“பேசும்மா. என்ன அமைதியாகிட்ட?…” என்று அடக்கமாட்டாமல் சிரித்தவன்,
“ஓகே, பேக் டூ வொர்க். திரும்ப கூப்பிடறேன். முடிஞ்சளவு அப்பப்ப மெசேஜ் பன்றேன். பை…” என்று சொல்லி அழைப்பை துண்டித்தான் அவன்.
“கூப்பிட்டா எடுக்கவே கூடாது…” என சொல்லிக்கொண்டவள் முடிவு அங்கே செல்லாததாகி போனது.
ஒவ்வொரு முறையும் அவனின் பேச்சுக்கள் அவளிடம் தங்கு தடையின்றி சென்று சேர்ந்தது.
ஒவ்வொரு நாட்களும் விடியும் பொழுதும் அவன் செய்தி இருக்கும். முடியும் பொழுதும் அந்தநாளை அவன் புன்னகை நிறைக்கும்.
அவன் பேசுவதோடு சேர்த்து அவன் சொல்லிய அந்த நிகழ்ச்சியையும் அவள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள்.
நிஜமாகவே அன்று அவன் எடுத்த புடவைகள் அந்த பிரபலங்களுக்கு தானா? நம்பவும் முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை.
இன்னும் இரு நாட்களில் தெரிந்துவிடும். ஆனாலும் வாய் நிற்கவில்லை. கேட்டேவிட்டாள்.
“பெரிய ஸ்டெயிலிஷ். ஆனா ஒரு டேஸ்ட் இல்லையே?…” என்று அவன் அழைத்த நேரம் சௌபர்ணிகா ஆரம்பிக்க,
“இவ்வளோ தூரத்துல இருந்தா என் டேஸ்ட் எப்படி தெரியும்? ஷோ முடிச்சிட்டு வரேன். டேஸ்ட் பண்ணலாமாம்…” என்று கள்ளப்புன்னகை புரிய,
“ஐ வில் பீட் யூ…” என்றாள் கோபமாய்.
“இதுக்கும் பதில் சொல்லுவேன். அப்பறம் லபோதிபோன்னு குதிக்க கூடாது…” என்றதும் பல்லை கடித்தவள்,
“நான் சொன்னது அந்த டேஸ்ட் இல்லை மேன். அந்த செலிபிரிட்டீஸ்க்கு நீங்க எடுத்த புடவை சுத்தமா மேட்ச் ஆகாது. அதை சொன்னேன்…” என்று விளக்கமாக சொல்ல,
“அதை ப்ரோக்ராம் அன்னைக்கு பார்த்துக்கோ. செட்டாகுதா இல்லையான்னு…” என விடாக்கண்டன் வாயை திறக்கவில்லை.
‘இவன்கிட்ட போய் கேட்டோமே?’ என நொந்துகொண்டது தான் மிச்சம். அந்த நிகழ்ச்சி நேரடியாகவும் ஒளிபரப்பப்படவில்லை.
அந்த பிரபலங்களின் வலைதளத்தை பார்வையிட்டு பார்க்க அதிலும் அன்று அவர்கள் அணிந்த உடையின் புகைப்படம் எதுவும் பதிவேற்றமாகவும் இல்லை.
வேறு யாராவது அதன் தொகுப்பையோ, புகைப்படமோ பகிர்ந்திருக்கின்றனரா என வலைவீசி தேடி தேடி சலித்தது தான் மிச்சம்.
இன்னும் ஒரு நாள். சென்னை வருகிறானா எதுவும் தெரியவில்லை. அன்றாட பணியை போலவே அன்றாடம் அவனுடனான பேச்சுக்கள் இயல்பாய் நடந்தேற வருகிறேன் என்றவன் வரவில்லை.
அழைக்கவும் இல்லை. ‘இவனோட இதே இம்சையா போச்சு’ என்று புலம்ப விட்டான்.
அவன் சொல்லிய நாள் சென்னை வரவில்லை. மும்பையில் தான் இருக்கிறானா என்றும் தெரியவில்லை.
