சுதந்திர விலாசத்தில் பகத்’துக்கு இரவு உணவை ஊட்டிவிட்டார் அஞ்சம்மா. பதின்மூன்று வயது சிறுவன், அவனே உண்டாலும் வீட்டின் இளையவன், இளைய மகனின் மகன் என்பதால் கூடுதல் செல்லம். எப்போதாவது ஊருக்கு வரும் பேரனுக்கு அஞ்சம்மாவின் சீராட்டெல்லாம் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும்.
மனைவி பேரனுக்கு சோறூட்ட, திலகர் பேரனிடம் கதைப் பேசினார். மாலையில் அவனை கொஞ்சம் கண்டிப்பாக பேசிவிட்டதால் மனதில் வருத்தமிருந்தாலும், அதை காட்டிக்கொள்ளாது வேறு விஷயம் பேசி அவனை திசைதிருப்பினார். பேரப்பிள்ளைகள் எல்லாரும் திண்ணையில் உட்கார்ந்திருந்தனர். லாலா தலையணை வைத்து படுத்திருக்க, சரோஜினி மாணவர்களின் விடைத்தாள்களைத் திருத்திக்கொண்டிருந்தாள்.
“அந்தோல இருக்குப் பார்த்தியா அந்த போட்டோ அதுல இருக்குறது ராஜாஜியும் எங்கப்பாவும். பரண்’ல கிடந்தது போன மாசம்தான் அதை சுத்தம் பண்ணி மாட்டினோம்” திலகர் பேரனிடம் பூரிப்போடு சொன்னார்.
“ஓஹ், எப்போ எடுத்தது தாத்தா?”
“கீழ்ப்படியாமை இயக்கத்தப்போ உப்பு சத்தியாகிரகம் பண்ணினப்போ எடுத்தது. குஜராத்துல காந்தியடிகள் ஆரம்பிச்சார், இங்க வேதாரண்யத்துல ராஜாஜி நடத்தினார், அவரோட எங்கப்பாவும் போனார். வெள்ளக்காரன் கைது பண்ணிட்டான். ம்ம்…அப்போ எல்லாம் இந்த செல்போனும் ஒன்னும் இல்லை, தகவலே தெரியாம தவிச்சு நின்னோம். இப்போ நினைச்சா பெருமையா இருக்கு…”
“சபர்மதி ஆஸ்ரமத்திலிருந்து 350 கிலோமீட்டர் தூரம் தண்டி, அங்கதான் காந்தியடிகள் உப்பு எடுத்து வெள்ளைக்காரனை மிரட்டினார். அவ்வளவு தூரம் கிட்டதட்ட இருபது நாளைக்கு மேல நடந்தே போனாங்க” திலகர் இந்த செய்தியை எல்லாம் லாலாவுக்கும் சரோவுக்கும் ஆயிரம் முறைக்கு மேல் சொல்லியிருப்பார், வயதானதும் சில தகவல்களை மறக்கிறாரே தவிர பேசாமல் இருப்பதில்லை. இப்போது இளையபேரன் வரவும் உற்சாகமாகக் கதை சொல்ல
“ஏன் அவ்வளவு தூரம் நடந்தே போனாங்க, வண்டி இல்லையா தாத்தா?” பகத் யோசனையாகக் கேட்க
“போராட்டம்னா தெருவுல நடந்து போராடனும்யா, சொகுசாவா வண்டியில போக முடியும்?” என்று திலகர் கேட்டார்.
“பஸ்ஸுக்குக் காஸூ பிரிட்டிஷா கொடுப்பான்?” லாலா முணுமுணுக்க, அதைக் கேட்ட சரோஜினி
“வண்டியில நினைச்சாலும் போயிருக்க முடியாது, அவ்வளவு பேரும் பஸ் இல்லை ட்ராம்ல போகணும். அந்த ரூட்ல இருந்ததானு தெரியல, அப்படியே இருந்தாலும் அதெல்லாம் பிரிட்டிஷ் போட்டதுனு காந்தி நடந்தே எல்லாரையும் அழைச்சிட்டு போயிருப்பார்.” சரோஜினி சொல்ல
“அப்போ ரோடு போட்டது பிரிட்டிஷ் இல்லையா?” பகத் கேட்க
“டேய்! நாங்களாம் கதை சொன்னப்போ அமைதியா கேட்டோம், நீயென்னடா பதிலுக்குக் கேள்வி கேட்கிற..” லாலா கடுப்பாகிக் கேட்க
“அவனுக்கு அறிவிருக்குக் கேட்கிறான். கேள்வி கேட்க சொல்றதுதான் நல்ல கல்வி. நீ கேளுடா பகத்” தம்பியை சரோஜினி ஊக்குவித்தாள்.
அதுவரை நடந்ததை சொன்ன திலகர், பின் பெருமை பேச ஆரம்பித்துவிட்டார்.
