“சொன்னேனா? எப்போ?…” என்ற சந்தனா கணவனின் முறைப்பில்,
“ஆமா மறந்துட்டேன். நான் தான் சொன்னேன்…” என்று எழுந்தவள் அறைக்கு செல்லவும் சபர்மதி புன்னகையுடன் பார்த்தார் மகனை.
“இல்லம்மா…” என அவன் புருவம் சுருக்கி புன்னகைக்க,
“சுட்டு போட்டாலும் அவளுக்கு பொய் சொல்லவராது. உனக்கு உன் வொய்பை கூட்டிட்டு போகனும்னா நேராவே சொல்லி கூப்பிடலாமே? ஏன் சுத்தி வளைக்கனும் இஷாந்த்? நாங்க கூடாதுன்னு சொல்றோமா என்ன?…” என்று சபர்மதி கேட்க இஷாந்திற்கு என்னவோ போலானது.
“ம்மா அண்ணாவோட ப்ளான் தெரியலை உங்களுக்கு. ஸ்கூல், பார்லர். அடுத்து நம்ம ஷாப் இப்படி இருந்தா டக்குன்னு முடிஞ்சிரும். ஆனா ரூட்டே சிக்சாக்கா இல்ல இருக்கு? சோ அண்ணியோட டைம் ஸ்பென்ட் பண்ணலாம் இல்லையா? இதையெல்லாம் கேட்பீங்களா என்ன?…” என்ற தங்கையின் கேலியில்,
“ஓகே ஓகே. நான் வேற எங்கயும் போகலை. பிள்ளைங்களை ட்ராப் பண்ணிட்டு நம்ம ஷாப்க்கு தான் போறேன். போதுமா?…” என்றான் இஷாந்த்.
“போதாதுன்னா?…” என அப்போதும் சௌபர்ணிகா கிண்டலாய் புருவம் உயர்த்தி கேட்க,
“கிளம்பிட்டேன். போகலாம்…” என்று வந்த சந்தனா,
“போய்ட்டு வரோம் த்தை…” என்றாள் மாமியாரிடம்.
“ண்ணா எங்க போறீங்கன்னு கேளு அண்ணிட்ட…” என்று சௌபர்ணிகா வேண்டுமென்றே சீண்ட,
“பார்லர். பார்லர் தான். அங்க தான் போறோம். அதானே?…” என்ற சந்தனா,
“அதானே? கரெக்ட்டா?…” என்றாள் புருவமுயர்த்தி இஷாந்திடம் ‘எப்படி?’ என்பதை போல.
“ஆமாமா…” என்று சிரித்தவன் எங்கே சந்தனா இருந்தால் இன்னும் உளறி வைப்பாளோ என்று அழைத்துக்கொண்டு சென்றுவிட்டான்.
அவர்கள் கிளம்பவும் சட்டென அவ்விடத்தில் மௌனம் ஆட்சி செய்ய ஜெயந்தன் மனைவி, மகள் இருவரையும் தவித்து பார்த்தார்.
“ஓகே நீ கிளம்பு சௌபி…” என்ற சபர்மதி எழுந்துகொள்ள,
“ஓகே ம்மா…” என்றவள்,
“பை ப்பா…” என்றாள் தகப்பனிடமும்.
ஏனோ அந்த நிகழ்வை மட்டும் இன்றளவும் மறக்க முடியவில்லை. அதுவே தந்தையிடமிருந்து எட்டி நிறுத்தியது அவளை.
பழைய எண்ணங்கள் தலைதூக்காமல் இருக்க வெளியில் வந்ததும் முகம் தெளிவாக நேராக தங்களின் பட்டு புடவைகள் நெய்யும் இடத்திற்கு வந்து சேர்ந்தாள் சௌபர்ணிகா.
கையோடு தான் கொண்டுவந்திருந்த வண்ணக்கலவை வரைபட மாதிரிகளை எல்லாம் எடுத்துக்கொண்டாள்.
உள்ளே நுழைந்ததும் அத்தனைபேரின் வணக்கத்தையும் பெற்று பதிலுக்கு தலையசைத்து தன்னறைக்குள் நுழைந்தவள் சாமியை கும்பிட்டுவிட்டு இருக்கையில் அமர்ந்தாள்.
அத்தனையையும் தன்னுடைய கணினியில் ஏற்றியவள் ஏற்கனவே வரைந்து வைத்திருந்த ஓவியங்களுடன் அந்த நிறங்களை ஒப்பிட்டு பார்த்து அதில் மூன்றை தேர்வு செய்துவிட்டு மேலாளரை அழைத்தார்.
