“கல்யாணத்துக்கு புடவை எடுக்க வந்திருப்பாங்க போல?…” என்று சபர்மதி சொல்ல இதயம் அதன் துடிப்பிலிருந்து பலநூறு முறை துடித்தடங்கியது.
“ஓகே, நான் சந்தனாவை போய் பார்க்கறேன்…” என்று மகளை தனித்து விட்டு எழுந்து சென்றதும் சௌபர்ணிகா துளசிக்கு அழைத்தாள்.
“மேம்…” என அவள் அழைத்ததும்,
“விவாஹா ஃப்ளோர்ல…”
“ஆரோன் ஸார் அம்மாவும், பாட்டியும் மேம். நான் பார்த்து பேசிட்டேன். நான் தான் கூட்டிட்டு போய் விட்டுட்டு வந்தேன்….” என துளசி அவள் கேட்காமலேயே சொல்ல,
“குட்…” என்று மட்டும் சொல்லிய சௌபர்ணிகா அடுத்து கேட்கும் முன்,
“ஸார்க்கு கல்யாணம் போல. பொண்ணு பார்த்துட்டாங்களாம். அதான் நிச்சயத்துக்கு புடவை எடுக்க வந்திருக்காங்க. அந்த பாட்டி தான் என் பேத்திக்கு அப்படி எடுக்கனும், இப்படி எடுக்கனும்ன்னு சொன்னாங்க…” என்று சொல்ல எச்சிலை கூட்டி விழுங்கினாள் சௌபர்ணிகா.
“சரி பார்த்துக்கோ…” என்று சொல்லி வைத்துவிட்டாள்.
‘ரிஷபன் சொல்லியது உண்மை தான் போல?’ என நினைத்தவளுக்கு கண்கள் கலங்கினாலும் அதனை முயன்று விழுங்கிக்கொண்டாள்.
மனமெல்லாம் அவனின் நினைவுகள் அலைமோதியது. விரட்ட முடியாமல் சோர்ந்து தளர்ந்து கண்களை மூடிக்கொண்டவள் மீண்டும் தொலைபேசி அழைப்பில் தன்னுணர்வு திரும்பினாள்.
“மேம், உங்களை பார்க்க முடியுமான்னு கேட்கறாங்க…” என துளசியின் குரல்.
“யார் கேட்கிறாங்க? மொட்டையா தான் சொல்லுவியா? யாருன்னு சொல்லமாட்டியா?…” என்று அவளிடம் எகிற,
“வேறொண்ணுமில்லம்மா, என் பேரனுக்கு பொண்ணு பார்த்திருக்கோம். இன்னும் பத்து நாளைக்குள்ள நிச்சயம் செய்யலாம்ன்னு இருக்கோம். அதான் புடவை எடுக்கலாம்ன்னா எல்லாமே பார்த்த மாதிரியே இருக்கு. இன்னும் பெட்டரா வேணுமே?…” என்று சொல்ல என முயன்றும் சௌபர்ணிகாவால் தன் முகமாற்றத்தை தவிர்க்க முடியவில்லை.
“ஹாங், சொல்லுங்க…” என தொண்டையை செருமியபடி அவள் சொல்ல ஆராதனாவிற்கு வருத்தமாக இருந்தது.
ஆனாலும் என்ன செய்ய முடியும்? பாட்டியும், பேரனும் சேர்ந்துகொண்டு போட்ட திட்டங்கள். ஒன்றும் செய்யமுடியவில்லை அவரால்.
“இங்கன்னா புது மாடல் நல்லா இருக்கும்ன்னு வந்தாலும் மனசுக்கு திருப்தி வேணும்ல. ஆடர் குடுத்ததா புது டிஸைன்ல நெய்ஞ்சு தருவீங்கன்னு சொன்னாங்க. அதான் உன்னை பார்க்கலாமேன்னு கூப்பிட்டேன்…” என பொன்னரசி சொல்ல சௌபர்ணிகாவால் அங்கே அமரவே முடியவில்லை.
“ஹ்ம்ம், பண்ணிடலாம்…” என்றாள் வார்த்தைகளை இழுத்து பிடித்து அவர்களுக்கு பதிலாக.
