“ஆமா, அந்த ஸ்டெயிலிஷ்ட்…” துளசி வாயெல்லாம் பல்லாக, சௌபர்ணிகா முறைப்பில் அப்படியே அவள் வாய் மூடிக்கொண்டது.
“அவங்க ஃபேமிலியா வராங்க. என்ன வேணுமோ கூட இருந்து கவனிச்சு அனுப்பு. அவங்க நம்ம கெஸ்ட். புரியுதா?…” என எச்சரித்துவிட்டு கிளம்பினாள்.
காரை எடுத்தவளின் கையில் நடுக்கம் கூடியது. வேறு எங்காவது ஆள் அரவமற்ற இடத்திற்கு சென்றுவிடவேண்டும் என மனது உந்த அவளின் கையில் கார் தடுமாறியது.
‘ரொம்ப எல்லாம் பேசலை மதி. இதுவரைக்கும் எல்லை மீறலை. சும்மா தான் பேசிட்டிருந்தோம்’ என்ற ஜெயந்தனின் குரல் நாராசமாய் ஒலித்தது.
‘எவ்வளோ நாள் பேசிட்டே மட்டும் இருக்க?’ என்ற ஆரோனின் குரலும் காதலாய் உருகியது.
இரு உணர்வுகளின் தாக்கத்தில் நிலைகுலைந்தவள் மனது இயல்பை தொலைத்தது.
கண்கள் இருட்டிக்கொண்டு வர கையில் நிதானம் தவற கையிலிருந்து காரின் கட்டுப்பாடு தவறி மரத்தில் மோதி நின்றது வாகனம்.
அக்கபக்கத்தில் இருந்தவர்கள் உதவியில் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள்.
தலையில் மட்டும் அடி. மிதமான வேகம் என்பதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டிருந்தது.
சபர்மதிக்கும், இஷாந்துக்கும் தகவல் சொல்லப்பட உடனடியாக கிளம்பி சென்றனர் இருவருமே.
ஆரோன் வருவதும் தெரியாது. அவர்களும் கடைக்கு செல்லவில்லை என்பதனால் சௌபர்ணிகா நிலை மட்டுமே அவர்களின் கவனத்தில்.
ஜெயந்தனும், சந்தனாவும் வந்து பார்த்துவிட்டு செல்ல, சௌபர்ணிகாவை மாலைநேரம் வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டனர்.
“தலையில லேசா தான் அடி. அதனால பெருசா பிரச்சனை இல்லை. நீங்க கூட்டிட்டு போகலாம். தலைவலி எதுவும் இருந்தா திரும்ப வாங்க…” என்று சொல்லி அனுப்பி வைத்தனர்.
வீடு வந்து சேர்ந்ததும் ஜெயந்தன் மகளை பார்த்துவிட்டு கடைக்கு கிளம்பி செல்ல,
“ம்மா சந்தனா ஹாஸ்பிட்டல் வந்துட்டு அப்படியே அவங்கப்பா வீட்டுக்கு போயிருக்கா பிள்ளைங்களை கூப்பிட. நேரமாகிருச்சுன்னா நான் போய் கூட்டிட்டு வரேன்…” என்று சொல்லி கிளம்பிவிட்டான் இஷாந்த்.
வீட்டில் வேறு யாரும் இல்லை. பணியாளர்கள் கூட வேலையை முடித்துவிட்டு சென்றிருக்க சபர்மதியும், சௌபர்ணிகாவும் மட்டுமே.
“நீ அவ்வளோ கேர்லெஸா ட்ரைவ் பண்ணமாட்டியே சௌபி?…” என அப்போது தான் வாயை திறந்தார் சபர்மதி.
“இல்லம்மா, ஒருமாதிரி தலை சுத்திட்டு வந்துச்சு. அதான்…” என்று அவரை நேர்பட பாராமல் விழிகளை தாழ்த்தியபடி சொல்ல,
“வேற எதுவும் பிரச்சனையா? அம்மாட்ட சொல்லுடா…” என்று இறைஞ்சுதலாய் கேட்க,
“எனக்கு கஞ்சி செஞ்சு தர சொல்லுங்கம்மா. வேற எதுவும் சாப்பிட தோணலை…” என கேட்க மகள் இந்த பேச்சை வளர்க்க விரும்பவில்லை என்று புரிந்தது அவருக்கு.
