“நம்பிட்டேன்….” என்றான் ஒரு விரிந்த புன்னகையை கொடுத்து.
சௌபர்ணிகா அவனை முறைத்துவிட்டு திரும்பிக்கொள்ள அதற்கும் ஒரு வசீகர புன்னகை தான்.
“கொஞ்ச நேரத்துல என்னென்னவோ ஆகிடுச்சு. ப்ச், ஆனா நான் பேசறது உனக்கு புரியுது தானே?…” என்றவன் சொல்லில் மௌனம் சாதித்தாள் அவள்.
“ஓகே, நோ இஷ்யூஸ். எவ்வளோ நாள்ன்னு நானும் பார்க்கறேன். வெய்ட் பன்றேன். பட் உன்னை மாதிரி இவ்வளோ அடமென்ட்டா என்னால இருக்க முடியாது. மனசுக்குள்ள வச்சுக்கவும் போறதில்லை…” என்றவன்,
“என்னை பார்க்கனும் சௌபர்ணிகா. இங்க என் முகம் பாரு…” என்று சொல்ல மெல்ல திரும்பி பார்த்தாள்.
“இப்பவும் நம்ப முடியலை. கிட்டத்தட்ட ஸ்கூல் பையன் மாதிரி உன்னை தேடி ஓடி வந்திருக்கேன். இப்பவும் சொல்ல எதுவும் இல்லையா?…” என்றான் விழிகளில் தவிப்பை நிறைத்து.
மூச்சுக்கள் பெரிதாய் ஏறி இறங்க தொண்டைக்குழியில் என்னவோ அடைத்தது சௌபர்ணிகாவிற்கு.
எதுவும் பேசாமல் அசைவற்று அவனை பார்த்திருக்க மெல்லிய சிரிப்புடன் தலையசைத்தான் ஆரோன் ரிஷபன்.
“சரி இப்ப சொல்லவேண்டாம். ரொம்ப பாஸ்ட்டா போறோமோ? பரவாயில்லை. இந்த பீல் எனக்கு பிடிச்சிருக்கு….” என்றான்.
அவள் எதையும் சொல்லாமல் இருப்பதை விட தான் தன் விருப்பத்தை சொல்லிவிடுவோமோ என்ற எதிர்பார்ப்பும், தவிப்புமாக அவள் இருக்க உள்ளூர ரசித்தான் அதனை.
‘பர்ஸ்ட் உனக்கு தானே பிடிச்சது. நீ சொல்லு. அடுத்து நான் என்னை வெளிப்படுத்தறேன்’ என நினைத்தபடி அவள் சிலையாய் அமர்ந்திருக்கும் பொழுதே எட்டி அவள் விரல்களுக்கு நடுவில் இருந்த திறப்பானை தொட்டு விலகினான்.
மூச்சடைத்து கண்களை இறுக்கமாய் மூடிக்கொண்டவள் உடல் வெளிப்படையாக அதிர்ந்து நடுங்கி விலக,
“ஹேய் ஈஸி. லாக் ரிமூவ் பண்ணினேன்…” என்று சொல்லியவன்,
“கிளம்பறேன். சீக்கிரம் பார்க்கலாம்…” என்று சொல்லி கண் சிமிட்டி புன்னகைத்துவிட்டு இறங்கிக்கொண்டான்.
மழையின் வேகம் குறையவில்லை என்றாலும் அவன் இறங்கி தூரம் செல்ல செல்ல அவன் கண்ணிலிருந்து மறைந்துகொண்டே இருந்தான்.
கார் கண்ணாடியில் படர்ந்த பனியால் பிம்பம் மறைய தன் கையை கொண்டு துடைத்துவிட்டு அவனை பார்த்தாள்.
கண்ணில் தெரியவில்லை. ஆனால் மனதில் நிறைந்திருந்தான். தெரிந்தே தான் தன்னை பார்க்க வந்திருக்கிறான் என புரிந்து போனது.
கண்களை மூடியவள் ஸ்ட்ரியரிங்கில் தலை சாய சிறிது நேரத்தில் ஜன்னல் கதவு தட்டப்பட்டது.
வீட்டினராக தான் இருக்கும் என்று நினைத்தவள் கண்ணாடியை இறக்கியபடி திரும்பி பார்க்க விழியில் நிறைந்த நீரில் எதிரில் நின்ற பிம்பம் கலங்கலாக தெரிந்தது.
“ஹேவ் எ நைஸ் டே பிபி…” என்றான் மஞ்சள் நிற ரோஜா பூங்கொத்தை அவளிடம் நீட்டியபடி.
“ரிஷபன்…” என்றவள் விழிகள் மகிழ்ச்சியை காண்பிக்க, பார்த்தவன் மனதும் சந்தோஷத்தில் பொங்க பூங்கொத்தை அவள் முகத்தின் முன் சுழற்றினான்.
