“டேய் சக்தி! எனக்கும் அவனுக்கும் வெறுப்பெல்லாம் கிடையாதுடா. என்னமோ சின்ன வயசுல இருந்தே எங்களுக்குப் பிடிக்கல. அவனும் பேசுவான், நானும் பேசுவேன். எங்கப்பா துரைமார்கிட்ட வேலை செஞ்சதால நான் அப்பவே லண்டன்ல இருந்து வர பேனா, அங்க உள்ள சொக்கா எல்லாம் போட்டிருக்கேன். அதோட பள்ளிக்கூடத்துல போய் நானும் பந்தா பண்ணுவேன், அவனுக்கு அதைப் பார்த்து கோவம்.”
சிரித்தபடி, “ஏன் தாத்தா அப்பவே நீ அவரை வெறுப்பேத்தியிருக்க?” என்றான் சக்தி.
“அதான் இப்போ இவ்வளவு பொறுமையா பேசுறியே, அவர்கிட்ட பேசினா என்ன?”
“டேய் வாழ்க்கையில எல்லாரையும் பிடிக்கும்னு சொல்றவன்லாம் பொய் சொல்றான். நம்ம சாதாரண மனுசங்க நமக்கு எல்லாரையும் எப்பவும் பிடிக்காது. அப்படி எனக்குப் பிடிக்காதவன் அவன், அவனுக்குப் பிடிக்காதவன் நான். நாங்க ரெண்டு பேரும் சண்டைப்போட்டுக்கிட்டாலும் என்னைக்கும் அவன் கெட்டுப்போகணும்னு நானோ அவனோ நினைச்சதில்லை. அவன் மோசமானவனா இருந்தா உங்கத்த இத்தன வருசம் அங்க வாழ்ந்திருக்க மாட்டா, அவன் புள்ளைங்களும் அப்படித்தான். நீ கேட்டியே காதலிக்க சுதந்திரமில்லையான்னு அப்படித்தான் ஒருத்தரை பிடிக்காம இருக்கிறதும் ஒரு சுதந்திரம்.”
“நான் போயிருந்தா எங்க ரெண்டு பேருக்கும் சங்கடமா இருந்திருக்கும். உன் அப்பாவும் அம்மாவும் போனதால நல்லபடியா பேசிட்டு வந்துட்டாங்க, என்ன இப்போ உன் கல்யாணத்துக்கு எல்லாம் நான் வரத்தானே டா போறேன்.” என்று லட்சுமணன் அவர் நிலையை விளக்கி சொல்ல
பிடிக்காமல் இருக்கவும் ஒரு சுதந்திரம் உண்டுதானே? எல்லாரையும் எல்லாருக்கும் பிடிக்காது. பிடித்தவர் செய்யும் சில விஷயங்கள் பிடிக்காமல் போகும். பிடித்தவையே பிடிக்காமல் போகும். அதுதான் நிதர்சனம். எப்போதும் எல்லாரையும் நேசிக்க முடியாது. பிடிக்கவில்லை என்று ஒதுங்கி போவதும் கூட சிறந்த செயலே.
“ஏண்டா எனக்கும் அவனுக்கும் ஆகாதுன்னாலும் நீ அந்த வீட்டுப்பய கூட பேசுறதை என்னைக்காச்சும் நான் கண்டிச்சிருக்கேனா இல்லை அந்த புள்ளையை லவ் பண்றதுக்குத் திட்டினேனா?” என்றார்.
“என்னது பய கூட பேசினேனா? தாத்தா ஹவ் டூ யூ நோ?” சக்தி ஆச்சரியமாகக் கேட்க
“ரெண்டு பேரும் தஞ்சாவூர், திருவாரூர் டவுன்ல சுத்தினா எனக்குத் தெரியாதா டா? பரோட்டா கடையில எல்லாம் நான் பார்த்திருக்கேன். நான் என்ன திலகர் மாதிரி எங்கயும் போகாம வராமயா இருக்கேன். உன் அப்பனுக்கும் தெரியும், சரி பெரிய பசங்க என்னமோ பண்ணிட்டுப் போகட்டும்னு நாங்க கண்டுக்காம இருக்கோம்” என்றிட
“தாத்தா! அது..” என்று சக்தி தயக்கமாகப் பார்த்தான்.
