வெகுநேரம் மழையில் கடற்கரை மணலில் படுத்திருந்த ஆரோன் ரிஷபன் மெல்ல எழுந்து அமர்ந்தான்.
சௌபர்ணிகா பேச்சுக்களை ஜீரணிக்கவே அவனுக்கு அந்தநேரம் போதவில்லை.
இப்படி உழன்றுகொண்டு இருப்பவளை எங்கணம் காதல் கொண்டு நெருங்குவது?
இத்தனை வேதனைகளை மனதில் சுமந்துகொண்டு அனைத்தையும் மீறி அவள் மனதில் தான் வேரூன்றி இருப்பதில் மெல்லிய புன்னகை அவனிதழ்களில் பூத்தது.
“என்னை அவ்வளோ புடிக்குமா உனக்கு?…” என சொல்லிக்கொண்டவன் முகத்தில் வழிந்த நீரை துடைத்துக்கொண்டான்.
மனதின் வெம்மை தணியாமல் இருக்க இன்னும் தனிமையில் இருந்தால் தன்னால் மீள முடியாமல் போய்விடுமோ என கிளம்பிவிட்டான் ஆரோன்.
வீடு வந்து சேர்ந்தவனுக்காக காத்திருந்த ஆராதனா மகனின் நனைந்த கோலத்தில் விழிகளை சுருக்கி பார்த்தார்.
“ப்ரெஷாகிட்டு வரேன்…” என்று சொல்லி அவரின் கன்னம் தட்டி புன்னகைத்துவிட்டு செல்ல மகனின் கண்களுக்குள் ஒளிந்திருந்த அந்த உணர்வும் தாயின் மனதிற்கு தப்பாமல் புலப்பட்டது.
“என்னம்மா, இப்படி நனைஞ்சு போய் வந்திருக்கான்? மேலெல்லாம் மணல் வேற…” பொன்னரசி மகளிடம் கேட்க,
“என்னவோ சரியில்லைம்மா. ரிஷி அப்செட்டா இருக்கற மாதிரி தோணுது…” என்றார் தாயிடம்.
“இன்னைக்கு போனோமே, அதுக்காகவா ஆரா?…”
“மேபி. வரட்டும். வந்து பேசுவான். நாம டின்னர் எடுத்து வைப்போம்…” என்று நகர்ந்துவிட்டார் ஆராதனா.
தாயிடம் இலகுவாக சொல்லிவிட்டாலும் மனதிற்குள் சஞ்சலம் பெரிதாய் உருவெடுத்தது.
ஸ்டீபனிடம் பேசவேண்டும் என மனது உந்தினாலும் தன்னைவிட அவர் இன்னும் மகன் விஷயத்தில் சென்ஸிட்டிவ்.
இப்போது சொல்லவேண்டாம் என அமைதியாக இருந்தவர் பார்வை நொடிக்கொருதரம் மகனின் வரவை எதிர்பார்த்தது.
பொன்னரசியும் வந்து அமர ஆரோன் ரிஷபன் வந்துவிட்டான் தலையை துவட்டியபடி இரவு உடையில்.
“இன்னும் நீங்களும் சாப்பிடலையா? நேரம் என்னாகுது?…” என்று சொல்ல,
“நீ வரட்டும்ன்னு வெய்ட் பண்ணோம். அதுக்குள்ள மழை. அப்படியே பேசிட்டு இருந்ததுல நேரம் போயிருச்சு…” என்றவர் அவனுக்கு பரிமாற,
“ஹ்ம்ம், நல்ல மழை. அதான் பீச் சைட் ஒரு வாக் போய்ட்டு வரேன்…” என சாப்பிட ஆராதனா சரியாய் உண்ணவே இல்லை.
“ப்ச், ம்மா இதென்ன சாப்பிடும் போது எதையாச்சும் நினைச்சிட்டு? எடுத்து சாப்பிடுங்க. பாருங்க பாட்டியும் நம்மளையே பார்த்துட்டு இருக்கறதை?…” என்று அதட்டினான்.
“அதெல்லாம் எதுவுமில்லை ரிஷி. அப்பா என்ன பண்ணிட்டிருப்பாங்கன்னு யோசிச்சேன்…” என சமாளிக்க,
உண்டுகொண்டே சிரிக்க புரையேறிவிட்டது. அதில் அவனின் விழிகள் நீரை சுரக்க பதறிவிட்டனர் இருவரும்.
