சுதந்திர விலாசத்தில் கல்யாண வேலைகள் முடியவும் எல்லாரும் ஓய்வெடுக்க சென்றனர். லாலாவோடு பகத் படுத்திருக்க, சித்ரஞ்சனும் வசுந்த்ராவும் அவர்கள் அறையில்.
வசுந்த்ராவும் பிறந்த வீட்டோடு சேர்ந்த திருப்தியில் புன்னகை முகமாகவே சுற்றினாள். சித்ரஞ்சன் அறைக்குள் வந்தவன் சட்டையைக் கழட்ட,
“ஏன் கழட்டுறீங்க? வேஷ்டி சட்ட நல்லாயிருந்துச்சு. உங்களை காக்கி டிரஸ்ல பார்த்து எனக்குப் போர் அடிக்குது” என்றபடி மெத்தையில் படுத்தாள்.
“அதுக்குன்னு தூங்கும்போதுமா? வேர்க்கும்டி” என்றவனும் மனைவி பக்கம் படுத்தாலும் உறங்கவில்லை. யோசனையோடு அமைதியாக இருந்தான்.
கணவனைப் பார்த்தபடி திரும்பிப் படுத்த வசுந்த்ரா,
“என்ன தூங்காம யோசனை?” என்று பார்க்க
“சரோ குட்டி குழந்தையா இருந்தா அதுக்குள்ள அவளுக்குக் கல்யாணமே ஆகிடுச்சு பாரேன்” என்ற சித்ரஞ்சனும் வசுந்த்ரா பக்கம் திரும்பிப் படுத்தான்.
“ஹ்ம்ம் ஆமா, சக்தியும் எனக்கு அப்படித்தானே? நம்ம ஸ்கூல் படிச்சப்ப பொறந்தவங்க. சீக்கிரம் வளர்ந்துட்டாங்க இல்லங்க?”
“சக்தி நல்லா பார்த்துப்பான் இல்ல?” கேள்வியாக மனைவியைப் பார்த்தான். அவன் சாதாரணமாகத்தான் கேட்டான், சக்தி சரோஜினிக்காக அவர்கள் வீட்டில் வந்து நின்றபோதே சக்தி மீது சித்ரஞ்சனுக்கு நம்பிக்கை வந்தது, இருந்தாலும் சரோஜினியின் மீதான பாசத்தில் அப்படி கேட்க, வசுந்த்ராவுக்குக் கோபம் வர சித்ரஞ்சனின் கையில் கிள்ளினாள்.
“ஆஅ” என்று கத்தியவன்
“என்ன கேட்டேன்னு கிள்ளுறடி?” என்றான் எரிச்சலாக.
“அதென்ன அவன் என்ன கொடுமைக்காரனா?”
“அம்மாடி! நான் சாதாரணமா கேட்டேன், சக்தியை விட சரோ சின்னப்பொண்ணு. ஒரு டென்ஷன்ல கேட்டேன், சக்தியை தப்பா சொல்லணும்னு கேட்கல” என்று சித்ரஞ்சன் சொல்ல
“அப்படியா?” என்றாள் கேள்வியாக.
“அதெல்லாம் இங்க இருந்ததை விட அவ அங்க நல்லாயிருப்பா. தூங்குங்க” என்று வசுந்த்ரா திரும்பப் பார்க்க, திரும்பவிடாது தோளைப்பிடித்து தனக்கு நெருக்கமாக இழுத்தவன்,
“சாரி வசு” என்றிட, உண்மையில் எதற்கு என்று வசுந்த்ராவுக்குப் புரியவில்லை.
