சுடர் வீட்டின் முன் அலர் இறங்கிய மறுநொடியே தன் வீட்டை நோக்கி வேகமெடுத்தான் எழிலன்.
தன்னுடன் வருவான் என்று எதிர்பார்த்த அலர் திகைத்து நின்றது சில கணங்களே! உடனே பாலனை அழைத்து அவிரனுடன் தங்கள் வீட்டிற்கு செல்ல வெளியில் பைக் கீழே விழுந்துகிடக்க வீடும் திறந்திருந்தது. உள்ளே நுழைந்தவள் கணவனை தேட அவர்கள் அறையில் இருகரம் கோர்த்து தலையை சாய்த்து விட்டத்தை இலக்கற்று வெறித்துக்கொண்டு படுத்திருந்தான் அகனெழிலன்.
அப்பா என்று ஓடிசென்று கட்டிக்கொண்ட மகனின் அழைப்பில் தன்னிலை மீண்டவன் எழுந்தமர்ந்து அவிரனிடம் பேச துவங்கினான். ஆனால் உள்ளக்கலனோ கொதிநிலை கொண்டிருந்தது.. அவனை நெருங்க தயங்கி அலர் கட்டில் அருகே நின்றிருக்க அவிரன் அவளையும் உரையாடலில் இழுத்துக்கொண்டான்.
அவிரனுடன் பேசிகொண்டிருந்தாலும் எழில் அருகே இருந்தவளை திரும்பியும் பாராமல் இருந்தான். அவர்களுக்கான மதிய உணவுடன் வந்த கதிரோடு அவிரன் தொற்றிக்கொள்ள, “அப்பு இன்னும் சாப்பிடலை நீ இரு சாப்பிட்டு போவ.. நீயும் சாப்பிடவா கதிர்” என்றாள்.
நாங்க எல்லாருமே சாப்டுட்டோம்க்கா ஹீரோவும் எங்க கூடத்தான் சாப்பிட்டான் என்றவன் அவிரனுடன் கிளம்பவும் கதவை தாழிட்டு உள்ளே சென்றவள் விழிகளில் வலியோடு சாய்ந்திருந்தவன் விழ எவ்வாறு சமாதானபடுத்துவது என்று புரியாமல் விழித்து நின்றாள்.
நிமிடங்கள் பல கடந்தும் எழில் அவள்புறம் திரும்பாதிருக்கவும் வெளியே சென்று உணவை பரிமாறி வந்தவள் ‘செல்லம்’ என்று அவன் முகத்தை திருப்ப,
“என்னை கொஞ்ச நேரம் தனியா விடு அலர்” என்றான்.
எப்போதும் குள்ளச்சி, அமுலு, பட்டு என்று அவளை சீண்டி கொண்டாடுபவன், பெரும்பாலும் கோபத்திலோ, ஆற்றாமையிலோ மட்டுமே சொர்ப்பமாய் அவள் பெயரை உச்சரிப்பான். அதிலும் அவன் உரிமையாக ‘டி‘ இட்டு அழைக்காது போனால் அதிலே அலர் அவன் நிலையை புரிந்து கொள்வாள்..! ஆனால் அப்படியே அவனை விட்டு விலகி செல்லாமல் அவனை எதிர்கொண்டு அவனது கோபத்தின், வருத்தத்தின் வடிகாலாய் மாறி அவனை பழைய படி மாற்றிவிடுவாள்.
அதில் அவன் கோபம் மணிநேரங்களுக்கு கூட நீடித்து நிற்காது.
இப்போதும் விலகி நிற்காமல் ‘நீ மொதல்ல சாப்பிடு’ என்று உணவுக்கவளத்தை நீட்ட,
“சொன்னா கேளு இருக்கிற கோவத்துக்கு தேவை இல்லாம உன்னை ஏதாவது காயபடுத்திடுவேன், நீ இங்க இருந்து போ” என்றவனை அழுத்தமாக பார்த்திருந்த அலர் கை கழுவி வந்து அவனருகே படுத்து இறுக அணைத்தாள்.
