிக்கும் தயக்கமா இருக்கும்ல, வசுவுக்குக் கல்யாணம் பிடிக்காம நடந்தாலும் இத்தன வருசம் பிடிச்சுத்தானே வாழ்றா. முறையா நம்ம கூப்பிட்டு மாப்பிள்ளைக்கு விருந்து வைக்கணும்தானே? அத்தை இருந்தா செஞ்சிருப்பாங்கன்னு வசு நினைக்கக் கூடாதில்ல. நீங்க எல்லாம் இப்படி கோவப்பட்டு எதுவும் செய்யக் கூடாதுன்னுதான் வசு அன்னிக்கு ஒன்னும் சொல்லாம இருந்திட்டா. நீங்க மாமா கிட்ட பேசுறீங்களா இல்லை நான் பேசவா?” என்றார்.
“இப்போ என்ன மாப்பிள்ளை சாரை கூப்பிடணும், அதானே? அந்திக்கு வந்ததும் கூப்பிடுறேன்” என்று பாஸ்கர் கிளம்பிச் சென்றார்.
அவர் சொன்னது போலவே அந்த வாரம் சித்ரஞ்சனுக்கு விடுமுறையாக இருந்த நாளில் மாமனார் வீட்டில் விருந்து நடைப்பெற்றது.
லட்சுமணனிடம் சித்ரஞ்சன் பேசினாலும் அவர் முறைத்தார் தவிர அவனிடம் பேசவில்லை. பாஸ்கர்
“வாங்க மாப்பிள்ளை” என்று வரவேற்க,
“எப்பவும் போல பெயர் சொல்லியே கூப்பிடுங்க அத்தான்” என்று சித்ரஞ்சன் சொல்ல, அவன் பக்கம் நின்ற சக்திவேல்