அதிகாலை கும்மிருட்டில் நேரம் மணி மூன்றரை என்றிருக்க அந்த மாளிகையின் வாசலில் வந்து நின்றது விமானநிலையத்திலிருந்து வந்திருந்த வாகனம்.
பிரபஞ்சம் விலாஸ். மிக பிரமாண்டமாய் அமைந்திருந்த அந்த வீட்டின் கேட்டை மெல்ல அவள் தட்டவும் உள்ளிருந்த காவலாளி வந்து கதவை திறந்து வணக்கம் வைத்தார்.
“குட்மார்னிங் மேம்…” என்று பவ்யமாய் சொல்லியவருக்கு தலையசைத்துவிட்டு தோளில் மாட்டியிருந்த நீண்ட ட்ரக்கிங் பேக்குடன் உள்ளே நுழைந்தாள் சௌபர்ணிகா.
அந்த வீட்டின் இளைய வாரிசு. பத்துநாட்கள் பயணம் சென்றிருந்தவள் அன்று காலை தான் வீடு திரும்பி இருந்தாள்.
தனது கை ரேகையை வைத்து முகப்பு கதவை திறந்து உள்ளே செல்ல அந்த நேரம் அறையிலிருந்து தண்ணீர் பாட்டிலுடன் அடுக்களையில் இருந்து வெளியே வந்தான் இஷாந்த்.
“இப்ப தான் வரியா சௌபி…” என்றான் தங்கையை பார்த்ததுமே.
“ஹ்ம்ம், ஆமாண்ணா. நீ என்ன இந்த நேரம் தூங்காம?…” என்றவள் தோளில் இருந்த பேக்கை கழற்றி சோபாவில் போட்டவள் தானும் அமர்ந்துகொள்ள,
“குடிக்க தண்ணி தீர்ந்து போச்சு. அதான் எடுத்துட்டு போக வந்தேன்…” என்றவன்,
“இதை குடி. இப்ப வரேன்…” என சொல்லிவிட்டு மீண்டும் அடுக்களைக்குள் செல்ல தண்ணீரை குடித்தவள் சாய்ந்தமர்ந்துகொண்டாள் நன்றாக.
சில நிமிடத்திற்கெல்லாம் காபியின் மணம் நாசியை நிறைக்க அதுவே புத்துணர்ச்சியை தந்தது.
“தேங்க்ஸ்….” என்று இஷாந்திடம் சொல்லி வாங்கிக்கொண்டவள் சொட்டு சொட்டாய் ரசித்து குடித்தாள் அதனை.
“பத்துநாள்ல மெலிஞ்சிட்ட மாதிரி இருக்கியே சௌபி? அங்க ஒழுங்கா சாப்பாடு கிடைக்கலையா?…” என்று கேட்டான் தங்கையை.
சௌபர்ணிகா உணவிற்கு வஞ்சகம் செய்யும் ஆளில்லையே. மெலிந்திருக்கிறாள் என்றால் அங்கே சரியான உணவுகள் அவளுக்கு பிடித்த விதத்தில் கிடைக்கவில்லை என்று புரிந்துகொண்டான்.
தண்ணீர் கொண்டுவர எழுந்து சென்ற கணவன் இன்னும் அறைக்கு வராமல் இருக்க அவனை தேடி வந்த இஷாந்தி மனைவி சந்தனா அப்படியே நின்றுவிட்டாள்.
அண்ணனும், தங்கையும் காபி குடித்தபடி உரையாடிக்கொண்டிருக்க சத்தமின்றி வந்தவழி திரும்பி சென்றாள் சந்தனா.
“ஹ்ம்ம், ரைட். சாப்பாடு எல்லாம் கொஞ்சம் சுமார் தான். பட் ஓகே…” என்றவள்,
“நாளைக்கு மார்னிங் விசிட் ஷோரூம்க்கா? இல்லை நேரா தறிக்கு தானா?…” என பேக்கை எடுக்க வந்தவளிடம் இஷாந்த் கேட்க,
“அப்கோர்ஸ். இதுல என்ன டவுட்? கலர்ஸ் ஆல்மோஸ்ட் ரெடி. டிஸைன் மட்டும் பார்க்கனும். முடிஞ்சா நீயும் வாயேன் அண்ணா…”
“இல்லடா நாளைக்கு வேலை இருக்கு. நீ போரூர் வந்ததும் எனக்க கால் பண்ணு. ப்ரீயா இருந்தா வரேன்….” என்றவனிடம் தோளை குலுக்கிவிட்டு பேக்கை தூக்கிக்கொண்டு செல்லும் தங்கையை பார்த்தபடி அங்கேயே நின்றான்.