நிமிடங்கள் சில கடந்தும் அவள் அணைப்பு இறுக்கமாய் அமைய, ‘ஸ்ஸ்ப்ப்பா விடுடி மூச்சு முட்டுது’ என்றதும் தன் பிடியை தளர்த்தி மென்மையாய் அவனை அணைத்தவள் மௌனமாய் அவன் முகம் பார்க்க ஒரு கட்டத்தில் அவனறியாமல் அவன் கரம் ஆதுரமாய் அவள் முதுகை வருட துவங்கியது.
அலரவளின் பார்வையில் நிலை கொள்ளாமல் தவித்தவன், ‘ப்ச் சொன்னா புரிஞ்சிக்கடி நீ போ கொஞ்ச நேரத்துல நானே வருவேன்’
அலரோ அவனை விட்டு இம்மியும் நகராது இன்னுமே அவன் மார்பில் ஒன்றிக்கொண்டு, “அவரை பத்தி தான் உனக்கு தெரியுமேடா.. எனக்கு செய்றதுல அவருக்கு அவ்வளவு சந்தோஷம் ஆரம்பத்துல நீ சீர் வேண்டாம்னு சொன்னதுக்கே ரொம்ப நாள் கஷ்டப்பட்டுட்டு இருந்ததா அம்மா சொன்னங்க.. அவருக்குள்ள எங்க நீ என்னை பிரிக்கிறியோன்னு ஒரு இன்செக்யூர்ட் ஃபீல் அதிகமாகி அவர் இகோவை தட்டி எழுப்பவும் தான் இப்படி பண்றார்.. மத்தபடி உன்மேல எந்த கோபமும் பெருசா இல்லை ப்ளீஸ் நீயும் இதை நினைச்சு வருத்திக்காத..”
‘எனக்கு புரியுது மாமா ஆனா இப்போ உடம்பு முடியாம இருக்கிறவரை என்னால் எதுவும் மறுக்க முடியலை.. ப்ச் ப்ளீஸ் பெருசுபடுத்தாத, விட்டுதள்ளுடா’
எழில் விழி தழைத்து அவளை பார்க்க ‘காலைல எவ்ளோ சந்தோஷமா கிளம்பினோம், இப்போ நீயும் கஷ்டப்பட்டு என்னையும் கஷ்டபடுத்தாத எழுந்து வா சாப்பிடுவோம்’ என்றாள்.
அப்போதும் அவன் மௌனமாய் அவள் கூந்தலில் கரம் நுழைத்து கோதிட,
“ஏன் மாமா இதே உங்க அப்பாக்கு ஒரு கடை இருந்து அவர் இப்படி சொல்லிருந்தா இந்தளவுக்கு ரியாக்ட் பண்ணுவியா..??” என்று கேட்க ஒரு கணம் தன் செயலை நிறுத்தி மௌனமாய் பார்த்தான்.
“நீ வேற நான் வேற இல்லை, அதுவும் நம்ம கடை தான் அங்க எனக்கு உரிமை இருக்குன்னா உனக்கும்னு தானே அர்த்தம்… நம்ம கடையில எடுத்தோம் அப்படின்னு நினைச்சிக்கோ”
அலரை ஆழ்ந்து பார்த்துகொண்டிருந்த எழிலின் பார்வையை கண்டுகொண்டவள் அவன் முகத்தை ஏந்தி, “என்ன பார்வைடா இது! ப்ளீஸ் இது மட்டும் வேண்டாமே.. நீ இப்படி ஒருமாதிரி விட்டேர்த்தியா இருந்தா என்னால தாங்க முடியல ப்ளீஸ் மாமா புரிஞ்சிக்கோ” என்றாள் குரல் தழுதழுக்க.
“சரி ஒத்துக்குறேன் அப்பா வேணும்னு தான் பண்ணினார், இப்போ என்ன உனக்கு..? அவருக்கு பதில் கொடுக்கணும் அவ்ளோதானே..!” என்று எழுந்தமர்ந்தவள் அவனையும் அமர்த்தி,
“இப்போ நான் தான் நாதன்னு நினைச்சிக்கோ, என்ன பேசணுமோ பேசு..! திட்டனுமோ திட்டு..! இல்லை அடிக்கனுமா..! அதுக்கும் நான் ரெடி” என்று அவன் முன் வாகாய் அமர்ந்து கன்னத்தை காட்டினாள்.
