தந்தையாக யோசித்தது மனது. சக்தி தவிர வேறு யாரை சரோஜினி காதலித்திருந்தாலும் மனது இப்படி பயப்படுமா என்று சித்ரஞ்சனுக்குத் தெரியவில்லை. அதுவும் சக்தியின் பேச்சும் தோரணையும் சுத்தமாக ஒப்பவில்லை. அதே நேரம் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காமல் அமைதியாக இருந்தான்.
அவன் யோசனையில் இருக்க, வசுந்த்ரா உள்ளே வந்தாள். மனைவியிடம் சொல்லத்தோன்றவில்லை. சரோஜினியிடம் பேச வேண்டும் என்று நினைக்க
“என்னாச்சு? போன வேலை முடிஞ்சதா? ஏன் இப்படி தனியா வந்து உட்கார்ந்திருக்கீங்க? இந்தாங்க டீ” என்று நீட்டினாள். தேனீரைப் பருகியவன் அமைதியாக இருக்க, வசுந்த்ராவுக்கு ஆச்சரியமாக இருந்தது.
சித்ரஞ்சன் அவளோடு வீட்டிலிருந்தால் அவன் குரல் கேட்டு கொண்டே இருக்கும். மனைவிக்குத்தான் மட்டுமே இப்போது துணை என்ற எண்ணமா இல்லை அவளோடு பேசுவது அவ்வளவு பிடிக்குமா தெரியாது. காரணமான பேச்சென்றில்லை, பேச காரணம் தேடி பேசுவான். இருவரும் வம்பு சண்டை வளர்த்தாலும் பேசாமல் இருந்ததில்லை. வேலையில் எதாவது டென்ஷன் என்றால் மட்டுமே சித்ரஞ்சன் இப்படி சிந்தனையில் இருப்பான்.
“என்னது நம்ம சக்தியா? எப்போயிருந்துடி அவன் நம்ம சக்தியானானான்? எப்படி டி?” என்று வசுந்த்ரா ஆச்சரிமும் அதிர்ச்சியும் கலந்த குரலில் நம்ப முடியாது கேட்க
“அது ஒரு அஞ்சு வருஷமா” சரோஜினி சித்தப்பாவை பார்க்காமல் சித்தியை மட்டும் பார்த்து பதில் சொன்னாள். வசுந்த்ரா சித்ரஞ்சன் அளவெல்லாம் அலட்டிக்கொள்ளவில்லை. மாறாக எப்படியென்ற ஆவல் மட்டுமே. வசுந்த்ரா புன்னகையோடு
“அஞ்சு வருஷமாவா? எப்படி டி?” என்று கேட்டாள்.
“எப்படின்னா? நீங்க சித்தப்பாவை லவ் பண்ணலயா? அப்படித்தான் சித்தி.” சரோஜினி சிரிப்போடு பதில் சொல்லி சித்தப்பா சித்தியைப் பார்க்க, வசுந்த்ரா சித்ரஞ்சனை கிண்டலாய் ஒரு பார்வை பார்க்க, சரோஜினி அதனை காதல் பார்வை என்று தவறாக நினைத்தாள். சித்ரஞ்சனோ ‘இந்த சரோ பேசுறதெக்கெல்லாம் என் பொண்டாட்டி என்னை வச்சி செய்யப்போறா’ என்று கடுப்போடு பார்த்தான்.
சரோஜினி காதல் என்ற பாதையில் நீயும் நானும் ஒன்று என்பது போல் பெருமையாகப் பேசி சித்தியைப் பார்க்க, அவள் மனதின் எண்ணமோ
‘உங்க சித்தப்பாவுக்கு எப்படி லவ் வந்துச்சுன்னே எனக்கு இன்னும் புரியல, இதுல நீ வேற’ என்றிருந்தது.
“எங்க கத’ய விடு, நீ சொல்லு சரோ”
சித்தி கேட்கவும் “அது நான் அங்க சென்னையில் படிச்சப்போ சக்தியோட கோச்சிங் க்ளாஸ் என் ஹாஸ்டல் பக்கம், அப்படியே பேசி பழகி நான் தான் சித்தி ப்ர்ஸ்ட் ப்ரோபோஸ் பண்ணினேன். சக்தி மேல தப்பில்லை, நீங்க சித்தப்பா கிட்ட சொல்லுங்களேன். அவர் ரொம்ப கோவமா இருக்கார்”
“பின்ன நீ செஞ்சதுக்குக் கோவமா இல்லாம எப்படி இருப்பேன்? வீட்ல பொய் சொல்லிட்டு அவனோட ஊர் சுத்துற? பொறுப்பான டீச்சர் வேலையில இருந்துட்டு இப்படி செய்யலாமா? அண்ணனுக்குத் தெரிஞ்சா என்னவாகும்?” என்று சித்ரஞ்சன் எழுந்து நின்று கத்த, வசுந்த்ரா கணவனின் கையை அழுத்தமாக பிடித்தாள்.
