“எஸ், எஸ். கன்பார்ம் தான்…” என்றபடி வெளியே வந்திருந்தான் இஷாந்த்.
அண்ணனை பார்த்ததும் அத்தனை கோபமும் அவன் மேல் திரும்பியது சௌபர்ணிகாவுக்கு.
“ஹேய் சௌபி, வாடா…” என்ற இஷாந்த் போனை வைத்துவிட்டு,
“இவர் தான் ஆரோன் ரிஷபன்…” என அறிமுகப்படுத்தினான்.
“நைஸ் டூ மீட் யூ மிஸ் சௌபர்ணிகா…” என்று ஆரோன் இன்னும் அதே புன்னகையுடன் அவளை நோக்கி கை நீட்ட இஷாந்த் பதறி விட்டான்.
தங்கைக்கு இவை எல்லாம் சுத்தமாக பிடிக்காததாகிற்றே. ‘தப்புச்சு உசுரோட போயிரு தம்பி’ என்று தான் தோன்றியது இஷாந்திற்கு.
“ப்ச், இரிட்டேட்டிங்…” என்றவள் தன் அண்ணனை பார்க்க அவன் வழிவிட்டு நிற்கவும் அறைக்குள் சென்றுவிட்டாள்.
“ஆரோன்…” என இஷாந்த் பார்க்கவும்,
“உங்க சிஸ்டர் டோர் ஓபன் பண்ணும் போது நான் எதிர்ல வந்துட்டேன். அதுல டென்ஷன் போல. சில் பண்ணுங்க ப்ரோ…” என அவனின் தோளை தட்டியவன்,
“ஓகே நான் எய்த் ஃப்ளோர்ல இருக்கேன்…” என்று சொல்லிவிட்டு செல்ல மீண்டும் இஷாந்த் உள்ளே வந்தான்.
“என்னடா? இப்படி இன்சல்ட் பன்ற மாதிரி பண்ணிட்ட?…” என தங்கையிடம் கேட்க,
“ப்ச், எல்லாமே ரெடியா? எப்போ ஆரம்பிக்கிறதாம்?…” என்றாள் சௌபர்ணிகா தன் கை கடிகாரத்தை பார்த்துவிட்டு.
“எல்லாமே ரெடி. லன்ச் கூட அரேஞ்ச் பண்ணியாச்சு. எல்லாரும் வந்ததும் பர்ஸ்ட் அவங்க மொபைல் அவங்கவங்களுக்கான லாக் பவுச்ல வச்சிருவாங்க. அடுத்து வெல்கம் ட்ரிங்…” என்றவனை கை நீட்டி தடுத்தவள்,
“ஏன் மொபைலை லாக் பண்ணனும்?…” என்றாள்.
“இந்த செஷன் யாருக்கும் வீடியோ எடுக்க அலவ்ட் இல்லை. ஆரோன் ரிஷபன் அவங்க அபிஷியல் பேஜ்ல, யூட்யூப்ல தான் அப்லோட் செய்வாங்க. அதுவும் ஒரு டேட் பிக்ஸ் பண்ணி ப்ரோமோ அன்ட் வீடியோ லான்ச். இதுதான் அவங்க வழக்கம்…”
“ஓகே நெக்ஸ்ட்…”
“செலிபிரிட்டீஸ் வராங்க. அவங்களை நாம தான் வெல்கம் பண்ணனும். அம்மா சொல்லியிருப்பாங்களே?…”
“ஹ்ம்ம்…”
“மேல மேடை எல்லாம் ரெடி. என்னென்ன சேரீஸ் மாடல்ஸ் கட்ட போறாங்கன்னு நீ வந்து சூஸ் பண்ணிரு சௌபி. நீ மாடிக்கு போ. மத்ததை நான் பார்த்துக்கறேன்…” என்றான் இஷாந்த்.
“ப்ச், இதெல்லாம்…” என்றவள் மேலும் பேசவில்லை.
அண்ணன் புதிதாய் ஒன்றை செய்கிறான். தாயும் சரி என்ற பின்னர் இதில் தான் என்ன மறுக்க என்று தான் தோன்றியது.
இஷாந்த் சொல்லியது போல இந்த நிகழ்ச்சியின் விளம்பரங்கள் அத்தனை பெரிதாக தான் பேசப்பட்டிருந்தது.
ஆரோன் ரிஷபன் வருகையா என ஆச்சர்யத்தில் தான் இருந்தனர். அவனை நேரில் பார்த்துவிட மாட்டோமா என்று ஆர்வத்தில் இருக்க வரவிருக்கும் அந்த முக்கிய செலிபிரிட்டியில் முன்னணி நடிகையும் கூட இருந்தாள்.
முன்பே தங்கள் கடையின் புடவைகள் அவளுக்கு வீட்டிற்கு சென்றுவிடும் என்றாலும் நேரில் வருவது இதுவே முதல்முறை.
எப்போதும் சபர்மதியிடம் தொலைபேசி மூலமாக தான் பேசிக்கொள்வாள். இப்படி புடவை இந்த நிறத்தில் வேண்டும் என்று கேட்டுக்கொள்வாள்.
இப்போது தான் வருவதை பற்றியும் சபர்மதியிடம் தான் சொல்லியிருந்தாள் அந்த திரைத்துறை பிரபலம்.
“ஆரோன் ரிஷபனுக்காக அவன் இன்வைட் பண்ணினதால வரேன்…” என்று குழைந்திருந்தாள்.
அதை நினைத்தபடியே ஒற்றை மடிப்பில் குத்தியிருந்த புடவையை லாவகமாக பிடித்தபடி முந்தானை அலையாய் விரிய நடந்து வந்தவளை மேடையில் நின்றபடி பார்த்தான் ஆரோன் ரிஷபன்.
