தான் தங்கியிருக்கும் விடுதிக்கு வேகமாய் கோபத்துடன் வந்துவிட்டாள் சௌபர்ணிகா.
தன் பின்னே ஆரோன் ரிஷபன் வருகிறானா இல்லையா என வந்ததும் திரும்பி பார்க்க, அவன் மிக நிதானமாய் சற்று தொலைவில் வந்துகொண்டிருந்தான்.
“எங்க தங்கியிருக்காங்க?…” என அடுத்ததாய் யோசனை.
அவனை பார்த்தபடி விடுதி வாசலில் நிற்க ஆரோன் தனது கேமராவில் அந்த மெல்லிய வெளிச்சத்தை புகைப்படமாக்கி கொண்டிருந்தான்.
“ஸ்லோப்ல ஏறி வரதே மூச்சு வாங்கும். இப்ப குளிர், இதுல மழையும். நடையை பாரு…” என்று பல்லை கடித்தாள்.
அவன் வேகமாய் வராததில் இங்கே இவளுக்கு நோவு கண்டது. உள்ளே செல்ல முடியாமல் நின்றவளை பார்த்துமே பெரிதாய் அலட்டிக்கொள்ளாமல் இருந்தான் ஆரோன்.
“திமிர். என்னவும் பண்ணட்டும்..” என சொல்லிவிட்டு உள்ளே சென்றவள் தன்னுடையை பேக்கை போட்டுவிட்டு ஜன்னல் புறம் வந்து நின்றாள்.
அங்கிருந்து பார்க்க ஆரோன் ரிஷபன் நிற்கும் இடம் புலப்படவில்லை. சென்றுவிட்டனா என்றும் தெரியவில்லை.
உடை மாற்றவும் தோன்றாமல் இங்குமங்குமாய் ஒரு நடைபயணம் அறைக்குள்ளேயே.
‘இத்தனை நாள் எப்படி இருந்த? இன்னைக்கென்ன உனக்கு?’ என மூளை அவளை கட்டுப்படுத்த பார்த்தது.
“ஜஸ்ட் ஒரு மனிதாபிமானம்…” என சொல்லிக்கொண்டவள் மனது அலைபாய்ந்தது.
அவனை காணாத பொழுதே அவனின் ஞாபகங்கள் தான் அவளை சுற்றிலும் உலகமாய் சுழலும்.
இப்போது நேரில் கண்டவுடன், அதுவும் இத்தனை நாட்கள் கடந்து கண்டதும் பழகிய பழக்கத்திற்காகவேணும் அவன் நலனை யோசிப்பதாய் மனது தேற்றியது.
கூடவே அவனின் அறிமுகமற்ற பார்வையும், பிடித்தமில்லாத பேச்சும் சட்டென பச்சை மிளகாயை கடித்துவிட்டதை போல எரிந்தது.
“எவ்வளோ கொழுப்பு? ஆரோன் ரிஷபன். எனக்கு தெரியாதுல…” என புலம்பல் ஒருபுறம்.
இப்போதும் நினைத்தமாத்திரம் சட்டென விழிகள் கலங்கிவிட்டது அவனின் கண்டிப்பான பேச்சில்.
“என் இஷ்டம், நான் எப்படியும் கூப்பிடுவேன். இவன் யார் சொல்ல?…” என பல்லை கடித்தவள் ஒரு நிலையிலிருக்க முடியாமல் சுற்றினாள்.
அது இன்னும் அவளின் அமைதியை, நிம்மதியை குலைக்க இப்படி படுத்துகிறானே என ஆற்றாமையாக இருந்தது.
“டென்ஷன் பன்றான். இவன யார் இங்க வர சொன்னா?…” என தலையணையை தூக்கி வீசினாள்.
‘இதென்ன உன் சொந்த இடமா? பப்ளிக் டூரிஸ்ட் பிளேஸ். யார் வேணா வரலாம். என்னவோ உனக்காக வந்தமாதிரி குதிக்கிற?’ என அவனுக்காக ஒருமனது பரிந்துகொண்டு வர,
“கடவுளே?…” என தலையை பிடித்துக்கொண்டாள்.
அறைக்குள் வந்து பத்துநிமிடத்திற்குள் இவை எல்லாம் நடந்தேற மூச்சை இழுத்துவிட்டபடி தன்னை நிதானப்படுத்தி தண்ணீரை எடுத்து பருக வெளியே மழை பெரிதாய் பெய்ய ஆரம்பித்தது.
இடி சத்தம் கேட்டதும் எழுந்துகொண்டவள் வேகமாய் வெளியே வந்து பார்க்க அவன் நின்ற இடத்தில் யாருமில்லை.