“டீச்சர்’ரா இருந்தா லவ் பண்ண கூடாதா? ஸ்கூல்’ல மட்டும்தான் அவ டீச்சர்.”
“அப்படி சொல்லுங்க சித்தி” என்று சித்தியைக் கட்டிக்கொண்ட சரோஜினி
“இப்போ தெரியுது சித்தி சித்தப்பா எப்படி உங்ககிட்ட இம்ப்ரெஸ் ஆனாருன்னு” என்று வேறு ரசனையாக சொல்ல, சித்ரஞ்சன் பார்வை மனைவியிடம்.
“சித்தி! பாருங்க சித்தப்பா உங்களை கட்டிப்பிடிச்சிருக்கேன்னு என்னை கோவமா பார்க்கிறார். நீங்கதான் சித்தி எப்படியாச்சும் சித்தப்பா கிட்ட சொல்லி வீட்ல பேச சொல்லணும்” சரோஜினி கோரிக்கை வைக்க
“சரோ! நீ டென்ஷன் ஆகாம போ. நான் பார்த்துக்கிறேன்” என்ற வசுந்த்ராவின் பேச்சில் நம்பிக்கை வர, சரோஜினி “தேங்க்ஸ் சித்தி” என்று நன்றி சொல்லி போனாள்.
“சக்தி ஏன் இப்படி பண்றான் வசு?” என்ற சித்ரஞ்சன் சக்திவேல் பேசியதெல்லாம் சொல்ல
“உங்களுக்கு மட்டும் அடுத்த வீட்டுப் பொண்ணு மேல லவ் வரும், அவனுக்கு வரக்கூடாதா? என்ன நியாயம் இது?” வசுந்த்ராவின் குரல் கொஞ்சம் கோபம் தெரிந்தது. அந்த கொஞ்சத்தை சித்ரஞ்சன் குறைத்திருக்கலாம், அவன் நேரம் அந்த கொஞ்சம் அவன் பேச்சில் கூடுதலாகிப்போனது.
வசுந்த்ராவுக்கு இவன் என்னமோ நல்லவன் போல் என் அண்ணன் மகனை பேசுவானா என்ற ஆத்திரம். மறக்க நினைத்த அவன் செயல் மீண்டும் நினைவில் வர, அவ்வளவுதான் சித்ரஞ்சன் சிக்கினான்.
“கண்டிப்பா நீங்க செஞ்ச மாதிரி சக்தி என்னைக்கும் செய்ய மாட்டான்” என்ற வசுந்த்ராவின் குரலில் கோபம், எள்ளல் எல்லாம் கலந்திருக்க, சித்ரஞ்சனை அது காயப்படுத்தியது.
“என்னடி நான் செஞ்சேன்? என்னை சின்ன பய கூட கம்பேர் பண்ணி பேசுவியா?” என்று சித்ரஞ்சன் வசுந்தராவை நெருங்கி நின்று கோபத்தில் கத்த, வசுந்த்ராவும் கத்தினாள்.
“ஏன் என்ன செஞ்சீங்கன்னு மறந்து போச்சா? விருப்பமில்லாத பொண்ணு கழுத்துல கட்டாயப்படுத்தி தாலி கட்டு பெரிய இவனாட்டம் பேச்சை பாரு”
கொதிப்போடு அவள் வார்த்தைகள் விழ, அதன் சூடு சித்ரஞ்சனால் தாங்க முடியவில்லை.
வசுந்த்ராவின் தோளைப்பற்றியவன் “உன்னை கல்யாணம் பண்ணி நான் என்ன கொடுமையா டி பண்றேன். எத்தன வருஷம் இதே சொல்லி என்னை பேசுவ, கொஞ்சமும் என் காதலை புரிஞ்சிக்க மாட்ட இல்ல.” என்றான் ஆதங்கமாக.