இன்று சரோஜினியின் திருமணத்தில் அண்ணனும் வீட்டினரும் எத்தனை ஆவலாக இருந்தனர், ஏன் அவனுக்குமே கலவையான உணர்வுகள். திருமணத்தில் லாலா, பகத் இன்னும் மற்ற உறவுகள் எல்லாம் சந்தோஷமாக இருக்க, சரோஜினியும் சக்தியும் வீட்டினருக்குத் தெரிந்து திருமணம் செய்யும்போதே தனக்கு இப்படி மகளை நினைத்து கவலையாக இருக்க, லட்சுமணனுக்கும் இப்படித்தானே இருந்திருக்கும். சரோஜினி எத்தனை ஆசையாக, முகமெல்லாம் விகசிக்க இந்த திருமணத்தில் இருந்தாள்.
ஆனால் நான் எனக்குப் பிடித்தவளுக்கு பிடிக்காத ஒரு திருமணத்தைக் கொடுத்துவிட்டேன். இப்போது நான் என்னதான் நன்றாக பார்த்தாலும் அவளுக்கு அந்த வருத்தமிருக்கும்தானே? இத்தனை வருடமாக என்னை நானே இப்போது நன்றாகப் பார்த்துகொள்கிறேன் என்று சமாதானம் செய்தாலும் நான் என்னையும் என் ஆசையும் மட்டும் யோசித்து சுயநலமாக இருந்துவிட்டேன்.
சமீபமாக இந்த எண்ணங்கள் மனதில் ஓடினாலும் இன்று பயங்கரமாக அவனைப் போட்டுத் தாக்கின. இவள் காதல் மட்டும் இல்லையென்றால் நான் என்னவாகியிருப்பேன்? இவளுக்கு நான் அப்படி இருக்கிறேனா? என்று மனது அலைபாய, வசுந்த்ராவின் தோளில் தன் தலையைப் புதைத்தான்.
கணவன் மீசை உரசிட அவனை தள்ளிவிட்ட வசுந்த்ரா,
“என்ன? ப்ர்ஸ்ட் நைட் கொண்டாட ப்ளானா?” என்று கிண்டலாகக் கேட்க, சித்ரஞ்சனுக்கு நிச்சயம் அவ்விரவில் அப்படியான எண்ணமில்லை. அவன் கவலையில் உழன்றிருக்க, மனைவி சொன்னது புரியவில்லை.
புரியவும் சிரித்தவன் அவளை இறுக்கமாக அணைத்தான்.
“நான் எவ்வளவு டென்சனா இருந்தேன் தெரியுமா? ஆனா நீ இருக்கியே டி..” என்று சிரிப்போடு ஆரம்பித்தவன்
“நீ இல்லைன்னா நான் என்னவாகியிருப்பேன் வசு? என் காதலை மட்டுமில்ல என்னை மொத்தமா நீ காப்பாத்தியிருக்க… ஆனா நான் உன்னை உன் வீட்ல இருந்து பிரிச்சு உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்” என்றான் உணர்வுபூர்வமாக.
பிரியத்தின் பரிமாற்றத்துக்கு நேரமெல்லாம் கிடையாது. நேரம் கிடைக்கும்போது சொல்வதை விட கிடைக்கும் நேரமெல்லாம் சொல்ல வேண்டும். காதலிப்பது எளிதானது! காதலித்துக்கொண்டே இருப்பது கடினமானது! மனைவிதானே என்ற அலட்சியப்போக்கின்றி மனதில் தோன்றுவதை மறைக்காமல் அவளிடம் பகிரும் அந்த எண்ணம், அது தருகின்ற உற்றிடத்தை(intimacy) வசுந்த்ரா மிகவும் விரும்புவாள்.
வெளியே எத்தனை கண்டிப்பாக இருந்தாலும், அவளின் பிரியத்திற்காக ஏங்கி நிற்கும், அவளின் பார்வையைப் பொக்கிஷமாக நோக்கும் கணவன் மேல் அவளுக்கு அலாதி காதலுண்டு!
