“அதுக்கு முன்னாடி எப்படி இருந்தேன் தெரியுமா? இப்படி தான் பொண்ணு வேணும்ன்னு நான் நினைச்சதே இல்லை. எனக்கானவளை எங்கம்மா தேடி தருவாங்க. அவளோட சந்தோஷமா என் மொத்த காதலையும் காமிச்சு வாழனும்ன்னு இருந்தேன்…”
“விட்டியா நீ? நான் இப்படி யார்க்கிட்டயும் கோபமா கூட பேசினதில்லை. யாரையும் காயப்படுத்த நினைக்கலை. ஆனா உன்னை விரும்பின நாள்ல இருந்து உன்கிட்ட கெஞ்ச வைக்கிற. இதுவா காதல்?…” என்றவன் சௌபர்ணிகா விழிகளில் ததும்பி நின்ற நீரில் மட்டுப்பற்றான்.
“ப்ச், காட்,,, காட்,,, காட்…” என்று தலையை அழுத்தமாய் கோதிக்கொண்டவன்,
“வீட்டுல பேச வரட்டுமா? என்ன நினைக்கிற? இப்பவும் நீ வாயை திறக்கலைன்னா நான் மனுஷனா இருக்கமாட்டேன். என்னால தூங்க கூட முடியலை…” என ஆற்றமாட்டாமல் கெஞ்சல் குரலில் சொல்ல சௌபர்ணிகா தொண்டைக்குழி ஏறி இறங்கியது.
அவளின் அமைதியில் அந்த நிமிடம் தான் காதலித்ததற்கே அத்தனை வெறுத்து போனான் ஆரோன் ரிஷபன்.
“இனஃப், இனஃப். எல்லாம் போதும். இதுக்கு மேல உன்கிட்ட பேசிட்டு, கேட்டு தெரிஞ்சுக்க உன் பின்னாடியே சுத்த நான் தயாரில்லை. இப்படியே இருக்கனும்ன்னு தான ஆசைப்படற. இருந்துட்டு போ. போடி…” என்று சொல்லியவன் விறுவிறுவென வெளியேற அதை கூட உணரும் நிலையில் இல்லை சௌபர்ணிகா.
ஆரோன் அவள் அறையிலிருந்து வெளியே வர கையை கட்டியபடி நின்றிருந்தார் சபர்மதி.
அவரின் முன் அவன் நின்றது நொடிக்கும் குறைவான நேரமே. யாரிடமும் பேசும் மனநிலையில் அவனில்லை.
அந்தளவிற்கு நிதானம் தவறியவன் படியில் தடதடவென கீழே இறங்கி செல்ல வேதனையுடன் மகள் அறைக்கு சென்றார் சபர்மதி.
சுவற்றை வெறித்தபடி அதில் சாய்ந்து நின்றவளின் கோலம் பெற்றவரின் மனதை அறுத்தது.
“எவ்வளோ நாள் இன்னும் பழசையே நினைச்சிட்டு இருக்க போற சௌபி?…” என்றார் சபர்மதி.
அவரின் குரலில் திடுக்கிட்டு திரும்பியவளுக்கு அவரும் அனைத்தையும் கேட்டிருக்கிறார் என புரிய,
“எந்த பழசு? நான் எதையும் நினைக்கலையேம்மா…” என்றாள் இலகுவாய் சொல்ல முயன்று.
தொண்டை அடைத்தது அவளுக்கு. தாயிடம் சாதாரணமாக பேச வார்த்தை வரவில்லை.
“எந்த பழசா? எப்பவோ ஸ்கூல்ல நடந்ததை இப்ப வரைக்கும் நினைச்சிட்டு ஆண்களே அப்படித்தான் இருப்பாங்கன்னு நீ முடிவுக்கு வந்திருக்க. எல்லாருமே அப்படி இருக்கிறதில்லை சௌபி…” என்றவரை திரும்பி நிதானமாய் பார்த்தாள் சௌபர்ணிகா.
“எல்லாருமேன்னா?…” என்றவளின் கேள்வி கத்தியின் கூர்மையாய் நிற்க,
“நீ குழம்பி போயிருக்க. நீயா அதைவிட்டு மீண்டு வருவன்னு நினைச்சேன். ஆனா இப்ப வரைக்கும் அந்த பாதிப்பு உனக்குள்ள இருக்கறப்போ…” என்றவர்,
“ஆரோன் ரொம்ப நல்ல பையன் சௌபி. நாங்களும் விசாரிச்சோம். நீ மத்ததை நினைச்சு குழப்பிக்காம உன் எதிர்காலத்தை பார். நம்பிக்கையோட இருக்க வேண்டாமா? உனக்கு நான் சொல்ற அளவுக்காடா இருக்கனும்?…” என மென்மையாக அவளுக்கு எடுத்துரைக்க முயல,
“அப்பாவை கல்யாணம் பண்ணிக்கும் போது உங்களுக்கு இருந்த அந்த நம்பிக்கை இப்பவும் இருக்கா ம்மா?…” என்றாள் சௌபர்ணிகா.