“உன் வொய்ப் உன்னை தேடி வந்துட்டு போனாங்க. எவ்வளோ நேரம் அப்படியே நிப்ப? போ போ…” என்று சொல்லிவிட்டு செல்லும் அவளை புன்சிரிப்புடன் பார்த்திருந்தவன் தன் அறைக்கு செல்ல சந்தனா விழித்தபடி படுத்திருந்தாள்.
“சௌபி வந்தாச்சு சனா…” என இஷாந்த் அவளிடம் பாட்டிலை நீட்ட,
“ஹ்ம்ம், வந்து பார்த்தேன். தங்கச்சியோட மட்டும் நேரம் கெட்ட நேரத்துல கூட காபி குடிக்க முடியும். இதுவே நான் கேட்டா அன்-டைம் இதெல்லாமா சாப்பிடறதுன்னு சொல்லுவீங்க…” என்றவளை சிரிப்போடு முறைத்தவன்,
“ஏன் நீயும் வந்திருக்க வேண்டியது தானே?…”
“ஏன் கேட்கமாட்டீங்க? நான் வந்துட்டா அப்படியே என்கிட்ட அவ கலகலன்னு பேசிடற மாதிரி தான்…”
“சரி விடு. ஆனா உன்னோட என்ன பேசாமவே இருக்காளா என்ன?…”
“ம்க்கும், நீங்க என்னைக்கு உங்க தங்கச்சியை விட்டு குடுத்திருக்கீங்க?…” என்று நொடித்துகொள்ள,
“என்னவாம் உனக்கு? என்னோட சண்டை போடனுமா? இல்லை உனக்கும் காபி போடனுமா?…”
“ப்ச், அதெல்லாம் கேட்கலை…” என்றவள் என்ன எதிர்பார்க்கிறாள் என்று இன்றுவரை குழப்பம் தான்.
திருமணமாகி வந்து பத்து வருடங்களாகிற்று. சௌபர்ணிகா பேசுவாள். ஆனால் அத்தனை நெருக்கமில்லை. நெருங்க சந்தனாவும் முயற்சிக்க முடியவில்லை.
“சொல்லுங்கண்ணி…” என அவள் சாதாரணமாய் பார்க்கும் பார்வை கூட எட்ட நிற்க வைத்துவிடும் சந்தனாவை.
“ம், உங்க தங்கச்சி பேசறது நார்மலா இருந்தாலும் எனக்கு உங்கம்மா பார்க்கற மாதிரியே இருக்கு…” என்று இஷாந்திடம் தான் புலம்புவது எல்லாம்.
“எல்லாம் நீயா கற்பனை பண்ணிக்கறது. அவங்க நார்மலா தான் இருக்காங்க…” என்றும் சொல்லி பார்த்துவிட்டான்.
சௌபர்ணிகாவிடம் கூட பேசிவிடுவாள். மாமியார் சபர்மதி என்றால் இன்னுமே நடுக்கம்.
இத்தனைக்கும் அவர் கடிந்து பேசியதில்லை. ஆனால் அந்த கம்பீரமும், ஆளுமையும் கலகலப்பை கொண்டுவந்ததில்லை.
அமர்த்தலான அமரிக்கையான சிரிப்பு. ஆனால் அது இத்தனை வருடத்தில் அதிகமாய் பார்த்ததே இல்லை அவள்.
“உங்கம்மா சத்தமா கூடவா சிரிக்க மாட்டாங்க? கோடு இழுத்த மாதிரி ஒரு சிரிப்பு. அப்படியே ஜெராக்ஸ் உங்க தங்கச்சி….” என சபர்மதி, சௌபர்ணிகா இருவரையும் ஒரு தராசில் தான் வைப்பாள்.
இதுவரை இரண்டுபேரும் எந்தவிதத்திலும் அவளுக்கு கூட்டி, குறைத்து தெரிந்ததில்லை.
“இந்த கலர், டிஸைன் உங்களுக்கு நல்லா இருக்கும் அண்ணி…” என சௌபர்ணிகா தேர்ந்தெடுத்து தரும் புடவை, நகை என்று அனைத்திலும் அபாரமான பிரமிப்பு இன்றும் உண்டு.
