“இப்ப மட்டும் நான் கீழே விழுந்தா உங்களுக்கு ஒன்னுமில்லையா?…” என்று அவள் முறைப்பும், நக்கலுமாக கேட்க,
“ஒருதடவை விழுந்தாச்சுல, பயம் போயிருச்சு. அடுத்து பழகிரும். நான் மேனேஜ் பண்ணிப்பேன். வேணும்னா ஒரு ட்ரையல் பார்ப்போமா?….” என்று அவன் கண் சிமிட்டி இரு கைகளையும் நீட்டினான்.
‘என்னென்ன சேட்டை பன்றான்? ராஸ்கல்’ என பல்லை கடித்தவள் இதழ்கள் சிரிப்பை விழுங்கிக்கொண்டது.
“ஹலோ கொழுப்பா, கையிருக்காது…” என்று மிரட்டலாய் சொல்ல,
“ஹலோவா? ஓகே மேம்…” என்று சொல்லியவனின் முகமாற்றத்தில் அயர்ந்து போனாள் சௌபர்ணிகா.
“வேற ப்ளான் இருக்கா, இல்லை கிளம்பலாமா மேம்?…” என்று உதவியாளர் அவளிடம் கேட்க சௌபர்ணிகா பார்வை ஆரோனிடம் சென்றது.
இவர்களை கண்டுகொள்ளாததை போல எதிர்பக்கம் சென்று நின்றான் வேறு வாகனம் எதுவும் வருகிறதா என பார்த்து.
“அவர் வரும்போதே சொல்லிட்டார் மேம், ட்ராப் மட்டும் தான்னு. வேற ப்ளான் இருக்கும் போல?…” என சௌபர்ணிகா பார்வையை வைத்து அவளிடம் ஆரோனை சொல்ல,
“மழை விட்டு விட்டு பெய்ஞ்சாலும் பெருசா இருக்கு. இதுல எங்க போகமுடியும் இவங்களால?…” என்றாள் அவரிடம் வேகமாய்.
“மேம்…” என கைட் திகைத்து பார்க்க,
“நான் பேசறேன். அவர் சிரபுஞ்சிக்கு புதுசு போல. அதான் தெரியலை…” என சொல்லிவிட்டு அவனை நோக்கி சென்றாள்.
சௌபர்ணிகா அருகில் வந்து நின்றும் அவள் புறம் திரும்பாமல் செல்லும் ஒருசில வாகனங்களை நோக்கி கை காண்பித்தபடி நின்றான்.
“இந்த நேரம் இந்த இடத்துல அப்படி யாரும் லிப்ட் தரமாட்டாங்க…” என்று சௌபர்ணிகா சொல்ல,
“ஸோ வாட்?…” என்றான் இந்த முறை அவன் முறுக்கிக்கொண்டு.
‘ஸ்யப்பா ஒரு ஹலோவுக்கா இந்த பாடு? வச்சு செய்யறானே? போய் தொலையட்டும்ன்னா முடியுதா?’ என ஆயாசமாய் பார்த்தவள்,
“இப்ப வேற ப்ரோக்ராம் எதுவும் வேண்டாம். சேஃப் இல்லை…”
“இதையே தான் மேனேஜர் உங்ககிட்ட சொன்னார் மேம். நீங்க கேட்டீங்களா மேம்?…” என வார்த்தைக்கு வார்த்தை மரியாதை தந்து தள்ளி நிறுத்த,
“ஹைய்யோ ரிஷபன், என் பிபி ஏறுது. படுத்தாம கிளம்பி வாங்க. மழைல ரொம்ப நேரம் நனைஞ்சிட்டோம். போதாதுக்கு அருவில வேற விழுந்தாச்சு…”
“சின்ன கரெக்ஷன். அருவி வெள்ளத்துல நீங்களும் விழுந்து என்னையும் தள்ளிவிட்டீங்க….” என்றவன்,
“எப்பவும் உண்மையை பேசவே மாட்டீங்களா? நடக்கிறதும், நினைக்கிறதும் ஒண்ணு. பேசறது ஒண்ணு. ஐ ஹேட் திஸ்…” என்று சொல்ல,
“சரி நான் தான் தள்ளிவிட்டேன். போதுமா? இப்ப கூட வரமுடியுமா முடியாதா?…” என்று முறைப்பை காண்பித்துவிட்டாள் அவன் படுத்தும் பாட்டில்.