அதையும்விட மழை பெரிதாய் பெய்ததில் அந்த இடமும் சரியாய் தெரியவில்லை. அந்தளவிற்கு இருள் வேறு சூழ்ந்துகொள்ள மனது படபடத்தது.
“சேஃபா போயிருப்பான் சௌபி…” என சொல்லிக்கொண்டாலும் மனது கேட்கவில்லை.
மீண்டும் அறைக்குள் சென்றவள் ஒரு டார்ச், ஒரு குடை எடுத்துக்கொண்டு வாசலில் இறங்கி தெருவில் நடந்தாள்.
ஆரோன் ரிஷபன் நின்ற இடம் வந்து நிற்க அங்கே அவன் இருந்ததன் அறிகுறி இல்லை.
கொடி போன்ற செடிகள் படர்ந்திருக்க அதில் வண்ணவண்ண அழகு பூக்கள் இவள் வீசிய வெளிச்சத்தில் புன்னகைத்தது.
“ஹ்ம்ம், அவனை மாதிரியே சிரிப்பை பாரு…” என்றவள் இதழ்கள் வளைய கை நீட்டி அந்த பூவினை பறிக்க முற்பட்டாள் சௌபர்ணிகா.
“ம்ஹூம். இருக்கட்டும். அதது எங்க இருக்கனுமோ அப்போ தான் அழகும் சந்தோஷமும். நீ இங்க இருந்தா தான் உன்னால சிரிக்க முடியும்…” என தன்னைபோல் சொல்லிக்கொண்டவள் தன் வாழ்க்கையுடன் அதனை ஒப்பிட்டு பார்த்தாள்.
அந்த பூவையும், அவள் ரிஷபனையும் பிரித்து பார்க்க தோன்றவில்லை. இது என்ன பைத்தியக்காரத்தனம்?
அவள் காண்பித்த வெளிச்சமும் அவள் முகத்தில் பட்டு ஒளிர புன்னகை அதற்கு இன்னும் அழகு சேர்த்தது.
“உன்னை புரிஞ்சுக்கவே முடியலை பிபி…” என்றான் ஆரோன் ரிஷபன் அவளை தூரத்தில் இருந்து பார்த்தபடியே.
மனதின் துள்ளல் முகத்தில் பிரதிபலிக்க அப்படி ஒரு மகிழ்ச்சியான சிரிப்பு அவனின் அகத்தையும் சேர்த்தே நிறைத்தது.
சிறிதுநேரம் அவள் என்ன செய்கிறாள் என இருந்து பார்த்துக்கொண்டே நின்றவன் சௌபர்ணிகா அந்த இடத்தை விட்டு நகரவும் தானும் ஜன்னலில் இருந்து நகர்ந்து அவள் கண்களுக்குள் அகப்படாமல் விலகி நின்றான்.
மீண்டும் விடுதி நோக்கி வந்துகொண்டிருந்தவளை பார்த்தபடி இருந்தவன் அவள் தலை மறைந்ததும் கைகளை காற்றில் சுழற்றி குத்தி,
“யாஹூ…” என்று சந்தோஷ கூச்சலிட்டான்.
“இத்தனை ஆசையை மனசுல வச்சிட்டு இவ பன்ற சேட்டை இருக்கே?…” என தலையை கோதி சிரித்தவன் வந்து படுக்கையில் விழுந்தான்.
“ஹ்ம்ம், இந்த ட்ரெஸ்ல கூட ப்பா…” என சொல்லும் பொழுதே முகத்தில் ரகசிய புன்னகை.
“புத்தி போகுது பார் உனக்கு?…” என தன்னை தானே கை காண்பித்து கேட்டுக்கொண்டவன்,
“ஆனாலும் தப்பில்லை. நான் மட்டும் பார்த்துக்கலாம்…” என்றும் சொல்லிக்கொண்டான் காதலுடன் அழகாய்.
ஆம், முதன்முதலில் அவளை புடவையில் அல்லாது மேற்கத்திய உடையில் காண்கிறான்.
முட்டி வரையிலான ஷார்ட்ஸ், டிஷர்ட், அதற்கேற்ப ஒரு லெதர் ஜாக்கெட் அணிந்திருந்தவள் தோரணை மனதில் நச்சென்று சென்று அமர்ந்துகொண்டது.
கூந்தலை சுருட்டி உச்சியில் கொண்டையிட்டு ஸ்டிக் ஒன்றை சொருகி இருக்க இந்த தோற்றமும் அவனை அள்ளிக்கொள்வதாய்.
