“ஹ்ம்ம் டாட். இங்க எனக்கு முடியலைன்னா கண்டிப்பா பார்த்துப்பா உங்க மருமக….” என்றவன் சற்றுமுன் தன்னை சௌபர்ணிகா தேடி சென்றதை சொல்ல,
“நீ அங்க தான், அந்த பொண்ணு பக்கத்துல தான் இருக்கன்னு காமிச்சிடு ஆரோன். கஷ்டங்கள் தெரியாம பட்டுக்கலாம். தெரிஞ்சே நம்ம இணைக்கு குடுக்க கூடாது….” என்ற தகப்பனின் கூற்றில் முற்றிலும் உண்மை இருப்பதை உணர்ந்தான்.
ஆனாலும் இந்த கஷ்டம் அவளை அவளில் இருந்து மீட்க தானே? வலி நல்லது என சொல்லி மனதை தேற்றிக்கொண்டான்.
“ஓகே டாட்…” என்று சொல்லி சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தவன் போனை வைத்துவிட்டு படுக்கையில் சாய்ந்தான்.
தன்னை பார்த்ததும், தன்னுடைய பேச்சை கேட்டதும் அவள் கண்களில் வந்துபோன அந்த பரிதவிப்பும், துடிப்பும்.
“ப்ச், ஸாரிம்மா. கொஞ்சம் பொறுத்துக்கோ…” என்று அவளிடம் சொல்வதை போல விழிகளுக்குள் நின்றவளிடம் இதமாய் சொல்ல மனக்கண்ணில் கூட இன்னும் அவள் முகத்தில் கலக்கம்.
ஆனால் கொஞ்சநஞ்சம் இருந்த நிம்மதியும், அமைதியும் தொலைந்து சௌபர்ணிகா உறக்கமிழந்தது தான் மிச்சம் என்பதை போல எங்கு சென்றிருப்பானோ என்ற எண்ணங்கள் மட்டுமே அவளிடம்.
அவனின் வலைதள கணக்கை தொடரவும் முடியாமல், விருப்பமும் இல்லாமல் அவனின் செயல்பாடுகளை கவனிக்க முடியவில்லை.
இல்லை என்றால் அதை வைத்தே அவன் எங்கு வருகிறான், போகிறான் என எல்லாம் அவள் உள்ளங்கைக்குள்.
அன்றைக்கு அங்கே தான் தான் செல்லவேண்டும். மேனேஜர் வேண்டாம் என்று சொல்ல,
“என்ன விஷயம்?…” என்றாள் சௌபர்ணிகா.
“மேம், ரெய்னி சீசன். இப்ப அங்கையுமே தண்ணி அதிகமா வரும். அந்த பாதையில ட்ரக்கிங் போறது இப்ப சேஃப் இல்லை…” என்றார் அவர்.
“நான் எப்பவும் போறது தானே? நோ ப்ராப்ளம். நான் மேனேஜ் பண்ணிப்பேன். அன்ட் இப்ப மழையும் இல்லை. மிஸ்ட் மட்டும் தானே?…” என்று சொல்ல மேனேஜர் யோசித்தார்.
“ஓகே, அப்போ நான் உங்க கூட ஒரு கைட் அனுப்பறேன். சேஃப்ட்டிக்கு தான்…” என்றவரை சௌபர்ணிகா மறுத்து பேசும்முன்,
“உங்களுக்கு தெரிஞ்ச இடமாவே இருந்தாலும் எங்க டூரிஸ்ட் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம் மேம்…” என்றார் அவர் தன்மையுடன்.
அவளால் மறுக்க முடியவில்லை. அதேநேரம் பெரிய இடைஞ்சல் ஒன்றுமில்லை. ஆயிரம் பேர் வந்து செல்லும் இடம் தானே?
இதில் தனக்கு என்ன பெரிதாய் இடைஞ்சல் இருந்துவிடும் என்று தோளை குலுக்கியவள்,
“ஓகே…” என்று சொல்லிவிட்டாள்.
“நீங்க வெய்ட் பண்ணுங்க. இப்ப கார் வந்திரும்…” என்று சொல்லவும் வந்து காத்திருப்போர் இருக்கையில் அமர்ந்துகொள்ள சற்றுநேரத்தில் காரும் வந்துவிட மேனேஜர் அவளின் பின்னே வந்தார்.
“மேம் ஒரு ஆப்ளிகேஷன். எங்க கெஸ்ட் ஒருத்தர் அந்த வாட்டர் பால்ஸ் பாக்க கிளம்பறார். உங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னா அங்க ட்ராப் பண்ணிட முடியுமா? ட்ராப் மட்டும் தான்…” என்று சொல்ல,
“ஹ்ம்ம், ஓகே…” என்று சொல்லியவள் முன்னே சென்றுவிட்டாள்.
காரில் அமர்ந்தவள் கேமராவை தயாராய் உள்ளதா என சரிபார்த்துக்கொண்டிருந்தாள்.
“தேங்க் யூ பாஸ்…” என சிரிப்புடன் மேனேஜரிடம் சொல்லிக்கொண்டு முன்பக்கத்தில் ஏறியவன் குரலில் நிமிர்ந்து பார்த்த சௌபர்ணிகாவிடமும்,
“தேங்க் யூ மேம். ட்ராப் பன்ற பேமென்ட்ல என்னோட ஷேரிங் கண்டிப்பா இருக்கும். டோண்ட் வொர்ரி…” என்றுவேறு சொல்லியவன் அதன்பின் பின்னிருந்தவளை கண்டுகொள்ளவே இல்லை.
