ஆரோனிடம் பேசிய சிறிதுநேரத்தில் ஆராதனா சபர்மதிக்கு அழைத்து, வீடு வருவதாய் சொல்லியிருக்க இனி இந்த திருமணம் எந்த விதத்திலும் தாமதமின்றி நடந்தேறும் என புரிந்து போனது.
அனைவரும் பேசி முடித்து உறங்க செல்ல சௌபர்ணிகா முகத்தின் யோசனையில் சபர்மதி தேங்கி நின்றார்.
“என்ன சௌபி?…” என கேட்க,
“இல்லம்மா, இப்ப தான் கவுன்ஸிலிங் போக ஆரம்பிச்சிருக்கேன். எத்தனை சிட்டிங்ன்னு இனி தான் தெரியும். அதுக்குள்ள இந்த கல்யாணம் எல்லாம்…” என்று அவள் கலக்கத்துடன் சொல்ல,
“பேசிக்கலாம் சௌபி. நீ வொர்ரி பண்ணாத. கல்யாணம் எல்லாம் முழுமனசோட சந்தோஷமா பண்ணிக்கனும். திரும்ப நினைச்சு பார்க்க தான் முடியுமே தவிர வாழ்ந்து பார்க்க முடியாது. நீ இதை மிஸ் பண்ணிடாத. சந்தோஷமா இரு…” என்று மகளை தைரியப்படுத்தி சென்றார்.
மறுநாள் ரக்ஷனாவை பார்க்க செல்லும் முன்னரே பெரிய பிரச்சனை எதுவும் இருக்கக்கூடாது என்று அத்தனை வேண்டுதல் அவருக்கு.
காலையே கிளம்பிவிட்டார் சபர்மதி. இஷாந்த், சௌபர்ணிகாவிடம் கூட வேறு விஷயமாய் வெளியே செல்வதாக சொல்லி சென்றிருந்தார்.
ஜெயந்தனிடம் இஷாந்த் முதல்நாள் பேசியதை பற்றியும், ஆரோன் ரிஷபன் குடும்பத்தினர் வருவதை பற்றியும் சொல்லி அவரும் மாலை இருக்கவேண்டும் என சொல்லியிருந்தான்.
அவரை இனி மகன் பார்த்துக்கொள்வான் என சபர்மதிக்கு அந்த கவலை இல்லை.
ரக்ஷனாவின் வீடு வந்ததும் அவரை வரவேற்றவர் அறைக்குள் அழைத்து சென்று பேச ஆரம்பிக்கும் முன் சபர்மதி முகத்தில் ஏகத்திற்கும் பதட்டம்.
“என்ன மேம் இது? எதையும் போல்டா பேஸ் பண்ணுவீங்க. இதுக்கு இவ்வளோ டென்ஷனானா எப்படி?…” என்று சொல்லி அவரை முதலில் திடப்படுத்தினார்.
“ஓகே, நான் ஓகே தான்…” என்று சொல்லியவர் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டதும் பேச ஆரம்பித்தார் ரக்ஷனா.
“சௌபர்ணிகாவை நீங்க முதல்லையே அந்த இன்ஸிடன்ட் அப்பவே கவுன்ஸிலிங்க்கு கூட்டிட்டு வந்திருக்கலாம். பட் இட்ஸ் ஓகே…” என்று சொல்ல சபர்மதி முகம் மாறியது.
“இடையில இத்தனை வருஷங்கள் கடந்திருச்சு இல்லையா? அதன் தாக்கம் அவங்களுக்குள்ள அதிகமாவே தானே வேரூன்றி இருக்கும். அப்படித்தான் இருக்கு. ஆனா அதை தாண்டி வந்திருவோம்ன்ற நம்பிக்கையும் அதிகமாவே அவங்ககிட்ட இருக்கு. கண்டிப்பா அப்ரிஷியேட் பண்ணனும்…” என்றார்.
“இன்னைக்கு ஈவ்னிங் முகூர்த்த நாள் குறிக்க மாப்பிள்ளை வீட்டுல இருந்து வராங்க. சௌபி இதை கொஞ்சநாள் தள்ளி போடலாம்ன்னு சொல்றா. அவளுக்கு கவுன்ஸிலிங் எல்லாம் முடியட்டும்ன்னு தோணுது…” சபர்மதி சொல்ல,
“ரொம்ப நல்ல விஷயம். உங்க பொண்ணு நினைக்கிறது அவங்க சைட்ல இருந்து மட்டும். சரியாகிட்டு அந்த உறவுக்குள்ள போவோம்ன்னு. ஆனா வாழ்ந்து பார்த்தா தானே சரியா இருக்கோமா இல்லையான்னு தெரியும்?…” என ரக்ஷனா கேட்க,
“நீங்க என்ன சொல்றீங்க?…” என்றார் சபர்மதி.
