சக்திக்கு சரோஜினிக்கென நேரம் ஒதுக்காதது வருத்தமாக இருந்தது. இடையில் அவளுடன் போனில் பேசும்போது கூட கத்தியிருக்க, இன்று அவளை தஞ்சாவூர் வர சொல்லியிருந்தான். அவர்கள் ஊரில் எல்லாம் காதல் வளர்க்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவு, உறவுகள் யார் கண்ணிலாவது சிக்குவர், சக்திக்கு அதில் பயமில்லை. அதே நேரம் இப்போது நேரமுமில்லை. திருமணம் பற்றி வீட்டில் பேசும்போது சொல்லிவிடலாம் என்று எண்ணம். அதுவரை இப்படி யாருக்கும் தெரியாமல் இருப்பது கூட ஒரு சுவாரசிய சாகசமாக இருந்தது. வயதும் வாலிபமும் அதனை விரும்பியது.
“பரவாயில்லை சக்திக்கு என்னை ஞாபகமெல்லாம் இருக்கு” என்று தன் பக்கத்தில் வந்தமர்ந்தனை பார்த்து சரோஜினி சொல்லவும்
“சரோ! எனக்கும் உன்னோட இருக்க ஆசைதான். வேலை டென்ஷன், தஞ்சாவூர் யுனிவர்சிட்டி கேஸ் சொல்லிருக்கேன்ல, அரி அத்தான் கூட பார்க்கிறாரே அது கோர்ட்ல ஹியரிங் வருது. அது முடிஞ்சிட்டா கொஞ்சம் ப்ரீ” என்றான் சக்தி.
“உன் வேலை தெரியாதா சக்தி? விடு” என்று சரோஜினி சமாதானமாக சொல்ல, புடவையில் இருந்த சரோஜினியை கண்சிமிட்டாமல் பார்த்தவன் மேஜையில் கையூன்றி, கன்னம் வைத்து
“சரோசா யூ ஆர் ஸோ ப்யூட்டிபில், ஸோ எலிகண்ட், ஜஸ்ட் லுக்கிங் லைக் அ வாவ்” என்றான் பாவனையாக.
“சக்தி!” சரோஜினி அவன் தொடையைக் கிள்ளினாள்.
அவளின் செயலை எதிர்ப்பார்க்காத சக்தி சட்டென்று துள்ளி, “ஏட்டி! பப்ளிக்ல என்ன பண்ற? ச்ச பாரத நாட்ல ஆண்களுக்குப் பாதுகாப்பே இல்லை.” என்றான் தொடையைத் தேய்த்தபடி.
“ப்பா! ரொம்ப பண்ணாத.”
“பார்டா! யார் ரொம்ப பண்ணினா? நீயா இல்லை நானா? அழகா இருக்கன்னு சொன்னா கிள்ளி வைக்கிற, வன்முறை தப்புன்னு சுதந்திர விலாசத்துல சொல்லிக்கொடுக்கலயா டி?” என்று வம்பிழுத்தான்.
“நான் திலகர் பேத்தி, காந்தி பேத்தியில்லை. சோ வன்முறை தப்பில்லை”
உடனே வேலை செய்பவரை அழைத்து இரண்டு பழச்சாறு சொன்னவன் சரோஜினியிடம்
“ஆனா நீ சிட்டா பறந்து வந்திருக்கியே, ஐ லைக் திஸ். பொதுவா பொண்ணுங்க எல்லாம் சீக்கிரம் கிளம்ப மாட்டாங்கனு சொல்வாங்க” என்று கேட்டான்.
“நான் பொதுவான கேட்டகரில வர மாட்டேன். உனக்கே எப்பவாச்சும்தான் லவ் பண்றோம்னு ஞாபகம் வந்து பார்க்கக் கூப்பிடுவ, அப்போ போய் நானும் லேட் பண்ணலாமா? உனக்காக ஸ்கூல்க்கு லீவ் சொல்லிட்டு வந்திருக்கேன்.” என்று அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். சக்தியும் சரோஜினியும் பழச்சாறைப் பருகி, பார்வையால் ஒருவரை ஒருவர் பருகி, வம்பிழுத்து வாயடித்தனர். அப்போதுதான் சித்ரஞ்சன் அங்கு வந்தான்.
சரோஜினி சித்ரஞ்சன் அங்கே வருவான் என்று கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவில்லை. சக்தி பேசியதும் அவன் சென்றுவிட,
“அறிவிருக்கா சக்தி உனக்கு? சித்தப்பா கிட்ட இப்படித்தான் பேசுவியா?” என்று கத்த,
“அப்படியென்ன தப்பா பேசிட்டேன்?” என்று அலட்சியமாகக் கேட்டான் சக்திவேல்.
