ஆராதனாவும் ஆரோன் ரிஷபனும் பேசிக்கொண்டே வெளியே வந்திருக்க அவன் தந்தையிடமிருந்து அழைப்பு.
“சொல்லுங்க டாட்…” என சிரிப்புடன் அவன் பேச,
“எங்கடா ரெண்டுபேரையும்? என்னை கூட்டிட்டு வந்துட்டு உங்களை காணும்?…” என இசையின் சத்தத்திற்கு மேல் அங்கிருந்து கத்தினார் ஸ்டீபன்.
“நாங்க பீச் சைட் வந்துட்டோமே. நீங்க என்ஜாய் பண்ணுங்க டாட்…” என்றவன் தாயை பார்த்து கண் சிமிட்ட,
“உதை தான் உனக்கு…” என்றவர் மொபைலை வாங்கி மகனை ஒரு தள்ளு தள்ளிவிட்டு விலகி நடக்க ஆரம்பித்தவர் முகத்தில் அளவில்லா காதல்.
“ஹ்ம்ம், இனி எங்க என்னை கவனிக்க? ம்மா, ம்மா….” என வேண்டுமென்றே ஆராதனாவை கத்தி அழைத்தான் ஆரோன் ரிஷபன்.
அவர் திரும்பி பாராமல் நடந்துகொண்டே செல்ல ஸ்டீபனும் வந்துவிட்டார் அங்கிருந்து.
“என்ன டாட்? இப்படி தலைதெறிக்க ஓடி வரீங்க?…” என கிண்டலாய் மகன் கேட்டதும் போனை மனைவியிடம் கொடுத்தவர் மகனை துரத்த ஆரம்பித்தார்.
“ராஸ்கல் அங்க விட்டுட்டு வந்து எவ்வளோ நக்கல்டா உனக்கு?…” என கீழே தள்ளி இருவரும் கடல் அலையில் விளையாட அதனை வீடியோவாக பதிவு செய்தார் ஆராதனா.
“கல்யாணநாளுக்கு வந்துட்டு அம்மாவோட இல்லாம எங்க வேடிக்கை பார்த்துட்டு போனீங்க? இப்ப பச்சை பிள்ளை மாதிரி வந்து விட்டுட்டு போயிட்டீங்கன்னு கண்ணை கசக்கினா நம்பிருவோமா?…” என்றவன்,
“ஆரா இந்த யங்மேனை நம்பவேண்டாம்ன்னு சொன்னா கேட்டீங்களா? நாம வந்து எவ்வளோ நேரம் கழிச்சு நமக்கு போன் வருது. நோட் பண்ணுங்கப்பா நோட் பண்ணுங்க…” என்றவனை பிடித்து மீண்டும் தண்ணீரில் தள்ளினார் ஸ்டீபன்.
“ரிட்டர்ன் போகும் போது ஆராவோட நீ உட்காரனும்ன்னு ப்ளானா பன்ற? யூ யூ…” என்ற ஸ்டீபன் மூச்சு வாங்க மகனுடன் சரிக்கு சரியாக மல்லுக்கு நின்றார்.
இருவரின் ஆர்ப்பாட்டத்தையும் மனம் நிறைய பார்த்த ஆராதனாவின் முகத்தில் குறையாத புன்னகை.
அவரின் திருமணநாளை கொண்டாட மகன் அழைத்து வந்திருந்தான் மாலத்தீவுக்கு.
வந்து இரண்டுநாட்களும் அவர்களுடன் மட்டுமே மகன். தொழிலை கணவன் மனைவி இருவரும் ஒன்று சேர்ந்து நடத்தினாலும் மகனுகென்று தனி அடையாளத்தை அவன் தேடிக்கொண்டான்.
அவனின் துறையில் தனித்துவமானவனாய் விளங்கியதில் ஏக பெருமை பெற்றோருக்கு.
எத்தனை இருந்தாலும் குடும்பத்திற்காக அவன் வகுத்திருந்த நேரங்கள் என்றுமே குறைந்ததில்லை.
“ஹப்பா இவனை சமாளிக்கவே முடியலை ஆரா…” என இடுப்பில் கைவைத்தபடி நனைந்த தலையை மேல் நோக்கி வாரிக்கொண்டே ஸ்டீபன் சொல்ல,
“அதுக்கு தான் சீக்கிரம் ஒரு ஆளை ஏற்பாடு செய்யலாம்ன்னு பார்க்கறேன்…” என்றான் ஆரோன் ரிஷபன் கண் சிமிட்டி.