“பைத்தியக்காரத்தனத்துக்குப் பெயர் காதலா?” என்று வசுந்த்ரா கேட்க,
“போடி” என்று அவளை உதறிவிட்டு கதவை திறந்த சித்ரஞ்சன் அங்கே அதிர்ச்சியில் நின்றிருந்த லாலாவை பார்க்க
“தாத்தா கூப்பிட்டார் சித்தப்பா” என்றான். லாலா என்ன கேட்டான் என்று தெரியவில்லை என்றாலும் அதனை எல்லாம் யோசிக்கும் மன நிலை இல்லாது கீழிறிங்கி சென்றான் சித்ரஞ்சன். லாலாவின் மனதிலும் சித்ரஞ்சன் கீழிறங்கி போனான். சித்தியின் வார்த்தைகள் கொடுத்த அதிர்ச்சியின் தாக்கம் இன்னும் அவனிடம் மிச்சமிருந்தன.
“விருப்பமில்லாத பொண்ணு கழுத்துல கட்டாயப்படுத்தி தாலி கட்டு பெரிய இவனாட்டம் பேச்சை பாரு”
அந்த வார்த்தைகளின் அர்த்தம் புரிய, “அப்போ சித்தி சித்தப்பாவை லவ் பண்ணலயா?” என்றதிலேயே லாலாவின் எண்ணம் உழன்றது. சித்ரஞ்சன் சென்று சிறிது நேரத்தில் லாலா கீழே போக, வசுந்த்ராவுக்குக் கோபத்தில் கத்தியது மூச்சு வாங்கியது.
அப்படியே சுவரில் சாய்ந்து உட்கார்ந்தவளின் பார்வை எதிரே இருந்த ஜன்னலில் நிலைக்க, மனமோ அவர்களின் திருமண நாளில் நிலைத்தது.
சித்ரஞ்சனுக்கு வசுந்த்ராவை நிறைய பிடிக்கும். திலகர் மகன்கள் அரசாங்க பணியில் இருக்க வேண்டும் என்று அவர்களை அதிகாலையிலே எழுப்பி படிக்க சொல்வார், எல்லாவற்றிலும் கண்டிப்பிருக்கும். வாஞ்சிநாதனுக்கு அது பழகிவிட, சித்ரஞ்சனுக்கு அப்பாவின் கட்டுப்பாடுகள் கழுத்தை நெறிப்பவையாக இருந்தன. அதிகாலை எழுபவனுக்கு அவன் அறை ஜன்னல் வழியே வசுந்த்ராவை பார்ப்பது மட்டுமே உற்சாகமாக இருக்கும். சிறு வயதிலிருந்து பார்த்த பெண்தான், ஆனால் சித்ரஞ்சன் கல்லூரி சென்றபோது வசுந்த்ராவின் மீதான அவன் எண்ணங்கள் வண்ணம் பெற்றன.
“டேய் அண்ணா! பைக் சாவி கொடு” என்று வாசலில் நின்று கத்தும் வசுந்த்ரா, “அப்பாஆஆஆஆஆ! சாப்பிட வாப்பா” என்ற அவள் அலறல் எல்லாவற்றையும் சித்ரஞ்சன் ரசிப்பான். லட்சுமணன் ஆண், பெண் என்ற பேதமெல்லாம் பார்க்க மாட்டார்.
“அவ்வளவு படிச்சு நல்ல நிலைமையில இருந்த பிரிட்டிஷ் கூட ராணி ஆட்சியிலதான் இருக்கானுங்க, அவனுங்களுக்குத் தெரியுது அதிகாரத்தை யார் கிட்ட கொடுக்கிறதுனு. நல்ல விஷயத்தை நம்ம அவனுங்ககிட்ட இருந்து படிச்சிக்கணும்” என்பார். வாஞ்சிநாதனுக்கும் சித்ரஞ்சனுக்கும் இடையே ஒரு இடைவெளி உண்டு. வாஞ்சிநாதனுக்கு அப்போது திருமணமாகி இரு பிள்ளைகள் இருந்தனர். வசுந்த்ராவும் பெண்டிக் பாஸ்கரும் அப்படியில்லை, மிகவும் பாசமான, பாசத்தை வெளிக்காட்டிக்கொள்ளும் அண்ணன் தங்கை.
வசுந்த்ராவின் தைரியம் அது சித்ரஞ்சனுக்கு மிகவும் பிடிக்கும். அப்பாவின் ஹீரோ ஹோண்டா பைக்கை அவள் ஓட்டும் அழகே அழகுதான்! இப்படி வசுந்த்ராவின் தீவிர ரசிகனாக இருந்தான் சித்ரஞ்சன். வசுந்த்ரா கல்லூரி முடித்த சமயம், சித்ரஞ்சனும் எஸ்.ஐ பணியில் இருந்தான்.