மழை நீரில் முக்குளித்த மலரின் வாசனையுடன் உதிர்ந்த சில ரோஜா இதழ்களும் சேர்ந்து அவள் முகத்தில் பட்டு தெறித்தது.
அதில் சிலிர்த்து பார்த்தவளை நோக்கி குனிந்த ஆரோன் ரிஷபன் அவள் கையில் ரோஜாக்களை திணித்தான்.
“முடிஞ்சளவுக்கு மனசு விட்டு சிரிக்கலாம் சௌபர்ணிகா. இறுக்கமா இருந்தா உன் ஹெல்த்தை பாதிக்கும் தான். இப்ப என்னையும் ரொம்ப பாதிக்குது…” என்று பெய்யும் தூறலில் நின்றபடி சொல்லியவன்,
“பார்க்கலாம் சீக்கிரமே…” என்றுவிட்டு அவனுக்கே உரிய துள்ளல் நடையுடன் செல்ல, திறந்த ஜன்னலின் வழியே அவன் செல்வதையே பார்த்தபடி இருக்கையில் பின்னால் சாய்ந்தாள்.
அதற்குள் இஷாந்த் வந்துவிட்டான் குடும்பத்துடன். சௌபர்ணிகா காரில் சபர்மதி ஏறி அமர்ந்ததும் தான் அதனை அவள் உணரவே செய்தாள்.
“சௌபி கிளம்பலாம்…” என்று சொல்ல,
“ஹாங் ம்மா…” என்று திடுக்கிட்டு கனவிலிருந்து விழிப்பதை தெளிந்து அத்தனையும் கனவோ என பயந்து பதட்டமாகி மடியில் சில்லிட்ட உணர்வில் குனிந்து பார்க்க அங்கே அவன் கொடுத்த பூங்கொத்து.
“ஹாங், இதோம்மா. போலாம்…” என காரை எடுக்க நினைத்தவள் கைகள் அதில் நிலைகொள்ளாமல் துழாவியது.
“என்ன தேடற சௌபி?…” என சபர்மதி கேட்க,
“இல்ல இங்க தான் கீ…” என்று அவள் தடவ,
“கீ அதுலயே தான் இருக்கு. நீ எங்க தேடற?…” என்றார் அழுத்தமான குரலில்.
“ஹாங், ஆமா இருக்கு…” என தன் தலையில் தட்டிக்கொண்டவள்,
“அண்ணா, அண்ணா எங்க?…” என்றாள் அவரிடம்.
“சௌபி நீ ஓகே தானே?…” என சந்தேகமே வந்துவிட்டது அவருக்கு.
“ம்மா…” என பாவம் போல அவள் பார்க்க,
“இஷாந்த் அவன் கார்ல வருவான். உங்கப்பாவும் தான். வரும்போது அப்படித்தானே வந்தோம்…” என்றவரின் பேச்சில்,
“ஹ்ம்ம், ஆமா…” என சொல்லி காரை கிளப்பினாள்.
அவளின் தடுமாற்றம் வெளிப்படையாகவே தெரிந்தது. அதிலும் சபர்மதி காருக்குள் அமர்ந்ததும் ரோஜாவை பற்றி ஏதாவது கேட்பார் என நினைக்க அதிலும் ஏமாற்றமே.
“பர்ப்யூம் மாத்திட்டியா சௌபி?…” என கேட்டு அடுத்ததாய் அவளை அதிர வைக்க திடுக்கிட்டு பார்த்தாள் சௌபர்ணிகா.
ஆம், ஆரோன் ரிஷபனின் வாசனை திரவியம் மிக மிக மெலிதாய் நாசியில் நுழைந்து நுரையீரலை நிரப்பியது.
உடலெல்லாம் சிலிர்த்து பூக்கள் மொட்டுக்களாய் துளிர்க்க அந்த உணர்வை அடக்க முயன்று கீழுதட்டை அழுத்தமாய் கடித்துக்கொண்டாள் அவள்.
வேறு எதுவும் சபர்மதி பேசாமல் இருந்தால் போதும் என்றானது. அதைவிட குற்றவுணர்வு வேறு வாட்ட ஆரம்பிக்க மௌனமாய் காரை செலுத்த அங்கே தொலைவில் ஆரோன் ரிஷபன்.
அவர்கள் கடந்து செல்லும் பாதையில் தான் காரை நிறுத்தி அதில் சாய்ந்தபடி போனில் பேசிக்கொண்டிருந்தான்.
லேசாய் சாரல் மட்டுமே காற்றோடு கலந்து வீச அந்த குளிரை அனுபவித்தபடி பேசியவன் முகத்தில் அவ்வளவு புன்னகை.
சௌபர்ணிகாவின் கைகளில் தன்னைப்போல் கார் வேகம் குறைந்ததும் சபர்மதியே வெளியே தலையை நீட்டி தலையசைத்து புன்னகைத்து விடைபெற்றார் அவனிடம்.
