‘கிடாவெட்டு’ ஊரின் முக்கியமான நிகழ்வு, அதுவும் வழக்கமாக குலதெய்வ கோவிலில் நடைபெறும் கிடாவெட்டில் அந்த குடும்பத்து உறுப்பினர்கள், பங்காளிகள் மட்டுமே இருப்பர். இப்படி பெரிய கோவில் கிடாவெட்டில் ஊரில் அனேகம் பேர் திரண்டுவிடுவார்கள், அந்த கோவிலை குலதெய்வமாக வழிபடுவர்களின் உறவுகள், நண்பர்கள் என்று அனைவருக்கும் அழைப்பு போய்விடும். உறவுகள் பேசி, உண்டு, கூடி, சண்டையிட்டு என்று உணவோடு உணர்வாய் ஒரு விழா.
மதியம் பன்னிரெண்டு மணிக்கு மேல் சேவலை பலி கொடுப்பதில் ஆரம்பித்தது மதுரை விரன் கோவில் கிடாவெட்டு.
“இந்தா வேட்டு போட்டானுவோ, கிடாவெட்டு ஆரம்பிச்சிடுச்சு” என்று பேரனிடம் சொல்லிக்கொண்டிருந்தார் அஞ்சம்மா.
“வேட்டா…?” என்றபடி பகத் அம்மாவை பார்த்தான். வசுந்த்ரா மகனுக்குப் பதில் சொல்லும் முன் அஞ்சம்மாள் முந்திக்கொண்டார்.
“பாரு, கிடாவெட்டு கூட என் பேரனுக்குப் பெரிய விஷயமாத்தான் இருக்கு, அடிக்கடி ஊருக்கு வந்து போயி இருந்தாதானே எல்லாம் தெரியும். முந்தா நாள் நம்ம தேனு பேரனை அண்ணன்னு சொல்றான், நம்ம வீரமணி வந்தான் அவனை அங்கிள்னு சொல்றான்… கொஞ்சனாச்சும் உறவு தெரிஞ்சாதானே?” என்று அஞ்சம்மா மருமகளைக் குத்தினார்.
“அக்கா, பூ கட்டிட்டேன். பிரிட்ஜல வைக்கவா?” என்று கேட்டார்.
“பதில் சொல்றாளா பாரு..” என்று அஞ்சம்மா முணுமுணுக்க, வசுந்த்ரா ஒன்றும் பேசாமல் பூவை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றார்.
இவர்கள் எல்லாம் வெளித்திண்ணையில் பேச்சுவார்த்தை நடத்த, எல்லாம் பக்கத்து வீட்டிலிருந்தவர்கள் கண்ணில் புலப்பட்டது. காலையில் ஊரின் பேருந்து நிறுத்தத்தில் வந்து இறங்கும்போதே சித்ரஞ்சன் வசுந்த்ரா வந்த செய்தி லட்சுமணன் வீட்டினருக்கு தெரிந்தது. சசிகலாதான் அடிக்கடி எட்டிப்பார்த்தார். யாரும் வீட்டிலில்லா நேரம் வசுந்த்ராவிடம்
“எப்படி இருக்க வசு?” என்று நலம் விசாரித்தார்.
“நான் நல்லாயிருக்கேன் அண்ணி, அப்பா, அண்ணன், சக்தியெல்லாம் எப்படி இருக்காங்க?” என்று கேட்க,
“எல்லாம் நல்லாயிருக்காங்க. நீ வீட்டுக்குள்ள போ, உன் வூட்டு சனம் பார்த்தா பேசுவோ” என்று சொல்ல
“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.” என்று வசுந்த்ரா சொல்ல, “உங்கப்பாரு நான் உங்கிட்ட பேசுறதைப் பார்த்தா அவ்வளவுதான் வசு, நான் அப்புறம் வரேண்டி” என்று ஓடிவிட்டார். இப்போது வசுந்த்ரா எட்டிப்பார்க்க, யாரும் வீட்டின் வெளியே தெரியவில்லை.
