“என்ன சொல்லிட்டேன்? இது நேச்சர் தானே? கல்யாண முகூர்த்தத்துக்கு நீ டிஸைன் பண்ணிட்ட. அடுத்த முகூர்த்தத்துக்கு நான் பன்றேன்னு சொல்றேன்…” அமர்த்தலான புன்னகையில் யாரின் கவனத்தையும் கவராமல் அவளிடம் சொல்ல,
“ரிஷி…” என்றாள் முகம் சிவக்க பல்லை கடித்துக்கொண்டு.
“கிட்ட வந்து சொல்லிட்டேனோ? தள்ளி நின்னு சத்தமா சொல்லியிருக்கனுமோ?…” என்றும் கேட்டு சன்னமான புன்னகையுடன் கண் சிமிட்ட,
“எதுவும் சொல்லவேண்டாம். நான் ஏதாவது சொல்லிட போறேன்…”
“யூ மீன் செகேன்ட் நைட் பத்தி…”
“ஹப்பா, நான் அம்மாட்ட போறேன்…” என்றவள் சபர்மதியின் அருகில் வந்து நின்றுவிட்டாள்.
“சரி, பேசலை. வா…” என ஆரோன் கண்ணசைக்க,
“மாட்டேன்…” என்று பதிலுக்கு அவள் முறைக்க என மௌனமாய் சங்கேத பாஷையில் காதல் போர் குளுமையாக அரங்கேறியது.
நாட்கள் தேய்ந்து திருமண நாள் நெருங்கி வந்துவிட்டது. சொந்தங்களில் இருந்து அத்தனைபேருக்கும் பத்திரிக்கைகள் வைத்து அழைப்பு விடுக்கப்பட்டது.
காலை திருமணமும் அன்றிரவே பிரபலங்கள் கலந்துகொள்ளும் வரவேற்பும் ஏற்பாடாகியது.
ஸ்டீபன் கூட சொல்லிவிட்டார் ஒருவாரம் கழித்து ரிஷப்ஷன் வைத்துக்கொள்ளலாம் என்று.
“எனக்கு வேற ப்ளான் இருக்கு டாட். அதை உங்ககிட்ட நான் எப்படி சொல்லுவேன்?…” என்று நகம் கடித்துக்கொண்டே அவன் செய்த கலாட்டாவில்,
“என்ன ஆரோன் இப்படி கூச்சப்படாம பேசிட்ட?…” என மகனை கலாய்க்க,
“கூச்சப்பட்டு தான் பேசலை. டாட் விடுங்க என்னை…” என்றவனின் பார்வையில் அங்கே ஆர்ப்பரிப்பு கூடியது.
நிறைவாய், அழகாய் ஆர்ப்பாட்டமின்றிய திருமணம். சௌபர்ணிகா ஆரோன்ரிஷபன் இருவரின் மனங்களும் ஒருவரை ஒருவர் பற்றிக்கொண்டு திருமண பந்தத்தில் அடியெடுத்து வைத்தனர்.
“மிஸ்டர் வேதாளம்ன்னு நிரூபிச்சு கல்யாணத்தை முடிச்சாச்சு…” என்று சௌபர்ணிகா கேலி செய்ய,
“பிரபஞ்ச அழகியை கை பிடிக்கிறதுன்னா சும்மாவா?…” என்றவனின் புன்னகையிலும், மலர்ந்த முகத்திலும் வழமை போல விழிகளை பதித்தவள் அகமும் நிறைந்து போனது.
அன்று வரவேற்பு நிகழ்ச்சி முடிந்து இரவு சபர்மதியின் வீடு வந்து சேர்ந்த மணமக்கள் மறுநாளே விமானம் ஏறிவிட்டனர்.
அவளுக்கு தான் சந்தோஷத்தில் உறக்கம் என்பதே இல்லை. இன்னும் எத்தனை நேரம் ஆகுமோ என வேடிக்கை பார்த்தபடியே அந்த பயணத்தை கடந்தாள்.
மாலத்தீவு வந்திறங்கியாகிற்று. சௌபர்ணிகாவிற்குள் ஒரு யோசனை. இதற்கு முன் அடிக்கடி ஆரோன் அங்கே வந்திருக்க, வரும் பொழுதெல்லாம் ஒரு ரிசார்ட்டில் தங்குவது அவன் வழக்கம்.
அங்கே தான் போகிறோமோ என எதிர்பார்புடன் சென்றால் அங்கே இல்லை என புரிந்து போனது.
நீர்வழியே சிறு பயணம். படகில் செல்ல செல்ல அவள் கண்கள் பெரிதாய் விரிய துவங்கியது.
“ஹவ் இஸ் இட்?…” என்றான் அவன் அந்த இடத்தை காண்பித்து.
சுற்றிலும் நீரலைகள். நடுவில் மெல்லிய வெளிச்சத்தில் நீச்சல் குளத்துடனான சிறிய மரவீடு.
சௌபர்ணிகா மனதில் நச்சென்று ஒட்டிக்கொண்டது அந்த இல்லமும், அதன் அமைப்பும்.
“அமேஸிங்…” என்றாள் அவள் ரசனையுடன்.
“டூ ஹாட்…” என அவன் சொல்ல,
“நான் வீட்டை சொன்னேன்…”
“நான் உன்னை தான் சொன்னேன். ரிஷபன் எப்பவும் வெளிப்படையான மனுஷன். தெரியுமா?…” என்று சொல்ல,
“அப்பப்பா, தெரியவே வேண்டாம்…” என்றவள் படகுடன் வந்தவர்கள் கிளம்பி செல்லவும் அந்த வீட்டினுள் நுழைய முதலிரவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராய் இருந்தது.
“வாவ் வாவ்…” என்றவன் தனக்கு முன் நுழைந்திருந்த மனைவியை பின்னிருந்து அணைத்துக்கொண்டான்.
“பிடிச்சிருக்கா சௌபர்ணிகா?…” என கிசுகிசுப்பாய் கேட்க அவன் அணைப்பும், அழுத்தமும் அவளை மிதக்க செய்தது.
“சர்ப்ரைஸ் எப்படின்னு சொல்லவே இல்லையே?…” என்று அவள் காதோரம் அவனின் மீசை முடிகள் உராய கேட்டவனின் குரலே பித்தம் கொள்ள செய்ய,
“ரிஷி…” என தடுமாற்றத்துடன் திரும்பி அவனை அணைத்துக்கொண்டாள் சௌபர்ணிகா.
தேடலின் சுவை காண ஊடல்கள் களைந்து ஒரு உற்சவம் அரங்கேற காத்திருக்க நாயக, நாயகனின் வெட்கங்கள் முத்தத்தில் முக்குளிக்க தயாரானது.