ஒருநிமிஷம் என்று திரும்பியவள், “ப்ளீஸ் கொஞ்சம் மெதுவா அடிடா.. முதல் நாள் நீ அடிச்சது ரெண்டு நாள் வலி இருந்தது” என்று வருடங்கள் பல கடந்தும் அவனது ஒற்றை அறையை நினைவு கூர்ந்தவளின் கரம் தன் இடக்கன்னத்தை ஒருமுறை வருடியபின் சிணுங்கிகொண்டே இதழ்களை அழுந்த கடித்தவண்ணம் அவன்முன் கன்னத்தை காட்டினாள்.
தன் முன் கண்களை அழுந்த மூடி, இதழ் கடித்து அமர்ந்திருப்பவளின் அழகிய அவஸ்தைகள் எழிலை இரும்பை ஈர்க்கும் காந்தமாய் மெல்ல மெல்ல அவளுள் ஈர்ப்பதை அறிந்தவனின் விழிகளில் மின்னல் கீற்றாய் விளைந்த புன்னகை விரிந்து இதழ்களையும் நிரப்ப.. கொண்ட கோபம் அனைத்தும் மறந்து அலரவளின் எழில் முகமும் கொஞ்சும் இதழ்களுமே அகனவனுக்கு பிரதானமாகி போனது.
எதிரே இருந்தவளை நொடியில் தன் மடியில் அமர்த்தியவன் அவள் கன்னத்தை அழுந்த பற்ற, அகனவனின் எதிர்பாரா செய்கையில் அலரின் விழிகள் தாமாய் அகன்று என்ன? என்பதாய் பார்க்க…
தன் விழிகளில் விரிந்தவளிடம் “மெதுவா எல்லாம் முடியாது போடி” என்று கன்னத்தில் அழுந்த பற்பட கடித்து விட்டான்.
‘ஆஆஆ வலிக்குதூஊ’ என்று அலறியவள் ‘விடுடா‘ என்று எழிலிடமிருந்து தன் கன்னத்தை வலிந்து விலக்கி அவன் மார்பில் அறைய, அனைத்தையும் புன்னகை முகமாய் பெற்றுகொண்டவனின் பார்வையோ அவளில் லயித்து கிடந்தது.
‘ரொம்ப வலிக்குதுடா’ என்று சிணுங்கிகொண்டே மீண்டும் அவனை அடிக்க துவங்க அவளை தடுத்து, “இப்படி பேசி பேசியே என்னை வசியபடுத்திடுறடி குள்ளச்சி” என்றவனின் குரலில் கோபத்தின் சுவடு முற்றிலும் மறைந்து தாபம் மேலோங்கியது..
ஆனால் வலிகொண்டிருந்தவள் எங்கிருந்து அவன் குரலின் பேதத்தை பிரித்தறிய..!!
அவள் சிந்தை முழுதும் அவன் கரங்களில் சிறைபட்டிருந்த தன் கைகளை மீட்டெடுப்பதிலேயே இருக்க, அதில் வெற்றியும் கண்டவள் உடனே இறங்கி சென்று கண்ணாடியில் தன் முகம் பார்த்தவள் அவன் தடத்தை மெல்ல தொடவும், வலி பொறுக்காது,
“ஸ்ஸ்ஆஆ, வாம்பைராடா நீ..!! இப்படி கடிச்சி வச்சிருக்க? போச்சு.. போச்சு.. இப்போ நான் எப்படி நிச்சயத்துக்கு போறது.. சித்தி வேற வேதா விசேஷத்தை காரணம் காட்டி வராம போனா பேசவே மாட்டேன்னு சொல்லி இருக்காங்க.. அவங்க சொன்னாங்கன்னு இப்ப அங்க போனா என் மானமே போகும் என்ன பண்ண” என்றவளின் புலம்பலில் கட்டுபடுத்த முடியாமல் உரக்க சிரிக்க தொடங்கினான் எழில்.
“எல்லாம் உன்னால தான் பண்றதையும் பண்ணிட்டு இதுல சிரிக்க வேற செய்யுறியா..? என்றவள் கட்டிலில் ஏறி அவனை மெத்தையில் தள்ளி அவன் சிகையை பற்றி இடவலமென ஆட்ட துவங்கினாள்.