சித்ரஞ்சன் வெளிவேலையாக சென்றிருந்தவன் வீட்டுக்குள் வர, மகனிடம் அஞ்சம்மாள் குற்றம் சொல்ல
“அதுக்கென்னம்மா? ஊருக்கு வரப்போ சொல்லிக்கொடு. எனக்கு வேலை அங்கயிருக்கு, இங்க என்ன செய்ய முடியும்?” என்று அம்மாவை சமாளிக்க, அவரோ
“உனக்கு வேலையிருக்குன்னு எனக்குத் தெரியாதாடா? உன் பொண்டாட்டி அவளும் ஒட்டமாட்டா, பேரனையுமில்ல அனுப்ப மாட்டேங்கிறா.”
“அவனுக்கு ஸ்கூல் இருக்கேம்மா, இல்லைனாலும் அவனை அனுப்பிட்டா வசு அங்க தனியா இருப்பாம்மா” சித்ரஞ்சன் வசுந்த்ராவை விட்டுக்கொடுக்காது பேசினான்.
அஞ்சம்மா மகனை முறைத்து, “அதான் கல்யாணமானதுமே உன்னை பிரிச்சுக் கூட்டிட்டுபோய்ட்டாளே, அவ மவன்’னதும் மட்டும் பொத்தி பொத்தி வளர்க்கிறா.” என்று அஞ்சம்மா விடாது பேச, திலகர் மனைவியை அடக்கினார். அப்பா வரவும் சித்ரஞ்சன் உட்கார்ந்திருந்தவன் எழுந்து நிற்க,
திலகர் மகனை பார்த்துவிட்டு மனைவியை, “உனக்கு வேற வேலையே இல்லையா?” என்று அதட்ட, அஞ்சம்மா கணவனை முறைத்தார். திலகர் லட்சுமணன் வீட்டினரை என்னதான் பேசினாலும் வசுந்த்ராவை சித்ரஞ்சன் திருமணம் செய்தவந்த நாள்தொட்டு அவளை பேசியதில்லை. அதற்குமுன்னும் கூட பெண்பிள்ளையைப் பேசமாட்டார். அந்த வீட்டின் ஆண்கள்தான் அவருக்கு ஆகாதவர்கள்.
அம்மாவும் அப்பாவும் பேசிக்கொள்ள, சித்ரஞ்சன் நழுவி மாடியில் அவர்கள் தங்கியிருக்கும் அறைக்கு வந்தான். வசுந்த்ராவின் பார்வை ஜன்னல்வழியே அவர்கள் வீட்டைத்தான் பார்த்தது. சித்ரஞ்சன் மனைவியின் ஏக்கமான பார்வை பார்த்து எப்படியாவது நாளை மாமனார் வீட்டில் நடந்த உண்மையை, தன் தவறை சொல்லிவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.
வசுந்த்ராவை உரசியபடி நின்றவன், “என்னடி புதுசா காம்பவுண்ட் சுவர் எல்லாம் அந்தப்பக்கம் எழுப்பியிருக்காங்க, பெயிண்ட் அடிச்சிருக்காங்க போல.” என்று பேச்சுக்கொடுக்க வசுந்த்ரா பேசாமல் வீட்டையே பார்த்தாள்.
“பரவாயில்லை இந்த கலர் நல்லாயிருக்கு, முன்னாடி அந்த கொட்டாயி பக்கத்துலதானே வசு நீ துணி காயப்போடுவ, இப்போ இடத்தை மாத்திட்டாங்க போல..” என்றதும் வசுந்த்ரா அப்படியே திரும்பி நின்று கணவனை ஆச்சரியமாகப் பார்த்தாள்.
“என்னடி கேள்வி இது? உன் கொலுசு சத்தம் திண்ணையைத் தாண்டினாலே எட்டிப்பார்ப்பேன்” என்றதும் வசுந்த்ரா
“திருட்டுத்தனமா பார்த்துட்டு என்ன கடமையை செஞ்ச மாதிரி பெருமையா ஒரு பதில்.” என்று முறைத்தாள்.
“அந்த வயசுல எனக்கு அதான் கடமை, ஒளிஞ்சு நின்னா பார்த்தேன். இங்கயிருந்தா பார்த்தா இப்பவே உங்க வீட்டுக்கு வெளியே நல்லா தெரியுது, இப்போ இந்த தகரக்கொட்டாய்(கொட்டகை) போட்டதும் அந்த பக்கம் மறையுது. இல்லன்னா நீ வயல்’ல நடந்து போறது வரைக்கும் கூட தெரியும்..”