“நீ திட்டுவன்னு நினைச்சித்தான் தாத்தா சொல்லாம இருந்தேன். சின்ன வயசுல நாங்க ஒன்னா விளையாடும்போது ரெண்டு பேரும் எங்களைப் பிரிச்சிக் கூட்டிட்டுப்போயிடுவீங்க. அதான் சொல்லல” என்று சக்தி காரணம் சொல்ல
“பின்ன அவன் பேரனை அவன் இழுத்துட்டுப் போறப்ப நான் சும்மா இருக்கணுமா?” என்று லட்சுமணன் கேட்க
“எப்பா உங்க போட்டிக்கு நான் வரல. நான் அப்படியே போய் என் ஆளைப் பார்க்கிறேன்” என்று அறைக்குப் போனான்.
*********
அடுத்த மூன்று மாதத்தில் சக்திவேல் சரோஜினியின் திருமணம் சிறப்பாக நடைப்பெற்றது. திருமணத்தின்போது லாலாவும் சக்தியும் ஒற்றுமையாகத் திரிய திலகர் பேரனிடம்,
“டேய் அந்த பயலோட எப்பவும் அடிச்சிட்டு திரிவ இப்போ என்னடா அப்படி சிரிச்சுப் பேசுற?” என்று ஆராய்ச்சியாகக் கேட்க
“என்ன இருந்தாலும் நம்ம சரோஜினி மாப்பிள்ளை மரியாதையாப் பேசணுமில்ல தாத்தா?” என்று பவ்யமாக சொன்ன லாலாவை நம்பத்தான் செய்தார் திலகர்.
திருமணம் முடிந்து சரோஜினி சக்திவீட்டுக்குச் செல்ல, சித்ரஞ்சன் கண்கள் கலங்க மகளைப் பார்த்தான். வாஞ்சி நாதனுக்கும் மகளை பிரிகிறோமே என்று வருத்தமிருந்தாலும் அவரிடம் வார்த்தையால் சொல்லும் வழக்கமில்லை. சித்ராவுக்கும் அஞ்சம்மாவுக்கும் சரோஜினி பக்கத்து வீட்டுக்குத்தானே செல்கிறாள் என்று சந்தோஷம்.
சித்ரஞ்சன் சக்தியின் கையைப் பிடித்து அழுத்தி, “சின்னப்பொண்ணுடா சக்தி, நல்லா பார்த்துக்கோ” என்றிட
“மாமா, உங்க ப்ளாஷ்பேக்குக்கு இந்த பீலிங்கெல்லாம் அநியாயம்” சக்தி கிண்டலாக சொல்ல
“டேய்ய்” என்று சித்ரஞ்சன் கையைப் பிடித்து அழுத்திவிட,
“அத்த!” என்றான் சத்தமாக.
“என்ன சக்தி?” என்று வசுந்த்ரா அருகே வர
“வீட்டு மாப்பிள்ளைக்கு உன் வீட்டுக்காரர் மரியாதை தராம வாடா போடான்றார். என்னனு கேளு” என்று சொல்ல
“ஏண்டா மாப்பிள்ளை ஆகிட்டா ஓவர் சீன் போடுவியா? அப்படி பார்த்தா அவரும் நம்ம வீட்டு மாப்பிள்ளைதான்” என்று வசுந்த்ராவும் பதிலுக்குப் பேச
“உன்னைக் கூப்பிட்டேன்ல, என் தப்புதான் அத்த” என்று முறைத்தான் சக்திவேல்.
சித்ரஞ்சன் சிரிப்பை அடக்கிப் பார்க்க, சக்தி அவனையும் முறைத்தவன் சத்தம் குறைத்து,
“ஆனாலும் நீங்க லக்கி மாமா” என்றான்.
மனைவியைப் பார்வையால் வருடியபடி, “தெரியும்” என்று புன்னகைத்தான் சித்ரஞ்சன்.
“அத்த! லாலா எங்க?” என்று சக்தி கேட்க,
வேட்டியை மடித்துக் கட்டியபடி
“வந்துட்டேன் டா மாப்ள” முகமெல்லாம் புன்னகையுடன் வந்தான் லாலா. வேட்டி சட்டையில் அவனும் மாப்பிள்ளை தோரணையோடு வந்தான்.
“என்னடா உன்னை ஆளையே காணும்?”
“என்ன பண்றது தங்கச்சிக்கு ஒரே அண்ணனா போய்ட்டேனே, பொண்ணா இருந்திருந்தா போட்டோ எடுத்துட்டு இருந்திருப்பேன். பையனா போனதால பந்தி பரிமாறதுல இருந்து நாற்காலி எடுத்துப் போடுற வேலை வரைக்கும் பார்த்து ஒரே டயர்ட் மச்சான்” என்றான்.