“ஏய்! ஏய் விடுடி நான் என்ன பண்ணேன்.. சும்மா இருந்தவனை கன்னத்தை காட்டி உசுபேத்தி விட்டது நீ..! நான் என்ன பண்ணமுடியும் ஐ ஆம் ஹெல்ப்லெஸ்”
“போடா நான் அடிக்க சொல்லி தானே காட்டினேன்” என்று கன்னத்தை அழுந்த துடைத்து கொண்டு கூற,
அவளை தன் மீது சரித்தவன் “அடிக்கமாட்டேன்னு நல்லா தெரிஞ்சிக்கிட்டே கன்னத்தை காட்டினா வேற என்னதான் பண்ண முடியும்” என்று விரல் நுனி கொண்டு அவள் கன்னத்தை வருட அதில் தடுமாறியவள் அவன் கரம் பற்றி தன்னை நிலைபடுத்தினாள்.
‘ஹ்ம்ம், சொல்லுடி’ என்று அவள் செவி உரசி சென்ற அவன் வெம்மையில் முற்றிலும் நெகிழ்ந்திருந்தவளுக்கு அவன் வசத்தில் மொழியும் வசப்படாது போக, ‘எப்..எப்..ப..டி.. மாமா வெளில போக..’ என்றாள் மெல்லிய குரலில்.
“அதுக்கு தான் வழி பண்ணிட்டு இருக்கேன் கொஞ்ச நேரம் அமைதியா இருடி பட்டு..” என்றவனின் குரல் குழைந்திருக்க, இப்போது அவன் பேதத்தை நன்கு உணர்ந்தவள் கணவனை பார்க்க, எழிலோ அவள் முகத்தை தன் கரங்களில் ஏந்தி இதழ் கொண்டு மென்மையாய் அவள் கன்னத்தை வருட துவங்கினான்.
கன்னத்தில் பயணப்பட்ட அவன் இதழ்கள் அதன் மென்மையில் உருகி கரைந்து சில நிமிடங்களில் அவளது செவ்விதழ்களில் தடம் பிறழ, அதன்பின் மென்மையின் சுவடு மறைந்து வன்மை தடம் பதித்தது.. இதழ் முற்றுகையில் தன்னிலை இழந்திருந்தவனுக்கு அன்றைய கடமைகள் பின்னுக்கு தள்ளப்பட இதழ் கடந்து தன் தேடல்களை தொடர்ந்தான்.
அகனவனின் ஆக்கிரமிப்பில் பூமியை தழுவும் வேர்போல அவனை இறுக தழுவியவளை அவனுள் அலைமோதிய ஆசை பேரலை அவளையும் சேர்த்திழுக்க அவன் உயிரில் கலந்திட விழைந்தவளின் பார்வை நொடியில் அவளையும் அறியாது ஏக்கத்தோடு அவனில் படிந்து நிலைகொண்டது.
சில நொடிகள் தன்னவளிடம் இருந்து எவ்வித மறுமொழியும் இல்லாது போனதை உணர்ந்தவன் அவள் முகம் பார்க்க… அவள் விழி பேசிய மொழியில் அதன் தவிப்பில் ஸ்தம்பித்து போன அகனெழிலனின் கரங்கள் செயலற்றுபோனது.
கணவன் தன்னை கண்டுகொண்டதை அவன் விழிகளே பறைசாற்ற நொடியில் தன்னை மீட்டுக்கொண்ட அலர்விழி கண்களை இறுக மூடிக்கொண்டாள்.
‘அமுலு’ என்றழைத்தவன் குரல் வெகுவாக உடைந்திருக்க அதன் கரகரப்பும் நடுக்கமும் அவள் செவிகளை சென்றடைந்த தருணம் அவன் விலகலை உணர்ந்தவள்… உடனே இமை திறந்து தலையை இடவலமாய் அசைத்திட அவள் கரமோ அவனை விலகவிடாது தன்னோடு சேர்த்து இறுக்கமாக அணைத்துக்கொண்டது.
நொடிப்பொழுதேயாகினும் அலரிடம் கண்ட தவிப்பே அவன் மனதை கிழித்து ரணமாக்க போதுமானதாய் இருக்க.. மீண்டும் ‘அமுலு’ என்றவாறு அவள் கரங்களை அகற்ற முனைந்தான்.