“தாத்தா, அது எடிட்ல பண்ணிக்கலாம்” என்று பகத் சிங் விளக்கினான்.
“பரவாயில்லடி சரோ, உண்மையில நம்ம தம்பி அறிவாளியாத்தான் இருக்கான். எப்படி தாத்தாவுக்குக் கவுண்டர் கொடுக்கிறான் பாரேன்..” லாலா தங்கையிடம் சொல்லி சிரித்தான்.
“டேய் இவன் சொல்றமாதிரி அப்போ இந்த இண்டர்னெட் எல்லாம் இருந்திருந்தா காந்திஜி ஷேஸ்டேக் போட்டு எல்லாரையும் இன்வைட் பண்ணியிருப்பார்ல.., வித் வின்ஸ்டன் சர்ச்சில், அட் ரவுண்ட் டேபிள் கான்பிரன்ஸ்னு கேப்ஷன் போட்டிருப்பார்”
“ஹேய் அறிவே! இண்டர்னெட் இருந்திருந்தா நம்மாளுங்க எல்லாம் அறிவா இருந்திருப்பாங்க, ஏன் அடிமையா இருக்கப்போறாங்க..?” லாலா தங்கை தலையில் தட்டினான்.
“டேய் நம்ம அப்போ இங்கிலிஷ்காரனுக்கு அடிமை, இப்போ இண்டர்னெட்டுக்கு அடிமை, அதாண்டா நம்ம டிசைன்..” திலகர் பேரனிடம் பேச, இங்கே அண்ணனும் தங்கையும் தனியே வேறு பேச்சுவார்த்தை நடத்தினர்.
பத்து மணிக்கு லைன் மாத்தும் பணிக்காக, அப்போது மின்சாரம் துண்டிக்கப்பட, ஏற்கனவே இளையப்பேரனின் துடுக்கான கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் இருந்த திலகர்
“சட்டுப்புட்டுனு வேலையை முடிச்சிட்டு போய் தூங்குங்க, லைன் மாத்திட்டான் இன்னும் கதை பேசுறீங்க.” என்று அதட்டினார்.
***************
அன்று மதுரை விரன் கோவில் கிடாவெட்டு.
மாலை பூஜை முடிந்திருக்க, சக்திவேலின் குடும்பம், சரோஜினியின் குடும்பம், அவர்கள் பங்காளிகள் என்று எல்லாரும் கோவிலில் குழுமியிருந்தனர். ஊருக்குப் பொதுவான கோவில் என்பதால் நிறைய குடும்பங்கள், கிட்டதட்ட எண்பத்திரண்டு ஆடுகள் வெட்டினர். இளவட்டங்கள் ஒரு பக்கம் பாட்டு போட்டுக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் பந்தி அப்போதே ஆரம்பமாகியிருக்க, ஆட்டுக்கறி விருந்து கமகமத்தது.
சரோஜினிக்கு அண்ணன் முறையில் உள்ள அரிச்சந்திரன், அவன் மனைவி ஆதினி, தங்கை தாரகை எல்லாரும் தரிசனம் முடிந்து ஒன்றாக கோவிலில் ஒரு புறம் உட்கார்ந்திருக்க, வெளியே இருக்கும் பெரிய திடலில் விருந்து அமர்க்களப்பட்டது. உறவுகள் எல்லாம் அன்று ஒன்றாய்க் கூடினர்.
‘காக்கிச் சட்டை போட்ட மச்சான்
களவு செய்யக் கன்னம் வைச்சான்
கன்னம் வைக்க வந்த மச்சான்
கன்னத்தில கன்னம் வைச்சான்’
என்று ஒலிப்பெருக்கியில் பாடல் ஓட, தாரகையைப் பார்த்தான் அரி.
“டேய் துரை, ஏன் இந்த பாட்டு போடுறார்?” என்று அண்ணனை முறைத்தாள்.
“அதானே? ராஜாண்ணா காதல் மேகங்கள் கவிதை தாரகைனு இல்ல போடுவார்” என்று ஆதினி கிண்டல் செய்ய, அரியும்,
“அதானே?” என்று தங்கையைப் பார்த்து சிரித்தான்.
அடுத்து, “நான் போக்கிரிக்கு போக்கிரி ராஜா
பக்கத்துல பட்டுல ரோஜா’ என்று பாடல் ஓட,
“கிடாவெட்டுக்கு வந்துட்டு என்ன பாட்டு போடுறானுங்க பாரு. பேருக்காச்சும் சாமி பாட்டு வருதா?” என்று திட்டிய அரி,
“நீங்க இருங்க, நான் அப்படியே போய்ட்டு எவன் அவன் போக்கிரி பார்த்துட்டு வரேன்” என்று இளைஞர்கள் கூடியிருந்த இடம் செல்ல, ராஜதுரை, சக்திவேல் என்று இவன் உறவுப்பட்டாளம் அங்கிருந்தனர். அரி எழுந்தவுடனே தாரகை ராஜதுரைக்கு அழைத்து,
“கிடாவெட்டுல போடுற பாட்டா துரை இதெல்லாம்?” என்று கணவனை பேச,
“அம்மாடி! நான் இல்லடி, எல்லாம் இந்த சக்தி” என்றதும் தாரகை போனை வைத்தாள்.
