“ஹ்ம்ம் ஓகே…” என்றவருக்கு மகனின் திருமணம் பற்றிய கனவுகள் கண்களில் விரிய துவங்கியது.
“நீங்க கனவு கண்டுட்டே இருங்க. இங்க அநோன்ஸ் பண்ணிட்டாங்க ம்மா. நான் மும்பை ரீச்சாகிட்டு கால் பன்றேன்…” என்று கிண்டலாய் சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தவன் எழுந்து சென்றான்.
தாயின் எண்ணமும் தவறில்லை. அதேநேரம் அவனின் உணர்வுகளும் பொய்க்கவில்லையே.
முதன்முதலில் சௌபர்ணிகாவை பார்த்த பொழுதில் இதை எல்லாம் நினைத்ததில்லை.
அவளிடம் காதலில் தொலைவோம் என்றும் நினைத்ததில்லை. காதல், தாய் தந்தையரின் வாழ்க்கையின் அழகில் காதலையும் கூட அவன் ஆராதித்தான்.
“எப்போ இப்படி ஒரு லைப் பாட்னர் எனக்கு வருமோ?…” என ஸ்டீபனிடம் வம்பிழுத்ததும் உண்டு.
“வர்ற ப்ரப்போஸல் எல்லாத்தையும் கொஞ்சமும் யோசிக்காம ரிஜெக்ட் பண்ணின தானே? அவ்வளோ சீக்கிரம் நீ லவ் மேரேஜ் பண்ணிக்க போறதில்லை. கடைசில நாங்க தான் போனா போகட்டும்ன்னு பொண்ணு பார்க்க போறோம்…” என்று சண்டையிட்டு உருண்ட நாட்களை நினைத்தவன் சிரித்துக்கொண்டான்.
விமானத்தில் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தவன் சிந்தனை இந்தநேரம் அவள் என்ன செய்துகொண்டிருப்பாள் என்பதில் தான் வந்து நின்றது.
கைபேசியை அணைக்க வேண்டும். அதற்குமுன் சௌபர்ணிகா வலைதள கணக்கில் நுழைய அதில் தெரிந்த பச்சை நிற குறியில் அவனின் விழிகள் ஒளிர்ந்தது.
எதையோ எழுத முனைந்து அழிக்கிறாள். பார்த்ததும் கண்டுகொண்டவன் இதழ்கள் புன்னகையில் விரிய,
“கமான் பிபி…” என்றான் சத்தமின்றி முணுமுணுப்புடன்.
சிலநொடிகள் இதில் கடக்க அவள் கடைசி வரை எதையும் அனுப்ப போவதில்லை என உணர்ந்தவன்,
“பேட் நைட் பிபி…” என்று கிசுகிசுப்பான குரலில் குரல்வழி செய்தியை அனுப்பி வைக்க அது உடனே பார்க்கப்பட்டு கேட்கப்பட்டது.
ஆனால் அவளுக்கு தான் எதுவும் புரியவில்லை. அவன் அனுப்பியிருந்த விதம் அப்படி.
வேறு எதுவும் பாஷையோ என அவள் மீண்டும் மீண்டும் கேட்க எதுவும் விளங்கவில்லை.
“டைப் பன்ற. ஆனா மெசேஜ் அனுப்ப மாட்டாயோ? விடிய விடிய முழிச்சிரு. தப்பே இல்லை…” என்றவன் கைபேசியை அணைத்துவிட்டு இருக்கையில் நன்றாக சாய்ந்தான்.
“நான் கொஞ்சம் வில்லன்ம்மா. ரொம்ப கஷ்டப்படுத்தற. பதிலுக்கு குடுக்காம எப்படி? ஒரு செண்டாஃப் இல்லை. சேஃப் ஜர்னி மெசேஜ் இல்லை. என்னை காய விடற இல்ல. அனுபவி…” என அடக்கப்பட்ட சிரிப்புடன் வானத்தில் மின்னும் நட்சத்திரங்களை பார்த்து சொல்லி புன்னகைத்து கண் சிமிட்டினான் ஆரோன் ரிஷபன்.
அவன் நினைத்ததை போலவே தான். சௌபர்ணிகா உறங்கவில்லை. இந்த நேரம் விமானம் ஏறி இருப்பானா என யோசித்தபடி இருந்தாள்.
அதிலும் தனக்கு எதுவும் செய்தி அனுப்புவானா என பார்க்க இல்லை. அதுவே மிகப்பெரும் ஏமாற்றம் தந்தது.
‘நீ மட்டும் அவனுக்கு அனுப்பற மாதிரி தான்? அவனும் எதிர்பார்ப்பான் தானே?’ என ஒரு மனது அவனுக்கு பரிந்துகொண்டு வர இன்னொரு மனமோ மௌனம் சாதித்தது.
அதற்குமே பதில் சொல்ல முடியாமல் கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தாள் சௌபர்ணிகா.
ஆரோன் எந்த விமானத்தில் செல்கிறானோ என மீண்டும் நள்ளிரவில் கிளம்பும் விமானங்கள் குறித்து பட்டியலை பார்க்க எதுவும் மூளைக்குள் பிடிபடவில்லை.
ஆனால் காத்திருந்தாள். அவன் ஏதாவது பேசுவான் என அமர்ந்தே இருந்தாள் கையில் கைபேசியுடன்.
‘இத்தனை செய்யும் நீ பேசேன்.’ என அவனுக்கான மனம் மீண்டும் குதித்துக்கொண்டு அவளிடம் மல்லுக்கட்ட, முட்டி மோதி ஒருவழியாய் ஒரே ஒரு வார்த்தை.