“அப்போ இந்த ஜன்னல்’ல தெரிஞ்ச என்னோட நிலா, சூரியன் எல்லாம் நீதான் வசு.” என்றான் வசுந்த்ராவின் கன்னத்தை வருடி. வசுந்த்ராவுக்கு சித்ரஞ்சனின் பிரியம் பிடிக்கும், அதுவும் இத்தனை வருட வாழ்க்கையில் அவன் சொல் கூட அவளை காயப்படுத்தியதில்லை. மாமியார் பேசினாலும் இவன் பேசவிடமாட்டான். இப்படி ஒரு அன்பை வைத்துக்கொண்டு அவன் தேர்ந்தெடுத்த வழியை நினைக்கும்போது, அதனால் தான் எதிர்கொண்ட, எதிர்கொள்கிற வலியை நினைக்கும்போதுதான் ஒரு தீரா ஆத்திரம் வரும்.
அவளுக்கு இந்த எண்ணம் வருகின்ற பெரும்பான்மை நேரம் சித்ரஞ்சன் அருகே இருந்தால் அவனை வார்த்தையால் குத்திக்கிழிக்காது விடமாட்டாள். ஆனாலும் இத்தனை வருட வாழ்க்கை ஒரு பொறுமையை, சண்டைகள் சலிப்பைக் கொடுத்திருக்க இந்த முறை அவனை பேசவில்லை.
“அப்போ இப்போ?” என்று கிண்டலாகக் கேட்க
“ஜன்னல் நிலா இப்போ என் கைக்குள்ள..” என்று நெற்றியில் முட்டியவன் அப்படியே அந்த அணைப்பை, முத்தமாக்கியிருக்கலாம். எங்கே சுதந்திரவிலாசத்தின் கொழுப்பு விட்டால்தானே? அதைவிட அவனுக்கு அவனை நியாயப்படுத்தாமல் இருக்க முடியவில்லை.
வசுந்த்ரா முகம் புன்னகையில் பூத்திருக்க, அந்த புன்னகைப் பூவை பூந்தோட்டமாக்காமல்
“இப்பவும் நான் செஞ்சது தப்புன்னுதான் சொல்லுவியா வசு? நான் அன்னிக்கு வேற எதுவும் செஞ்சிருக்க முடியாதுதானே?” என்று அவன் நியாயம் கேட்க, இந்த பேச்சுத்தான் வசுந்த்ராவுக்குக் கோபம் தரும்.
“இத்தனை வருஷமாகியும் இந்த எண்ணம் மாறலன்னா நானோ, என் காதலோ உங்களை மாத்தலன்னு அர்த்தம் ரஞ்சன். நீங்க செஞ்சது தப்புன்னு என்கிட்ட ஒத்துக்க வேண்டாம், அதை நீங்க மனசார உணர்ந்தா கூட எனக்குப் போதும்” வசுந்த்ரா உணர்வுப்பூர்வமாக சொல்ல சித்ரஞ்சன் மனது முன்பாதியில் துள்ளி பின்பாதியில் வாடியது.
“அப்போ நீ என்னை லவ் பண்றதானே வசு..?”
அத்தனை ஆவலாக, பரபரப்பாக கணவன் குரல் வர வசுந்த்ரா நிதானமாக
“இன்னும் உங்களுக்கு அதே இருபத்து நாலு வயசு பையன்னு நினைப்பா? இன்னமும் இப்படி கேட்கிறீங்க? லவ், காதல் என்னமோ உங்க இஷ்டத்துக்குப் பெயர் வச்சிக்கோங்க, எனக்கு உங்க மேல ஒரு மரியாதை, அன்பிருக்கு. உங்க ரசனை மேல, உங்க உணர்வுகள் மேல, உறவுகள் மேல கூட அந்த மரியாதையிருக்கு. எப்பவும் உங்களுக்குத் துணையா இருக்கணும், உங்களோட இருக்கணும், நீங்களும் எனக்காக நிக்கணும்னு நினைக்கிறதுதான் காதல்னா, எனக்கு உங்க மேல இப்போ நீங்க புரிஞ்சிக்க முடியாத அளவுக்கு காதல் இருக்குப் போதுமா?” என்று வசுந்த்ரா கணவனின் இருகைகளையும் பிடித்து தன் கையால் பிடித்தபடி சித்ரஞ்சனின் கண்ணைப் பார்த்து மனதில் உள்ளதை சொன்னாள்.