“என்னைக்கா இருந்தாலும் தெரியத்தானே போகுது? தெரிஞ்சா என்ன இப்போ? ஆனாலும் உன் சித்தப்பன் சித்ரஞ்சனுக்குக் கொழுப்பு ஜாஸ்திடி. எங்கத்தையை மட்டும் டாவடிச்சு கல்யாணம் பண்ணிப்பாராம், அவர் வீட்டு பொண்ணுன்னா மட்டும் என்னை கேள்வி கேட்கிறார்? மோடீவ்வாமே, என்ன மோடீவ்? உன்னைக் கட்டி கல்யாணம் பண்ணி புள்ளகுட்டி பெத்துக்கிறதுதான்” என்று சக்தி பேச, சரோஜினி கோபமாக முறைத்தாள்.
“என்ன சரோ முறைக்கிற? உண்மையைத்தானே டி சொன்னேன்.”
“நீ பேசாம இரு சக்தி. எனக்கே சித்தப்பா என்ன சொல்வாரோனு டென்ஷனா இருக்கு”
“அம்மா!” என்று அவன் வலி தாங்காமல் கத்தியதில் சிலர் திரும்பிப் பார்க்க, சக்தி சரோஜினியை முறைத்தான்.
சரோஜினி பதிலுக்கு முறைத்தாள். அவள் முகத்தில் இருந்த கலக்கம் சக்திக்கும் புரிய, கிண்டலை எல்லாம் விட்டு
“சரோ! சரோஜினி! இங்க பார். என்ன பண்ணிடுவார் உங்கப்பா? எதாவது பேசினா நீ நம்ம வீட்டுக்கு வந்துடு. நான் பார்த்துக்கிறேன், சரியா?” என்று அனுசரணையாக சொன்னான்.
“வந்ததும் வா மருமகளேன்னு உங்கம்மா என்னை வரவேத்துடுவாங்க பாரு. பூவுக்கே அந்த பேச்சு பேசினாங்க. எனக்கு உன்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசையெல்லாம் இருக்கு சக்தி, அதே நேரம் எங்க வீட்ல உள்ளவங்க சம்மதத்தோட சந்தோஷமா பண்ணிக்கணும்னு ஒரு பெர்சண்ட் பேராசையிருக்கு. சித்தி மாதிரி ஒட்டு உறவே இல்லாம இருக்கிறதெல்லாம் நினைச்சாலே பயமாயிருக்கு. பேசாம இப்படியே காதலிச்சிட்டு நிம்மதியா இருக்கலாம்னு கூட தோணுது”
“என்னது காதலிச்சிட்டே இருப்பியா? அப்போ நான் கடைசிவரைக்கும் பிரம்மசாரியாவே இருக்கணுமா? உன்னை நம்பி நான் என் பசங்களோட விளையாடுற அளவுக்குக் கனவு கண்டுட்டேனே” சக்தி புலம்ப, சரோஜினியின் கலக்கமான முகத்திலும் சின்னதாய் சிரிப்பு எட்டிப்பார்த்தது. சரோஜினியின் கையை அழுத்திப் பற்றியவன்
“சிரிடி சரோ. இதெல்லாம் பெரிய விஷயமா? நான் பார்த்துக்கிறேன்.” என்று சக்தி சொல்லவும்தான் சரோஜினிக்குக் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.
இருவரும் உணவகத்தை விட்டு வெளியே வர, சரோவை அவர்கள் ஊர் செல்லும் பேருந்தில் பத்திரமாக அனுப்பி வைத்தான்.
சித்ரஞ்சன் அன்று எப்படியாவது மாமனார் வீட்டில் பேச வேண்டும் என்று நினைத்திருக்க, நிச்சயம் சரோஜினியும் சக்தியும் காதலிப்பார்கள் என்று கடுகளவிலும் அவன் கற்பனை இருந்ததில்லை. இதில் இந்த சக்தி எப்படி பேசுகிறான்? பயமாக வேறு இருந்தது. தன்னை பழிவாங்க தன் அண்ணன் மகளை காதலிக்கிறானோ என்றெல்லாம் நினைக்க நினைக்க பதட்டமாக உணர்ந்தான். இரு குடும்பத்திற்கும் ஆகாதெனும்போது எப்படி இந்த காதல்? ஏன் இந்த காதல்? என்றெல்லாம் எண்ணம் போனது.
அவனுமே அப்படி ஆகாத குடும்பத்து பெண்ணின் மீது ஆசைகொண்டவன் என்றெல்லாம் மறந்தது. அன்று வாலிபனாய் காதலுக்காக செய்த எதுவும் தவறாகப்படவில்லை. இன்றோ அண்ணன் மகள் என்று வரவும், வயது, அனுபவம் அவன் வேலை எல்லாம் அவனை காதற்பாதையில் யோசிக்கவிடவில்லை. அதே பதற்றத்தோடு வீடு வந்தான் சித்ரஞ்சன்.