“ரொம்ப சந்தோஷம். என் பேரனுக்கு வர போற பொண்ணு அம்புட்டு அழகு. முதல்ல அவன் நினைச்சது தான் நடக்கலை. இந்ததடவை நாங்க நினைச்சது நல்லபடியா நடத்தி குடுக்கனும்ன்னு கடவுள்கிட்ட வேண்டிட்டு இருக்கோம்…” என்ற பொன்னரசி,
“நல்ல கலர்ல இதுவரைக்கும் யாருமே கட்டியிருக்க முடியாத மாதிரி ஒரு சேலையை நெஞ்சு குடும்மா. என் பேரன் கல்யாணத்துக்கு முதல் அழைப்பு உனக்கு தான்…” என்று சொல்லி சிரிக்க சௌபர்ணிகா முகத்தை பார்க்க முடியவில்லை ஆராதனாவால்.
அவரால் மட்டுமா? பொன்னரசியின் கைபேசியில் இருந்து நேரடியாக பார்த்துக்கொண்டிருந்த ஆரோனுக்குமே உள்ளம் துள்ளி துடித்து எம்பியது.
கன்றி சிவந்துவிட்ட முகம் வியர்த்துவிட்டிருக்க அவள் படும் அந்த தவிப்புகளை கண்கொண்டு காணமுடியவில்லை அவனால்.
ஆனால் பார்த்தபடியே இருந்தான் அவன். விலகாத பார்வை. அவளிடம் மட்டுமே நிலைகொள்ளும் பார்வை.
“ஹ்ம்ம், கண்டிப்பா பண்ணிடலாம். ஒரு ரெண்டு நாள் டைம் குடுங்க. டிஸைன் பண்ணிட்டு நான் உங்களுக்கு அனுப்பறேன். அதுல உங்களுக்கு எது வேணுமோ சூஸ் பண்ணுங்க. டைம்க்கு பண்ணிடலாம்…” என்றாள் சௌபர்ணிகா கரகரத்துவிட்ட குரலில்.
அதற்கு மேலும் அங்கிருந்தால் பொன்னரசி பேசியே அவளை அழ வைத்துவிடுவாரோ என்று ஆராதனா அவரை எழுப்பிக்கொண்டு கிளம்பிவிட்டார்.
“என்ன அதுக்குள்ள? பொண்ணு போட்டோவை காமிச்சா தானே அதுக்கேத்த மாதிரி இந்த பொண்ணு வரையும்?…” என்று பொன்னரசி அலம்பலை கூட்ட,
“சோலி முடிஞ்சிரும் போல? பாட்டி…” என அங்கே ஆரோன் பல்லை கடிக்க,
“இல்லைம்மா, அதான் சொன்னீங்களே இதுவரைக்கும் இல்லாத டிஸைன். உங்க பேத்தி அழகு. இது போதும். நான் டிஸைன் பண்ணிடுவேன். உங்களுக்கு திருப்தி இல்லைன்னா சொல்லுங்க. வேற பன்றேன்…” என்று சொல்லி அனைவரையும் காப்பாற்றிவிட்டாள் சௌபர்ணிகா.
“அச்சோ அழகு சமத்துடி நீ…” என அங்கே ஆரோன் அவளை கொஞ்சிக்கொண்டான்.
இல்லை என்றால் கண்டுகொண்டிருப்பாளே? அவள் மறுத்ததற்கு காரணமும் அவனால் உணர முடிந்தது.
“சும்மா கூட இன்னொரு பொண்ணை எனக்கானவளா பார்க்க முடியாதோ? நல்லா கதறு….” என சிரித்துக்கொண்டவன் தாயும், பாட்டியும் அங்கிருந்து கிளம்பும் வரை பார்த்திருந்து அழைப்பை துண்டித்தான்.
அவர்கள் கிளம்பியதுமே சபர்மதியை அழைத்து கடையை பார்த்துக்கொள்ளும்படி சொல்லியவள் தங்களின் தறி நெய்யும் இடத்திற்கு கிளம்பிவிட்டாள்.
மகளின் இந்த அலைப்புருதலில் மீண்டும் விபத்து என்றாகிவிட்டால் என உடன் ஓட்டுனரை சேர்த்தே அனுப்பி வைத்தார் சபர்மதி.