அவருடன் தலைமை நெசவாளரும் உள்ளே நுழைய இருவரையும் அமரும்படி சொல்லிய சௌபர்ணிகா,
“நெக்ஸ்ட் ந்யூ சில்க் சேரி லாஞ்ச் பண்ண இந்த மூணு டிஸைன் செலெக்ட் பண்ணியிருக்கேன் மார்த்தாண்டம் ஸார். இதை நெய்ஞ்சு முடிச்சதும் அடுத்த டிஸைன் சொல்றேன்….” என்று சௌபர்ணிகா காண்பிக்க,
“மத்த ரெண்டும் கூட ஓகே. ஆனா இந்த ஒரு கலர் மட்டும் தான்…” என மார்த்தாண்டம் யோசித்தார்.
“பேபி பிங்க் கலர்ல டார்க் க்ரீன் பாடர். பாடர்ல மட்டும் டபுள் ஷேட்ல ஆஷ் கலர் மிக்ஸிங். கண்டிப்பா இது ரொம்ப நல்லா போகும். இதுவரை இல்லாத காம்பினேஷன். பண்ணுங்க…” என்று முடித்துவிட்டாள் அவள்.
அதற்கு மேல் சௌபர்ணிகாவிடம் பேச முடியாது. இதுவரை அவள் சொல்லும் நிறங்களின் கோர்வையில் தான் புடவைகள் நெய்திருக்கின்றனர்.
அதில் ஓன்றிரண்டு தவிர மற்ற அனைத்துமே மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு. பிரபஞ்சம் பட்டு மாளிகை புடவைகள் என்றால் அத்தனை பிரசித்திபெற்றது.
தனித்துவமான புடவைகளும், நிறங்களும், இதுவரை இல்லாத மாதிரியான டிஸைன்களும் என்று புகழ்பெற்று விளங்கும் கடை.
இப்போதும் புதுமையான வேலைபாடுகளுடன் புதுமையான நிறங்களின் கோர்வையில் பிரபஞ்சம் பட்டு புடவை தயாராக உள்ளது.
பதினோருமணி வரை அங்கே இருந்தவள் எல்லா இடங்களையும் பார்வையிட்டு அங்கு ஏற்கனவே நெய்து விற்பனைக்கு தயாராக இருந்த புடவைகளை எல்லாம் பார்த்து முடித்தவள் போரூர் கிளம்பி சென்றாள்.
பிரபஞ்சம் பட்டு மஹால். சென்னையில் மட்டுமே மொத்தம் ஐந்து கிளைகளும், மதுரை, கோவை, திருச்சி, நெல்லை என பறந்து விரிந்த சாம்ராஜ்யமாக இன்னும் வளர்ந்துகொண்டே இருக்கிறது.
இதோ அதன் போரூர் கிளையில் துளைக்கும் விழிகளுடன் உள்ளே நுழைந்தாள் சௌபர்ணிகா.
சபர்மதிக்கு அடுத்து அங்கிருப்பவர்கள் பேச யோசிக்கும் ஒரே நபர் சௌபர்ணிகா மட்டுமே.
இஷாந்த், ஜெயந்தன் அனைவரும் இலகுவாக அணுகுமுறையாக இருக்கும். சந்தனா கேட்கவே வேண்டாம். அவள் வந்துவிட்டால் அவ்வளவு கலகலப்பு அங்கே.
இந்த பத்துநாட்களும் சந்தனாவும் இஷாந்துடன் வந்திருக்க வேலையுமே புன்னகையுடனே கழிந்தது.
இன்று சௌபர்ணிகா வருகையில் அனைவரும் கூடுதல் கவனத்துடன் இருந்தனர்.
பணிப்பெண்ணை வைத்துக்கொண்டு வேறு எதுவும் சொல்லமுடியாத ஆத்திரம். அண்ணன் மீது அத்தனை கோபம் வந்தது அவளுக்கு.
‘தேவையில்லாத வேலை இது. யார் ஐடியா குடுத்தா?’ என தோன்றினாலும் அதை துளசியிடம் காண்பிக்க முடியாதே!
“இஷாந்த் ஸார் தான் இவங்களை ஹையர் பண்ணியிருக்கார். தி டாப் ஸ்டெயிலிஷ் ஆரோன் ரிஷபன்…” என்ற துளசி முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி.
“நெக்ஸ்ட் மந்த் தமிழ்நாட்டுக்கு வரார். அவர் நம்ம பிரண்ட் புது கலெக்ஷனான சில்க் சேரீஸ்ஸை பப்ளிஸிட்டி பன்றதுக்கு சேரி ட்ராப்பிங் செஷன் நடத்த கொட்டேஷன் சைன் பண்ணியிருக்காங்க…”
“நெக்ஸ்ட்…” சௌபர்ணிகா கேட்க,
“வொர்க்ஷாப் இங்கயே வச்சு தான் நடத்தறதா டிஸைட் பண்ணியிருக்காங்க. ஆன்லைன் கிளாஸ்க்கும் அரேஞ்ச் பன்றதுக்கு இன்விடேஷன் ரெடி பண்ணனும்ன்னு சொன்னாங்க. நீங்க வரவும் தான் பண்ணனும்ன்னு ஸார் சொன்னாங்க…”
“ஓகே, கோ…” என்று சொல்லியவள்,
“வெய்ட் துளசி. யார் அந்த ஆரோன் ரிஷபன்?…” என கேட்க தனது போனில் வலைதளத்தில் ஆரோன் ரிஷபனின் முகவரியை காண்பித்தாள்.