“பார்த்து பார்த்து ரிஷி. இதென்ன கண்ணுல தண்ணி வர அளவுக்கு?…” என பதறி மகனின் கண்ணை துடைத்தவரை துடிக்கும் உள்ளத்துடன் பார்த்தான் ஆரோன்.
தன்னுடைய முகவாட்டமே தாங்கிக்கொள்ள முடியாத பெற்றோர். அவனின் கண்ணீரை கண்டுவிட்டால்?
முயன்று தன்னை சரிசெய்துகொண்டவன் முகத்தில் சிரிப்பு தொலையவில்லை.
“ம்மா, நான் என்ன குழந்தையா? என்னவோ கதறி அழுதுட்ட மாதிரி பதறி போறீங்க? புரையேறி அதுல கண்ணுல தண்ணி வச்சிருச்சு…” என்று சமாளித்தாலும் ஆராதனாவால் கடக்க முடியவில்லை.
“ப்ச், பேசாம சாப்பிடனும். முதல்ல கையை கழுவிட்டு வா…” என்று சொல்லியவர் தானே மகனுக்கு ஊட்ட,
“ம்மா…” என்றான் ஆரோன் சிரிப்புடன்.
“ப்ச், மூச் ரிஷி. பேசாம சாப்பிடு…” என்றவர்,
“ம்மா நீங்களும் எதுவும் பேசவேண்டாம். அவன் முதல்ல சாப்பிடட்டும்…” என்று மகனை கவனித்த பின்னர் தான் அவர் உண்டார்.
“இப்போ ஓகே வா? நான் சாப்பிட்டுட்டேன்…” என ஆரோன் சொல்ல,
“ஓகே தான். இந்த மாதிரி மழையில இவ்வளோ நேரம் நனையாத ரிஷி. உன் கண்ணெல்லாம் எவ்வளோ சிவந்திருக்கு பார்?…”
“ம்மா, அது இப்ப புரையேறி…”
“ம்ஹூம், நீ வரும்போதே அப்படித்தான் இருந்துச்சு. நான் எதுவும் கேட்கலை. சொல்லனும்ன்னா நீயே சொல்லியிருப்ப. என்னைக்கு எனக்கு தெரியனுமோ தெரியட்டும்…” என்றார் ஆராதனார்.
“எப்படி? பொண்ணு யாருன்னு நான் சொல்லாமலே கரெக்ட்டா கண்டுபிடிச்சீங்களே? அப்படியா?…” என்று அவன் புன்னகைக்கவும் ஆராதனாவும் மகனின் தோளில் அடித்தவர்,
“அதெல்லாம் நானா தேடி போகலை. தானவே வந்தது தான் அந்த கெஸ்…” என்று அவனை போலவே சொல்ல,
“ஹ்ம்ம், ஓகே ஓகே. போய் தூங்குங்க…”
“இரு ரிஷி, பாட்டி கஷாயம் கொண்டுவராங்க. சளி புடிக்காம இருக்கும். நீ குடிச்சிட்டு போ…” என்றவர் பொன்னரசி கஷாயத்துடன் வரவும் மகனை குடிக்க வைத்துவிட்டே அனுப்பினார்.
அவன் செல்வதை பார்த்துக்கொண்டிருந்தவர் மனது சௌபர்ணிகாவை தான் நினைத்தது.
நிச்சயம் அவள் விஷயமாக தான் இருக்க வேண்டும் என உள்மனம் அறுதியிட்டு கூறியது.
மகன் சொல்லியதை போல அவன் சொல்வதற்கு முன்பே மருமகள் யாரென கண்டுகொண்டார் தான்.
சபர்மதி அவரின் வலைதள தொடர்பில் தோழியாய் தொடர மகன் பேசிய அன்று அவன் இருந்த இடமும், சபர்மதி குடும்பமாய் அன்றைக்கு எடுத்துக்கொண்ட புகைப்படமும் ஒன்றுக்கொன்று வரிசையாய் நின்றது.
அதற்கு முன்பும் மகன் அங்கே தொழில் விஷயமாக சென்றதும், இஷாந்த், சபர்மதியை அறிமுகம் செய்து வைத்ததும் என அவரை அதிகளவு மெனக்கெட வைக்கவில்லை.