“சௌபி…” என்றவர் முகம் வெளிற, அதை மெய்ப்பிப்பதை போல கொஞ்சமும் அலுங்காமல் குலுங்காமல் அவரின் தலையில் இடியை இறக்கிவைத்தாள் மகள்.
“எனக்கு ப்ரெண்ட்ஸ் இருந்தாங்க. டென்த் வரைக்கும். அதுக்கப்பறம் நான் யாரையும் பழக விடலை. நானும் பழகலைம்மா…” என்றவளின் தொண்டை கரகரத்தது.
“சௌபிம்மா…” என்ற சபர்மதி விழிகள் கண்ணீரை பொழிய,
“உண்மை தான் எல்லாருமே ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க தான். ஆனா நம்ப முடியலையே யாரையும். நூத்துல ஒண்ணா ஜெயந்தனாவோ, சுலோக்ஷனாவாவோ இருந்துட்டா?…” என குரல் உடைந்து போய் மகள் கேட்க சபர்மதி சிதறி போனார்.
“எனக்கு தெரியும் ம்மா. அன்னைக்கே அப்பவே தெரியும். தெரிஞ்சி போச்சு. தெரியாம கேட்டு தொலைஞ்சு இன்னைக்கு வரைக்கும் சாகாம செத்துட்டிருக்கேன் நான்…” என்றவள் கண்ணில் கண்ணீர் வழிந்தது.
“சாகற வரைக்கும் உங்ககிட்ட இதை காமிச்சுக்கவே கூடாதுன்னு இருந்தேன். என்னால எங்கம்மாவுக்கு குடுக்க கூடிய சந்தோஷம், ம்ஹூம். இல்லை. அது நிம்மதி. அவங்க பிள்ளைங்க நிம்மதியா இருக்காங்கன்ற நிம்மதி. ஆனா அதையும் இப்ப நான் உடைச்சிட்டேன்…” என்றவளை பாய்ந்து அணைத்துக்கொண்டார் சபர்மதி.
“சௌபிம்மா, அதெல்லாம் மறந்திடனும். எதையும் நினைக்காதடா. இதுக்கா அம்மா இவ்வளோ கஷ்டப்பட்டேன்? யோசிக்காதடாம்மா சௌபி…” என்ற சபர்மதியின் ஆறுதல் எதுவும் அவளின் காதை அடையவே இல்லை.
“நாம உயிரையே வச்சு உண்மைன்னு நம்பிட்டிருக்கற விஷயங்களோட பிம்பம் ஒன்னுமே இல்லாம உடையிற இடம் இருக்கே. அதுக்கு செத்துடலாம். அதுவும் எதையும் பகிர்ந்துக்க முடியாம மூச்சு திணறும் பாருங்க…” என்று சொல்லியவள் பேசமுடியாமல் எச்சிலை கூட்டி விழுங்கி தன் குரல்வளையை தடவினாள்.
“போதும்டா சௌபி…” என சபர்மதி மகளின் கண்ணீரை துடைத்தார்.
“ரிஷபன் மேல எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனா அவரை சுத்தி இருக்கறவங்க? அப்பாவும் அப்படித்தானே இருந்தாங்க….” என்றவள் முகம் அசூயையாய் மாறி,
“ஆனா அப்பாவையும் ரிஷபனையும் என்னால ஒரு தராசுல வைக்க முடியாதும்மா. ரிஷபன் வேற… என்றாள் காதலுடன்.
“அப்பறம் என்னடா சௌபி? ஏன் வேண்டாம்னு சொல்ற? அந்த புள்ளை எப்படி கஷ்டப்படுது?…” என்றார் சபர்மதி.
“இந்த கஷ்டம் கொஞ்ச நாள். அப்பறம் போயிரும். ஆனா கல்யாணம் நடந்தா?…” என்றவள் சபர்மதியின் முகம் பார்த்தாள்.
“சத்தியமா ரிஷி அப்படி போயிருவாங்கன்னு எல்லாம் நான் யோசிக்கவே இல்லை. அந்தளவுக்கு முட்டாளும் இல்லை. ஆனா என் மேல எனக்கு நம்பிக்கை இல்லை தெரியுமா? எனக்காக தான் நான் ரிஷியை கஷ்டப்படுத்தக்கூடாதுன்னு தான் வேண்டாம்ன்னு சொல்றேன்…” என்றாள்.