“ஆத்தா, நேத்துதானே கிடாவிருந்து சாப்பிட்டோம். இன்னிக்கு ஏன் என்னை கடைக்கு அனுப்புற?” லாலா அஞ்சம்மாவிடம் புலம்பிக்கொண்டிருந்தான்.
“டேய் உனக்கு ஆட்டுக்கால் கடிக்க பல் செத்துப்போச்சுன்னா கிடக்குது போ. உன் சித்தப்பனுக்கு வாங்கிட்டு வர சொன்னேன். பல்லு செத்த பய.” என்று அஞ்சம்மா பேரனை வசைப்பாட
“போதும் ஆத்தா, இப்போ என்ன ஆட்டுக்கால் வாங்கணும். அதானே?” என்று லாலா கடைக்குச் சென்றுவிட்டான். வசுந்த்ரா சித்ராவுக்கு சமையலில் உதவி செய்தாள். பகத் திலகருடன் அவர்களின் தென்னந்தோப்புக்குச் சென்றிருந்தான்.
“அவருக்கு நான் வாரத்துல ஒரு நாள்தான் கா நான் வெஜ் கொடுக்கிறதே, தம்பிக்கு இரண்டு நாள் முட்டை கொடுப்பேன். நேத்துதான் கிடாவிருந்துல நல்லா சாப்பிட்டோம். நீங்களாச்சும் சொல்லியிருக்கலாம்ல கறி வாங்க வேண்டாம்னு”
“என் மகனுக்கு வாங்கறதுக்கு நீ என்னடி சொல்றனு அத்த என்னை பேசும். சித்துவாச்சும் பரவாயில்ல சின்ன வயசு. உங்க மாமாவுக்கு ஐம்பத்தாறு ஆகுது, இன்னும் என்னமோ பச்ச புள்ள மாதிரி என் மவனுக்கு அத செஞ்சு கொடு இத செஞ்சு கொடுன்னு என்னை படுத்தி எடுக்குறாங்க” என்று சித்ரா புலம்ப
“என்னது உங்க கொழுந்தனாருக்கு சின்ன வயசா? முப்பத்தொன்பது வயசாகுது. நீங்க ஏன் மாமாவுக்குக் கொடுக்கிறீங்க? அவர் கிட்ட சொல்லுங்க” வசுந்த்ராவும் சித்ராவும் பேசிக்கொண்டிருக்க, சித்ரஞ்சன் வீடு வந்துவிட்டான். வந்ததும் திண்ணையில் அமர்ந்திருந்த அம்மாவை கூட கவனிக்காது, விறுவிறுவென்று மாடியேறி அவனறைக்குச் சென்று சட்டையைக் கழட்டிவிட்டு மின்விசிறியைப் போட்டு காற்றாட உட்கார்ந்தான்.
சித்ரஞ்சனுக்கு அவன் அப்பா என்றால் இப்போதும் பயம். அதைவிட வசுந்த்ரா அப்பாவை கண்டால் பயம். இத்தனை வருடங்கள் கழித்து, கொஞ்சம் மனது இளகியிருப்பார், இல்லை இளக்கிவிடலாம் என்று சித்ரஞ்சன் நினைத்திருக்க, சக்தி குறுக்கே வந்து அத்தனையும் கெடுப்பான் என்று தெரியவில்லை. இப்போது சரோஜினி விஷயத்தில் எந்த முடிவெடுக்கும் எண்ணம் அவனுக்கில்லை. அதே நேரம் வீட்டில் இதனை சொல்வதா வேண்டாமா என்ற குழப்பம் வேறு, சித்ரஞ்சனுக்கு அண்ணன் மக்கள் மீது பாசம் அதிகம். சிறு வயதிலிருந்து அவன் வளர்த்த பிள்ளைகள். அதிலும் சரோஜினி என்றால் இன்னும் செல்லம். இப்போது இந்த சக்தியை நம்பலாமா, அவன் உண்மையில் சரோஜினியைக் காதலிக்கிறானா என்று தவிப்பாக இருந்தது.
அவன் காதலித்த காலத்தில் அவனுக்குத் தெரிந்தது எல்லாம் ஒன்றுதான், அவன் காதல் மட்டுமே! அதை நிறைவேற்ற என்ன வழி என்று பார்த்தானே தவிர வேறெதையும் யோசிக்கவில்லை, காதலியைக் கூட யோசிக்காத காதல் அவனுடையது. இப்போது அப்படியில்லை, காதல் ஒரு பக்குவம் தந்திருந்தது.