“பார்ப்போம். உன்னை சமாளிக்கிற ஆளா? இல்லை நீ சமாளிக்க முடியாம திணற போற ஆளான்னு? பார்க்க தானே போறோம் மை டியர் சன்…”
“பின்ன உங்களுக்கு ஈஸியா கிடைச்ச மாதிரி எல்லாருக்கும் ஆரா மாதிரி வொய்ப் கிடைச்சிருவாங்களா என்ன?…” என்று ஆரோன் சொல்ல,
“இவனை…” என்று மகனின் கழுத்தை பிடிக்க சிரிப்போடு இருவரும் அணைத்து நிற்க,
“ஸ்மைல்…” என்றார் ஆராதனா.
“இவன் என்னைக்கு தான் சிரிக்காம இருந்திருக்கான்?…” என மணல் துகள்கள் மின்னிய மகனின் கன்னத்தில் ஸ்டீபன் உள்ளம் உருக இதழ் பதிக்க,
“சீக்ஸ்…” என இருவிரல் காண்பித்து ஆரோன் ரிஷபன் புகைப்படத்திற்கு இன்னும் நன்றாகவே புன்னகையை கொடுத்திருந்தான்.
அதனை சமூக வலைதளத்தில் அன்றிரவே ஆரோன் பதிவேற்றம் செய்ய அடுத்த பத்து நிமிடத்தில் இதயங்களும், இதழ்களுமாய் விருப்பங்கள், கருத்துக்களை தாங்கி அவனின் புகைப்படத்தை மொய்க்க துவங்கியது.
“கிரேஸி…” என புன்சிரிப்புடன் உடைகளை எடுத்து அடுக்கினான் ஆரோன் ரிஷபன்.
“நாளை மறுநாளே சென்னை ப்ளைட் போல?…” என்றார் ஆராதனா மகனிடம்.
“ஆமா ம்மா. ஹைதராபாத் வந்துட்டு அங்க இருந்து சென்னை. அங்க நம்ம ஒன் மோர் ப்ரான்ச் ஓபன் செர்மனி. அதை முடிச்சிட்டு அங்க பிரபஞ்சம் மஹால்ல சேரி ட்ராப்பிங் வொர்க்ஷாப் செஷன். இது ரெண்டு ப்ரோக்ராம் தான்…” என்றான் அவன்.
“எப்போ ஹைதராபாத்?…” என்றார் ஸ்டீபன்.
“என்னவாம்? திடீர்ன்னு இந்த கேள்வி? அதுவும் புதுசா?…” என்றவன்,
“நெக்ஸ்ட் வீக் மலேஷியால இருப்பேன். அடுத்து தான் அங்க…” என அவனின் வேலைகளை வரிசையாக சொல்ல,
“விடுங்கப்பா. ரிஷி முடிச்சிட்டே வரட்டும். அவனுக்கு ஓகே ன்னு தெரிஞ்சு தானே சைன் பண்ணியிருக்கான்…” என மகனுக்கு ஆதரவாக ஆராதனா நிற்க,
“நான் ஏன் கேட்டேன்னு தெரியாதா ஆரா?…”
“அதெல்லாம் எனக்கும் தெரியும் டாட். நம்ம பிஸ்னஸ் செலிபரேஷன்ல நான் இல்லாமலா? நீங்க ப்ரோக்ராம் அரேஞ்ச் பண்ணுங்க. கரெக்ட்டா வந்திருவேன்…” என்றான் உறுதியாக ஆரோன் ரிஷபன்.
அவர்கள் டெனிம் ஜீன்ஸ் ஆடைகள் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.
அதன் வளர்ச்சியில் அடுத்த ஆண்டின் புதிய துவக்கத்தில் மிகப்பெரிய நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்யவிருந்தார் ஸ்டீபன்.
அதற்கு மகனும் இருக்கவேண்டும் என்பதில் உறுதியாய் இருக்க கண்டிப்பாக இருக்க போகிறேன் என ஆரோனும் சொல்லியிருக்க மகனின் வேலைகள் அவன் வருவானா என்ற யோசனையை தருவித்திருந்தது அவருக்கு.
“இன்னும் என்ன யோசனை? கண்டிப்பா இருப்பேன்…” என்று சொல்லியிருந்தான் ஆரோன் ரிஷபன்.
இரவு உணவை முடித்துக்கொண்டு தாயும் தந்தையும் உறங்க செல்ல தனது பிஏவுக்கு அழைத்தவன்,
“உஷா எல்லாம் ரெடியா? மாடல்ஸ் சொல்லியாச்சா?…” என்றான் ஆரோன்.