“சௌபி என்னடா நீ? எதையாச்சும் நினைச்சுட்டு…”
“இல்லம்மா, நமக்கு ரொம்ப பிடிச்சவங்க மூலமா நமக்கு ஒவ்வொரு நாளும் நரகம்ன்றது எத்தனை கொடுமை தெரியுமா? உங்களை விட அப்பாவை ரொம்ப ரொம்ப புடிக்கும் எனக்கு. ஆனா அன்னைக்கு நான் அதை கேட்டதுல இருந்து என்னால அவங்களை நேருக்கு நேர் பார்க்க கூட முடியலை….”
“இதெல்லாம் நினைக்க கூடாதுன்னாலும் எனக்கு தோணிடுதே. என்னால அதை மாத்த முடியலை. எவ்வளவோ முயற்சி பண்ணிட்டேன். முடியலை. ரொம்ப கஷ்டமா இருக்கும்மா. நெஞ்செல்லாம் வலிக்கும். இப்ப வரைக்கும் அப்படித்தான் இருக்கேன்…”
“இதையே நான் ரிஷிக்கும் பண்ணிட்டா? எனக்குள்ள போராடறது என்னோட முடிஞ்சிரும். என்னால அப்படி ஒரு பார்வையோட ரிஷியை பார்க்க முடியாது. அவரை எந்த பார்வையில மத்தவங்க பார்க்காங்கன்னு தோணும். நான் அதை தான் யோசிக்கிறேன்னு ரிஷிக்கு தெரிஞ்சா? வேண்டாம். வேண்டவே வேண்டாம். அந்த நரகத்தை ரிஷிக்கு நான் குடுக்க விரும்பலை…”
“அந்த நினைப்பு அது இயல்பா இருக்கவிடாது. இலகுவா பழகவிடாது. தூங்கவிடாது. சிரிக்கவிடாது. சாப்பிடவிடாது. மொத்தத்துக்கு வாழவே விடாதும்மா. அதை தான் நான் அனுபவிச்சிட்டு இருக்கேன்….”
“நான் அப்பா பக்கத்துல போய் எத்தனை வருஷம் ஆகிடுச்சு தெரியுமா? அந்த ஸ்கூல் இன்ஸிடன்ட் முடிஞ்சு அப்பா ஒருநாள் என் பக்கத்துல உக்கார்ந்து தலையை தடவினாங்க. ம்மா, ம்மா, எனக்கு அந்த நேரம் அப்பாவா தோணவே இல்லையே?…” என்றவள் தாயை இறுக்கமாய் கட்டிக்கொள்ள சபர்மதி மகளின் வார்த்தைகளில் மாண்டு போனார்.
“இப்படி ஒரு மனசோட நான் எப்படி ரிஷியை கல்யாணம் பண்ணிக்க? சேர்ந்து வாழ முடியலை. என் மனசு முழுசும் இங்க வரைக்கும் ஆசை. என் கண்ணு காமிக்குதுன்னு சொல்லுவார். அதுக்கு மேல என்னால காமிச்சுக்க முடியலை…”
“இந்த கோபம் போதும். போகட்டும். ப்ளீஸ், இதை பேசவேண்டாம். எனக்கு வலியை, ஏமாற்றத்தை விழுங்கி பழகி போச்சு. இதையும் விழுங்கிப்பேன். கொஞ்சம் கஷ்டம். பரவாயில்லை…” என்றவள் இன்னும் ஏதேதோ பேசிக்கொண்டே செல்ல சபர்மதி உயிரற்ற சிலையாய் அமர்ந்திருந்தார்.
அவர் மட்டுமல்ல அறையின் வாயிலில் நின்றிருந்த ஆரோனும் கூடவே. சௌபர்ணிகா வார்த்தைகள் அவனை துண்டாடிவிட்டது.
அவள் மறுப்பின் காரணத்திற்கான மனதின் கேள்விகள் அவனை அங்கிருந்து செல்லவிடாமல் நிறுத்தி வைக்க காரணமின்றி சௌபர்ணிகா இப்படி இருக்கமாட்டாள் என்று கோபம் குறைந்த மனது அவனை ஆற்றுப்படுத்தியது.
அவளிடம் கோபமாய் பேசிவிட்டு காரை கிளப்பிக்கொண்டு சென்றவனால் அந்த வீதியை கூட கடக்கமுடியவில்லை.
அப்படியே நிறுத்திவிட்டு இறங்கி ஓடி வந்தவனின் நடையை அவள் குரல் நிறுத்தியிருந்தது.
தான் பேசி நோக வைத்ததற்கு மன்னிப்பை கேட்க வந்தவன் மனது அவளின் காயத்தை கண்டு உயிர் நொந்து போனது.
அதற்கு மேல் நின்று அவளின் கண்ணீர் குரலை கேட்க மனமற்றவனாக சத்தமின்றி அங்கிருந்து கிளம்பினான்.
செல்லும் வழியெங்கும் அவளின் அழுகுரல் காதில் கேட்டு உயிர்வதை புரிய நேராக கடற்கரைக்கு காரை செலுத்தியவன் விழிகள் கலங்கியது.