“ஏண்டா கேள்வி கேட்டா பதில் சொல்லாம போய்ட்டு இப்போ வந்து நீ பாட்டுக்கு டீவி பார்க்குற?” ஷார்ட்ஸ், டீஷர்ட் என்று உடைமாற்றி தொலைக்காட்சியில் கிரிக்கெட் மேட்ச் பார்த்த மகனைக் கேட்டார் சசிகலா.
தரையில் தலையணை வைத்துப் படுத்திருந்த சக்தி, அப்படியே குப்புறப்படுத்து அம்மாவைப் பார்த்து
“என்னம்மா கேட்ட?” என்றான் மறந்ததுபோல்.
“உன் ரூம்புக்கு காலையில வந்தேன்ல, அங்கன ஒரு டப்பா இருந்தது. எதையாவது தின்னா கழுவ போட மாட்டியா டா? டப்பா புதுசா இருந்ததுனு கேட்டேன், யார் வூட்டு டப்பா?”
“என் கூட வேலைப்பார்க்கிற ஏட்டண்ணன் கொடுத்தார்மா. மறக்காம எடுத்து வை, நாளைக்குக் கொடுக்கணும்”
“ஊருக்கே காவல்காரனா இருந்தாலும் வீட்ல நாந்தான் வேலைக்காரி இல்ல, டேபிள்ல விளக்கி வச்சிருக்கேன், இரண்டு நாள் முன்னாடி செஞ்ச அதிரசம் சம்படத்துல இருக்கு, அதை ஒரு நாலஞ்சு வச்சு எடுத்துட்டு போ” என்ற சசிகலாவிடம்
“ஓஹ், அதிரசமா? சரிம்மா” என்றவன் பார்வை தொலைக்காட்சியிடம் சில நொடிகள் நிலைத்தது.
“ச்ச” என்று தரையைக் குத்தினான்.
“டேய்! என் புருஷன் கால் கடுக்க நின்னு, தொண்டை தண்ணி வத்த வாத்தியார் வேலைப் பார்த்த காசுல போட்ட டைல்ஸ்டா, எதுக்குடா குத்துற?” என்று சசிகலா அதட்ட
“நானே விக்கெட் விழுந்துச்சுன்னு கடுப்புல இருக்கேன், பேசாம போம்மா” என்று கத்தியவன் பேச்சு அப்பாவை பார்க்கவும் அப்படியே சத்தம் குறைந்தது. அப்பா வரவும் அதுவரை தரையில் உருண்டவன், அவரைப் பார்த்து மென்மையாகப் புன்னகைத்து சுவரில் சாய்ந்து தலையணையை மடியில் வைத்து உட்கார்ந்தான்.
“என்ன சக்தி விக்கெட்டா?” என்றபடி பெண்டிக் பாஸ்கர் மகன் அருகே உட்கார்ந்தார்.
“என்னடா காலையில தகராறாம்?” பாஸ்கர் மெல்ல மகனிடம் கேட்க
“எப்பவும்போலத்தான்பா, தாத்தா கண்ணாடி போடல, தெரியாம அந்த பக்கம் கொஞ்சம் வெட்டிட்டார்.”
சக்தி தாத்தாவுக்கு ஆதரவாக சொல்ல “அடேய்! இதே அவங்க நம்ம பக்கம் வெட்டியிருந்தா தாத்தாவும் பேரனும் இப்படி பதுசா இருப்பீங்களாடா?” என்று கேட்டு மகனை பார்த்தார் பாஸ்கர்.
“அதெப்படி டாடி?” என்ற சக்தி முகத்திலும் சிரிப்பு.
அத்தை கிடாவெட்டுக்கு ஊருக்கு வருவார் என்று லாலாவும் சரோஜினியும் சக்தியிடம் சொல்லியிருக்க, சக்தி வீட்டில் அதனை சொல்லவில்லை. வரும்போது பார்த்துக்கொள்ளட்டும், வருகிறார் என்று தெரிந்தால் அதை நினைத்தே வீட்டினர் வருந்துவார்கள் என்று தெரியும்.
சென்னையில் வசுந்த்ராவின் வீட்டில்…
“வசு…வசு” என்று குரல் கொடுத்தபடி அறைக்குள் நுழைந்த சித்ரஞ்சனின் கை காக்கி சட்டையின் பொத்தான்களை களைய, வசுந்த்ராவோ காதில் விழாதது போல் வெளியே சென்றாள்.
“என்னாச்சு வசு?” சித்ரஞ்சன் அறைக்குளிருந்தபடி கத்தினான். காக்கி சட்டையைத் துணி துவைக்கும் கூடையில் போட்டவன் மனைவி பின்னால் சென்றான்.