ஆனால் அலரோ எழிலை தன்னோடு சேர்த்தணைத்து தன் கரங்களின் இறுக்கத்தை கூட்டி அவனை பேச்சிழக்க செய்து அவனோடு கலந்தாள்.
*****************************************
கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தவனின் விழிகள் தன் அருகே அயர்ந்து உறங்கி கொண்டிருந்தவளிலேயே பதிந்திருக்க அவனுள் ஆர்பரித்துகொண்டிருக்கும் உணர்வுகள் வடிவம் கொண்டு மீண்டெழுந்து அவனை வதைக்கவும் சட்டென எழுந்து எதிலிருந்தோ தப்பித்து செல்பவனாய் தன் சட்டையை அணிந்து கொண்டு உடனே அறையை கடந்து கூடத்தை அடையவும் தான் மூச்சை இழுத்து விட்டு ஆசுவாசமாய் உணர்ந்தான்.
மெல்ல அங்கிருந்த சோபாவில் அமர்ந்து கரங்களில் அழுந்த முகம் புதைத்து தன்னுள் எழும் காட்சிகளை கட்டுபடுத்த முயன்றான். ஆனால் அவன் முயற்சி பெருந்தோல்வியையே தழுவ திடமான ஆண்மகன் அவனை வேரோடு சாய்த்த அந்நாளின் காட்சிகள் மனதில் அகலாது நிறைத்திருந்தது.
காலம் மெல்ல அவற்றை அவனில் இருந்து நீக்கிவிட்டதாக நம்பி கொண்டிருந்தவனுக்கு இது பேரிடியே..!! தன்னவளின் ஒற்றை பார்வை அனைத்தையும் மீட்டெடுத்திருப்பதை உணர்ந்தவனை அலரின் தவிப்பே தீயாய் பொசுக்கிகொண்டிருந்தது.
இருகரம் கோர்த்து தலை சாய்த்து படுத்தவனின் மனதினுள் பெரும் போராட்டமே நிகழ அன்றைய நாள் மட்டுமின்றி தன்னவர்களின் தவிப்பும் ஏக்கமும் அவனை ஒன்றன் பின் ஒன்றாக துரத்த தத்தளித்து போனான்.
கண்விழித்த அலர் மணி மூன்றை நெருங்கி கொண்டிருப்பதை உணர்ந்து அவசரமாக குளியலறையினுள் சென்று திரும்பிய பின் தான் எழில் அருகில் இல்லாததை உணர்ந்தவள் வெளியில் வர.. அங்கே கால்களை குறுக்கிக்கொண்டு கரங்களை மார்பில் கட்டிக்கொண்டு சோபாவில் படுத்திருந்தவனை கண்டவள் ‘என்ன இங்க வந்து படுத்திருக்கீங்க’ என்று கேட்கவும் திடுக்கிட்டு எழுந்தமர்ந்தான்.
அலரை கண்டதும் அவளை இறுக அணைத்தவன் அவள் முகத்தில் எண்ணிலடங்கா முத்தத்தை அளிக்கவும் அவனது நடுங்கும் இதழ்களையும் கரத்தையும் ஒரு சேர உணர்ந்தவள், “என்ன… ஏன்டா.. என்னாச்சு..” என்றவளுக்கு அப்போதுதான் நிறமிழந்து போயிருந்த எழிலின் முகமும் அதில் இழையோடிய பதட்டமுமே அவன் அந்நாளை நினைவு கூர்ந்து தவிப்பதை சொல்லாமல் சொல்ல, மனதினுள் தன்னையே கடிந்துகொண்டு மீண்டும் அவனை இந்நிலைக்கு கொண்டுவந்ததை எண்ணி பரிதவித்து போனவளாய் அவனை மடியில் சாய்த்து கொண்டு மௌனமாய் அவன் தலை கோதினாள்.
எழிலோ அழுத்தமாய் அவள் வயிற்றில் முகம் புதைத்து அவளை இறுக்கிக்கொண்டான்.
அங்கு வார்த்தைகளற்ற மௌனம் கணங்களை யுகங்களாக்கி இரு மனங்களையும் ரணமாக்க எப்படி அவனை தேற்றுவது என்று புரியாதிருந்தவள் அவளிடையில் பதிந்திருந்த அவன் கரத்தின் நடுக்கம் மெல்ல குறையவும்,
‘செல்லம் என்னோட தப்பு தான்.. இனி அதுபோல நடக்காது’ என்றாள் மெல்லிய குரலில்.