பதிலுக்கு அவரை போலவே கையசைத்து விடைகொடுத்தவன் இதழ்கள் புன்னகையை அடக்கியப்படி உள்ளே அமர்ந்திருந்த சௌபர்ணிகாவை பார்த்தது.
அவளோடு இன்னும் அவள் மடியில் உறவாடிக்கொண்டிருந்த அந்த பூங்கொத்தையும் சேர்த்தே பார்த்தது.
“ரிஷி கேட்குதா?…” என்ற ஆராதனாவிடம்,
“ஹ்ம்ம், நல்லாவே கேட்குது. உங்க லவ் டைம்ல நான் ஏதாவது டிஸ்டர்ப் பண்ணேனா? ஒரு நிமிஷம் சைலண்ட்டா இருந்தா அனுபவிக்கட்டும்னு விடறீங்களா? நீங்க எல்லாம் என்னன்னு லவ் பண்ணி, மேரேஜ் பண்ணி…” என சலித்துக்கொள்ள,
“ஏன் பேசமாட்ட? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கால் பண்ணி வாயே திறக்காம பிடிவாதமா இருக்கான்னு சொல்லி புலம்பினது யாராம்? இதை கேளு ஆரா…” என்றார் ஸ்டீபன் மனைவியிடம்.
“அதுக்கு பேர் புலம்பறது இல்லை டாட். ஷேரிங்…” என்று மகன் திருத்த,
“இப்படி ஷேரிங் நான் எங்கயும் பார்த்ததில்லைப்பா…” என்று அவர் வம்பிழுக்க தந்தையும் மகனும் ஆரம்பித்துவிட்டனர்.
அவர்களிடம் பேசிக்கொண்டே தானுமே அங்கிருந்து கிளம்பிவிட்டான் ஆரோன் ரிஷபன்.
“நீயாவது சொல்லிடேன் ரிஷி?…” என ஆராதனா கேட்க,
“இல்லைம்மா, வெய்ட் பண்ணுவோம். என்னவோ ஒரு தயக்கம். மத்ததுக்கு மட்டும் சண்டைக்கு நிக்க தெரியுது? அப்படியே பார்த்தே எரிச்சிடனும். இதையும் சொல்லட்டும். ஓபனா சொல்லலையே தவிர நான் என்னை உணர வச்சுட்டேன். மேடம்க்கும் அது புரிஞ்சிருச்சு. பார்க்கலாம்…” என்றான்.
“நீ மும்பை எப்போ கிளம்பற?…” என ஸ்டீபன் கேட்க,
“நாளை மறுநாள் டாட்…” என்றவனிடம் பேச்சுக்கள் அதனை ஒட்டியே சென்றது.
தன்னுடைய இருப்பிடம் வந்து சேர்ந்தவன் அன்றைக்கு எடுத்த புகைப்படங்களை எல்லாம் தனது வீட்டின் தொலைக்காட்சியில் இணைத்து பார்க்க அந்த பிரமாண்டத்தில் அழகோவியமாய் சௌபர்ணிகா.
“எவ்வளோ நாள் எதையும் சொல்லாம விலகி போவீங்க பிபி?…” என்று பார்த்து சிரித்தவன் அந்த புகைப்படங்களை எல்லாம் அவளுக்கும் அனுப்பி வைக்க,
“யூ…” என்று அவ்வளவு கோபமுகம் காண்பித்து அழைக்கவே செய்துவிட்டாள்.
“மழையில நனைஞ்சது டயர்டா இருக்கு. ஒரு டேப்லெட் போட்டு தூங்கிட்டு அப்பறம் பேசவா?…” என சாவகாசமாய் சொல்லி,
“போட்டோஸ் தான் பெர்பெக்ட்டா வந்திருக்கு. பிபி பார்க்க கொஞ்சம் சுமார் தான். வேற கலர் சேரி ட்ரை பன்றது பெட்டர். என்னோட சஜஷன்…” வைத்துவிட்டான்.
“கொழுப்பை பாரு…” என போனை பார்த்து திட்டிக்கொண்டிருந்தவள் கடைக்கு கிளம்பி சென்றாலும் அன்று அவன் ஞாபகம் தான்.
‘உடல்நிலை எதுவும் சரியில்லையோ?’ என்ற சிந்தனையில் வலம் வந்தவள் மறந்தும் அவனுக்கு தான் அழைக்கவேண்டும் என்று நினைக்கவில்லை.
அதை அவசரமாய் செய்ய விழைந்த மனதை அடக்கி அதட்டி வைத்துவிட்டாள் ஒரு ஓரமாய்.
எப்படியும் அவனே அழைப்பான் என நினைத்திருக்க அன்று முழுவதும் அவனிடமிருந்து அழைப்புக்களோ, குறுஞ்செய்தியோ வரவில்லை.
ஒருவேளை மும்பை கிளம்பிவிட்டானோ என்று நிலைகொள்ளாமல் தவித்தவள் தவிப்பு மறுநாள் வரை நீடித்தது.