“என்னடி?” என்று ஹாலில் உட்கார்ந்திருந்த வசுந்த்ராவின் அருகே அமர்ந்து கேட்டான்.
“என்ன வசு கூப்பிட்டுட்டே இருக்கேன், ஒரு வார்த்தை என்னன்னு கேட்கமாட்டேங்கிற? என்ன கோவம்? தனியா கத்த விடுற”
“நான் நாள் முழுக்க தனியாதானே இருக்கேன், கொஞ்ச நேரம் தனியா கத்தினா தப்பில்ல” வசுந்த்ரா முகத்தில் அவ்வளவு கோபம்.
“பகத் ஆசைப்பட்டான்டி, நம்மளாலதான் அடிக்கடி ஊருக்குப் போக முடியல. ஊர்ல லாலா, சரோ கூட நல்லா எஞ்சாய் பண்ணுவான். அப்பா வேற மண்டாபிடிக்கே நம்ம போகலன்னு கோவமா இருந்தார்.”
“எங்கப்பா பதினைஞ்சு வருஷமா என் மேல கோவமா இருக்கார் ரஞ்சன்” என்று வசுந்த்ரா சொல்ல, சித்ரஞ்சனின் மனது சுணங்கியது. அவனுக்கு வருத்தமிருந்தாலும் சுதந்திர விலாசத்தின் கொழுப்பு அதனை காட்டவிடவில்லை. மகன் திருமணம் முடிந்து வந்ததும் திலகர் ஏற்றுக்கொண்டாலும், இன்றுவரை லட்சுமணனுக்கு மகளோடு பேச்சே கிடையாது. வசுந்த்ராவுக்கு அப்பாவிடம் பேச வேண்டும் என்று எண்ணமிருந்தாலும் பேச முயற்சி செய்ததில்லை. சித்ரஞ்சனுக்கும் மனைவிக்காகப் பேச வேண்டும் என்ற எண்ணமிருக்கும், ஆனால் பயம். அதே நேரம் அங்கே பேச சென்று தன் வீட்டோடு உறவு கெட்டுவிடுமோ என்ற சுய நலமும் கூட.
“நம்ம பகத் ஆசைப்பட்டான், அனுப்பி வச்சாச்சு. என்ன இப்போ?” சித்ரஞ்சன் குரலில் லேசாக எரிச்சல் எட்டிப்பார்த்தது.
“தாத்தா வேணுமாம், தாய் மாமா வேணுமாம், மாமி வேணுமாம். மாமா பையன் கூட பேசணுமாம்.” வசுந்த்ரா பொறுமையாக சொல்ல, சித்ரஞ்சன் பாவமாக மனைவியைப் பார்த்தான்.
அந்த பாவமான முகத்தைப் பார்த்து வசுவுக்கு இரக்கமில்லை. மாறாகக் கோபம் வந்தது.
“என்ன நினைச்சிட்டு இருக்கார் உங்கண்ணா? என்ன செஞ்சிடுவான் எங்க சக்தி? சக்திகிட்ட பேசினதுக்கு சரோவையும் பகத்தையும் பேசியிருக்காங்க..” என்று மகன் மாலை பேசியது அத்தனையும் சொல்லி, இல்லையில்லை கத்திவிட்டு கணவனைப் பார்த்தாள் வசுந்த்ரா.
“அது சரோவும் சக்தியும் பேசுறதைப் பார்த்தா யாராவது எதாவது கத கட்டிடுவாங்கன்னு. அச்சோ நான் தப்பா சொல்லல, அண்ணா அப்படி நினைச்சிருக்கும்.” சித்ரஞ்சன் விளக்கம் சொல்ல
“டேய்ய்ய்” பல்லைக் கடித்தாள் வசுந்த்ரா.
“வசு, போலீஸ்னு கொஞ்சம் மரியாதை டி” சித்ரஞ்சன் மெல்ல மனைவி பக்கம் நகர்ந்து கிசுகிசுக்க, கணவனின் தோளில் அடித்தாள் வசுந்த்ரா.
“நீ போலீஸ்னா, எங்க சக்தி யாரு? நீ செஞ்ச வேலைக்கு மரியாதை மட்டும்தான் பாக்கி..”