“சௌபர்ணிகா எப்படி?…” ஒற்றை வார்த்தையை மகன் அசந்த நேரத்தில் கேட்டு அவனின் முகம் கண்டு, கண்டுகொண்டவர் உள்ளம் அவனின் அன்றைய வெட்கத்திலும், புன்னகையிலும் மகிழ்ந்தது என்றால் இன்றைக்கு வருந்தியது.
‘காதல்ல இதெல்லாம் இல்லாமையா? நானே இதை யோசிக்கலாமா?’ என ஒருகட்டத்தில் மனதை தேற்றிக்கொண்டார் ஆராதனா.
மறுநாள் வழக்கம் போலவே எழுந்து ஸ்டூடியோ செல்கிறேன் என கிளம்பியவன் அங்கிருந்து இஷாந்திற்கு அழைத்தான்.
“உங்கம்மா நம்பர் வேணுமே இஷாந்த்…” என்றதும்,
“அனுப்பி வைக்கறேன் ஆரோன்…” என ‘ஏன், எதற்கு?’ என கேட்காமலேயே அனுப்பி வைத்தான் இஷாந்த்.
முதல்நாள் இரவு மனைவி குழந்தைகளுடன் வீடு வந்தவன் தாயும், தங்கையும் அதற்குள் உறங்கிவிட்டதாக இரவு நேர வேலையாள் சொல்லி கேட்டுக்கொண்டவனுக்கு புதிதாய் தெரிந்தது.
“நீங்க பார்த்தீங்களாப்பா?…” என ஜெயந்தனிடம் கேட்க,
“நானும் நீ வந்ததும் தானே வந்தேன் இஷாந்த். பார்க்கலைப்பா…” என்றார்.
மறுநாள் சபர்மதியை மட்டுமே கீழே பார்க்க முடிந்தது காலையில். சௌபர்ணிகாவிற்கு ஜுரம் என்று சொல்லிவிட்டார்.
உறங்கும் தங்கையை ஓசை எழுப்பாமல் பார்த்துவிட்டு கடைக்கு கிளம்பி வந்தாலும் சபர்மதியின் முகம் சரியில்லை என்று தோன்றிக்கொண்டே இருந்தது.
இப்போது ஆரோன் கேட்டதும் அது சம்பந்தப்பட்டது தான் என தெரியவர அவர்களாக சொல்லட்டும் என அமைதியாகிவிட்டான்.
————————————–
மகளுக்கு உணவை தந்துவிட்டு அவள் சாப்பிட பார்த்துக்கொண்டிருந்தார் சபர்மதி.
இருவரும் வேறு எதுவும் பேசிக்கொள்ளவில்லை. முதல்நாள் அவள் பேசியதே இன்னும் நெஞ்சை அறுத்துக்கொண்டிருந்தது சபர்மதிக்கு.
கொஞ்சம் அமைதியாகட்டும் என்று காத்திருந்தார் சபர்மதி. தாயின் எண்ணம் புரிந்ததை போல சௌபர்ணிகாவும் மௌனம் காக்க,
“டேப்லெட் போட்டுக்கோ சௌபி. ரெஸ்ட் எடு…” என்றவர்,
“என்னைக்கு கடைக்கு போகலாம்ன்னு ப்ளான் பண்ணியிருக்க?…” என கேட்டார்,
“போவேன். போகனுமே. ரெண்டுநாள் போகட்டும்…” என்று சொல்லியவள் வார்த்தைகள் தடுமாறியது.
அவளின் விழிகளுக்குள் ஆரோனின் ஆவேச முகமும், காதில் அவனின் கோபமான பேச்சுக்களும் தான் வலம் வந்தது.
இறுதியாக ‘உன் பின்னாடி சுத்த நான் தயாரில்லை. இப்படியே இரு’ என்றவனின் வெறுமையான பேச்சுக்கள் சுளீரென்ற வலியை உண்டாக்கியது.
அதில் முகம் சுருக்கியவள் கண்களும் கண்ணீரில் ததும்ப துவங்க சபர்மதியின் மனது தவித்தது.
“சௌபிம்மா…” என்றார் மகளின் தலை கோதி.
“டேப்லெட் தாங்கம்மா…” என்று சொல்லியவள் வாங்கி கடகடவென விழுங்கிவிட்டு கண்ணை மூடிகொண்டாள்.
தன்னை நிழலாய் துரத்தும் அவனின் நினைவுகளை விட்டு விலக முடியாமல் அவளுக்குள் தொடரும் போராட்டம் களைப்படைய செய்தது.