“என்னடா உங்க சித்தப்பா பீல் பண்ணிட்டு போயிருக்கார், நீயும் அது மாதிரி எதாவது சொல்லணுமா?” என்று சக்தி வேண்டுமென்றே கேட்க
“டேய்! பாவம்டா அவரை வம்பிழுக்காம இருக்க மாட்டேங்கிற நீ” என்று சக்தி தோளில் லாலா அடிக்க இதனை பார்த்த வாஞ்சி நாதன் மகனை அழைத்தார்.
இப்போதெல்லாம் அப்பாவிற்கும் மகனும் அடிக்கடி முட்டிக்கொள்ள,
லாலா எதுவும் பேசாமல் அமைதியாக நிற்க, “என்னடா சும்மா நிக்குற, சொன்னதை கேட்டு ஒழுங்கா நட” என்று அதட்டினார்.
சக்தி கண்களால் என்னவென்று கேட்க, லாலா அருகே சென்று அப்பா சொன்னதை சொல்லி
“இருந்தாலும் ரொம்ப ரொம்ப டூ மச்டா, முன்னாடி அப்படி சண்டைப்போட்டுட்டு இன்னிக்கு மாப்பிள்ளைனதும் அரசியல்வாதியை விட அநியாயமா கட்சி மாறிட்டார்டா எங்கப்பா. இதுல சரோவை வேற எப்படி அடிச்சார்? இன்னிக்கு உன்கிட்ட மரியாதையா நடந்துக்கணுமாம்” என்று பொறுமினான்.
“விடுடா, மாமனாரை பேசாத மச்சான்” என்று சக்தி வேண்டுமென்றே சொல்ல
“ஒரு கயிறை என் தங்கச்சி கழுத்துல கட்டிட்டு என் கையைக் கட்டிப்போட்டுட்ட இல்ல. மவனே இது மட்டும் வீடா இல்லன்னா உன்னை கும்மிருப்பேன்” என்று லாலா முறைத்தபடி சொல்ல சக்தி சிரித்தான்.
சரோஜினியும் சக்திவேலும் நல்ல நேரம் பார்த்து சக்தியின் வீட்டுக்குள் சென்றனர். பக்கத்து வீடு என்பதால் இருவீட்டிலும் உறவுகள் போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருந்தனர்.
இரவு வர பல மாதங்கள் கழித்து சக்திக்கும் சரோஜினிக்குமான தனிமை. சக்திக்கு ஏதோ அழைப்பு வர அவன் போனில் பேசிக்கொண்டிருக்க சரோஜினி அவன் அறையை மெல்ல பார்வையிட்டாள்.
மனம் மெல்ல குதித்துக்கொண்டிருந்தது. எதையோ சாதித்த ஒரு பரவசம், அவளுக்குப் பிடித்த சக்தியின் மனைவியாக அவள்! பெரிதாக எந்த பிணக்குமின்றி இருவீட்டிலும் ஒத்துக்கொள்ள சரோஜினிக்கு அத்தனை சந்தோஷம். எதிர்ப்பார்ப்போடு சக்திக்காக காத்திருந்தவள் அவளுக்குப் பிடித்த சக்தியின் அறையைக் கண்களில் நிரப்பி ஒவ்வொன்றாக ரசித்தாள்.
அறையை மிகவும் சுத்தமாக வைத்திருந்தான் சக்திவேல். அதுவே சரோஜினிக்குப் பிடித்தது. வெள்ளை சட்டை, வேஷ்டியில் அறைக்குள் மெல்ல விசிலடித்தபடி நுழைந்த சக்தியின் பார்வை உரிமையாக ஆவலாக மனைவியை வருடியது.
“சரோஜினி” என்றபடி பின்னாலிருந்து அணைத்துக்கொள்ள, அவன் வந்தது உணர்ந்தாலும் சட்டென இப்படி அணைப்பான் என எதிர்ப்பார்க்கவில்லை. பதறி மூச்சுவாங்க நின்ற சரோஜினியைக் கண்ட சக்தி,
“என்னடி?” என்றான் சிரிப்போடு.
“சொல்லிட்டு செய்யமாட்டியா? டக்குனு கட்டிப்பிடிக்கிற” என்று சொல்லி மூச்சுவாங்க
“ஏட்டி! நீ பத்து மணிக்கு பேயாட்டம் என் ரூமுல ஒளிஞ்சு நிப்ப, நான் பயப்படாம இல்ல. இன்னிக்கு நம்ம ரூம்ல யாரு வரப்போறா?” என்றவன்
“இப்ப கட்டிப்பிடிக்க போறேன்” என்றவன் வாக்கியத்தைக் கோர்த்து முடிக்கும் முன்னே அடர் நீல புடவையில் இருந்த மனைவியைக் கரத்தால் கோர்த்துக்கொண்டான்.