“ஏண்டி அந்த டவுஸர் போட்டு நம்ம தெருவுல நுங்கு வண்டி ஓட்டிட்டு இருந்தவனும் டி.எஸ்.பி சித்ரஞ்சனும் ஒன்னா?” மனைவி தோள் மீது கைப்போட்டு சித்ரஞ்சனும் புருவமுயர்த்திக் கேட்க
“ஓஹ், நீங்க மட்டும் அஞ்சு வயசுல ஆடி கார் ஓட்டிட்டு இருந்தீங்களோ? என் அண்ணன் மவனாவது டவுசர் போட்டுட்டு இருந்தான், உங்கம்மா உங்களை வேப்ப மரத்துல ஜட்டியோட அடிச்சதெல்லாம் மறந்தாச்சு போல..” வசுந்த்ராவின் கேள்வியில் சித்ரஞ்சனுக்கு முகத்தை எங்கு கொண்டு வைப்பது என்று தெரியவில்லை.
“வசு விட்டுடி” சித்ரஞ்சன் வசுந்த்ராவின் கையைப் பிடித்து, “அப்பா, அண்ணா பேசினதுக்கு நான் சாரி கேட்குறேன் வசு, சாரி” என்றான் மென்மையாக.
வசுந்த்ரா எதுவும் பேசாமல் கணவனை அழுத்தமாகப் பார்த்தாள். கண்களில் நீர்த்திரையிட்டது. வசுந்த்ரா பேசி, அடித்து எத்தனை சண்டை போட்டாலும் சித்ரஞ்சன் சமாளிப்பான். ஆனால் அவளின் கண்ணீர்..? அது அவனை மிகவும் காயப்படுத்தும். அதுவும் இத்தனை வருடம் நான் நல்ல கணவனாக இருந்தும் என் மனைவியின் இந்த கண்ணீரை என்னால நிறுத்த முடியவில்லை என்ற இயலாமை அவனுக்கு அதிகமுண்டு. ஆயிரம் முறை இதனை பேசி சண்டையிட்டு காயப்படுத்தி, காயப்பட்டு என்று அவர்களுக்கே சலித்துவிட்டு. நடந்ததை ஏற்று நடக்க பழகிவிட்டார்கள்.
“வசு, நான்.. நான் இந்த தடவ கண்டிப்பா மாமா கிட்ட போய் பேச போறேன். சத்தியமா” என்றதும் வசுந்த்ரா பதில் சொல்லாமலிருக்க
“எனக்கு பயம்தான், ஆனாலும் எத்தன வருசம் உன்னை அவங்க இப்படி தள்ளி வைப்பாங்க? பகத்கே விவரம் தெரிஞ்சு கேள்வி கேட்கிறான். நான் கிடாவெட்டுக்குப் போறப்ப கண்டிப்பா பேசத்தான் போறேன்.”
“எங்க வீட்ல இப்ப ஒரு போலீஸ் வேற இருக்கான், பயமில்லாம பேசுறீங்க?” வசுந்த்ரா கொஞ்சம் தெளிந்து கணவனை சீண்டினாள்.
“தம்மாதுண்டு இருந்த பய அதுக்குள்ள பாரேன் வளந்துட்டான். ஆனாலும் எனக்கென்ன பயம்? எங்க தாத்தா எல்லாம் வெள்ளக்காரன் பீரங்கிக்கே பயப்படாதவர் தெரியுமா?” என்றதும்
“இந்த பில்டப் விடுறது எல்லாம் இன்னும் சுதந்திர விலாசத்தை விட்டுப் போகல இல்ல, வீட்டோட இல்லன்னாலும் ரத்தத்தில கலந்திருக்கும் போல..” வசுந்த்ரா சொல்ல, சித்ரஞ்சன் சிரித்தான்.
“சாரி வசு, என்னை மன்னிச்சிடுடி” மனைவியை இறுக்கமாக அணைத்தான்.
“மன்னிச்சதாலதான் உங்களோட வாழ்றேன், மறக்கத்தான் முடியல.. ப்ச் விடுங்க. சுதந்திர விலாசத்துலதான் குப்ப கொட்டணும்னு விதியிருந்தா என்ன பண்ண முடியும்..” சலித்தபடி வசுந்த்ரா சொல்லி எழுந்தாள்.
“ஓய், என்ன? சலிச்சிக்கிற? இந்தியனா நீ பெருமைப்படணும். சுதந்திர விலாசத்து ரேசன் கார்ட்ல உன் பெயரும் இருக்கு’ன்றது உனக்குப் பெருமை இல்லையா?” சித்ரஞ்சனும் விளையாட்டாகக் கேட்டான்.
“இல்ல” என்று வசுந்த்ரா மிடுக்காக சொல்லி சமையலறைக்குள் போக
“இப்படி பொசுக்குனு சொல்லிட்டாளே” என்று புலம்பியபடி நின்றான் சித்ரஞ்சன்.