எழிலிடம் பதிலில்லாது போக, ‘ப்ளீஸ் நீ எதையும் யோசிக்காத’
“நீ என்னடி தப்பு பண்ண.. எல்லாமே நான்….” என்றவனுக்கு தொண்டைகுழி அடைக்க வார்த்தைகள் இன்றி தவித்தவனின் விழிகளில் நீர் கசிந்தது.
‘என்னடா இது..’ என்று பதறி அவன் கண்ணீரை துடைத்தவளின் கண்களும் அவன் வலியில் குளமாக, ‘ஸாரி மாமா நான் தான் தப்பு…, என்னையுமறியாமல்..’ என்றவளை இறுக அணைத்தவன்,
‘ஸாரிடி, ஸாரி, ஸாரி’ என்று ஓயாது கூற,
‘ப்ச் இங்க பாரு மாமா’ என்று அவன் முகத்தை கைகளில் ஏந்தியவள்,
‘முதல்ல உன்னாலன்னு சொல்றதை நிறுத்து நீ என்ன பண்ண எல்லாமே என்னால தானே! என்னோட தப்புதானே நான் தான் ஸாரி” என்றவள் இல்லடி.. என்று மறுத்து கூற வந்தவனின் இதழ்களை விரல் கொண்டு தடுத்து பிடித்து..,
“போதும் திரும்ப திரும்ப இதையே சொல்லாத முதல்ல என்னை பாரு மாமா, என்னோட கண்ணை பாரு இப்பவும் உனக்கு அப்படி ஏதாவது தெரியுதா..?” என்றிட,
அவள் விழிகளில் தனக்கான பரிதவிப்பன்றி வேறெந்த எதிர்பார்ப்பும் இல்லாதிருப்பதை கண்டவன் ‘இல்லை’ என்று தலையசைத்தான்.
‘அப்புறம் என்ன?? இன்னும் எவ்ளோ வேலை இருக்கு, நீ இதே மாதிரி மூஞ்சியை வச்சிட்டு எதையாவது யோசிச்சிட்டு இருந்தேன்னா நான் என்ன பன்னுவேன்னே தெரியாது’ என்றவள் அவனை அழைத்து சென்று குளியலறைக்குள் விட்டு
“போ போய் குளிச்சிட்டு ஒழுங்கா எல்லாத்தையும் இங்கயே விட்டுட்டு, பழைய மாதிரி சிரிச்ச முகமா தான் ரூம்க்குள்ள வரணும், இல்ல மவனே டைவர்ஸ் தான்டா” என்று மிரட்டவும்.., கொண்டிருந்த துயரை மீறிய புன்னகை அவன் இதழில் அழகாய் படர்ந்தது.
அதில் அலரின் முகமும் புன்னகையில் நிறைய அவன் தோளில் கரம் கோர்த்து நெற்றியில் முட்டியவள் ‘தட்ஸ் குட்’ என்று மலர்ந்த அவன் இதழில் மென்முத்தம் வைத்து கதவை சாற்றினாள். உள்ளே சென்றவனுக்கோ அவளின் இறுதி வார்த்தையே உள்ளம் நிறைக்க சில நிமிடங்களில் நீரோடு அனைத்தையும் கரைத்தவன் குளிக்க தொடங்கினான்.
புடவை மாற்றி வந்த அலர் ஒப்பனைக்காக கண்ணாடியின் முன் அமர்ந்து மீண்டும் கன்னத்தை பார்க்க அதில் பற்களின் தடம் மறைந்திருந்தாலும் இரு கன்னத்திற்க்குமான வேறுபாடு அப்பட்டமாய் தெரிய.. அது வெளியில் தெரியாதவாறு ஒப்பனை செய்து முடித்தாள்.
குளித்துவிட்டு வந்தவன் முகம் ஓரளவு தெளிந்திருக்க அவனையே பார்த்துநின்றவளிடம் “நீ ஓகே தானே” என்றான்.