“ஏன் சென்னை பீச்ல மழை பெய்ஞ்ச அன்னைக்கும் கூடத்தான் நான் வரலை. எப்படி கூட்டிட்டு போனீங்களாம்?…” என்று நமுட்டு சிரிப்புடன் அவன் கேட்டதும் சுர்ரென்று ஏறியது.
“யோவ் போயா…” என்றவள் விறுவிறுவென காரை நோக்கி எதிர்திசையில் நடக்க சாலையில் இன்னொரு வாகனம் வருவதை கவனிக்கவில்லை அவள்.
“ஹேய் பிபி…” என்று கண்ணிமைக்கும் நேரத்தில் இன்னொரு வாகனத்தின் சீறலில் இருந்து தன்னை நோக்கி இழுத்திருந்தான் ஆரோன் ரிஷபன்.
“ரிஷி…” என்ற அலறலுடன் அவன் அணைப்பினுள் நின்றவள் நிதானிக்கவே சிறிது அவகாசம் தேவைப்பட்டது.
“ஹ்ம்ம், ஓகே…” என்று மெல்ல அவனின் கைகளுக்குள் இருந்து விலகி நின்றாள் கூச்சத்துடன்.
“பார்த்து வாங்க மேம். கவனிக்காம விட்டுட்டீங்களே?…” என்று சொல்லி கைட் முன்னே நடக்க சௌபர்ணிகாவிற்கு அதிர்ச்சியில் கண்ணீர் கரை கட்டிவிட்டது.
முயன்று தன்னை சமாளித்துக்கொண்டவள் ஆரோனின் துளைக்கும் பார்வையை உணர்ந்து திரும்பி பார்த்தாள்.
“ஒரே ஒரு செகென்ட். சுதாரிக்கலைன்னா மொத்தமா க்ராஷ். இந்த உயிர் உடம்புல இருக்கற வரைக்கும் தான் எல்லாமே. சொடுக்கு போடறதுக்குள்ள நம்மை மீறிய விஷயங்கள் நடந்து முடிஞ்சிரும். அதுதான் வாழ்க்கை. இதுக்கு உனக்கு இவ்வளோ அடம்…” என்று அவளை கண்டனத்துடன் பார்க்க,
“அப்படி கூட விட்டிருக்கலாம் போல?…” என்றாள் சௌபர்ணிகா.
“ஓஹ், மேடம்க்கு அந்த நினைப்பு வேறையா? ஓகே, இங்கயே வெய்ட் பண்ணு. இன்னொரு கார் வரட்டும். நானே பிடிச்சு தள்ளி விடறேன். உன் வீட்டுக்கு நானே பொட்டலம் கட்டிடறேன். ஓகே வா?…” என்றான் நெருப்பை உமிழும் விழிகளுடன் பல்லை கடித்து கொண்டே.
“இட்ஸ் பெட்டர்…” என்று சொல்லி அவனருகே அவளும் நின்றுகொள்ள,
“அடம் அடம். உன்னை என்னதான் பன்றது? வா…” என இந்தமுறை அவளை கையை பிடித்து அவன் இழுத்துக்கொண்டு காருக்கு சென்றான்.
இலகுவாய் அவனின் அழைப்பிற்கு இணங்கி அவள் நடந்து செல்ல பின்னிருக்கையில் தள்ளியவன்,
“ப்ரோ, நீங்க முன்னாடி உட்காருங்க…” என்று உதவியாளரை முன்பக்கம் அமர சொல்லி சௌபர்ணிகா அருகில் தான் அமர்ந்துகொண்டான்.
“நான் கூட தமிழ்ன்னு நினைச்சு தான் நீங்க நல்லா பேசறீங்கன்னு நினைச்சேன். ரெண்டுபேரும் முன்னாடியே தெரிஞ்சவங்களா ஸார்?…” என்றார் கைட்.
“அவ்வளவா தெரியாது. கொஞ்சம் தெரியும்…” என்றான் ஆரோன் அவரிடம்.
சௌபர்ணிகா எதையும் கண்டுகொள்ளாமல் ஜன்னலோரம் நகர்ந்து அமர்ந்துகொள்ள அவளை பார்த்துக்கொண்டே கைடின் கேள்விக்கு பதில் கூறினான் ஆரோன் ரிஷபன்.
“ஓஹ் ஓகே…” என்று கைட் சொல்ல,
“கொஞ்சம்ன்னா காதலிக்கிற அளவுக்கு தெரிஞ்சவங்க….” என்று ஒரு குண்டை வீச சௌபர்ணிகா திடுக்கிட்டு பார்த்தாள். கூடவே கைடும்.