“கல்யாண தேதியை இந்த விஷயத்துக்காக தள்ளி வைக்க வேண்டாம். நடக்கிறது இயல்பாவே நடக்கட்டும்ன்னு சொல்றேன்…” என்றவர்,
“சௌபர்ணிகா மனசுக்குள்ள உள்ள பெரிய பயமே எங்க அந்த பையனை சந்தேகப்பட்டுடுவோமோன்னு தான். அதையும் விட அதிகமா அது அந்த பையனுக்கு தெரிஞ்சுட்டா என்னாகும்ன்னு நினைக்காங்க…”
“சொல்ல போனா உங்க பொண்ணு மேல அவங்களுக்கே நம்பிக்கை இல்லை. இத்தனை வருஷமா தன்னோட அப்பாவை இப்படியே பார்த்து அவளறியாமலே அந்த உணர்வு தலை தூக்கிருது. அப்பாவை எதிர்ல இருக்கற பொண்ணு சரியா பார்க்காங்களா, அப்பா அவங்ககிட்ட என்ன மனநிலையோட பேசறாங்க இப்படி…”
“இதுல ஆச்சர்யமான விஷயம் என்னன்னா சௌபி பியான்சியை பத்தி ஒருவார்த்தை கூட சந்தேகமா பேசலை. ஆனா அவங்களுக்குள்ள ஊறி போன அந்த விஷயம் அவரை இன்னொரு பொண்ணோட பார்க்கும் போது ஒரு பதட்டத்தை உருவாக்குது….”
“அந்த பதட்டத்தை குறைக்க நினைச்சாலும் அது அதிகமாகுது. அந்த நேரம் அந்த தவிப்பான முகமாற்றத்தை தவிர்க்கவும் முடியறதில்லை. முகம் பார்த்தே அவங்க நினைக்கிறதை சொல்லிடுவாராமே உங்க மருமகன். பெருமையா சொல்லவேண்டிய விஷயம். ஆனா பயத்தோட சொன்னது சௌபர்ணிகா மட்டும் தான்….”
“இதுக்கு என்ன தான் டாக்டர் தீர்வு? என் பொண்ணு இதை நினைச்சே தான் வாழனுமா?…” என்று சபர்மதி கலங்கி போய் கேட்க,
“அப்படின்னு நான் சொல்லவே இல்லையே? தரையில நின்னுட்டு எனக்கு நீச்சல் பழகனும்ன்னு சொல்லிட்டே இருந்தா சரியா? தண்ணிக்குள்ள இறங்கனும். அப்போ தான் அந்த ஆழமும் தெரியும். நம்ம கத்துக்க முடியும்ன்ற நம்பிக்கையும் வரும்…” என்றவர்,
“கல்யாணம் பண்ணி வைங்க. அவங்க வாழ்ந்து புரிஞ்சுப்பாங்க. என்னால முடிஞ்சதை நான் பன்றேன். இது சரி பன்ற விஷயம் தான். கொஞ்சம் கவனமாவும் கையாள வேண்டிய விஷயம். சௌபர்ணிகாகிட்ட இதுல எதுவுமே இல்லைன்னு சொல்லுங்க. அவங்களை கவலையா பார்க்காம சந்தோஷமா உற்சாகப்படுத்துங்க…”
“சௌபர்ணிகா முதல்ல அந்த எண்ணங்கள் எல்லாம் அவசியமில்லாததுன்ற நம்பிக்கைக்கு வரனும். அவங்களுக்கு பெருசா என்னவோன்னு நினைக்கிறாங்க. அவங்களால இயல்பா வாழ முடியாம போயிருமோன்னு கவலைப்படறாங்க. அதுக்கு இப்படி ஒரு பார்வையை நீங்க தராதீங்க. சரியாகிடும்…” என்றார் நம்பிக்கையுடன்.
“தேங்க் யூ சோ மச் டாக்டர். எனக்கு இப்போ தான் நிம்மதியா இருக்கு…” என்றார் சபர்மதி.
“இதை உங்க பொண்ணு இருக்கும் போதே சொல்லலாம். ஆனா அது அவங்களுக்காக நான் சொல்றதா நீங்க இன்னும் யோசிப்பீங்க. அதான் தனியா வர சொன்னேன். சந்தோஷமா கல்யாண வேலையை பாருங்க…” என்று வாழ்த்தி அனுப்பி வைத்தார் ரக்ஷனா.
மனதெல்லாம் அப்படி ஒரு நிம்மதி. இந்த சில நாட்களாக அனுபவித்த வேதனைகள் சொல்லில் அடங்காதது.
அப்படி இருந்தவருக்கும் உண்மையில் உயிர் கொடுத்ததை போலிருந்தது மருத்துவரின் மருந்தான வார்த்தைகள்.