சக்திவேலை பார்த்ததுமே அரிச்சந்திரன்,
“டேய் சக்தி! அந்த காக்கி சட்டை நீதானே?” என்று கேட்க சக்திவேல் தலையசைத்து சிரித்தான்.
“முதல்ல நீங்கனு நினைச்சிட்டேன் துரை” என்று அரி சிரிக்க,
“யாருக்குடா பாட்டு போடுற?” என்று அரி சக்திவேலின் தோளில் கைப்போட்டு கேட்டான்.
“அதை கேட்டா எங்க சொல்றான்? எல்லாரும் என்னை வந்து பேசுறானுங்க” என்று ராஜதுரை புலம்ப,
“தம்பிக்காக பேச்சு வாங்கினா தப்பில்ல, நீங்க மட்டும் எத்தனை கல்யாண வீட்ல அண்ணிக்காக பாட்டு போட்டு இருக்கீங்க. அதுவும் சின்ன பசங்க எங்களை எல்லாம் ஏமாத்தி” என்று அரி முன்பே ராஜதுரை காதல் செய்த போது செய்ததை சொல்லிக்காட்ட, விட்டால் சக்திவேல் இன்னும் பேசுவான் என,
“நான் பந்தி பரிமாற போறேன்” என்று ராஜதுரை எழுந்து போய் விட்டான்.
ராஜதுரை சென்றதும் சக்தி அரியிடம் அவன் இப்போது கையாளும் வழக்கைப் பற்றிப் பேசினான். எல்லாரும் ஒரே ஆட்டம் பாட்டம் விருந்து என்று இருக்க, ராஜதுரை மனைவியை பந்தியில் விழுந்து விழுந்து கவனித்தான்.
பக்கத்தில் இருந்து ஆதினியோ, “நாங்களும் சாப்பிடுவோம், எங்களுக்கும் வைக்கலாம்” என்று ராஜதுரையிடம் சொல்ல,
“நம்ம வீட்டு விருந்துடா ஆதி, நம்மதானே அண்ணியை கவனிக்கணும்” என்று சொல்ல ஆதினி முறைத்தாள். ராஜதுரை விளையாட்டுக்குப் பேசினாலும் எல்லாரையும் நன்றாகவே கவனித்தான். கூடவே சக்திவேலும் பந்தி பரிமாற வர,
“காக்கி சட்டை யாருக்குனு எனக்குத் தெரியுமே?” என்று ஆதினி அவனிடம் கிண்டல் பேச,
“தெரிஞ்சா என்னடி, எனக்கு யாரை பார்த்தும் பயமில்லை” என்றவன்,
“வளருற பிள்ள, இந்தா நல்லா சாப்பிடு” என்று அவள் இலையில் கறி வைத்தான்.
“அத்தாச்சி! இந்த சக்திண்ணன் யாருக்கு அதிகமாக கறி வைக்குது பாருங்க” என்று தாரகையிடம் சொல்ல,
“நீ வேடிக்கை பார்க்காம சாப்பிடுடி, அவன் ஆம்பிளைங்க பந்திக்கு வைக்க போய்ட்டான். உன் ஆராய்ச்சி வேஸ்ட்” என்றாள் சிரிப்புடன். பெண்கள் பந்தியிலிருந்த சரோஜினியின் பார்வை சக்தியைத்தான் தேடியது.
உறவுகள் கூடியிருப்பார்கள் என்று சரோவைத் தவிர்த்து சக்தி ஆண்கள் பந்திக்குப் பரிமாற போக,
“தம்பி! கறி எடுத்தா” என்று குரல் கேட்டது.
கேட்டவருக்குக் கறி வைத்தவன் “உங்களுக்கு?” என்று அடுத்துள்ளவரைக் கேட்க, பதில் இல்லை என்றதும் நிமிர்ந்தான். சித்ரஞ்சன் இருந்தான், எதுவும் பேசாமல் அவனுக்கும் சக்தி கறி பரிமாறிட
“அத்த வூட்டுக்காரனதும் சக்திப்பய எப்படி கவனிக்கிறான் பாரு” என்றார் சித்ரஞ்சனுக்கு அடுத்திருந்தவர். எத்தனை வருடம் ஆனாலும் இப்படி பேசும்பொருளாகவே இருக்கிறார்களே என்ற கோபத்தில் சக்தி
“அண்ணே! இங்க வா” என்று ராஜதுரைக்குக் குரல் கொடுத்தான்.