“சௌபிட்ட சொல்லி அடுத்த தீபாவளிக்கு எனக்கு புது டிஸைன் பண்ணி தர சொல்லுங்க. பெரிய பாடரா வேணும். கலர் காம்பினேஷன் எல்லாம் சௌபியே பண்ணட்டும்…” என்று இஷாந்த்திடம் தான் நிற்பது இன்றளவும்.
“உங்கண்ணிக்கு புடவை வேணுமாம் புது டிஸைன்ல. நீயே கேட்டுக்க…” என்று மனைவியை கோர்த்துவிட்டு அவளுடன் அமர்த்திவிடுவான் இஷாந்த்.
“இல்லை டிஸைன் பண்ணி முடிக்கட்டும். அப்பறமா பார்க்கறேன்…” என்று நழுவவும் முடியாது.
சௌபர்ணிகா வரைந்து முடித்து நான்கைந்து விதங்களை காண்பிக்கும் பொழுது தான் எதை தேர்ந்தெடுப்பது, எதை விடுவது என தெரியாமல் விழிப்பாள் சந்தனா.
“நானே சொல்லட்டுமா?…” என்று புன்னகைக்கும் நாத்தனார் மீது பாசம் தான். ஆனாலும் இலகுவாய் உரிமையாய் ஒன்ற முடியவில்லை.
அது அவளின் தோரணையில் என்பது சந்தனாவுக்கு புரிந்தாலும் பொருமல்கள் நின்றபாடு தான் இல்லை.
“என்ன இன்னும் கனவா? தூங்கு. நாளைக்கு பசங்களுக்கு ஸ்கூல் இருக்கு…” என்று அவன் அதட்டவும் கண்ணை மூடினாள் சந்தனா.
சௌபர்ணிகா நேராக தனதறைக்கு வந்ததும் பையிலிருந்தவற்றை பிரித்து எடுத்துவைத்துவிட்டு குளித்து முடித்து உறக்கத்திற்கு சென்றுவிட்டாள்.
பத்துநாள் பயணம் சிரபுஞ்சியில். அவளுக்கு மிக மிக பிடித்தமான இடம். வருடத்திற்கு ஒருமுறை அவள் மட்டுமே மேற்கொள்ளும் அந்த பயணம் அது.
இந்தமுறை கொஞ்சம் கடினமாகவே இருந்தது. அதில் அலண்டு தான் போனாள் சௌபர்ணிகா.
அலாரம் அடித்ததும் மெல்ல கண்களை திறந்தவளுக்கு உறக்கம் நெருக்கினாலும் மேலும் படுக்க முடியவில்லை.
காலை உணவு நேரமாகியிருக்க சோம்பல் முறித்து எழுந்து மடமடவென கிளம்பி கீழே வந்தாள்.
உணவு மேஜையில் இஷாந்த் அமர்ந்திருக்க அருகில் சந்தனா. இன்னொரு இருக்கையில் அவனின் இரு பிள்ளைகளான அவினாஷ், புவனேஷ் இருவரும் அமர்ந்திருக்க,
“ஹாய் அத்தை…” என்றனர் இருவருமே.
“ஹாய் குட்டீஸ்…” என இருவரின் கன்னத்தையும் பிடித்து கொஞ்சிய சௌபர்ணிகா அவர்களுக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்தாள்.
“குட்மார்னிங் சௌபி…” என்றான் இஷாந்த்.
“அதான் மார்னிங் சொன்னேனே?…” என சொல்லியவள் தனக்கு தேவையானதை எடுத்து வைத்துக்கொள்ள,
“தேவையா உங்களுக்கு?…” என்றாள் சந்தனா.
‘இதென்ன புதிதா?’ என்பதை போல இஷாந்த் அதனை பெரிதாய் எடுத்துக்கொள்ளவில்லை.
சந்தனாவிற்கு தான் பொறுக்கவில்லை. மீண்டும் கண்கள் நாத்தனாரை பார்வையிட்டது.
பட்டுபுடவையில் சுருள் சுருளாய் கூந்தல் முதுகுவரை படர்ந்திருக்க அதன் ஒற்றை பக்கத்தை மட்டும் கிளிப் போட்டிருந்தவள் வனப்பு குறையாத பொலிவுடன் மின்னியதில் சந்தனா விழி விரித்து பார்த்தாள்.