அதே உற்சாகத்துடன் வீடு வந்து சேர்ந்தவர் மாலை வருபவர்களை கவனிக்க வீட்டையே தலைகீழாய் மாற்றினார்.
சந்தனாவை அருகில் வைத்துகொண்டு அவளுடன் சேர்ந்து எல்லாம் செய்ய மாமியாரை பார்த்து பார்த்து நின்றுகொண்டிருந்தாள் சந்தனா.
மாலை வீடே அத்தனை அழகாய் இருந்தது. அத்தனைக்கும் சிகரம் போல சபர்மதியின் இறுக்கம் தளர்ந்து நிம்மதியான அந்த புன்னகை.
அவரின் மாற்றம் பார்த்தவர்களுக்கு அப்போதே புரிந்துவிட சௌபர்ணிகா உள்ளுக்குள் உருகி போனாள்.
“என்னடா அப்படியே நின்னுட்ட?…” என்ற இஷாந்திடம்,
“அம்மாவை இப்படி சந்தோஷமா பார்த்து ரொம்ப வருஷமாச்சு ண்ணா. எப்படி ஒரு சிரிப்பு பாரேன். நாம பெருசா நினைக்கிற பொக்கிஷம் ஒன்னை இழந்து அது திரும்ப கையில கிடைச்சிட்ட மாதிரி இருக்கு எனக்கு இப்போ…” என்று சொல்லியவள் சந்தோஷத்தில் இஷாந்தும் நெக்குருகினான்.
“என்ன நின்னுட்டே இருக்கீங்க? போய் ரெடியாகி வாங்க…” என்று அவர்களை அனுப்பி வைத்துவிட்டு ஆராதனாவிற்கு பேச சென்றுவிட்டார் சபர்மதி.
மாலை சொல்லிய நேரத்திற்கு ஸ்டீபனும், ஆராதனாவும், பொன்னரசியும் அவர்களுடன் இன்னும் குடும்பத்தினர் சிலர் வந்துவிட்டனர். ஆரோனை தவிர்த்து.
அவர்களை வரவேற்று தடபுடலான கவனிப்புகள் தான். சந்தனாவின் வீட்டினரையும் வர சொல்லியிருந்தனர் தங்களின் சார்பாக.
இன்னும் ஒருமாதத்தில் திருமணம். இரு குடும்பங்களும் சேர்ந்து ஒருவழியாய் திருமணத்தை மண்டபத்தில் வைத்து பதிவு செய்து அங்கேயே இருவீட்டாரின் முறைப்படியும் முறைகளை செய்துகொள்ளலாம் என்று சொல்லிவிட்டனர்.
எல்லாம் இரு குடும்பங்களுக்குமே திருப்தியை தந்தது. அத்தனை சந்தோஷம். அதனுடனே அவர்களின் உறவுகள் அங்கிருந்தே வீடு திரும்ப, ஸ்டீபன், ஆராதனா விமானநிலையம் கிளம்பிவிட்டனர்.
“நாமளும் போய் அனுப்பிட்டு வருவோமே இஷாந்த்…” என சபர்மதி சொல்ல இஷாந்தும், சௌபர்ணிகாவும் சேர்ந்தே வந்தனர்.
விமானநிலையம் செல்ல அங்கே சரியாய் ஆரோன் ரிஷபன் வந்து சேர்ந்திருந்தான்.
“வீட்டுக்கு வர முடியலை. வேற ஒரு வேலைல பிஸி…” என ஆரோன் சொல்ல,
“இருக்கட்டும் மாப்பிள்ளை…” என்றார் சபர்மதி.
“எங்க குட்டீஸ் வரலையா?…” என இஷாந்திடம் அவன் கேட்டுக்கொண்டே சௌபர்ணிகாவை பார்க்க அவள் ஆராதனாவுடன் தீவிரமாக எதையோ பேசிக்கொண்டிருந்தாள்.
அவன் வந்ததை கவனித்தாலும் திரும்பவில்லை. வருகிறேன் என சொல்லி சொல்லி வரவில்லை.
வரவில்லை என்றும் அவளிடம் சொல்லவில்லை என வேண்டுமென்றே அவனை தவிர்க்க,
“ம்மா, அத்தை கூப்பிடறாங்க…” என்று அவர்கள் இருவருக்கும் இடையில் வந்து நின்றவன் ஆராதனாவை அனுப்ப,
“கிளம்புங்கன்னு சொல்லவேண்டியது தானேடா?…” என சிரிப்புடன் ஆராதனா சொல்லிவிட்டு நகர,
“புரிஞ்சா சரி…” என்றவன் சௌபர்ணிகாவை பார்த்து புன்னகைத்தான்.