“இன்னிக்கு சரோ கல்யாணத்துல நம்ம எல்லாரும் எவ்வளவு சந்தோஷமா இருந்தோம்? ஆனா நம்ம கல்யாணம் நினைச்சாலே உனக்குக் கோவம் வருமில்ல.. நினைச்சு சந்தோஷப்படுற மாதிரி இல்லைனாலும் வருத்தப்படுற மாதிரி நிறைய உனக்குக் கொடுத்துட்டேன்ல..?” தவிப்பாகக் கேட்டவனிடம்
“வாழ்க்கையில எல்லாருக்கும் எல்லாமே நல்ல மெமரீசா இருக்காது இல்ல? ரெக்ரெட்ஸ் ஆர் பார்ட் ஆப் லைப் இல்லையா? ஏதோ ஒரு விஷயத்துக்கு நமக்கு வருத்தமிருக்கும், அது எல்லாருக்கும் வாழ்க்கை முழுசும் தொடரும்தானே? நம்ம கல்யாணம் நடந்த விதம் எனக்கு அப்படித்தான், அந்த வருத்தம் நிரந்தரம். எப்பவும் போகாது! ஆனா அதுக்காக அதையே நினைச்சு பீல் பண்ண முடியுமா?” என்று கேட்க சித்ரஞ்சனும் ஆமோதிப்பாகத் தலையசைத்தான்.
லாலா, சரோஜினி மீது சித்ரஞ்சனுக்கு நிறைய பாசமிருந்தாலும் சரோஜினி என்றால் கூடுதல் வாஞ்சை. பெண்பிள்ளை என்று ஆசை. அவனுக்கும் வசுந்த்ரா போல் ஒரு குழந்தை வேண்டுமென்ற ஆசையிருந்தாலும் வசுந்த்ராவின் உடல் நிலை அதுக்கு ஒத்துழைக்கவில்லை. மகன் பகத்’திடமே வசுந்த்ராவின் பழக்கங்களும் குணங்களும் அதிகமுண்டு. சரோஜினி மீதான அக்கறையில் வசுந்த்ராவுக்குச் சித்ரஞ்சனை இன்னும் பிடித்தது.
இடைவெளியின்றி இறுக்கி அணைத்து உடல் உரசிக்கொண்டிருந்த கணவனிடம், “ஆனாலும் கேடி போலிஸ், கல்யாணம்தான் சொதப்பிடுச்சுன்னு இப்போ ப்ர்ஸ்ட் நைட் காம்பேன்சேட் பண்ண பார்க்கிறீங்களா?” என்று குறும்பாகக் கேட்க
“பீல் பண்ணி இப்படி பார்த்து நினைச்சதை சாதிக்குறது. கேடி ரஞ்சன்” என்று வசுந்த்ரா சிரிக்க அவர்கள் கடந்து சென்ற இரவில் உறக்கம் மிச்சமிருந்தாலும் ஆவல்களும் தேடல்களும் மிச்சமின்றி அரங்கேற இருவருக்கும் அது இனிதிரவு.
********
ஆழ்ந்த உறக்கத்திலிருந்த சரோஜினிக்குத் தூக்கத்தில் தொந்தரவு. மெல்ல இமைகளைப் பிரித்துப் பார்க்க, சக்தி அத்தனை நெருக்கமாக அவளுக்குப் பக்கமாக உட்கார்ந்திருந்தான்.
சரோஜினி பாதி உறக்கத்தில் ஒன்றும் புரியாமல் விழிக்க, அந்த பாவனை சக்திக்குப் பிடித்தது. சட்டென்று குனிந்து அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.
“குட் மார்னிங் சரோ” என்று புன்னகையோடு சொன்னவன் மீது சோப் வாசனை.
“குளிச்சிட்டியா?” என்றவளுக்கு அப்போதுதான் விடிந்துவிட்டது என்று உரைக்க
“லேட்டாச்சா?” என்றாள் பதறி.
“ஹேய்! இன்னிக்கு ஸ்கூலுக்கு எல்லாம் டைம் ஆகல. நம்ம வீட்லதான் இருக்க, யாரும் நம்மை கூப்பிட மாட்டாங்க. நீ எழுந்து காபி குடி” என்றான் நிதானமாக. சொல்லியவன் கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்தபடி மேஜையில் இருந்த காபி கோப்பையை சரோஜினியிடம் நீட்டினான்.