அதிகாலை சௌபர்ணிகா வந்ததற்கும் இப்போது இருப்பதற்குமான வித்தியாசங்களை கூற சொன்னால் மூச்சுவிடாமல் சொல்லிவிடுவாள் சந்தனா.
“வேடிக்கை பார்க்காம சாப்பிடு…” என இஷாந்த் மனைவியின் காதை கடிக்க,
“ஹாங், ம்ம்ம் ம்ம்…” என்று உண்ண ஆரம்பித்தாலும் பார்வை சௌபர்ணிகாவிடம் தான்.
‘தான் பார்ப்பது தெரிந்தும் தன்னிடம் என்ன ஏதேன கேட்காமல் எத்தனை கெத்து? நான் இந்த வீட்டு மருமக, அண்ணின்ற அதிகாரத்தை இந்த வீட்டுல காட்டாமலே போயிருவேனோ?’ என மீண்டும் பெருமூச்சு விட்டாள்.
பிள்ளைகள் இருவரும் சௌபர்ணிகாவிடம் ஒவ்வொன்றாய் கேட்டுக்கொண்டே உண்ண ஜெயந்தன் வந்தமர்ந்தார் உணவு மேஜைக்கு.
“குட்மார்னிங் சௌபி…” என மகளை பார்த்தது மலர்ந்து அவர் சிரிக்க,
“குட்மார்னிங் ப்பா…” என்ற சௌபர்ணிகா குரல் இறங்கிவிட்டது.
அதன்பின் ஜெயந்தன் கேட்டவற்றிற்கு மட்டுமே பதில் வந்தது சௌபர்ணிகாவிடமிருந்து.
“எப்போ வந்தம்மா…” என்ற கணீர் குரலில் அனைவரும் திரும்பி பார்க்க மகாராணியின் தோரணையை மிஞ்சும் வகையிலான நிமிர்வுடன் வந்தார் சபர்மதி.
“போச்சு, உங்கம்மா…” என இஷாந்திடம் சந்தனா சொல்ல,
“நான் இல்லைன்னா சொன்னேன்? ஆவூன்னா ஏன் இப்படி நடுங்கற? உன்னை என்ன பண்ணிட போறாங்க?…” என்று பல்லை கடித்த இஷாந்த் அவருக்கு காலை வணக்கம் வைத்தான்.
“இன்னும் நீங்க கிளம்பலையா? டைம் ஆகிடுச்சே?…” என தன் பேரன்களை பார்த்துவிட்டு மகனை சபர்மதி பார்க்க,
“இஷாந்த், நீ பசங்களோட ஸ்கூலுக்கு போய்ட்டு சௌபி ஷோரூம் போகும் போது போரூர் பிராஞ்ச்ல நீ இருக்கனும்…” என்றார் அவர்.
கட்டளையாக எல்லாம் இல்லை. வெகு சாதாரணம். மகனுக்கும் அது புரிய, அதில் பொடுபொடுத்த சந்தனா எங்கே தன் மனதில் நினைப்பது வெளியே வந்துவிடுமோ என உணவை வாயிலிருந்து தொண்டைக்குள் இறங்காமல் பார்த்துக்கொண்டாள்.
“எவ்வளோ நேரம் இப்படியே உட்கார்ந்திருப்ப? சாப்பாட்டை இவ்வளோ நேரமா சாப்பிடுவாங்க?…” என கேட்ட சபர்மதி பாதி உணவை முடித்திருந்தார்.
‘இவங்க எப்போ சாப்பிட்டாங்கனு கூட தெரியலையே? கடவுளே?’ என உள்ளுக்குள் புலம்பியவள் தலையாட்டிவிட்டு உண்டு முடிக்க புரையேறியது.
“பார்த்து…” அதுவும் அதே கணீர் குரல்.
சபர்மதி மருமகளின் தலையில் தட்ட அரண்டு போனவள் தண்ணீரை குடித்து சமன் செய்துவிட்டு,
“தேங்க்ஸ்…” என எழுந்துகொண்டாள்.
இஷாந்திற்கு மனைவியின் பயத்தில் அப்படி ஒரு சிரிப்பு. அவள் சுபாவமே அதுதான் என்னும் பொழுது பாவமாகவும் இருந்தது.