வசுந்த்ரா வீட்டிலிருந்து வெளியே சென்றதை பார்த்தவன், அவளை பின் தொடர்ந்து ஊரை விட்டு டவுன் செல்லும் வழியில் நிறுத்தினான். வசுந்த்ரா பயப்படவெல்லாம் இல்லை. சண்டை என்பது எப்போதும் வீட்டுப் பெரியவர்களுக்குத்தான், மற்றபடி பெண்கள் தெரியாமல் பேசிக்கொள்வதுண்டு. அது ஆண்களுக்குத் தெரிந்தாலும் கண்டுகொள்வதில்லை, அதுவும் பாஸ்கர் பேராசிரியராக இருக்கும் கல்லூரியில்தான் சித்ரஞ்சன் படித்தான். பாஸ்கர் கூட சித்ரஞ்சனை பற்றி என்றோ பேச்சுவாக்கில் நல்லவிதமாக சொல்லியிருந்தான்.
சித்ரஞ்சன் எஸ்.ஐ தேர்வில் வெற்றிப்பெற்றதும் பாஸ்கரிடம் “தேங்க்ஸ் மாமா, நீங்க சொன்னதாலதான் நான் காலேஜ் டைம்லயே எக்ஸாம்க்குப் ப்ரிபேர் பண்ணினேன். இப்போ பாஸ் ஆகிட்டேன், அதான் உங்ககிட்ட சொல்லலாம்னு வந்தேன்.” என்று கல்லூரிக்கே வந்து இனிப்பை கொடுத்து வாழ்த்துப்பெற்றான்.
இவளிடமும் எங்காவது காண நேர்ந்தால் இரண்டொரு வார்த்தைகள் பேச்சிருக்கும்.
“என்ன எஸ்.ஐ சார்?” என்றபடி வசுந்த்ரா வண்டியை நிறுத்தி அவனை பார்க்க, அரக்கு நிற சுடிதாரில் வசுந்த்ரா அவனை மிகவும் ஈர்த்தாள். அப்போது பெண்கள் எல்லாம் அத்தனை சுதந்திரமாக வளர்க்கப்படவில்லை, படிக்க வைத்தார்கள். அதிலும் கல்லூரி படிப்பை முடித்த பெண்களை அந்த கிராமத்தில் இருகை விரல்களிலும் எண்ணிவிடலாம். அப்படியிருக்க அவனுக்கு வசுந்த்ரா எப்போதும் ஆச்சரியமாகத் தெரிவாள். பட்டாம்பூச்சி போல் வீட்டை சுற்றும் அவளை அவன் மனம் எப்போதும் சுற்றியது.
அண்ணன் மகனோடு பாண்டி, கிரிக்கெட் விளையாடுவது. மாங்கா பறிக்கிறேன் என்று சித்ரஞ்சனின் மண்டையைக் கூட உடைத்திருக்கிறாள். சின்ன வயதில் அம்மாவிடம் அழுகையோடு சொல்லி, அவளை பேச்சு வாங்க வைத்திருக்கிறான். இப்போது அந்த இனிய நினைவுகளோடு அவள் முன் நின்றவன்
“எப்படியிருக்க வசு?” என்று நலம் விசாரித்தான்.
“இதை கேட்கத்தான் இவ்வளவு தூரம் வந்தீங்களா மாமா?” என்று வசுந்த்ரா சிரிப்போடு கேட்க, பின் கழுத்தை வலக்கையால் வருடியவன் முகத்திலும் புன்னகை.
“வசு, எனக்கு உன்னை பிடிச்சிருக்கு. ஐ லவ் யூ” என்றான் பட்டென்று. வசுந்த்ராவின் விழிகள் வியப்பில் விரிந்தன. சில நிமிடங்கள் அதிர்ச்சியில் அவளிடம் பேச்சில்லை.
“வசுந்த்ரா” என்று அவன் அழைக்க
”எப்படி? ஏன்?” என்று அதிர்வில் ஒற்றை வார்த்தைகள் உதிர்த்தாள் வசுந்த்ரா.
“என்னை கட்டிக்கோ. எப்படி ஏன்னு எல்லாம் சொல்றேன்” சித்ரஞ்சன் சொல்ல, வசுந்த்ரா அதிர்விலிருந்து நிகழ்வுக்கு மீண்டாள்.
“ப்ச், விளையாடாதீங்க மாமா” என்றதும் “வசு! நான் விளையாடல, நிஜமா உன்னை தவிர என்னால யாரையும் நினைக்க முடியாது. ப்ளீஸ் நான் சொல்றதை யோசி” என்று சொல்ல
“மாமா, நீங்க எங்கிட்ட விருப்பம் சொன்னது ஓகே. நம்ம குடும்பத்துக்கு சரி வராது, அப்படி இதான் உங்க எண்ணம்னா அப்பா கிட்ட பேசுங்க. எங்கப்பா யாரை சொல்றாரோ அவங்களைத்தான் நான் கட்டுவேன்” என்றாள் தீர்மானமாக.