அது எதுவும் தெரியாமல் மனது சஞ்சலம் கொண்டது. வேறு யாரிடமும் கேட்கவும் முடியாதே?
‘பேசி பேசியே என்னை இவ்வளோ தேட வச்சுட்டு எங்கடா போய் தொலைஞ்ச?’ என்றவள் பொறுக்கமாட்டாமல் தானே அவனுக்கு அழைப்பும் விடுக்க எடுக்கப்படவில்லை.
‘அவ்வளோ ஈஸியா போச்சு. இனி பேசினாலும் பேசமாட்டேன். போடா, போடா’ என நினைத்தபடி அவன் நினைவை தவிர்த்து நாட்களை கடத்த நினைத்தவள் உறுதி ஒரு நாளில் தவிடுபொடியானது.
அன்றிரவு கடையிலிருந்து வந்தவள் வழக்கம் போல வீட்டினருடன் சிறிது நேரம் செலவழித்து விட்டு அறைக்கு வந்து இரவு உடைக்கு மாறியவள் அன்றைய வேலை பழுவில் படுத்ததும் உறங்கியும் போனாள்.
நடுநிசியில் கைபேசியில் அழைப்பு. அவனன்றி யாராக இருக்க முடியும்? ஒரு சத்தத்தில் விழித்துவிட்டாள்.
மீண்டும் மீண்டும் அவன் அழைத்துக்கொண்டே இருக்க எடுக்க முடியாதெனும் பிடிவாதம்.
“ஒய் அடம், கால் அட்டன் பன்றியா இல்ல உங்கம்மாவுக்கு கூப்பிட்டு பேசவா?…” என்று புன்னகை தாங்கிய பொம்மையுடன் செய்தி வந்து மேலே நிற்க பல்லை கடித்தாள்.
“எடுக்க முடியாது. என்னவும் செஞ்சுக்கோ…” என பதிலுக்கு அனுப்பியவள் கோபத்தில் ஆர்ப்பரித்து சிரித்தான் ஆரோன் ரிஷபன்.
“நான் சொன்னா செஞ்சிருவேன். அப்பறம் என்ன நடக்கும்னு யோசிச்சுக்கோ. பின் வாங்கற பழக்கம் எனக்கில்லை…” என கண்ணடிக்கும் ஸ்மைலி சேர்ந்து வந்தது.
அதனை அவள் பார்த்த அடுத்த நொடி ஆரோன் வீடியோ காலில் வர பதறி போனாள் சௌபர்ணிகா.
அதனை துண்டித்து சாதாரணமாக அழைக்க, அதை அவன் துண்டித்து வீடியோவில் அழைப்புடன் வந்தான்.
“ப்ளாக் பண்ணிருவேன் நான். என்ன வேணும் உங்களுக்கு?…” என எரிச்சல் மிகுதியில் அவள் பேசி அனுப்ப,
“நார்மல் கால் பேச முடியாது. பிரபஞ்ச அழகியை பார்க்கனும். வீடியோ கால் வா…” என்று சொல்லியவன் மீண்டும் அழைக்க,
“வந்து தொலையறேன். ஒரு அஞ்சு நிமிஷம்…” என்று சொல்லியவள் இரவு உடையை மாற்றிவிட்டு சுடிதாரில் அமர்ந்து அழைப்பை ஏற்க திரையில் அவளை பார்த்ததும் அவன் குறுகுறுவென ஆராய்ந்தான்.
“கண்ணை நோண்டிடுவேன். எதுக்கு கூப்பிட்டீங்க?…” என்றாள் கோபம் குறையாமல்.
“ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்தியா?…” என குறும்பாய் புன்னகைக்க அவள் திகைத்து விழித்தாள் இப்படி கண்டுகொண்டானே என.
“அப்போ அதுதான் நிஜம்…” என்றவன் கண் சிமிட்ட முறைக்க முயன்றவள் கண்கள் அவனின் அந்த சிரிப்பில் லேசாய் பனித்தது.