“இவர் தான். டாப் ஸ்டெயிலிஷ் மட்டுமில்லை. பிஸ்னஸ் மேன் கூட. இப்ப நடந்த ம்யூஸிக் கான்செர்ட்ல பேசப்பட்ட செலிபிரிட்டீஸ் ட்ரெஸ் எல்லாம் டிஸைன் பண்ணினது அவர் தான். ரீசன்ட்டா ஒரு பேஷன் ஷோ ஒன்னும் நடத்தியிருக்கார். பயங்கர ஹிட்…” என்று சொல்லியபடி விடாமல் ஆரோனின் புகழ் பாடினாள் துளசி.
“உன்னை யார்ன்னு மட்டும் தான் காண்பிக்க சொன்னேன். கெட் லாஸ்ட்….” என சௌபர்ணிகா இரைய அடித்துபிடித்து வெளியேறினாள் துளசி.
“இப்பவும் நம்ம கலெக்ஷனுக்கு இருக்கற டிமாண்ட்க்கு இந்த பப்ளிஸிட்டி தேவையா?…” என்று அவ்வளவு கோபம்.
பல்லை கடித்தவள் ஆரோன் ரிஷபன் பற்றி ஆராய இப்படி தன்னை கோப விழிகளால் ஒரு பெண் சுட்டெரிப்பது தெரியாமல் உலகத்திலேயே மிக மகிழ்ச்சியான ஒருவன் தான் தான் என்று அந்த டிஸ்கோ ஹாலில் நடனமாடிக்கொண்டிருந்தான் நளினமாய்.
‘யாக்கை திரி காதல் சுடர்’ என உச்சஸ்தாணியில் ஒலித்த இசைக்கு ஏதுவாக அவன் நடனம் புரிய அந்த வருடத்தின் பிரபஞ்ச அழகி அவனுடன் சேர்ந்து நடனமாடியபடி ஆரோனை இழுத்து கன்னத்தில் இதழ் பதிக்க முயல,
“கூல் ப்யூட்டி…” என முகம் மாறாமல் லாவகமாய் சிரிப்புடன் விலகி நடனத்தை தொடர்ந்தான் ஆரோன் ரிஷபன்.
“ப்ளீஸ், அக்ஸப்ட் மீ ரிஷப்…” என்றவளின் பேச்சை காதில் விழாதது போல மெல்ல நகர்ந்து வெளியே வர முறைப்புடன் மகனை பார்த்தார் ஆராதனா.
மாலத்தீவின் சுற்றுலா தளம் அது. ஆர்ப்பரிக்காத மெல்லிய அலைகடலில் கால்களை நனைத்தபடி தாயும் மகனும் நடக்க,
“ஸோ வாட் மாம்? அது அவங்களோட விருப்பம்….” என்றவன் புன்னகையில் அத்தனை இலகு தன்மை.
மனதை குழைக்கும் புன்னகையும், தெற்று பற்களும், சிரிக்கும் பொழுது குழியும் கன்னக்கதுப்புகளும் பார்ப்பவர் நெஞ்சத்தை அள்ளி சென்றுவிடும்.
“இப்படி எந்த நேரமும் சிரிக்காத ரிஷி. எவ்வளோ திருஷ்டி தெரியுமா?…” என ஆராதனா மகன் முகத்தை வழித்து நெட்டி முறிக்க அதற்கும் அட்டகாசமாய் சிரித்தான் ஆரோன் ரிஷபன்.
ஆம், அவனின் அத்தனை புகைப்படங்களிலும் அவனின் புன்னகை தான் வசீகரம் செய்தது.
சௌபர்ணிகா ஒவ்வொன்றாய் பார்த்தபடியே தான் இருந்தாள். அதில் ஒன்றில் கூட அவன் சோர்ந்து காணப்படவில்லை.
அவனின் புத்துணர்ச்சி பார்ப்பவர்களையும் சுண்டி இழுக்கும் வல்லமை கொண்டது.
அடுத்து அடுத்து என அவனின் வலைதளத்தை பார்வையிட்டபடி ‘எங்க கடைக்கு வரான். அவன் எப்படி கேரேக்ட்டர்ன்னு தெரிஞ்சுக்கனுமே’ என அதிகத்திற்கே தெரிந்துகொள்ள விளைந்தது அவள் மனது.