“எஸ் ஸார். இன்விடேஷனுக்கே பயங்கர டிமான்ட். ஆன்லைன்ல எல்லாம் புக் பண்ணிட்டே இருக்காங்க. லிமிட்டட் பர்சன்ஸ் அப்படின்றதால புக் பன்றதை ஸ்டாப் பண்ணிட்டோம்…” என உஷா சொல்லவும்,
“குட், இந்த செஷன் முடிஞ்சதும் நம்ம ஸ்டூடியோல அடுத்த செஷன் பண்ண முடியுமான்னு யோசிப்போம். குட்நைட்…” என சொல்லிவிட்டு படுத்தவனுக்கு உறக்கத்தில் பல யோசனைகள்.
பளிச்சென்ற ஒரு யோசனை தோன்றியதும் மீண்டும் எழுந்தமர்ந்து உஷாவிற்கு அழைத்துவிட்டான் அந்தநேரமே.
“ஸார்…” என அவள் எடுத்ததும்,
“இன்னும் டூ டேய்ஸ் இருக்கே வொர்க்ஷாப்க்கு. அன்னைக்கே ஆன்லைன் க்ளாஸ்க்கு அநோன்ஸ் பண்ணிடு. மறக்காம அந்த பிரபஞ்சம் சில்க்ஸ் இஷாந்த்க்கு இதையும் மார்னிங் இன்பார்ம் பண்ணிடு…” என்றான் அவன்.
“ஸார்…” உஷா யோசிக்க,
“என்ன ப்யூட்டி? அதுக்குள்ள எப்படி ஆன்லைன் கிளாஸ் புக்காகும்ன்னா? கத்துக்கனும்ன்னு நினைக்கிறவங்க கத்துப்பாங்க. ஆன்லைன் செஷனுக்கு அமௌன்ட் டூ தவுசண்ட் பிக்ஸ் பண்ணிடு….” என்றவன்,
“மெயினா ஆன்லைன் இன்விடேஷன் டிஸைன் நீயே ரெடி பண்ணி இப்பவே சோஷியல் மீடியால போஸ்ட் பண்ணிடு. ஓகே. குட்நைட்…” என்று சிரிப்புடன் சொல்லியவன் படுத்துவிட்டான்.
உஷாவிற்கு உறக்கம் வேறு கண்களை சுழற்ற ஆரோனின் உத்தரவை மீற முடியாதே?
சொல்லியதை போல அப்போதே இன்விடேஷன் வடிவமைத்து தங்களின் வலைதளபக்கத்திலும், மற்ற வலைதளங்களிலும் பதிவேற்றம் செய்துவிட்டு இருக்கையில் இலகுவாய் சாய அடுத்து எங்கே உறக்கம்?
எழுந்து சென்று க்ரீன் டீயை வைத்துக்கொண்டு வந்த உஷா தங்களின் வலைதள பக்கத்தை பார்க்க அப்போதே அந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஆரம்பித்திருந்தனர் பெண்கள்.
“ஹ்ம்ம், சரியான பிஸ்னஸ் மான்ஸ்டர். எங்க எப்படி பணத்தை பெருக்கலாம்ன்னு இவர்கிட்ட தான் கத்துக்கனும்….” என்று புன்னகையுடன் ஒவ்வொன்றையும் பார்த்தபடி இருந்தாள் உஷா.
————————————————–
தனது காரில் திநகர் கிளைக்கு விருப்பமே இல்லாது சென்றுகொண்டிருந்தாள் சௌபர்ணிகா.
காலையே சபர்மதி மகளிடம் சொல்லிவிட்டார் நடக்கவிருக்கும் நிகழ்ச்சியை அவள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று.
“எனக்கு இந்த மாதிரி செஷன் நடத்தறதே புடிக்கலை. இதுல ஏன் ம்மா?…” என மறுக்க முடியாமல் அவர் சொல்ல,
“நிறையபேர் வராங்க சௌபி. முக்கியமா சினி ஆர்ட்டிஸ்ட் மூணு பேர் வேற வராங்க இந்த வொர்க்ஷாப்புக்கு. கண்டிப்பா இஷாந்த் மட்டும் பண்ண முடியாது. நீ ஹேண்டில் பண்ணுடா…” என்று சொல்ல கிளம்பி வந்திருந்தாள் சௌபர்ணிகா.
கடைக்குள் நுழைந்ததுமே என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றது என்பதை பார்வையிடும் முன் நேராக தன் அண்ணனின் அறை நோக்கி செல்ல கதவு திறக்கப்பட்டு உள்ளிருந்து வந்தவன் மேல் மோதவிருந்து விலகி நின்றாள் சௌபர்ணிகா.