அவள் எங்கே அதை யோசிக்க? கடைசியில் தன்னோடு, தான் தங்கியிருக்கும் விடுதியில் தான் இருந்தானா? என அந்த திகைப்பு விலகாமல் அமர்ந்திருந்தாள்.
“லவ்லி ஸீனரி….” என்றபடி ஆரோன் கேமராவினால் அந்த இயற்கை அழகுகளை தன் கையடக்க கருவியில் உள்ளிழுத்துக்கொண்டே வந்தான்.
போதாததிற்கு அந்த ஊரை பற்றியும், செல்லும் இடத்தை பற்றியும் ஓட்டுநரிடமும், உடன் உதவிக்கு வருபவரிடமும் ஓயாத பேச்சுக்கள் வேறு.
பயண நேரம் மொத்தமும் அவனின் குரலும், சிரிப்பும் தான். பேச்சுவாக்கில் கூட சௌபர்ணிகாவிடம் வார்த்தைகளை விடவில்லை.
‘கவனம்டா ரிஷபா’ என உள்ளுக்குள் அவன் சொல்லிக்கொண்ட ஜபம் அவன் மட்டுமே அறிந்த ரகசியம்.
சிலமணித்துளிகளை விழுங்கிக்கொண்டு அவர்கள் இறங்கவேண்டிய இடம் வந்ததும் நன்றி சொல்லி ஆரோன் ரிஷபன் இறங்கிக்கொள்ள,
“மேம்…” என்ற ஓட்டுனரின் அழைப்பில் நிகழ்வுக்கு திரும்பிய சௌபர்ணிகாவும் தலையசைத்து இறங்கிக்கொண்டாள்.
காலையை விட இப்போது அந்த இடத்தின் குளிர் இன்னும் அதிகமாகவே இருந்தது.
இதோ வந்துவிடுவேன் என்பதை போன்று மழை வேறு இருட்டிக்கொண்டு தரையை தொட்டுவிடும் தூரத்தில் நின்றுகொண்டிருந்தது.
எல்லாம் ஒரு அனுபவம். இதுவும் ஒரு அனுபவம் தானே? இதுபோன்ற அனுபவங்கள் அவள் விரும்பும் ஒன்றாகியதால் பெரிதாய் அச்சமில்லை.
அருவியை நோக்கி செல்வதற்கு முன் முகப்பில் ஒரு குடும்பம் நீண்ட மூங்கில் கம்புகளை கைப்பிடிகளாக வைத்துக்கொண்டு விற்பனை செய்ய,
“ஹலோ பாய்ஸ்…” என்றான் அந்த சிறுவர்களை பார்த்து ஆரோன் ரிஷபன்.
உற்சாகம் ததும்ப அவர்களிடம் பேசிவிட்டு பணத்தை தந்து அந்த கைத்தடியை பெற்றுக்கொண்டவன்,
“உங்களுக்கு ப்ரோ?…” என்றான் உதவியாளரிடம்.
“நோ தேங்க்ஸ் ஸார். எனக்கு பழக்கம் தான்…” என அவர் மறுக்க,
“அதனால என்ன? எதுக்கும் வச்சுக்கோங்க…” என்று அவருக்கும் ஒற்றை தன் பணத்தில் வாங்கியவன் முடிந்தது வேலை என்பதை போல முன்னேற,
“மேம் வாங்க…” என்றார் அவர்.
சௌபர்ணிகா முகம் சுண்டி போனது. எத்தனை ஆசையுடன் கிளம்பி வந்தாளோ, அத்தனையிலும் நெருப்பிட்டு கொளுத்துவதை போலிருந்தது ஆரோனின் இந்த செயல்.
முற்றிலும் களையிழந்து போனது சௌபர்ணிகா முகம். அருவியை காணவேண்டும் என்ற எண்ணமே துணி கொண்டு துடைத்துவிட்டதை போலாக விடுதிக்கு திரும்பி விடுவோமா என கூட தோன்றிவிட்டது ஒருகணம்.
“மேம்…” என்று மீண்டும் உதவியாளர் அழைக்கவும் தலையசைத்து தனக்கான கைத்தடியை பணம் கொடுத்து வாங்கிக்கொண்டாள் சௌபர்ணிகா.
சற்று தொலைவில் நின்றபடி அவளின் முகமாற்றங்களை உள்ளுக்குள் கொதிக்கும் உணர்வுகளுடன் பார்த்துக்கொண்டுதான் இருந்தான் ஆரோன்.
“ஏதாவது ரியாக்ஷன் காமிக்கிறாளா வேதாளம், வேதாளம்…” என்று பல்லை கடித்தவன் அவள் பார்க்கும் பொழுது வேறுதிசையில் திரும்பிக்கொண்டான்.
மீண்டும் அவள் மௌனமாகிவிட ஆரோன் வாய் நிற்கவில்லை. பேசிக்கொண்டே நடந்தான் உதவியாளரிடம்.
உண்மைக்கும் இத்தனை வருடங்கள் சௌபர்ணிகா வந்ததற்கும் இந்தமுறை வந்திருப்பதற்குமான வித்தியாசம் ஆரோன் ரிஷபன்.
அவன் பேச்சுக்களும், அதில் லயித்து தூரம் காணாமல் இலகுவாய் செல்லும் இந்த பயணமும் தான்.
குறுகலான பாதை தான். ஆரம்பத்தில் சிலதூரம் கற்களால் ஆன படிகளும், அதன்பின் படிகள் அமைக்க முடியாத இடங்களில் மூங்கில்களால் ஆன பாதை அமைப்பும் இருந்தது.