அதைவிட அவள் அழைப்பும், அதன் முகபாவனையும் அவனை மீளமுடியாத மயக்கத்தில் ஆழ்த்தியது.
“ஹப்பா இவ முன்னாடி கொஞ்சம் கெத்தா காமிக்கலாம்ன்னா முடியுதா என்னால? இன்னும் ஒருதடவை ரிஷபன்னு கூப்பிட்டிருந்தா என் இன்ஸ்டென்ட் தவம் கலைஞ்சிருக்கும்…” என முகம் சிவக்க சொல்லிக்கொண்டவன் வெட்கம் அவனுக்கே வெட்கம் வரவழைத்தது.
“வெக்கமாயில்லையாடா ரிஷபா, இப்படி வெட்கப்படற?…” என கேட்டு கேட்டு புன்னகைத்தவன் முகத்தை ஒளித்துக்கொள்ள முடியாமல்,
“ஹைய்யோ…” என தலையணையில் கவிழ்ந்தான்.
“இந்த பிபி மட்டும் ஓகே சொல்லியிருந்தா இந்த நேரம் ஹனிமூனுக்கு வந்திருப்போம். ராட்சஸி. இரக்கமே காட்டமாட்டேன்றா…” என சொல்லி பெருமூச்சு விட,
“அடங்குடா அவளுக்காக தான் வந்திருக்கன்னு தெரிஞ்சா திரும்ப முருங்கைமரத்துல ஏறிப்பா. சரியான வேதாளம்…” என அவனுக்கவனே பேசி, அதட்டி, குழைந்து, நெளிந்து அவஸ்தையில் தத்தளித்துக்கொண்டிருந்தான்.
“நான் எங்க எப்படி இருக்க வேண்டியவன்? ஹ்ம்ம், இந்த லவ் இருக்கே? எல்லாம் என் டாட் சாபம். அவரை…” என உடனே ஸ்டீபனுக்கு அழைப்பு விடுக்க,
“என்ன இந்தநேரம் ரிஷி?…” என்றார் ஆராதனா மகனிடம்.
“அது எப்படிம்மா? உங்க வீட்டுக்காரர் கூட சண்டை போடலாம்ன்னு நான் கால் பண்ணினா உடனே காப்பாத்திடறீங்க?…” என சிரிக்க,
“எதுக்கு சண்டை? அவர் என்ன பண்ணினார்?…” என்ற ஆராதனா,
“அங்க நீ ஓகே தானே ரிஷி?…” என்றார் மகனிடம்.
“என் வாய்ஸ் கேட்டீங்க தானே? எப்படி தெரியுது?…”
“இது பதிலா ரிஷி?…”
“உண்மையா செம்ம டென்ஷன்ல இருக்கேன். வேற என்ன பதில் சொல்ல?…” என சிரித்துக்கொண்டே கூற ஆராதனாவுக்கு புன்னகை.
“டென்ஷனா இருக்கன்னு சிரிச்சுட்டே சொல்றவன் நீயா தான் இருப்ப?…”
“ம்மா…” என இன்னும் சத்தமாய் சிரித்தவன்,
“ஆமா, டென்ஷன் தான். ஆனா கொஞ்சம் நல்ல டென்ஷன். அதான் பாராட்டலாமேன்னு டாட்கிட்ட பேச கூப்பிட்டேன்…” என்றதும்,
“நல்லவேளை…” என்றார் கேலியாய் ஆராதனா.
“சரி விடு. சௌபியை பார்த்தியா?…” என அவர் கேட்க,
“ஹ்ம்ம், உங்க மருமக இருக்கற ஹோட்டல்ல தான் நான் ஸ்டே பண்ணியிருக்கேன். அவ கீழே உள்ள ரூம். நான் பர்ஸ்ட் ப்ளோர். சின்ன ஹோட்டல் தான். ஆனா நீட் அன்ட் கிளீன்….”
“சௌபி உன்னை பார்த்தாளா?…” என கேட்டவர்,
“அங்க இப்ப கிளைமேட் எப்படி இருக்கு? இன்னும் சீசன் முடியலை. மழை பெய்ஞ்சுட்டே இருக்குமே? கவனம் ரிஷி….” என்றார் கொஞ்சம் கவலையுடன்.
“ஹ்ம்ம், இப்பவும் மழை தான். மைண்ட் அவ்வளோ ரிலாக்ஸா இருக்கு. அதோட உடம்புக்கு எதுவும் ஆகாது. ஆனாலும் உங்க மருமக பார்த்துக்க மாட்டாளா?…” என்றவன் குரலில் ஏகத்துக்கும் துள்ளல்.