சித்ரஞ்சனுக்கு மனைவிக்குத் தன்னை பிடிக்குமென்று தெரியும், வசுந்த்ராவும் கணவனை அக்கறையாகப் பார்த்துக்கொள்வாள். ஆனாலும் இப்படி வார்த்தையாக அன்பை சொல்லியதில்லை, அவளுக்கும் ஒரு பிடிவாதம், கோபம் சொல்லத்தோன்றாது. இன்று ஏதோ சித்ரஞ்சனுக்கு ஒரு வசந்தமான நாள் போல, வசுந்த்ரா அமைதியாகப் பதில் சொல்லியிருக்கிறாள்.
வசுந்த்ரா கணவனிடம் மனதை சொல்லிவிட்டு கீழே சென்றவள்,
“அத்த, உங்களை சாப்பிட வர சொன்னாங்க” என்று மீண்டும் அறைக்கு வந்து சொன்னாள்.
“அத விடு, இங்க வா” என்று மனைவி கையைப் பிடித்தவன் “அது என்ன எனக்குப் புரிஞ்சிக்க முடியாதளவு லவ்வுன்னு சொன்னியே, ஏன் எனக்குப் புரியாது?” என்று கேட்க
“புரிஞ்சிருந்தா அடிக்கடி இப்படி கேட்க மாட்டீங்க, அப்புறம் அப்படியொரு மடத்தனைத்தைப் பண்ணியிருக்க மாட்டீங்க, அதை பண்ணினதும் இல்லாம இத்தன வருஷமும் நான் செஞ்சது சரின்னு வாதாட மாட்டீங்க. என்ன செய்றது இதுக்குத்தான் பிரிட்டிஷ் படிங்கடானு சொன்னா கேட்டாதானே? ஸோ சேட்” என்று வசுந்த்ரா கணவனை கேலி பேசினாள்.
“கான்வெண்ட் படிப்பு’ல அதான் என் பொண்டாட்டிக்குப் பேச்சு ஜாஸ்தி” என்று சித்ரஞ்சனும் பதில் சொன்னானே தவிர, அவன் தவறை ஒப்புக்கொள்ளவே இல்லை.
“வசு” என்று சித்ரா குரல் கொடுக்க
“ப்ச், சீக்கிரம் வாங்க, இப்போ சாப்பிட்டாதான் நைட் சாப்பிட சரியாயிருக்கும். அக்கா கூப்பிடுறாங்க” என்று வசுந்த்ரா கணவனிடம் சொல்ல, இருவரும் உண்ண சென்றனர்.
மாலை மதுரவீரன் கோவில் லைட் செட் போட்டு அலங்கார விளக்குகள் மின்னின, ஒலிப்பெருக்கிகள் இளவட்டங்கள் பாடல்களை ஒலிக்கவிட, அந்த பகுதியெல்லாம் மனிதர் கூட்டம். சக்தி உற்சாகமாக தயாரானான், என்னதான் காவல்துறைப்பணியில் இருந்தாலும், சராசரி இளைஞனாக இந்த கொண்டாட்டங்களை எல்லாம் ரசிப்பான். அவன் வேலை செய்யும் ஊரில் மட்டுமே அவன் காவல்துறை வேலையை செய்வான், மற்றபடி ஊரில் அந்த அதிகாரம், பந்தா எதையும் காட்டாதவன்.
சக்திவேலையும் சரோஜினியையும் ஒன்றாய்ப் பார்த்துவிட்டு வாஞ்சி நாதன் மகளைக் கத்தி அன்று சரோ சக்திக்குப் போன் செய்ய, அது சண்டையில் முடிந்தது.
“எதாவது முக்கியமான விஷயமா டி?” என்று சக்தி கேட்க
“ஆமா, இன்னிக்கு நீ பகத்’கூட பேசினதை அப்பா பார்த்துட்டார்” என்று சரோஜினி பரபரப்பாக சொல்ல
“ச்ச, அதுக்கென்னடி?” என்றான் எரிச்சலாக.