“சௌபர்ணிகா என்னை தேடினியா நீ?…” என்றான் கிண்டல் பேச்சை கைவிட்டு மென்மையாக.
“ம்ஹூம்…”
“நம்பிட்டேன்…”
“சந்தோஷம்…” என்றவள் அழைப்பை ஏற்காததற்கும் பேசாததற்கும் காரணம் சொல்வன என பார்க்க எதுவும் சொல்லவில்லை அவன்.
பார்த்தபடியே தான் இருந்தான். எத்தனை நேரம் அப்படியே அமர்ந்திருக்க? முடியாமல் அவளே கேட்டுவிட்டாள்.
“அன்னைக்கே கிளம்பனும்ன்னு சொன்னீங்க. இன்னும் வேலை முடியலையா?…” என்ற கேள்வியில் ஆரோன் ரிஷபன் முகம் விகசிக்க,
“பார்த்தா எப்படி தெரியுது?…” என்றான் இன்னும் தன் முகத்தை முன்னே காண்பித்து.
சரியான உறக்கமில்லாமல் முகமெல்லாம் அதப்பாய் தெரிந்தது. கண்கள் சோர்ந்து உள்ளடங்கியதை போலிருக்க,
“உடம்பு சரியில்லையா?…” என்றாள் தயங்கி.
“ஏன் என்கிட்ட இதை கேட்க கூட யோசிக்கிற சௌபர்ணிகா?…” என தாளமாட்டாமல் அவன் கேட்கவும், தன் விழிகளை திருப்பிக்கொண்டாள்.
“நான் வரனுமா அங்க?…” என்றான் அடுத்ததாய்.
எச்சிலை கூட்டி விழுங்கியவள் அவனின் அன்பை நிராகரிக்கவும் முடியாமல் ஏற்கவும் முடியாமல் தடுமாறி பார்க்க,
“நீ சொல்லாம வரப்போறதில்லை. அங்க வேற என்ன இருக்கு?…”
“ஏன் உங்க பிஸ்னஸ் இருக்கே?…” என்று அவள் பதிலுரைக்க,
“நீயும் இருக்க. நீ தான் இருக்க. கூப்பிடு. வரேன்…” என்றான் அவளிடம் பிடிவாதமாய்.
“என்னை சொல்லிட்டு இப்போ நீங்க தான் அடம் பிடிக்கறீங்க…”
“உன்னை ரொம்ப பிடிக்குதே. அதனால வந்த அடம் தான் இது. உன்னோட ஒட்டிக்காமலே ஒட்டிருச்சு…” என கண் சிமிட்டு கள்ளப்புன்னகையுடன்.
சௌபர்ணிகாவிற்கு மூச்சடைத்தது. முகம் மாறாமல் அவள் திகைப்புடன் அவனை கவனமாய் பார்க்காமல் தவிர்க்க அவனின் சன்னமான சிரிப்பு சத்தத்தில் இன்னுமே விழியை மூட,
அவன் விழிகள் காட்டிய ஜாலமும், அது உணர்த்திய காதலும் சௌபர்ணிகா பிடிமானத்தை அசைத்து பார்த்தது.
“ரிஷபன்…” என்றவளின் அழைப்பில் முழுதாய் மீள முடியாமல் மூழ்கியவன்,
“உன்னோட இந்த ரிஷபன், என்னை என்னவோ செய்யுது. திரும்ப திரும்ப கேட்டுட்டே இருக்கனும்ன்னு தோண வைக்குதே? என்ன பண்ணின நீ?…” என்று கண்களை மூடி அனுபவித்து சொல்லியவன்,
“வரேன். கொஞ்சம் வேலை. முடிச்சிட்டு இன்னும் நாலு நாள். நேரா உன்னை பார்க்க தான். ஒரு சர்ப்ரைஸ் கூட இருக்கு…” என்று சொல்ல அவன் வருகிறேன் என்றதே சௌபர்ணிகாவை உயிர்பிக்க போதுமானதாய் இருந்தது.