“வசு, உங்கப்பா எங்கப்பா யாரும் இதுக்கு ஒத்துக்க மாட்டாங்க” சித்ரஞ்சன் சலிப்பாக சொல்ல
“அப்போ இந்த எண்ணத்தை விட்டு வேற வேலையைப் பாருங்க” என்று எளிதாக கடந்து சென்றாள்.
சித்ரஞ்சனால் அது முடியவில்லை. மீண்டும் அவளிடம் பேச, வசுந்த்ரா ஒரே முடிவைத்தான் சொன்னாள்.
“எங்கப்பா கிட்ட பேசுங்க” என்று.
“அப்போ உனக்கு என்னை பிடிச்சிருக்கா?”
“இங்க பாருங்க மாமா, நம்ம இரண்டு பேர் வீட்லயும் சின்ன விஷயத்துக்குக் கூட எப்படி சண்டை போடுவாங்கனு நமக்குத் தெரியும். சின்ன பசங்களை கூட ஒன்னா விளையாட விடுறதில்லை. அது யார் மேல தப்புன்னு நான் பேச விரும்பல, அப்படியிருக்க உங்களுக்கு ஏன் இப்படி ஒரு நினைப்பு? எங்கப்பா ஓகே சொன்னா எனக்கு எந்த பிரச்சனையுமில்லை. எங்கப்பா காட்டுற மாப்பிள்ளைதான் எனக்கு. ஏற்கனவே சொல்லிட்டேன் இதெல்லாம் சரி வராது, என் பின்னாடி வரது வேஸ்ட். பொறுப்பான வேலையில இருக்கீங்க, இப்படி நடக்காதீங்க”
வசுந்த்ரா தெளிவாக மறுப்பினை சொல்லியிருக்க, சித்ரஞ்சன் அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. கண்ணை, மூக்கை, காதை எல்லாம் காதல் மட்டுமே நிறைத்திருந்தது! லட்சுமணன் எவ்வளவு கோபக்காரர் என்று தெரியும், திலகரும் அப்படியே. வசுந்த்ராவை போல் இதையெல்லாம் யோசிக்க அவனுக்கு விருப்பமில்லை. கண்டிப்பாக வீட்டில் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்ற எண்ணம் அவனுக்குத் திண்ணமாக இருக்க, அதற்காக முயல கூட இல்லை. அதே நேரம் வசுந்த்ராவின் மீதான அவன் எண்ணமும் மாறவில்லை.
என்னை பிடிக்கவில்லை என்று சொல்லவில்லைதானே என்று ஆறுதல்பட்டான். சித்ரஞ்சனைப் பொருத்தவரையில் காதல் என்பதும் கல்யாணம் என்பதும் இருவர் உடன்படும் நிகழ்வு. அதுவும் கூட பின்னர் மாறியது. வீண் பிடிவாதம் பிடித்து இரு வீட்டிலும் என் காதலுக்கு மறுப்பு சொல்வார்கள் என்று நினைத்தவன், அவனை அவன் காதலை மட்டும் யோசித்தான்.
சித்ரஞ்சனின் காதல் காதலியை யோசிக்கவில்லை. வசுந்த்ராவுக்கு வரன் பார்க்கிறார்கள் என்று தெரிந்தவனுக்குப் பொறுக்கவில்லை. ஏனோ அன்றைய சித்ரஞ்சனுக்கு வேகம் இருந்தளவு விவேகம் இல்லை. குலதெய்வக் கோவிலுக்கு வந்த வசுந்த்ரா கண்மூடி இறைவனை வணங்கி நிற்க, தாலியைக் கட்ட துணிந்தான் சித்ரஞ்சன்.
தன்னருகே யாரோ நிற்கும் உணர்விலும், தாலி கயிறு கழுத்தில் உரசியதிலும் கண் திறந்த வசுந்த்ரா சித்ரஞ்சனை எதிர்ப்பார்க்கவில்லை. அதிர்ச்சியில் நின்றவள் அவனை தள்ளிவிட பார்க்க, சித்ரஞ்சனுக்கு என்னமோ இன்று இப்படி செய்யாவிட்டால் அவளோடு சேர முடியாதோ என்ற பயம். எதையும் யாரையும் யோசிக்கவில்லை. அவனை, அவன் மகிழ்ச்சியை மட்டும் யோசித்தவன் அவளை பிடித்து கழுத்தில் தாலியைக் கட்டிவிட்டான்.
வசுந்த்ராவோ அந்த கயிறை பிடித்தவள் “இப்படி என்னை கட்டாயப்படுத்தி தாலி கட்டிட்டா மட்டும் நான் வந்திடுவேனா? இதென்னா இரும்பா?” என்று கண்கள் சிவக்க, அவன் செய்த செயலின் தாக்கம் தாங்க முடியாமல் கேட்டாள். ஏனோ தவறே செய்யாமல் அதிர்ச்சியில் உடல் நடுங்கியது. கண்களில் நீர் வழிய
“வசு, ப்ளீஸ். எனக்கு வேற வழி இல்லை. எந்த ஜென்மத்திலயும் நம்ம வீட்ல ஒத்துக்க மாட்டாங்க” என்று வசுந்த்ராவின் கையைப் பற்றி சமாதானம் செய்ய, குலதெய்வ கோவில் பக்கமாக ஆடு மேய்த்த பெண்களின் பார்வையில் இந்த காட்சி விழ, அடுத்த பத்து நிமிடத்தில் இருபக்க உறவுகளும் கூடிவிட்டனர்.