“நைட் டின்னர் செய்ய இனிமே தானே வருவாங்க. நானே செஞ்சு எடுத்துட்டு வரேன்…”
“இல்லை, அவங்க வரும் போதே செய்யட்டும்…” என அவள் மறுக்க,
“ஏன், எனக்கு செய்ய தெரியாதா? நான் கொண்டுவரேன் நீ ரெஸ்ட் எடு…” என்று சொல்லி அவர் சென்றுவிட கண்ணை மூடி சாய்ந்தவளுக்கு மனமெங்கும் ஆரோனின் நினைவு.
கடைக்கு வந்திருப்பானா? தன்னை தேடியிருப்பானா? என்ன நினைத்திருப்பான்? இப்படி மொத்த நினைவும் அவனை சுற்ற ஆரம்பிக்க அவள் எண்ணங்களின் நாயகன் வந்து சேர்ந்திருந்தான் அவளிடமே.
ஆசையாய் இல்லை. ஆவேசமாய். ஆக்ரோஷமாய். அவள் மீது அளவில்லாத கோபமாய்.
இஷாந்தின் மூலம் விஷயம் கேள்விப்பட்டவனுக்கு அப்போதே எல்லாம் புரிந்து போனது.
மதியம் வரை அவளுக்காக அங்கே தாய், பாட்டியுடன் காத்திருந்தவன் அழைப்புகளும் ஏற்கபடாமல் இருக்க அப்போதே கோபம் தான்.
முதலில் அவசரமாய் எதுவும் வேலை வந்து கிளம்பிவிட்டாள் என நினைத்தவனுக்கு நேரம் செல்ல செல்ல தான் புரிந்தது.
குடும்பத்தினரிடம் காட்டிக்கொள்ளாமல் சமாளித்தவன் மாலை தான் இஷாந்திற்கு அழைத்தான்.
கேட்டதும் உயிர் பதறியது ஆரோனுக்கு. உடனே பார்க்க கிளம்பியதும் தான் ஒவ்வொன்றாய் யோசிக்க விஷயம் யூகத்தில் பிடிபட பல்லை கடித்தான் அவன்.
இதோ வந்ததுமே சபர்மதி அவனை எதிர்கொள்ள அவரிடம் எதுவும் பேசும் மனநிலையில் அவன் இல்லை.
“உங்க பொண்ணை பார்க்கனும்…” என்றவன் குரலில் இறுக்கம் இருந்தாலும் அவன் முகத்தில் அத்தனை பரிதவிப்பு.
“மாடில இருக்கா. கூப்பிடறேன்….” என மகளின் அறை நோக்கி செல்ல போக,
“ப்ளீஸ் ஆன்ட்டி. எனக்கு எல்லாம் தெரியும். நீங்க என்னை விசாரிச்சதுல இருந்து. இந்த பார்மாலிட்டீஸ் வேண்டாம். நான் அவகிட்ட தனியா பேசனும்…” என்று சொல்லியவனை மறுக்க முடியவில்லை அவரால்.
“அவ ஏற்கனவே ரொம்ப…”
“ஆன்ட்டி நான் அதைவிட தவிச்சு போய் வந்திருக்கேன். புரிஞ்சுக்கோங்க. நான் பேசறேன். நீங்களும் வாங்க. இங்க வச்சு வேண்டாம். வெளில வாட்ச்மேன் எல்லாம் இருக்காங்க…” என்று சொல்ல,
“சரி. வரேன்…” என்றவர் அவனுக்கு குடிக்க எதுவும் எடுத்துவர திரும்ப ஆரோன் மாடி ஏறிவிட்டான்.
அடுத்தடுத்ததாய் இருந்த நான்கு அறையில் ஒன்று திறந்திருக்க அதை நோக்கி வேக எட்டுக்களுடன் சென்றவனின் காலடி சத்தத்தில் நிமிர்ந்து பார்த்தாள் சௌபர்ணிகா.
“நான் உன்னை பார்க்க வரேன்னு சொன்னதால அந்த பதட்டத்துல தான் உடனே கிளம்பி போனியா நீ?…” என்று கேட்க இன்னும் அதிர்வு கூடியது அவளிடம்.
“அப்போ அதான் நிஜம் இல்லையா?…” என ஆரோன் கேட்க, மறுக்கவில்லை சௌபர்ணிகா.
மௌனமாய் அவனை பார்த்தவள் கண்களின் வெறுமையில் தளர்ந்துவிட்டான் ஆரோன்.
