“ஹ்ம்ம், என்னவாம் மாப்பிள்ளையை விசாரிச்சாங்களா?…” என்னும் பொழுதே ஆரோனின் உதடுகள் சிரிப்பில் வளைந்தது.
“யார் மாப்பிள்ளை?…”
“நான் தான்…” என்றான் உடனே.
ஆராதனாவுக்கு மகனின் பேச்சில் சந்தோஷம் ஒருபுறம் இருந்தாலும் அவன் தீவிரத்தில் பயந்து போயிருந்தார்.
ஒன்றை முடிவு செய்யும் வரை தான் அவன் பூவை போல. இதுதான் என்று துவங்கிவிட்டால் அவனின் எண்ணம் ஒருபோதும் மாறாது.
சௌபர்ணிகா மனதை வெளிப்படுத்தாமல் ஏன் இன்னும் அலைகழிக்க வேண்டும் என்று அவர் யோசித்திருந்தார்.
வேறு பெரிதாய் காரணம் இருந்தால்? நிச்சயம் தவறாக புரிந்துகொண்டு பெண்ணை அணுகும் ரகம் அல்லவே மகன்.
சபர்மதியின் பேச்சும் கூட அவரை திருப்தி படுத்தவில்லை. இத்தனைக்கும் வெளிப்படையான பேச்சுக்கள் தான்.
ஆனாலும் அவர் எதையோ பேச தயங்கி நிற்க ஆராதனாவிற்கு குழப்பம் கூடியது ஏன் என்று.
“என்னம்மா தனியா உங்களுக்குள்ள பேசிக்கறீங்க போல?…” என்ற ஆரோன்,
“இங்கயும் ப்ரெண்ட்ஸ் சர்க்கிள்ல விசாரிச்சிருக்காங்க…” என இலகுவாய் கூற,
“யார்?…” என்றார் ஆராதனா.
“வேற யார்? எல்லாம் என் மச்சான் தான். அவங்களுக்கு தெரிஞ்சிருச்சு போல. நிச்சயமா பொண்ணு சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை. சரியான அடம். என்னையே சுத்தல்ல விடறா…” என்றான் சிரிப்போடு.
“அவங்க விசாரிக்கிறதை பார்த்தா அவங்களுக்கும் ஓகேன்ற மாதிரி தான் தெரியுது ரிஷி…”
“நோ வே. அது சௌபர்ணிகாவை கட்டாயப்படுத்தற மாதிரி இருக்கும்…” என சொல்லும் பொழுதே கடையில் வைத்து அவள் சொல்லிய அந்த வார்த்தைகள் காதில் ஒலித்தது.
‘என்னை கட்டாயப்படுத்தறீங்க ரிஷபன்’ என்று தவிப்புடன் அவள் சொல்லியதை கண்மூடி நினைத்தவன்,
“இப்ப என்ன அவசரம்? கொஞ்ச நாள் போகட்டும்…” என்றான் உள்ளார்ந்து.
“ரிஷி, அம்மா கேட்கறேனேன்னு நினைக்காத. நிஜமாவே அந்த பொண்ணுக்கு…” என்றவர் தன் பேச்சின் அபத்தம் உணர்ந்து அமைதியானார்.
“அவளுக்கு என்னை ரொம்ப பிடிச்சிருக்கும்மா. அதனால எனக்கும். என்னை பிடிச்ச பொண்ணை, என்னை இவ்வளோ நேசிக்கிற பொண்ணை என்னால விடமுடியாது. எனக்குள்ள அவ வந்தாச்சு. இனி என் லைப் அவ தான். இதுல எந்த மாற்றமும் இல்லை…” என்றான் ஆத்மார்த்தமாக.
“நீங்க கேட்டது தப்பெல்லாம் இல்லை. கேட்கலாம். பிடிச்சிருக்கு சொல்லமாட்டேன்னு அந்த பொண்ணு மறுக்கறான்னா இந்த கேள்வி எல்லாம் வரும் தான். ஆனா பிடிக்காத பொண்ணை நான் பின் தொடரமாட்டேன் ம்மா. உங்களுக்கு புரியுதா?…” என்றவன் மனக்கண்ணில் அவளின் ஒவ்வொரு விதமான பரிமாணங்கள்.
கோபமாய் அவனிடம் பேசியதாகட்டும், கொந்தளித்து பார்த்ததாகட்டும், நீர் பூத்த விழிகளுடன் சந்தித்ததாகட்டும், எதையும் சொல்லமுடியாமல் தவித்ததாகட்டும் ஒவ்வொன்றுமே அவனின் மனதில் நெருப்பாய் எரிந்துகொண்டிருந்தது.
இப்படி அவள் வசமாகிவிட்டவன் நினைவுகள் எல்லாம் அவள் நிறைந்திருக்க தாயின் கேள்வியில் சிரித்துக்கொண்டான்.