“அதுக்கென்னவா? நானும் இருந்தேன்ல, ஏன் உன்னோட பேச விட்டேன்னு ஒரே திட்டு, பேச்சு எனக்கு” என்று சரோஜினி வருத்தமாக சொல்ல
“இது ஒரு விஷயம்னு சொல்ல கூப்பிட்டியா? மனுஷன் டென்ஷன் புரியாம, பொறுப்பா நடந்துக்க சரோ” என்று போனை வைத்துவிட்டான். அவனுக்கு அது பெரிய விஷயமாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் எப்போதும் அண்ணனையும் தம்பியையும் தாங்கும் வீட்டில் இருக்கும் பெண்ணுக்கு, காதல் கொடுக்கிற கவனிப்பு தேவையானதாக இருந்தது.
அப்பா அப்படி திட்டியிருக்க, சக்தியிடம் பேசினால் மனதுக்கு ஆறுதலாக இருக்கும் என்று அவள் நினைத்திருக்க, இன்ஸ்பெக்டர் அவர்களுக்கு அவரின் வேலை டென்ஷன். அதை அப்படியே சரோஜினியிடம் காட்டியிருக்க, கிடாவெட்டில் அவளோடு சமாதானமாக வேண்டும் என்ற எண்ணத்தோடு வந்திருந்தான்.
வந்ததும் காவல்காரன் கண்ணில் காதலி விழுந்துவிட, கண்களவுதான்! அவன் வானில் காதல் நிலவுதான்!!
அவன் நிலா ஊதா நிற சில்க் காட்டன் புடவையில் உலா போக, சக்திக்குள் இருக்கும் வாலிபனை, காதலனை தட்டியெழுப்பியிருந்தாள். லத்தியோடு சுற்றுபவனுக்குள் இருக்கும் ரசனைகள் வெளிவர, ராஜதுரை அண்ணன் பக்கம் உட்கார்ந்துகொண்டு
“அண்ணே அந்த பாட்டை போடு, இந்த பாட்டை போடு” என்று இஷ்டத்துக்கு விளையாடி, சரோஜினியின் முக பாவனைகள் ரசித்துக்கொண்டிருந்தான். உறவினான அரிச்சந்திரன் வரவும் வழக்கு விஷயமாகப் பேசியவன் பின் விருந்து பரிமாற உதவிக்குப் போக, சித்ரஞ்சனை எதிர்ப்பார்க்கவில்லை. கூடவே அருகிலிருந்தவர்கள் கிண்டல் வேறு சக்தியைக் கோபப்படுத்தியது.
சித்ரஞ்சனை மரியாதையாகக் கவனித்தான் ராஜதுரை.
“தாரா எப்படியிருக்கா மாப்பிள்ளை? பெரியப்பா எப்படியிருக்கார்” என்று ராஜதுரையின் மனைவி, மனைவியின் தாத்தா என்று சித்ரஞ்சன் விசாரித்தான்.
ராஜதுரையும், “எல்லாரும் நல்லாயிருக்கோம் மாமா” என்றவன் அடுத்த பக்கம் போய்விட்டான். பந்தியில் எல்லாரையும் கவனித்தவன் ஓரமாக நின்றிருந்த சக்தியிடம் வந்தான்.
“என்னடா மாமன் மச்சான்’னா கிண்டல் பண்ணுவாங்கதானே, சின்ன புள்ளையாட்டம் இப்படி வந்து நிக்கிற” என்று தம்பியின் தோளில் கைப்போட்டு துரை கேட்க
“அண்ணே! மைதிலி வச்சு இப்படி பேசினா உனக்குக் கோவம் வராதா? அவளாச்சும் பரவாயில்ல லேட்டஸ்ட் டிக்கெட், அத்த அந்தாளை கட்டிட்டு போய் பதினைஞ்சு வருஷமாச்சு இன்னும் என்னமோ புதுசா பேசுற மாதிரி எல்லாரும் வேணும்னே கிண்டலா நாலு கேள்வி கேட்கிறாங்க, அந்த சிடுமூஞ்சி சித்ரஞ்சனும் வேணுமான்னு கேட்டா வேணும்னு சொல்லாம அப்படியே பார்க்கிறார். எப்படித்தான் அந்தாளை நம்பி எங்கத்த போச்சோ” என்றான் சக்தி கோபம் குறையாது.