“என்னைப் பார்க்க நின்னுட்டு இருப்பன்னு பார்த்தா ரூமை என்னடி வேடிக்கைப் பார்க்கிற. என்னமோ முதல்முறை வரமாதிரி?” சக்தியின் கேள்வியில் திரும்பி அவனைப் பார்க்கும்படி நின்ற சரோஜினி
“இருட்டுல உன் ரூமை எங்க நான் பார்க்க? அத விட வந்தாலே விரட்டுவ.. உன்னைப் பார்க்கறதே அதிசயம்” சரோஜினி தாங்கலாக சொல்ல
“இப்போ என்னடி என்னைப் பார்க்கணும்தானே, ஆசை தீர பார்த்துக்கோ” என்றான் அவள் கழுத்தில் கரம் கோர்த்து. வார்த்தையிலே அவன் ஆசை வெளிப்பட அதனை உணர்ந்த சரோஜினியின் உடலும் சிலிர்த்தது.
இத்தனை நெருக்கம் இதுவரை இருந்ததில்லை. அருகினில் இருந்தும் தூரமாய் இருந்தார்கள், பார்வையே பெரிதாக இருக்க இன்று அணைப்பும் அருகாமையும் புத்தம் புது உணர்வுகளை இருவருக்கும் வழங்கின.
சரோஜினி அவன் கொடுத்த உணர்வினை உள்வாங்கி உன்மத்தமாகி நிற்க,
“சரோ, சரோசாஆஅ” என்று மெல்ல அழைக்க அதுவரை மூடியிருந்த சரோஜினியின் விழிகள் திறந்தன. அவள் முறைத்துப் பார்க்க, சக்தி இடையில் கைகொடுத்து இறுக்கியணைத்தவன்,
“என்ன ஒன்னும் பேசமாட்டேங்கிற?” என்றவனின் குரல் காதுக்குள் கேட்டது. காற்று புகா நெருக்கத்தில் கணவனாக நின்றவனை கண்களில் நிறைத்தாள் சரோஜினி.
“ஒரு பேச்சுக்கு ஆசை தீர பார்த்துக்கோன்னு சொன்னா பார்த்துட்டே எவ்வளவு நேரம் நிப்ப?” புருவமுயர்த்தி சிரிப்பாக சக்தி கேட்க, சிரிக்கும் சக்தியை அத்தனை பிடித்தது. சரோஜினி அவன் தோளில் சாய்ந்து இன்னும் நெருக்கமாக அணைத்தாள். அப்படியே அவளை சேர்த்துத் தூக்கியவன் மெத்தையில் சாய்ந்தான்.
அவளின் அந்த நேர உணர்வினை வெளிக்காட்ட பிரியத்தின் பக்கத்தில் வார்த்தைகள் தேட, பிரியமானவன் பக்கமிருக்க வார்த்தைகள் வரவில்லை. வெகு நாள் தேடல் கிட்டிய நிறைவு அவளிடம்.
“சக்தி” மெல்ல அழைத்த சரோஜினி
“இதெல்லாம் கனவு மாதிரி இருக்குத் தெரியுமா? இவ்வளவு பக்கத்துல நீ இருக்க, இனிமே உன்னைப் பார்க்க பயப்பட வேண்டாம். நம்பவே முடியல, நமக்குக் கல்யாணமாகிடுச்சு” என்று சந்தோஷம் ஆர்ப்பரித்த குரலில் சொன்னவளை ரசித்துப் பார்த்தான் சக்திவேல்.
“ம்ம், ரொம்பப் பக்கத்துல இருக்கோம்” என்றவனின் மூச்சுக்காற்று மொத்தமாக அவளிடம் தஞ்சம் புக, அதுவரை ஆனந்ததில் ஆர்ப்பரித்த சரோஜினியின் குரல் அமைதியாகிப்போக, ஆசைகள் ஆர்ப்பரிப்பு சக்தியிடம்.
“சரோ! பார்த்தா ஆசை தீரும்னு சொன்ன? தீர மாட்டேங்கிதே டி” என்றவன் அவள் பதிலை சொல்லவிடாது இதழில் அழுத்தமாக இதழ்ப் பதித்தான். முதல் முத்தம் தடுமாற்றமாக, தயக்கமாக தொடங்கினாலும் தொடர தொடர இருவருக்குள்ளும் தீவண்ணம். ஆசைகள் அலைமீற காதலின் கார்த்திகை காலமாக அவர்கள் இரவு தொடர்ந்தது.