“இன்னும் கொஞ்சம்ன்னா கல்யாணம் பண்ணிக்கிற அளவுக்கு…” என்று அசராது சொல்லியவன்,
“மேடம் வேற யாருமில்லை. என் வொய்ப் தான். மிஸஸ். ஆரோன் ரிஷபன். அதான் கொஞ்சம் தெரியும்…” என்று அடுத்த குண்டை வீசினான் அசால்ட்டாக.
“ரிஷி…” என்றவள் அவனின் வாயை அடைக்க பார்க்க,
“இந்த கொஞ்சத்துக்கு தான் மேடம் கோவிச்சிட்டு மேகாலயா வரை வந்துட்டாங்க…” என சிரிக்காமல் சலிப்புடன் அவன் சொல்ல,
“ரிஷி…” என பல்லை கடித்தவள் அவனின் வாயை கைகொண்டு அடைக்க பார்த்தாள் மீண்டும்.
“ஓஹ், ஹஸ்பண்ட் அன்ட் வொய்ப் பைட்டா?…” என கைட் சிரித்துக்கொண்டே பேச,
“ஆமாமா, உலக போர் ரேஞ்ச்ல பைட் நடக்குது. இந்த பொண்டாட்டிங்களே இப்படித்தான் போல? எவ்வளோ கஷ்டம் சம்சார வாழ்க்கை?…” என்று அலுப்பாய் சொல்ல சொல்ல சௌபர்ணிகா ரத்த அழுத்தம் ஏறியது.
“முதல்லையே சொல்லியிருந்தா வரும்போதும் நீங்க பின்னாடி உக்கார்ந்திருக்கலாம். மேடம் நீங்க ஆப்போஸிட் சைட்ல போய் நிக்கவுமே நான் கூட்டிட்டு வரேன்னு சொன்னதுக்கு காரணம் இப்ப தான் புரியுது…” என்று கைட் சிரிக்க சௌபர்ணிகா செய்வதறியாது பார்த்தாள்.
“ஏன் இப்படி பன்றீங்க?…” என அயர்ச்சியுடன் ஆரோனிடம் மெல்லிய குரலில் கேட்க,
“நான் சொன்னது இல்லைன்னு சொல்லுவியா நீ?…” என்றான் அவன் ஆழ்ந்த குரலில்.
“ஓகே சொல்லனும்னா சொல்லிக்கோ. நான் வேணும்னா ஸாரி கேட்டுட்டு இன்னைக்கே இங்க இருந்து கிளம்பிடறேன். உன்னை டிஸ்டர்ப் பண்ணாம….” என்றவனை விழிகளில் வலியுடன் அவள் பார்த்தாள்.
“சொல்லேன். நான் உனக்கு யாருமே இல்லைன்னு. இந்த கைட் என்ன நினைக்க போறார்? முன்னபின்ன தெரியாத பொண்ணை பொண்டாட்டின்னு சொல்றான்னு என் செவிட்டுல நாலு விட்டு கீழே இறக்கி விடுவார். அவ்வளோ தானே?…” என்றவன்,
“சொல்லும்மா. என்ன பெருசா கஷ்டம் வந்திட போகுது? எங்கம்மாவும், பாட்டியும் உன்னை பார்த்துடக்கூடாது, கல்யாணம் பேசிடக்கூடாதுன்னு உயிரையே வெறுத்து ஆக்ஸிடன்ட் பண்ணிக்கிட்ட தானே? இதென்ன பெரிய விஷயம்?…” அவள் காயத்தில் தேள் கொடுக்காய் கொட்டினான்.
“என்னை ரொம்ப ஹர்ட் பன்றீங்க நீங்க…” சௌபர்ணிகா குரல் சற்றே உயர்ந்துவிட அவளை அசையாது பார்த்தவன் பார்வை முன்னிருந்தவர்களையும் ஒருநொடி தொட்டுவிட்டு வர அவன் விழியசைவை கொண்டே அதன் அர்த்தத்தில் மௌனமாகிவிட்டாள்.
வார்த்தைகளில் விளக்காமல் பார்வையில் அவனை புரிந்துகொள்பவளின் இந்த தன்மையில் இன்னுமின்னும் அவள்பால் ஈர்க்கப்பட்டவன் இதழ்கள் மெல்லிய முறுவலை காண்பித்தது.