தான் என்ன கேட்க வருகிறோம் என தெரிந்தும் வேண்டுமென்றே அவன் தன்னை திசைதிருப்புவதை கண்டுகொண்டாள் சௌபர்ணிகா.
“அதுக்குன்னு இப்படியா? எங்க போவேன் நான்? உங்ககிட்ட தான் வருவேன் ரிஷபன்…” என்று சொல்ல,
“எப்போ?…” அடுத்த நொடி மீண்டுமொரு கேள்வி ஆரோன் ரிஷபனிடம்.
“எப்போன்னா?…” பதில் கூற முடியாமல் அவள் திகைத்து நிற்க,
“இங்க கல்யாணக்களை எப்பவோ கட்டிருச்சு பிபி. தாலியை நீ எனக்கு காட்டுவியா, இல்லை உனக்கு நானான்னு பாட்டி ஒரே கலாய். மேடம் விருப்பம் என்னவோ?…” என்று அதற்கும் அவளை சீண்ட,
“ரிஷி…” என்றாள் வெட்கத்துடன் சௌபர்ணிகா.
“வெறும் பேர் தானா? வேற எதுவுமில்லையா?…”
“நீங்க எனக்கு வைக்கிற பேரே போதும். இதுல நான் வேற போட்டிக்கா? அதெல்லாம் வேண்டாம்…”
“பார்க்க வரட்டுமா? உன்னை கூல் பண்ணிருவேன்…” என்று அவள் பேசுவதற்கெல்லாம் ஏதோ ஒன்றை சொல்ல,
“ஹப்பா எனக்கு முடியலை. என்னவோ பண்ணுங்க….” என்று சொல்லி வைத்துவிட அவனின் முகத்தில் அப்பட்டமான கள்ளப்புன்னகை.
“இது போதுமே. எதுவுமே சொல்லலைன்னாலே நான் எதாச்சும் செய்வேன். இப்ப பர்மிஷனும் கிடைச்சாச்சு…” என்றவன் எழுந்து நின்று குதித்தவன் பொன்னரசி அந்தபக்கம் வர அவரை அலேக்காக தலைக்கு மேல் தூக்கி சுழற்றிவிட்டான்.
“ஆரா, ஆரா…” என்று அவர் அலறியதெல்லாம் அவன் காதில் எங்கே விழ?
“ரிஷி என்ன பன்ற?…” என்று மகனை வந்து பிடித்து நிறுத்துவதற்குள் பொன்னரசி பாதி மயக்கநிலைக்கே சென்றுவிட்டார்.
“பாட்டியை கீழ விடு…” என்று பொன்னரசியை இறக்கி அமரவைக்க,
“என் தலையெல்லாம் சுத்துதே ஆரா. புடி புடி…” என்று கண்கள் சுழல அவர் இன்னும் தள்ளாடியபடி அசைந்தார்.
“அவ்வளவு வேகமாவா சுத்துது?…” என வாய் பொத்தி ஆரோன் சிரிக்க,
“உதை விழும் பார்த்துக்கோ. தண்ணி கொண்டுவா…” என்று மகனை துரத்தியவர் பொன்னரசியிடம்,
“ம்மா ஒண்ணுமில்லை. உக்கார்ந்துட்டீங்க. அவ்வளோ தான். சரியாகிரும்…” என சொல்ல ஆரோன் தண்ணீருடன் வந்துவிட்டான்.
“குடிங்க முதல்ல…” என தண்ணீரை பருக கொடுத்தும் இன்னும் தலை கிறுகிறுவென சுற்றியது அவருக்கு.
“வேகமா சுத்திட்டேன் போல?…” என ஆரோன் அவரின் கையை பிடிக்க அதற்குள் பொன்னரசி இயல்பிற்கு திரும்பிவிட்டார்.
“சரியா போச்சு…” என்று கூறினாலும் இன்னும் மூச்சுவாங்கியது அவருக்கு.
“சரி இப்ப சொல்லு, அப்படி என்னை இவ்வளோ சந்தோஷம்? பாட்டி கத்தறதும் கேட்காம…” என்று ஆராதனா கேட்க ஸ்டீபனும் வந்துவிட்டார்.
மறுநாள் சபர்மதி வீட்டிற்கு மாலை கிளம்புவதாக முடிவெடுத்து அதனை ஆராதனாவும் அவருக்கு தெரிவித்துவிட்டு வர ஸ்டீபன் மகனின் முன் அமர்ந்திருந்தார்.
அவன் முகத்தில் அவ்வளவு யோசனை. என்னவென தெரியாமல் ஆராதனா அருகே செல்ல,
“இதை பத்தி யோசிக்கலையே டாட்…” என்றான் அவன்.
“ஸோ வாட்? இதுல நமக்கு எந்த ஈகோவும் வேண்டாம். எல்லாருக்குமே அவங்கவங்க முறைப்படி கல்யாணம் செஞ்சுக்க தான் ஆசை இருக்கும். எங்க கல்யாணம் சிம்பிளா ரிஜிஸ்டர் ஆபீஸ்ல நடந்து பொதுவா ரிஷப்ஷன் வச்சுட்டோம். ஆனா சௌபர்ணிகா ஃபேமிலி என்ன நினைத்திருக்காங்கன்னு தெரியாதில்லையா?…” என்றார் ஸ்டீபன்.
