வானிலையும், மழைக்கான அறிகுறியும் இருந்ததனால் பெரும்பாலும் அந்த பகுதிக்கு ஆட்கள் மிக மிக குறைவாகவே இருந்தனர்.
மேலிருந்து கீழே நாற்பது நிமிடங்கள் போல செல்லக்கூடிய பாதை தான். கடினமானதும் கூட.
லேசாய் மழை தூற துவங்கியதும் அங்குமிங்குமாய் வந்துகொண்டிருந்தவர்களும் பாதியில் மேலே ஏறிவிட்டனர்.
“பின்னாடி சிலர் வந்திட்டிருந்த மாதிரி இருந்ததே?…” என ஆரோன் திரும்பி பார்க்க அவன் பின்னிருந்த சௌபர்ணிகாவும் திரும்பி பார்த்தாள்.
“மழை பெருசாகவும் வாய்ப்பிருக்கு ஸார். அதான் திரும்பி போயிருப்பாங்க. இப்பவும் ஒன்னும் பிரச்சனை இல்லை. பத்து நிமிஷம் தான் நாம வந்திருக்கோம். இன்னும் அரைமணி நேரம் கீழே இறங்கனும். இந்த மழையோட போகனுமா?…” என அவர் கேட்க,
“நீங்க வேணா கிளம்புங்களேன் ப்ரோ…” என்றான் அவன் புன்னகை குறையாமல்.
“ஓகே வாங்க…” என அவர் அதற்கு மேல் திரும்புவதை பற்றி பேசவில்லை.
அவ்வப்போது சௌபர்ணிகாவிடமும் அவர் பேச அவள் அவருக்கு பதில் சொல்ல என்று அருவியை நெருங்கிவிட்டனர்.
பாதியில் தூறல் நிற்கவும், மீண்டும் பெய்யவுமாக இருக்க அந்த குளுமையே அலாதியாக இருந்தது.
ஓரிடத்தில் மிக மிக குறுகிய ஒற்றையடி பாதை போல மூங்கில் கட்டையும், அதன் கீழ் பாறைகளும், பிடித்துக்கொள்ள மூங்கில் கைப்பிடி தடுப்புகளும் என்றிருக்க ஆரோன் ரிஷபன் லேசாய் ஒதுங்கி நின்றான்.
“நீங்க நடங்க ப்ரோ, இதை ஒரு ஸ்நாப் எடுத்துட்டு வரேன்…” என்று சொல்லியவன் அவர் நகரவும், திரும்பி சௌபர்ணிகாவை பார்த்தான்.
“உங்களையும் தான் மேம்…” என்றான் அவளை பார்த்து.
“நீங்க எடுங்க ஸார். நான் என்ன பன்றேன்?…” என்றாள் அவள் எரிச்சலாக.
அத்தனைநேரம் அவளிடம் ஒற்றை வார்த்தை கூட பேசாமல் அவளை தவிர்த்திருக்க உலையாய் கொதித்துக்கொண்டிருந்தவள் வாயில் அல்வாவை போல சென்று விழுந்தான்.
“என்ன பன்றீங்கன்னு அவசியம் சொல்லனுமா? எனக்கு டிஸ்டர்ப் பன்றீங்கன்னு தோணுது. இப்படி வரீங்களா?…” என்றான் பல்லை கடித்து.
“இது ஒன்னும் நீங்க கூட்டிட்டு வந்த ட்ரிப் இல்லை. உங்க இஷ்டத்துக்கு முன்னாடி போ, பின்னாடி போன்னு சொல்ல…”
“ஆமாம்மா, நீங்க கூட்டிட்டு வந்ததுன்னே வச்சுக்கோங்க. இப்ப எனக்கு இந்த ட்ரிப்பே வேண்டாம். நான் மேல போறேன். நீங்க பார்த்துட்டு வாங்க…” என சொல்லவும் சுருக்கென்றானது அவளுக்கு.
“பக்கத்துல வந்திட்டு இப்ப பார்க்காம போறேன்னு சொல்றது விதண்டாவாதம். என் மேல கோபமிருந்தா ஏன் அதை இதுல காமிக்கனும்?…” என்றாள் ஆதங்கத்துடன் சௌபர்ணிகா.