“பார்த்தா தெரியலை அதெல்லாம் நான் டபுள் ஓகே தான் மாமா..” என்று புன்னகைத்தவள் உச்சியில் இதழ் பதித்து “நீயே கட்டிட்டியாடி” என்றவன் மண்டியிட்டு பட்டுபுடவை மடிப்பை சரி படுத்த முயல…
‘விடுங்க நானே சரி பண்ணிட்டேன் டைம் ஆச்சு சிக்கிரம் வாங்க’ என்று வெளியே சென்றாள்.
மீண்டும் உள்ளே நுழைந்தவள் உடை மாற்றி கொண்டிருந்தவனிடம் ‘வாயை திறங்க மாமா’ என்று ஊட்டிவிட அவனும் தயாராகி கொண்டே உணவை முடித்துக்கொண்டான்.
நேரம் குறைவாக இருப்பதால் ஏற்கனவே திட்டமிட்டபடி இருவரும் முதலில் கிளம்பி நகை கடைக்கு சென்று வேதவிற்கான நகைகளை தேர்வு செய்து பெற்றுக்கொண்ட பின், கதிருக்கு அழைத்து அவிரனுடன் குறிப்பிட்ட இடத்திற்கு வர சொல்ல, அவன் வரும் முன் பழங்கள் மற்ற சீர் வரிசைகளை வாங்கி காரில் அடுக்கினர்.
கதிர் வரவும் கார் சாவியை அவனிடம் கொடுத்து அனைத்தையும் வீட்டில் வைக்குமாறு கூறி எழில் நகையை பத்திரபடுத்த சொல்ல அதற்குள் அலர் அவிரனை காரில் அமரவைத்து கையோடு கொண்டு வந்திருந்த புது உடையை மாற்றி அவனை தயார் படுத்தினாள்.
கதிர் கிளம்பவும் அவன் பைக்கில் மூவரும் மண்டபத்திற்கு கிளம்பினர். அவர்கள் மண்டபம் செல்வதற்கு மணி ஐந்தரை ஆகிவிட வாசலிலேயே அவர்களை வரவேற்றனர் அலரின் சித்தப்பாவும் அவர் மகனும்.
அலர் மேடைக்கு செல்ல அவிரனை தூக்கிக்கொண்ட வைதேகியோ ‘நான் அவ்ளோ சொல்லியும், சரியா நிச்சய நேரத்துக்கு தான் நீ வருவியா..?’ என்று கோபிக்க,
“ஸாரி சித்தி கொஞ்சம் வேலை இழுத்து விட்டுடுச்சி.. கண்டிப்பா கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னவே வந்துடறேன்”
‘சரி சரி சரண்யா ரெடி ஆகிட்டாளா பாரு’ என்று அலரை மணப்பெண் அறைக்கு அனுப்பி வைத்தார். அழகு நிலைய பெண் அவளை அலங்கரித்து முடித்திருக்க, பெண்ணை அழைத்து செல்வதற்கு அங்கு வந்து சரண் ‘அமுலு முடிஞ்சதா..?’ என்று சரண்யாவின் இறுதி கட்ட அலங்காரத்தை சரி பார்த்து கொண்டிருந்தவளிடம் கேட்க,
“வாவ் மாமா நீங்க ரொம்ப ஹான்ட்சம்மா இருக்கீங்க.. வாங்க செல்ஃபி எடுக்கலாம்’ என்று அக்கா பெண்கள் அழைக்க,
“ஏய் வாலுங்களா வழிய விடுங்க.. டைம் ஆச்சு அவன் அக்காவை கூட்டிட்டு போகட்டும்” என்றார் வெண்மதி.
“ப்ச் என்னக்கா குழந்தைங்களை எதுக்கு பேசுற..?” என்ற சரணிடம்,
“டேய் நல்லா பாரு இதுங்க குழந்தைங்களா..?” என்றார் பெண்களை முறைத்துகொண்டே…
அங்கிருந்த அனைவருமே பதினைந்து முதல் இருபத்தைந்து வரையிலான இளம் பெண்களே அனைவரும் விழாவிற்கு ஏதுவாய் புடவை, தாவணி, லேஹெங்கா என்று அணிந்திருக்க, அனைவரையும் ஒரு முறை பார்த்தவன் “இதுல உனக்கென்ன சந்தேகம் நான் இவங்க எல்லோரையும் முதல் முறையா கையில வாங்கினப்போ எப்படி பார்த்தேனோ அப்படியே தான் எனக்குள்ள நிறைஞ்சிருக்காங்க அதனால எல்லாருமே குழந்தைங்க தான்..” என்றதும்..