“விடுடா, இப்போ பேசி என்னாவாகப்போகுது? எத்தன வருஷம் ஆகியிருந்தாலும் இவனுங்களுக்கு நம்மை பார்க்கிறப்ப இப்படி பேசினா ஒரு குளுகுளுப்பு. விட்டுத்தள்ளுடா”
“நீ வா, வந்து உன் ஆளுக்குப் பாட்டு போடு” என்று ராஜதுரை அவனை சமாதானம் செய்தவன்
“டேய் அண்ணன்கிட்ட சொல்லமாட்டியா? யார்டா அந்த புள்ள?” என்று ராஜதுரை ஆர்வமாகக் கேட்க
“ம்ம், சரோஜினிதான்” என்றான்.
“என்ன எந்த சரோஜினி?”
“கொல்லக்காட்டுல கீழத்தெருவுல இருக்காளே திலகர் பேத்தி அந்த சரோஜினி” என்று சக்தி அழுத்தி சொல்ல, ராஜதுரை அதிர்ச்சியில் விழித்தான்.
“டேய் விளையாடாத! அந்த பிள்ளைக்கும் உங்கூட்டுக்கும் ஆகாதேடா”
“அப்போ நீயும் தாரகை அத்தாச்சியும் மட்டும் எப்படியிருந்தீங்களாம்?”
“தியேட்டர்ல கல் எறிஞ்ச உன்னை எப்படி தாரகை அத்தாச்சி கட்டிகிடுச்சு? அப்படித்தான்” என்று சிரிப்பை அடக்கி சக்தி சொல்ல, ராஜதுரைக்கு ஒன்றுமே புரியவில்லை. இவன் விளையாடுகிறானோ என்று பார்க்க, சக்தி அப்படி விளையாட்டாக ஒரு பெண்ணை பற்றி சொல்லமாட்டான் என்றும் தோன்றியது..
“டேய் துரை! அங்க என்ன பேச்சு வேண்டிக்கிடக்கு, இங்க பந்தியைப் பாருங்கடா” என்று துரையின் சித்தப்பா குரல் கொடுக்க துரை தம்பியை யோசனையாகப் பார்த்தபடி பந்தி வேலையைக் கவனித்தான்.
அன்று கிடாவெட்டு மகிழ்வானதாக முடிய, அடுத்த நாள் எப்படியாவது மனைவிக்காக மாமனாரிடம் பேசிவிட வேண்டும் என்று சித்ரஞ்சன் நினைத்திருந்தான்.
காலையில் பரபரப்பாக எழுந்தவனுக்குத் தஞ்சாவூர் எஸ்.பி அலுவலகத்தில் ஒரு சின்ன வேலை. அதனை முடித்து ஊருக்குப் போனதும் பேசிவிட்டு அன்றிரவே அவர்கள் சென்னை செல்லவேண்டும். சித்ரஞ்சன் வந்த வேலையை முடித்து ஒரு உணவகத்தில் டீ குடிக்கலாம் என்று நுழைந்தான்.
நுழைந்தவன் பார்வை அங்கே பார்த்த காட்சியில் அப்படியே ஸ்தம்பித்தது.
“சரோஜினி!!!” என்று அவனையும் மீறி சத்தம் வர
“சக்தி, சித்தப்பா” என்ற சரோ இருக்கையிலிருந்து எழுந்துகொள்ள, சக்திவேல் அலட்டிக்கொள்ளவில்லை.
“உங்க சித்தப்பாவுக்கு என்ன?” என்றவனும் சித்ரஞ்சனை பார்த்துவிட்டான். என்றாவது தெரியாத்தானே போகிறது என்ற இயல்பான எண்ணவோட்டத்தில் சக்தி இருக்க, சரோவோ பதறினாள்.
“உட்காரு சரோ” என்று அவள் கையைப் பற்றி இழுத்து இருக்கையில் உட்கார வைத்தான் சக்தி.
“சரோ! என்ன இதெல்லாம்? நம்ம வீட்டுக்குத் தெரிஞ்சா என்னவாகும்?” என்று சித்ரஞ்சன் பதறிப்போய் கேட்டான். ஏற்கனவே அவன் காதலால் குடும்பங்கள் பிரிந்திருக்க, மீண்டுமா என்று பயந்தான். எப்படியாவது மனைவியை அவள் வீட்டோடு இணைக்க வேண்டும் என்று நினைக்க, இவர்கள் செயலில் அவனுக்கு ஜென்மத்திற்கும் மாமியார் வீடு இல்லாமல் போய்விடும் போல என்று கோபம் கொண்டான்.