“உங்க மேல எனக்கென்னங்க கோபம்? நான் யாரோ. ப்ச், இப்படி வந்தீங்கன்னா நான் ஸ்நாப் எடுத்துட்டு வருவேன். இல்லைன்னா வழி விடுங்க. மேல போறேன்…” என்று சொல்ல,
“ஓகே, நீங்களும் பார்க்கவேண்டாம். நானும் பார்க்கவேண்டாம். சேர்ந்தே போவோம்…” என திரும்பியவளை பார்த்து அதிர்ந்தவன்,
“உன்னை…” என அதட்டியபடி ஒற்றை கையால் இழுத்து தூக்கி கீழே நிறுத்தினான் தனக்கு முன்னே.
“எவ்வளோ ரிஸ்க்கான பாதை. விளையாடிட்டிருக்க நீ? நட முன்னாடி. எதுவானாலும் என் கண் முன்னாடி போ…” என்று சொல்லியவன் கோபத்தில் உள்ளூர அப்படி ஒரு தித்திப்பு சௌபர்ணிகாவிற்கு.
மழையினால் கீழே பாதை நசநசவென்று இருக்க எங்கே வழுக்கி விபரீதமாகி போனால் என்ன செய்வது என அவளை தன் கண் முன் நிறுத்த,
“என்னவாம் திடீர் அக்கறை?…” என்றாள் சௌபர்ணிகா நக்கலாக.
“எனக்கென்ன அக்கறை? நீ கீழ விழுந்தா என் மேல தான் வந்து விழுவ? நான் பலியாக தயாரில்லை…” என்றான் தோளை குலுக்கி.
“யூ…” என்று நறநறத்தபடி அவனின் கழுத்தை பிடிக்க போனவள்,
“போடா…” என்று சொல்ல அவளின் கோபத்தில் அப்படி ஒரு புன்னகை அவனின் முகத்தில்.
“ஹேய் பிபி, உன் ஜீன்ஸ் எங்க பிராண்ட் தானே?…” என்று கேட்க அதற்கும் அவள் முகம் ஜிவுஜிவுத்தது.
“நான் வேண்டாம், என் ஜீன்ஸ் மட்டும் வேணும்? எந்த ஊர் நியாயம்?…” என்று அவன் பேசிய நியாயத்தில் அவள் வாயை பிளக்க,
“இப்பவே எல்லாம் கேட்கமாட்டேன். கொஞ்சம் வள்ளல் பரம்பரை நாங்க…” என்று அவன் கண் சிமிட்டியதும், சௌபர்ணிகா முகம் குப்பென்று சிவந்து போனது.
“நான் காசு குடுத்து வாங்கியிருக்கேன்…” என்றாள் அவனிடம் தன் முகபாவனையை காண்பித்துகொள்ளாமல்.
“இருந்தாலும் நீ ரொம்ப ரோஷக்காரின்னு நினைச்சேன்…” என்றான் அவளை சீண்டும் விதமாய்.
அதுவரை அவளிடம் பேசாமல் கட்டுப்படுத்தி வைத்திருந்த இறுக்கங்கள் தளர்ந்து இலகுவாகினான் ஆரோன் ரிஷபன்.
அவனின் மனதின் உற்சாகம் மீண்டுவிட்டதை போலிருந்தது அவளோடு அப்படி பேசுவதினால்.
“பார்த்து போ. கனவு கண்டுட்டே போகாம…” என்று பின்னால் வந்துகொண்டே அவளை வாட்டிக்கொண்டிருந்தான்.
அவன் பேச்சுக்கள் ஒவ்வொன்றும் சௌபர்ணிகா மனதில் சாரலடிக்க செய்ய அதனில் முழுமையாய் அனுபவித்தபடி நடந்தாள்.
மழை நின்றுவிட்டது சுத்தாமாய். ஆனால் அருவியில் இருந்து வீசும் ஈரக்காற்று உடலை பதம் பார்க்க லேசாய் நடுக்கம் அவளுடலில்.
இத்தனை வேகத்தில் அவள் இந்த அருவியை கண்டதில்லை. கிட்டத்தட்ட வெள்ளம் போல் இருந்தது.
“ஹ்ம்ம், ஓகே…” என்று சொல்லியவள் அந்த இடத்தை பார்வையிட்டபடி கேமராவால் படம்பிடிக்க ஆரோன் ரிஷபன் அந்த அருவியின் அருகில் செல்ல பார்த்தான்.
“ஸார்…” என்ற உதவியாளரின் குரல் அந்த இரைச்சலில் அவனை சரியாய் எட்டவில்லை.