‘ஹேஏஏஏஎ‘ என்று உற்சாககுரல் அப்பெண்களிடம்,
‘ஷ்ஷ்ஷ் மெதுவா.. இது மண்டபம் ஞாபகம் இருக்கா‘ என்று அலர் கண்டிக்க,
‘ஸாரிக்கா‘ என்றவர்கள் மறுநொடி ‘மாமான்னா மாமா தான்..’ என்று அவனை சுற்றி கொள்ள அலரும் அவர்களுடன் இணைய, வெளியில் இருந்த கதிர் உள்ளிட்டோரும் இவர்களின் கூச்சலில் உள்ளே வந்து சேர்ந்தனர்.
அவர்களிடம் “நீங்களும் வாங்கடா” என்று சரண் அழைக்க அலர் முதற்கொண்டு அங்கிருந்த அக்கா பெண்கள் ஆறுபேரும், பிள்ளைகள் நால்வரும் அவனுடன் இணைந்து நிற்க சரணே அத்தருணத்தை அழகிய புகைப்படமாய் மாற்றி இருந்தான்.
‘இப்போ சந்தோஷமா.. சரணை கூட்டிட்டு போகலாமா..?’ என்று சரண் பெண்களிடம் அனுமதி வேண்டி நிற்க,
‘ஹ்ம்ம்’ என்று அவர்கள் தலை ஜோராய் அசைய மணப்பெண் சரண்யாவோடு வெளியேறிய சரணை தடுத்து நிறுத்திய உறவுக்கார பெண்மணி,
“என்ன சரணு நீ பார்த்து வளர்ந்த புள்ளைங்க எல்லாம் கல்யாணம் பண்ணிட்டு போகுதுங்க.. நீ இன்னும் ஒத்த மரமாவே நிக்கிற” என்றிட அவர் கேள்வியில் அங்கிருந்த அனைவரின் முகத்தில் மலர்ச்சி முழுதாய் துடைத்தெறியபட சரணோ முகம் இறுக அவர்களுக்கு பதிலளிக்காது சரண்யாவுடன் வெளியேறினான்.
சரணின் பின்புறம் நின்றிருந்த அலரின் காதிலும் அவை விழ, அவர்கள் வார்த்தையில் அருவருப்பே மேலோங்க, அவர்களை ஒரு பிடி பிடித்து வேப்பிலை அடித்த பின்பே மேடைக்கு சென்றாள்.
வெளியில் வந்தவள் அவிரனை தேட அவனோ அங்கு முதல் வரிசையில் அமர்ந்திருந்த நாதனின் மடியில் அமர்ந்திருக்க அவர் முகமோ இளகி என்றுமில்லா மென்மையை கொண்டிருந்தது, அவிரனால்..!!
அவிரனுக்குமே அலரை போல் நாதனிடம் அத்தனை பிடித்தம். அவன் பிறந்த ஆறுமாதத்திற்கு பிறகு அலரை சென்னைக்கு அனுப்பி வைத்தாலும் அடுத்த நாள் அவிரனின் அழுகுரல் இன்றி வெறுமையாய் வீடு அவரை வரவேற்க வார இறுதியானால் தவறாமல் சென்னையில் ஆஜராகி விடுவார். பேரனின் நினைவுகள் அவரை அடுத்த ஒரு வாரத்தை உயிர்ப்புடன் கடக்கசெய்யும்.
இரு வீட்டு பெரியவர்களும் அமர்ந்து நிச்சயபத்திரம் எழுதி முடிக்க பெண்ணுக்கு நலங்கு வைக்க தொடங்கினர்.
வரும் வழியிலேயே தூங்கிவிட்டிருந்த அவிரனை படுக்கையில் கிடத்திய எழில் “நான் அக்கா வீட்டுக்கு போயிட்டு ஏற்பாடு எல்லாம் எந்தளவுக்கு இருக்குன்னு பார்த்துட்டு வரேன் நீ அதுக்குள்ள எல்லாம் சரி பார்த்து வச்சுடு” என்று கிளம்பினான்.