“உங்க வீட்டுக்குத் தெரிஞ்சா என்னவாகும்? நீங்கதான் சொல்லணும்” என்று சித்ரஞ்சனிடம் சக்தி சொல்ல
“சக்தி, எந்த மோட்டீவ்ல நீ இதெல்லாம் பண்ற?” என்று சித்ரஞ்சன் ஒரு சித்தப்பனாக, ஒரு காவல்துறை அதிகாரியாக பதறினான். தன் செயலுக்குப் பழிவாங்க இதெல்லாம் செய்கிறானோ என்று பயம். அவனுக்குத்தான் லாலாவின் நட்பு, சரோவின் காதலும் தெரியாதே.
“சித்தப்பா ப்ளீஸ், சக்தி மேல தப்பில்லை. நாந்தான் சக்திகிட்ட ப்ரோபோஸ் பண்ணினேன், இவர் ரொம்ப நல்ல டைப் சித்தப்பா. நானே உங்ககிட்ட இன்னிக்கு சொல்லணும்னு நினைச்சிட்டு இருந்தேன், நீங்கதான் சித்தப்பா எப்படியாச்சும் தாத்தாகிட்ட பேசி..” என்று சரோஜினி சொல்லும்போதே
“அப்படியே பேசி கிழிச்சிடுவார்” என்ற சக்திவேலை சித்ரஞ்சன் முறைத்தான்.
“என்ன முறைக்கிறீங்க மாமா? நான் ஒன்னும் இவளை இழுத்துட்டு எல்லாம் ஓடமாட்டேன், உங்கப்பா கிட்ட வந்து முறையா பொண்ணு கேட்பேன். எனக்கு அந்த தைரியம் இருக்கு. மாம்ஸ் நான் வேற ஒரு சின்ன சின்சியர் இன்ஸ்பெக்டர், கடமைக்கு நடுவுல காதலிக்க நேரமில்லை, கிடைச்ச நேரத்தில் கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணாம கிளம்புறீங்களா?” என்றான் சக்தி. சித்ரஞ்சனின் கடுகடு முகம் பார்த்து இவனுக்குக் குளுகுளுவென்றிருந்தது.
“சக்தி” என்று சரோஜினி அவன் கையைப் பிடித்து அழுத்த
“ஹேய்! என்னடி தப்பா சொல்லிட்டேன்? அவரும் லவ் பேர்ட்தானே, புரிஞ்சிப்பார்.” என்றபடி உட்கார்ந்துவிட, சித்ரஞ்சன் டீ குடிக்காமல் அப்படியே வெளியே போய்விட்டான். சக்திக்கு திலகர் வீட்டில் யார் மீதும் பெரிய பகை கிடையாது, லாலா அவனின் உயிர் நண்பன், சரோஜினி இன்னுயிர் காதலி!
ஆனால் சித்ரஞ்சன் மீது மட்டும் நிறைய கோபம், வன்மம் உண்டு. காதலிப்பதை தவறென்று சொல்லமாட்டான், ஒருமுறையாவது முறையாக காதலிப்பதை ஏன் தங்கள் வீட்டில் சொல்லவில்லை? சொல்லி தாத்தா எதிர்த்து அதனால் திருமணம் செய்திருந்தால் கூட பரவாயில்லை. எல்லாம் அத்தையை சொல்ல வேண்டும் என்று மனதில் குமைந்தவனுக்கு, அத்தை மீது தவறில்லை என்று தெரிந்தால்???
“ச்ச, இந்த கடையில டீ, வடையெல்லாம் நல்லாயிருக்கும். உங்க சித்தப்பா மிஸ் பண்ணிட்டார்டி. போகும்போது பார்சல் கட்டிட்டுப்போ” என்று சக்தி தீவிரமான குரலில் சொல்ல
“சக்தி!! நானே சித்தப்பாவுக்குத் தெரிஞ்சிடுச்சுன்னு பயத்தில இருக்கேன், உனக்கு நக்கலா?” என்று அவனை திட்ட, சக்தியோ சிரிப்போடு சரோஜினியைப் பார்த்தான்.
சித்ரஞ்சனை பொருட்டாக நினைக்காதவனால் அவனை எளிதாக சமாளிக்க முடிந்தது, ஆனால் சக்தியால் இதே மன நிலையோடு லாலாவை எதிர்க்கொள்ள முடியவில்லை.