“ரிஷபன்…” என்று மட்டும் அனுப்பியிருந்தவள் அது இன்னும் அவனிடம் சென்று சேராதிருக்க அவன் விமானத்தில் என்று புரிந்துகொண்டாள்.
‘அவனே பார்த்துவிட்டு என்னவென கேட்கட்டும். அதன் பின் பேசிக்கொள்ளலாம்’ என அவன் அனுப்பிய அந்த குரலை கேட்க தலை சுற்றியது.
“வேற எதோ லாங்க்வேஜ் தான் போல? ஸ்யப்பா, படுத்தறானே? எல்லாம் தெரிஞ்சுகிட்டே…” என சொல்லிக்கொண்டவன் திரையில் இருந்த அவனின் புகைப்படத்தில் ஒரு அடி வைத்தாள்.
நேரம் செல்ல செல்ல அவன் அழைக்கவும் இல்லை. செய்தியை பார்த்ததாகவும் தெரியவில்லை.
ஆனால் இரு கோடுகள் அவனிடம் சென்றுவிட்டேன் என்று காண்பித்து கொடுத்தது.
அடுத்த இரண்டு நாட்களும் இதே தான் தொடர எதிர்பார்ப்புகள் பொசுங்கி போனதும் ‘போடா’ என்றது மனது.
“இப்படியே இந்த பேச்சு நின்னுட்டா போதும். ரிஷபனுக்கு என் ஞாபகம் வரவே வேண்டாம்…” என்று ஒருபக்கம் சொல்லிக்கொண்டாலும் ‘அவன் தன்னை அழைப்பானா?’ என எதிர்பார்க்காமல் இல்லை.
அழைப்பானா என்பது போய், குறுஞ்செய்தி அனுப்புவானா என்பதில் வந்து, தான் அனுப்பியதையாவது பார்க்கமாட்டானா என்று தத்தளித்து போனாள்.
விளிம்பு நிலையில் மீண்டும் கோபமும், கண்ணீரும் பெருக அவனின் எண்ணை முடக்கி போட்டு பார்த்தாகிற்று.
மேலும் இரண்டு நாட்கள் கடந்து ஒருவேளை அவன் அழைத்திருந்தால்? சுத்தமாக அவள் பித்துநிலைக்கு சென்றிருந்தாள்.
அவன் வேண்டும். ஆனால் வேண்டவே வேண்டாம். பேசினால் மட்டும் போதும். ஆனால் வாழ்க்கைக்கு?
அதற்கு மேல் யோசிக்கவில்லை. முடக்கப்பட எண்ணை விடுவிக்க அடுத்த அரைமணி நேரத்தில் அழைத்திருந்தான் ஆரோன் ரிஷபன்.
அவன் அழைக்கும் வரை தான் அவளின் எண்ண அலை அவளை இறுக்கி பிடித்தது.
‘ரிஷபன்’ என்ற பெயரை பார்த்ததும் தன்னை போல கைகள் பச்சை நிற குறியீட்டை அங்கீகரிக்க,
“கோபமா? எனக்கேன்?…” என்றாள் வழக்கம் போல உணர்வற்ற குரலில்.
அவள் நினைத்துக்கொண்டது அப்படி. எதையும் காட்டிக்கொள்ளாமல், எதிர்பார்ப்பை வெளிப்படுத்தாமல் பேசுவதாக.
அந்த முயற்சியே அவளை அப்பட்டமாய் காட்டிக்கொடுக்க இதழ்களை கடித்தபடி பொங்கிய சிரிப்பை அடக்கி வைத்தான் ஆரோன் ரிஷபன்.
“மெசேஜ்க்கு பதில் சொல்லலையே நான். அதான் கோபத்துல என்னை ப்ளாக் பண்ணிட்டன்னு நினைச்சேன்….” என்றதும் நாக்கை கடித்துக்கொண்டாள்.
ஆனாலும் இவன் இப்படி கவனிக்க கூடாது என மனதிற்குள் அவனை தாளித்தவள் மௌனமாக,
“இங்க வந்ததுல இருந்து ரொம்ப பிஸிம்மா. அதான் உன்னை ரீச் பண்ண முடியலை. பேசினா ரிலாக்ஸா பேசனுமே. ஏற்கனவே மேடம் செம்ம ஹாட்…” என ரசித்து ரகசிய சிரிப்புடன் சொல்ல,
“இப்ப எதுக்கு கால் பண்ணுனீங்க?…” என்று முருங்கைமரம் ஏறினாள்.
“நீ எதுக்கு ரிஷபன் அனுப்பின? அதை கேட்கலாமேன்னு தான்…”
“அப்போ அனுப்பினது. இப்போ ஞாபகமில்லை…” என்று பிடிகொடுக்காமல் பேச,
“எனக்கு ஞாபகம் இருக்கே. நான் என்ன பேசி அனுப்பினேன்னு தானே தெரியனும்?…” என்றதும்,
“அர்த்தராத்திரில பேய் பிடிச்சிருக்கு. அதான் புரியாத பாஷை பேசி அனுப்பியிருக்கீங்க…” என்றாள் நக்கலாய்.
“எக்ஸாட்லி, பேயே தான். அது பேர் சௌபர்ணிகா. உச்சந்தலைக்குள்ள நின்னு ஆட்டிப்படைக்கிறா. எந்த மந்திரத்தை சொல்லி கட்டுப்படுத்தன்னு தெரியலை. அதான் தவிச்சு போயிருக்கேன்…” என்று குரலில் மயக்கமும், கிறக்கமும் சமபங்கில் வழிந்தோட அவன் கூறவும் பேச்சற்று போனாள் பெண்.