“ஸார்…” என அவர் அருகில் சென்று சொல்ல போக,
“நான் கூப்பிடறேன். இதை பிடிங்க…” என்ற சௌபர்ணிகா தனது கேமராவை, பேக்கை நீட்டிவிட்டு வேகமாய் செல்ல சென்ற வேகத்தில்,
“ரிஷபன் இது…” என அவன் தோள் தொட்டதும் அவன் திரும்ப சௌபர்ணிகா கால் இடறி தண்ணீரில் விழுந்துவிட்டாள்.
விழுந்தவள் பிடிமானத்திற்கு ஆரோன் ரிஷபனை பிடித்திருக்க இருவரும் சேர்ந்தே நீரில் மூழ்க நொடிநேரத்தில் நிகழ்ந்துவிட்ட விபரீதம் அது.
உதவியாளர் பதறி போனார். கையிலிருந்ததை போட்டுவிட்டு வேகமாய் அவர்களை நோக்கி வர ஆரோன் அங்கிருந்த பாறையின் கிடங்கை பிடித்துக்கொண்டான்.
நீரின் சில்லிட்ட குளிர் உடலை உறைய வைக்க முதலில் நீரோடு அதன் வேகத்திற்கு இழுத்துச்செல்லப்படாமல் இருக்க பிடிமானத்தை ஒருகையில் பற்றிக்கொண்டவன் கால்களும் நீரில் அலைந்து பாறையின் இடுக்கில் நின்றுகொண்டது.
இன்னொரு கையால் சௌபர்ணிகாவை அழுத்தமாய் அணைத்து பிடித்திருந்தவன் கைகள் இறுக்கத்தை கூட்டிக்கொண்டே செல்ல,
“ஐம் ஆல்ரைட் ரிஷி…” என்றாள் சௌபர்ணிகா.
விழுந்த அந்தநொடி தான் அதிர்ச்சி எல்லாம். அடுத்த நொடி சுதாரித்துக்கொண்டவள் பாறையை பற்றிக்கொள்ள அவளுக்கு பழக்கமான ஒன்று என்றறிந்தவன் நிம்மதியாகி அவளை முதலில் மேலே ஏற்றி தானும் ஏறி வர நடுக்கத்துடன் அவனை பார்த்தாள்.
“ஹ்ம்ம், நைஸ் ட்ரிப். அன்ட் இந்த மேகாலயா த்ரில்லிங் மொமென்ட் என் லைப் லாங் நான் மறக்கமாட்டேன். தேங்க்ஸ் பிபி…” என்று கண் சிமிட்ட,
“கொழுப்பு…” என்று சொல்லியவள் நடுங்க,
“ஆனா ஒரு நிமிஷம் உயிரே போயிருச்சு…” என்று சொல்லியவன் முகத்தில் அதன் சுவடு அப்பட்டமாய்.
“கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்க ஸார். இப்படி வந்து உட்காருங்க. இதோட மேல ஏறி போக முடியாது…” என உதவியாளர் சொல்ல தலையசைத்து இருவரும் அவர் காண்பித்த இடத்தில் வந்தமர்ந்தனர்.
“நான் ரெக்கார்ட் பன்றேன். நீங்க ரெஸ்ட் எடுங்க…” என்று அவர் கேமராவுடன் எழுந்து செல்ல சௌபர்ணிகா முகத்தில் வெட்கத்துடன் சிறு வலியும்.
கால்கள் பாறையில் பொத்தென்று விழுந்ததில் அடி பட்டிருக்க விண்ணென்று வலித்தது.
“ரொம்ப இறுக்கி அணைச்சிட்டேனோ? வலிக்குதா?…” என ஆரோன் ரிஷபன் கள்ளப்புன்னகையுடன் கேட்க,
“ஷட்அப் ரிஷி. இப்ப வாயை மூடலைன்னா இந்த தண்ணில திரும்ப தள்ளி விட்டுடுவேன்…” என நாணமும், நடுக்கமுமாய் அவள் சொல்ல,
“ஓகே, வா, தள்ளிவிடு…” என்றவன் சிரிப்பில் அவன் முகம் பாராமல் திரும்பிக்கொள்ள ஆரோன் ரிஷபனின் கைகள் சௌபர்ணிகாவின் விரல்களை வருடியது.
சில நொடிகளுக்கு மேல் அவனின் ஸ்பரிசம் உணர்வுகளில் தீ மூட்ட, சட்டென எழுந்துகொண்டவள் குளிருக்கு இதமாய் கைகளை கட்டியபடி முன்னே நடக்க இதழ்களுக்குள் நெளிந்த புன்னகையுடன் அவளை பின்தொடர்ந்தான் ஆரோன் ரிஷபன்.