திலகர் வந்ததும் மகனை அறைவிட, லட்சுமணனும் பாஸ்கரும் வசுந்த்ரா இப்படி செய்வார் என்று எதிர்ப்பார்க்காமல் அதிர்ச்சியில், ஆதங்கத்தில் நின்றனர்.
“அண்ணா” என்று அழுகையோடு அவள் அழைக்க,
“ஏன் இப்படி செஞ்ச வசு?” என்ற அண்ணனின் கேள்வியில் அவள் உடைந்தழுதாள். விளக்கம் சொல்ல கூட வாய்ப்பளிக்கவில்லை, அதைவிட வசுந்த்ராவுக்கு பத்தே நிமிடத்தில் எல்லாம் தலை கீழான நிலை. சித்ரஞ்சனை கோபமாக பார்க்க, யாருக்கும் வசுந்த்ராவின் விருப்பமில்லாமல் அவன் இப்படி செய்திருக்கக் கூடும் என்ற எண்ணமில்லை.
‘இரண்டு வீட்லயும் ஒத்துக்க மாட்டாங்கன்னு சின்னஞ்சிறுசுங்க இப்படி பண்ணிடுச்சிங்க போல என்பதே பேச்சாக இருந்தது.
சித்ரஞ்சனை போல் வசுந்த்ராவால் அந்த நொடி அவசரப்பட்டு பேச முடியவில்லை. முதலில் சித்ரஞ்சனின் செயலை ஏற்க முடியவில்லை. இப்போதும் ஒரு நொடி ஆகாது உண்மையை சொல்ல, அதை சொன்னால் நிச்சயம் அவனை கொல்லவும் தயங்கமாட்டார் தன் அப்பா என்று தெரியும். அவரின் தாத்தாவே இரண்டு பேரை கோபத்திலும் பகையிலும் வெட்டியவர். வசுந்த்ராவின் விருப்பத்தோடு நடந்தது என்று நினைத்த போதே அங்கே அவ்வளவு சண்டை நடக்க, அவள் விருப்பமில்லை என்று தெரிந்தால் நிச்சயம் பெரிதாக பிரச்சனை வெடிக்கும் என்று தெரியும்.
அதனால் வசுந்த்ரா அமைதியாக இருந்தாள். இன்றுவரை தன் விருப்பமின்றி நடந்த திருமணம் என்று யாரிடமும் சொன்னதில்லை. காதலை மட்டும் கொடுத்து மற்ற உறவுகளை அவளிடமிருந்து பறித்துக்கொண்ட கணவன் மீது அவளுக்கு கோபம் வருவதில் என்ன தவறு?
சித்ரஞ்சன் அவன் காதலால், அன்று எடுத்த முடிவால் வசுந்த்ரா அவனோடு இருப்பதாக நினைத்திருக்க உண்மையில் அவனை, அவன் காதலை, இன்றுவரை அவர்கள் திருமணத்தைக் காப்பாற்றுவது வசுந்த்ராவின் பொறுமையும் அவளின் காதலும் மட்டுமே!
வசுந்த்ராவின் திருமணம் கட்டாயத்தினால் நடந்திருந்தாலும் அதன்பிறகு சித்ரஞ்சன் ஒரு செயலிலும் அவள் விருப்பத்தை மீறியதில்லை. அதில் இன்னும் ஆதங்கமாக இருக்கும், இவன் ஏன் அப்படி செய்தான். அப்பாவிடம் பேசியிருக்கலாமே, ஏன் இவனுக்குத் தைரியமில்லை என்று கோபமாக வரும். இன்றும் அப்படித்தான் சக்தியைப் பேசவும் இவளுக்குத் தாங்கவில்லை.
சித்ரஞ்சனுக்கோ இத்தனை வருடங்களாகியும் என்னை பேசுகிறாள் என்ற ஆதங்கம். நோக்கம் மட்டும் சரியானதாக இருக்கக் கூடாது, அதனை அடையும் வழி அப்படி இருக்க வேண்டும் என்பார்கள். வசுந்த்ராவின் வாதம் அதுதான்! கிடைக்கும் வழியைப் பற்றிக்கொண்டேன் என்பது சித்ரஞ்சனின் வாதம். இப்போது வரை என் காதலில், என் அன்பில் என்ன குறை என்ற நினைப்பு.
சித்ரஞ்சன் மனைவி வீட்டோடு சமாதானம் செய்யலாம் என்று நினைத்தவனுக்கு, மனைவியோடு கூட சமாதானமாக முடியவில்லை. அன்றிரவே இருவரும் சென்னை சென்றனர். லாலாவோ சக்தியிடம் இதனை சொல்வதா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தான்.