மூச்சுக்கு திணறுவதை போலிருக்க அந்த இடத்தில் இன்னும் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாதென எழுந்துகொண்டாள்.
“என்ன ஆரோன்? நெக்ஸ்ட் வீக்கான்னு யோசிக்கிற?…” என்று அவனின் கையை பற்ற,
“நான் கிளம்பறேன்…” என்றாள் சௌபர்ணிகா.
அவளை திரும்பி பார்த்த பிரஷாந்திகாவுக்கு தன்னை இந்த பெண்ணுக்கு தெரிகிறதா என்றொரு சிந்தனையும், மிஸ் சென்னை என்னை தெரியாமலா? என்றொரு கர்வமுமாய் அவளை பார்க்க,
“இரும்மா, போகலாம்…” என்று சொல்லிய ஆரோன் ரிஷபன் எழுந்துகொண்டான்.
“நீங்க வந்ததுல இருந்து பேசினதுல இன்ட்ரோ பண்ண டைமில்லாம போச்சு மிஸ் சென்னை. அவ்வளோ ஸ்பீட் உங்க பேச்சு…” என்று சிரித்தவன் சௌபர்ணிகா அருகில் சென்று நின்று அவளின் தோளோடு அணைவாய் நின்றவன்,
“மீட் மை பியான்ஸி சௌபர்ணிகா. பிரபஞ்ச அழகி…” என்றான் சௌபர்ணிகாவை பார்த்து கண் சிமிட்டி கள்ளமில்லா புன்னகையுடன்.
“எஸ். அன்ட் மிஸ் சென்னை, நெக்ஸ்ட் வீக் எங்க எங்கேஜ்மென்ட். நீங்க சொன்ன டேட்ல நான் பிஸி….” என்றவன்,
“அவுட்பிட் மட்டும் பண்ணிடலாம். நான் டிஸைன் பண்ணி உஷாகிட்ட குடுத்தனுப்பறேன்….” என்று சொல்ல அன்று அவன் வரமாட்டான் என்பதில் பிரஷாந்திகா முகம் சுண்டிவிட்டது.
“எனிவே, கங்க்ராட்ஸ் போத் ஆஃப் யூ…” என்று புன்னகையுடன் சொல்லிவிட்டு,
“சந்தோஷமா இரு. அன்னைக்கு பேசிப்போம்…” என்று அந்த பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைக்க சௌபர்ணிகா மனதில் பலவித யோசனைகள்.
விழாவன்று மாலை அனைவரும் தயாராகி செல்ல ஜெயந்தனிடம் சபர்மதி மேலோட்டமாய் சொல்லிவைத்தார்.
“என்ன? லைம்லைட்ல இருக்கற ஸ்டெயிலிஷ்? அவன் எப்படி?…” என்றவரை தீ பார்வை பார்த்தார் சபர்மதி.
“நீ என்னவேணா சொல்லு. நான் சம்மதிக்கமாட்டேன் மதி. என் பொண்ணோட ப்யூச்சர் இது…”
“அவர் தான் சௌபி ப்யூச்சர். அவ ஆசைப்படறா. எதுவானாலும் போய்ட்டு வந்து விளக்கம் சொல்லுறேன். இப்ப பேசமுடியாது…” என்று சொல்லிவிட ஜெயந்தனுக்கு விருப்பமில்லை என்றாலும் செல்லவேண்டிய நிர்பந்தம்.
சென்னையில் இருக்கும் கடற்கரை ஒட்டிய பங்களாவில் தான் விழா ஏற்பாடுகள்.
அதிகமானோர் இல்லை. வீட்டினர் மட்டுமே. இன்னும் ஒருசிலர் வந்திருக்க கசகசப்பின்றி இதமாய் இருந்தது அந்த மாலை பொழுது.
மஞ்சளும், வெள்ளையுமான விளக்குகளும், அலங்கார வெளிச்சங்களும் மனதை கவர ஆராதனாவும் பொன்னரசியும் சேர்ந்து வந்து வரவேற்றனர்.