“நானும் இதை பத்தி நாளைக்கு பேசலாம்ன்னு இருக்கேன்…” என ஆராதனாவும் சொல்ல,
“நமக்கு பொண்ணு நல்லபடியா எந்த மனவருத்தமும் இல்லாம நம்ம குடும்பத்துக்குள்ள வந்தா போதும் ஆரா. அவங்க என்ன சொல்றாங்கன்னு பார்த்துட்டு நாமலும் அதுபடியே பேசிக்கலாம். அதான் முன்கூட்டியே இதை நான் பேசினது…” என்று மனைவிக்கு அவர் சொல்ல,
“ஓகே…” என்றார் ஆராதனாவும்.
“இங்க பார் ரிஷி, காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கறது மட்டும் பெருசில்லை. அதைவிட அதை சக்ஸஸ்ஃபுல்லா வாழ்ந்து காமிக்கனும்….” என ஆராதனா சொல்ல,
“இது அடுத்தவங்களுக்காக இல்லை ஆரோன். உங்களுக்காக. உங்க காதலுக்காக. சில நேரங்கள்ல நாம விட்டுக்குடுக்கலாம். குறைஞ்சு ஒன்னும் போயிடமாட்டோம். நம்ம இணைக்கு நாம செய்யலைன்னா வேற யார் செய்வா?…” என்று சொல்ல இருவருக்குமே புன்னகையை தான் பரிசளித்தான் அவன்.
அதுவே பெற்றவர்களின் மனதை நிறைத்தது. அவனின் தோளில் தட்டிவிட்டு எழுந்து செல்ல ஆரோனும் தன்னறைக்கு உறங்க சென்றான்.
———————————————–
சபர்மதி சொல்லிய எல்லாம் கேட்டு சௌபர்ணிகா அமைதியாக இருக்க பெருமூச்சுடன் மகளை தன் புறம் திருப்பினார்.
“என்ன செய்யலாம் சௌபி? அவங்க பேசறதுக்கு முன்னாடி இதை நாம பேசி முடிவு செய்யனும். அவங்களை கஷ்டப்படுத்தக்கூடாது. நீ சொல்லு….” என்றார்.
“வேற எதுவும் சொன்னாங்களா ரிஷி அம்மா?…”
“ம்ஹூம். கல்யாண விஷயமா நாள் குறிக்கிறதை பத்தி பேச வரதா சொன்னாங்க. வந்து மத்ததை பேசிப்போம்ன்னு சொல்லியிருக்காங்க….” என்றார் மகளிடம்.
“ம்மா கூப்பிட்டீங்களா?…” என இஷாந்த் வந்துவிட,
“சந்தனா எங்க?…” என்றார் அவர்.
“பிள்ளைங்களோட இருக்கா. வர சொல்லனுமா?…” என அவன் கேட்கவும்,
“இல்லை, நாமலே அங்க போவோம். உன் அப்பாவையும் வர சொல்லு…” என்று சௌபர்ணிகாவை அழைத்துக்கொண்டு மாடியில் உள்ள பால்கனிக்கு சென்றார்.
அங்கே சந்தனா பிள்ளைகளை விளையாட வைத்துக்கொண்டிருக்க, இஷாந்த் ஜெயந்தனை அழைக்க செல்ல சபர்மதியும், சௌபர்ணிகாவும் வர கண்டவள் எழுந்துவிட,
“உட்கார்ம்மா…” என சொல்லி தானும் அமர,
“இல்ல நீங்க இருங்கத்தை. நான் பிள்ளைங்களை தூங்க வைக்கறேன்…” என்று சொல்லி கிளம்ப பார்த்தாள்.
“சௌபி கல்யாண விஷயம் பேசனும். நீ இருக்கவேண்டாமா?…” என்ற கேள்வியில் அவள் மௌனமாக,
“நீயும், இஷாந்தும் தானே எடுத்து செய்யனும். நழுவி கிளம்பற?…”
“அச்சோ அதெல்லாம் இல்லைத்தை….” என்றவள் வேறு எதுவும் பேசாமல் மௌனமாக இஷாந்த் மட்டுமே வந்தான்.
“எங்க அப்பா?…” என சபர்மதி கேட்க,
“அப்பாவுக்கு டயர்டா இருக்காம். நீங்க பேசுங்க. மார்னிங் கேட்டுக்கறேன்னு சொல்லிட்டார்…” என்று அவன் சாதாரணமாய் சொல்ல நினைத்தாலும் கைகள் எல்லாம் இறுகியிருந்தது.
“ஓகே, லீவ் இட். ரெஸ்ட் எடுக்கட்டும். நாம பேசுவோம்…” என்ற சபர்மதி ஆராதனா வருவதை பற்றி சொல்ல,
“கல்யாணம் நம்ம முறைப்படி தானே?…” என்றாள் சந்தனா.
“ஏன் அவங்களுக்கும் அப்படி ஏதாவது எண்ணம் இருக்கும் தானே? நீயே ஏன் முந்திட்டு சொல்ற?…” என்றான் இஷாந்த் கண்டிப்புடன்.
“ப்ச், எதுக்கு இப்ப அவளை பேசற நீ? அவளுக்கு தோணினதை அவ சொல்றா. அவ்வளோ தானே?…” என்ற சபர்மதி,
“இன்னும் அது பத்தி பேசலையே சந்தனா. நாளைக்கு வரவும் அவங்க என்ன சொல்றாங்கன்னு தெரிஞ்சுப்போம். எதுவா இருந்தாலும் கல்யாணம் நல்லபடியா முடிஞ்சா போதும்…” என்று அவர் சொல்ல,