“என்ன நீ காபி போட்டியா? போட தெரியுமா?” ஆச்சரியம் கொட்டிய குரலில் கேட்க
“நாந்தான் டி போட்டேன். என் பொண்டாட்டிக்குப் போட்டுத்தரணும்னு ஆசையா இருந்துச்சு. குடிச்சிட்டு சொல்லு” என்றவனிடம்
“அத்த நீ காபி போட்டதைப் பார்த்தா என்ன நினைச்சிருப்பாங்க?”
“ஹேய் அவங்க என்னடி நினைக்கப் போறாங்க?” என்ற சக்தியின் முகத்தில் அதிருப்தி.
“அதில்ல சக்தி முதல் நாளே பையனை வேலை வாங்கறா சொல்ல மாட்டாங்களா?” சரோஜினிக்குச் சக்தி அவளுக்காக செய்தது சந்தோஷமென்றாலும் அவள் வளர்ந்த சூழல் எல்லாம் யோசிக்க வைக்க
“பின்ன என்னடி? எங்கப்பா எங்கம்மாவுக்கு அஞ்சு மணிக்கே டீ போட்டு கொடுத்திருப்பார். அது மாதிரி நான் என் பொண்டாட்டிக்குப் போட்டுத் தரேன். எப்படி என்னை கேட்பாங்க?” என்று கேட்டான்.
“மாமா அத்தைக்கு டீ போட்டுக்கொடுப்பாரா?”
“அடியே என்னடி நீ இதுக்குப் போய் என்னமோ அதிசயம் மாதிரி ரியாக்ஷன் தர” என்றபடி சரிந்து படுத்தான் சக்தி.
“அம்மா நாலு மணிக்குப் பால் கறந்து வச்சிருவாங்க, பால்காரர் வாங்கிட்டு போனதும் அம்மா படுத்துடும். அப்புறம் அப்பா அஞ்சு மணிக்கு மேல எந்திரிச்சு எல்லாருக்கும் டீ போட்டு வைப்பார். அம்மா அஞ்சரை போல எந்திரிச்சு சமைக்க ஆரம்பிப்பாங்க. இதான் நம்ம வீட்டு வழக்கம்”
“எங்க வீட்ல எல்லாம் ஆம்பிளைங்க யாரும் சமைச்சே நான் பார்த்தது இல்லை. சித்தப்பா வீட்டுக்குப் போகும்போது அவர் வீட்ல இருந்தா சித்திக்கு ஹெல்ப் பண்ணியிருக்கார், ஆனா இங்க பண்ணினதில்ல.”
“ஏன் சுதந்திர விலாசத்துல ஆம்பிளைங்க ஆன் பண்ணின அடுப்பெரியாதா? இந்த லாலா அப்போ டீ காபியெல்லாம் போட மாட்டானா?”
“உன் ப்ரண்ட் சுடுதண்ணி மட்டும் வைப்பான். மத்தபடி ஒன்னும் செஞ்சதில்ல” என்றாள்.
“சரி, உன் சுதந்திர விலாசத்தோட பெருமையை அப்புறம் பேசலாம். காபி குடிச்சிட்டு சொல்லுடி, ஆறிடும்” என்று சொல்ல, சரோஜினி “பெட் காபியெல்லாம் தரீங்களே.. தெனைக்குமா இல்லை முதல் நாள்னா?” என்று கேட்டபடி ஒருவாய் பருகினாள்.
“வீட்ல இருக்கப்ப தரேன் சரோ” என்றான் சக்தி.
சரோஜினி அந்த காலை வேளை மிகவும் பிடித்தது, இரவின் உறக்கம் மிச்சமிருந்தபோதிலும் உற்சாகமாய் உணர்ந்தாள்.