ஆரோனை காணவில்லை. சௌபர்ணிகா விழிகள் அவன் எங்கே என்று தேட ஸ்டீபன் தன் மனைவியிடம் மருமகளின் தேடலை காண்பித்தார்.
“ஒரு முக்கியமான கால். இப்ப வந்திருவான் ம்மா…” என்றார் ஆராதனா.
சற்றுநேரத்தில் கேக் கொண்டுவந்து மேஜையில் வைக்கப்பட வெகு சாதாரணமாய் பார்த்தவளின் விழிகள் விரிந்துகொண்டது.
அவளுக்கு சுத்தமாய் ஞாபகம் இல்லை. என்றோ அவன் வலைதள கணக்கில் பார்த்தது. இந்த ஒருவாரமாய் அவள் சிந்தனைகள் வேறு திசையில் இருக்க அந்த பரபரப்பில் பிறந்தநாளை மறந்திருந்தாள்.
அதை ஞாபகப்படுத்த வேண்டியவனோ வெகு இலகுவாய் அவனின் புன்னகை கொஞ்சும் முகத்துடன் வந்து சேர்ந்தான் அவ்விடத்திற்கு.
“ம்மா, நான் கிப்ட் எதுவுமே வாங்கிட்டு வரலையே?…” சங்கடமாய் போனது சௌபர்ணிகாவிற்கு.
முன்பை போலென்றால் பெரிதாக எண்ணவில்லை. இப்போது இருவீட்டிற்குமே விஷயம் தெரியும்.
இருவரின் மனங்களும் பரிமாறிக்கொண்ட பின்னர் வரும் அவனின் முதல் பிறந்தநாள்.
சிறு பரிசை கூட வாங்கி வராமல் இப்படியாகிவிட்டதே என ஆரோனை ஆற்றாமையும், ஆதங்கமுமாய் பார்த்தவள் முகம் பொலிவிழந்து போக,
“கம்…” என்றான் கண்ணமர்த்தி ஆரோன் ரிஷபன்.
“போ சௌபி…” என சபர்மதி சொல்ல,
“இல்ல, நான் எதுக்கு அங்க?…” என அவள் நகரமறுத்தாள்.
“சௌபர்ணிகா…” என்றவனின் குரலில் அவன் விழிகளை சந்தித்தவள்,
“மிஸஸ் சொல்லி கூப்பிடவா?…” என்றான் மிரட்டல் பார்வையுடன் சப்தம் எழுப்பாமல் வாயசைத்து.
“வாம்மா, இங்க வந்து நில்லு…” என்று ஆராதனாவும் சொல்ல,
“அதானே பொண்ணும் மாப்பிள்ளையும் சேர்ந்து நிற்க வேண்டாமா? அப்பத்தானே எல்லாருக்கும் தெரியும். மசமசன்னு நிக்கிற?…” என்ற பொன்னரசி சௌபர்ணிகாவின் கை பிடித்து அழைத்து சென்று அவனருகில் நிறுத்திவிட்டார்.
“பாட்டி ப்ளீஸ்…” என்றவளின் பேச்சுக்கள் எங்கே அவருக்கு கேட்டது.
அவனருகே சென்று நின்றதும் அனைவரும் கைதட்டி கரகோஷம் எழுப்ப வெட்கமும், சங்கடமும் போட்டி போட்டது அவள் முகத்தில்.
“என்ன சில்க் ப்யூட்டி? இன்னைக்கு கூட சில்க் சேரியா? கார்ஜியஸ்….” என்றான் கிசுகிசுப்பாய்.
“ரிஷபன் நான் அங்க போகட்டுமா?…” என்று அவனிடம் கெஞ்சும் குரலில் கேட்க,
“அப்போ பர்த்டே கிப்ட்?…” என்றான் இன்னும் கொஞ்சம் சப்தமாய் கேட்டு.
“ஹேய் என்ன பன்றீங்க? மெதுவா…” என்றவள் மற்றவர்களை பார்க்க முடியாமல் வலது கையால் கழுத்தை தேய்த்தபடி விழிகளை சுழற்றினாள்.