“ஆக்ஸிடன்ட் சின்ன காயத்தோட போச்சு, இல்லைன்னா?…” என தனக்கு தானே சொல்லிக்கொண்டவன் நெற்றியில் அறைந்துகொள்ள அதையுமே வேதனை ததும்ப பார்த்தாளே தவிர வாய் திறக்கவில்லை.
எப்போதும் அவளின் அந்த ஒதுக்கத்தில், அமைதியில் அவளை பேச வைத்து ரசிப்பவனின் பொறுமை சுத்தமாய் கரைந்திருந்தது அன்றைக்கு.
“ஸோ இப்பவும் எதுவும் வெளிப்படையா பேசமாட்ட? அப்படித்தானே?…” என்று கேட்டவன் குரல் உயர ஆரம்பித்தது.
அவனின் கோபம், ஆவேசம், ஆதங்கம், ஏமாற்றம், அலைப்புருதல் என ஒவ்வொரு உணர்வுகளையும் உள்வாங்கியவள் பதில் சொல்லமுடியாமல் வெறுமனே நின்றிருந்தாள்.
“என்ன தான் நினைக்கிறன்னு சொல்லி தொலையேன். எப்ப பாரு முறைக்கிறது. இல்லையா இப்படி ஒன்னும் தெரியாத பிள்ளை மாதிரி முழிக்கிறது. உன்னோட பார்வையாலையே என்னை எரிச்சு கொன்னுட்டிருக்க நீ….” என்றவன் கோபமாய் அவளின் கன்னம் பற்ற முயன்றதும் சௌபர்ணிகா பதறி தன்மேல் அவன் விரல் படாமல் பின்வாங்கி நிற்க,
“ஷிட்…” என்றவன் கோபம் இருமடங்காகியது.
“விளையாட்டா கூட ஒரு விஷயம் உன்கிட்ட என்னால பேச முடியலைன்னா எப்படித்தான் உன் கூட வாழ்நாள் முழுசும் வாழ?…” என்றவன் கேள்வியில் அடிபட்டு போனாள் சௌபர்ணிகா.
“நிம்மதியா இருந்தேன். உன்னை பார்க்க வச்சு, கவனிக்க வச்சு, தேட வச்சு, இப்ப பைத்தியம் பிடிக்க வைக்கிற. வாழ வேண்டாமா நான்? பேசாம கொன்னுட்டு நிம்மதியா இரேன்…” என இரைந்தவனை இறுக்கமாய் பார்த்தாள் அவள்.
“என்ன பண்ணிடுவாங்க உன்னை? எப்ப இருந்தாலும் நடக்க போறது தானே? சும்மா பார்க்கனும்ன்னு வந்தா அதுக்கு இவ்வளோ தூரம் நீ பதட்டமாக என்ன இருக்கு? சொல்லி தொலையேன்…” என்றவன்,
“என்னை பிடிக்கலையா?…” என்றதற்கும் மௌனம்.
“என்னை நீ விரும்பலையா?…” என்றதற்கும் மௌனம்.
“என்னோட வாழ நீ ஆசைப்படலையா?…” என்றதுக்குமே மௌனம் தான்.
ஆனால் அந்த கேள்விகள் ஒவ்வொன்றும் சௌபர்ணிகா மனதை வேரோடு சாய்த்தது.
அதன் உணர்வு விழிகளில் பொங்க உடைப்பெடுக்க காத்திருந்த கண்ணீரை உள்ளிழுத்தாள். அதில் ஆரோனின் மனநிலை முற்றிலும் மாறியது.
“எனக்கு நல்லா தெரியும் எந்தளவுக்கு உனக்கு என்னை பிடிக்கும்ன்னு. அதை நீ சொல்லவே தேவையில்லை. நீ அதை சொல்லி தெரிஞ்சுக்கற அளவுக்கு உன்னை தெரியாதவன் இல்லை நான். என்னோட சின்ன சின்ன பேச்சு மட்டும் போதும்ன்னு நீ நினைக்கிற…” என்றவன்,
“ஆனா நான் உன்னோட வாழ்ந்து நம்ம வாழ்க்கையை எப்படியல்லாம் அனுபவிக்கனும்ன்னு கோடி கனவு கண்டுட்டு இருக்கேன். பொய்யாக்கிடாத சௌபர்ணிகா. கல்யாணம் பண்ணிக்கனும்ன்ற ஆசையே உன்னை பார்த்ததுக்கு அப்பறம் தான்டி எனக்குள்ள வந்துச்சு….” என்றவன் சொல்லில் அத்தனை மெய்.