பெரிய காதணியும், கழுத்தில் எதுவுமில்லாமல் சுருண்ட கூந்தல் அடக்கப்படாமல் விரிந்திருக்க அவளையே இந்த நிகழ்ச்சிக்கு மாதிரியாக நிற்க வைத்துவிட்டால் என்னவென்று கூட தோன்றிவிட்டது.
சௌபர்ணிகா மாடிக்கு வந்ததுமே என்னென்ன புடவைகள் கட்டி காண்பிக்க வேண்டும் என ஆராய ஆரம்பிக்க அவளுக்கருகே துளசி வந்துவிட்டாள்.
“துளசி இந்த சேரீஸ் எல்லாம் மாடலுக்கு…” என சௌபர்ணிகா துளசியிடம் சொல்ல,
“மேம், ஆரோன் ரிஷபன் ஏற்கனவே புடவை எல்லாம் செலெக்ட் பண்ணிட்டார்….” என எச்சிலை விழுங்கியபடி துளசி.
“வாட் யூ மீன்?…” என்று தீயாய் திரும்பியவளின் முன் வந்து நின்றான் ஆரோன் ரிஷபன்.
“துளசி ஸார்…” வெட்கப்பட்டுக்கொண்டே அவள் திருத்தி சொல்ல,
“ஏன் ப்யூட்டி, நான் துளசியை துள்சி சொல்ல கூடாதா?…” என்ற விதத்தில்,
“உங்க விருப்பம் ஸார்…” என துளசியும் நாணிக்கொண்டே நகர அதனை கையை கட்டியபடி வேடிக்கை பார்த்தாள் சௌபர்ணிகா.
“ஹ்ம்ம், தென்…” என்றவன் அவள் புறம் திரும்பியதும்,
“செம்ம ஹாட் ப்யூட்டி…” என்றான் அவளின் கோபம் கண்டு.
“வெளில போக சொல்ல ஒருநிமிஷம் ஆகாது…” சௌபர்ணிகா சுறுசுறுவென பொங்கிய கோபத்தில்.
“நான் மீன் பண்ணின ஹாட் செம்ம காரம், மிர்ச்சி, மிளகாய், ரெட் சில்லி. இப்படி. நீங்க என்ன நினைச்சீங்க மிஸ் ப்யூட்டி?…” என்றான் அலட்டிக்கொள்ளாமல் ஆரோன் ரிஷபன்.
“மைண்ட் யூர் வேர்ட்ஸ்….” என்று பல்லை கடித்த சௌபர்ணிகா,
“வந்த வேலையை பார்த்துட்டு கிளம்பி போய்ட்டே இருக்கனும். இல்லை நான் இதை ஸ்டாப் பண்ண யோசிக்கவேமாட்டேன்…” என்றதும் கூட அவன் முகம் மாறவில்லை.
“ரொம்ப கோவப்பட்டு உங்க சேரி பாடர் கலருக்கு உங்க முகம் சிவந்து போச்சு. ஓகே, பேக் டூ வொர்க்….” என கையை தட்டிக்கொண்டவன்,
“நான் இந்த சேரீஸ் சூஸ் பண்ணிட்டேன்…” என்று தான் எடுத்து வைத்ததை காண்பிக்க திகைத்து பார்த்தாள் சௌபர்ணிகா.
“இதுவும் உங்க வோன் ப்ராடேக்ட்ஸ் தானே? டல் கலர்ஸ் விற்காதுன்னு நினைச்சிருந்தா நீங்க இதை டிஸைன் பண்ணியிருக்கவே மாட்டீங்களே?…” என்றவன் கேள்வியில் சௌபர்ணிகா மேலும் திகைக்க,
“சேரி ப்ரைட் நாம செலெக்ட் பன்ற கலர்ல மட்டுமில்லை. கட்டற அழகுல இருக்கு. பளிச்சின்னு இருக்கற சேரியை கட்டி காண்பிக்கிறதை விட இப்படி டல் & சட்டில் கலர்ஸ்ல கட்டி காண்பிச்சா பினிஷிங்ல வர ரிசல்ட் இன்னும் பெருசா இருக்கும். எல்லாருக்குமே ஒரு கான்பிடன்ட் தரும்….” என்று பொறுமையாக சொல்ல அவள் அங்கே வந்திருந்த மாடல்களை பார்த்தாள்.
நல்ல நிறம், மாநிறம், இன்னும் குறைந்த நிறம் என நன்கு பேர் தயாராக நின்றிருந்தனர்.
அவர்களிடம் உஷா பேசிக்கொண்டிருக்க சௌபர்ணிகா இதில் எந்த புடவை யாருக்கு பொருந்தும் என்று அளவிட்டுக்கொண்டிருந்தாள் விழிகளால்.
“அழகா இருக்காங்க இல்லையா?…” என்றவனின் குரலில் அவனின் புறம் கவனம் சிதற,
“மதியத்துக்கும் இதே மாடல் தானா?…” என சௌபர்ணிகா பேச்சை மாற்ற,
“ஹ்ம்ம், ஆமா. ஏன் உங்களுக்கு தெரிஞ்ச மாடல் யாரும் இருக்காங்களா?…” என்றவன் கேள்வியில் மீண்டும் அவன் முகம் காண வேண்டியதானது அவளுக்கு.
“எனக்கு வேற வேலை இல்லையா?…” என்றவள் கோபம் முளைவிட,
“இருக்காங்கன்னா ஆமா சொல்லுங்க. இல்லைன்னா இல்லைன்னு சொல்லுங்க. திரும்ப ஏன் வினிகர்ல போட்ட சில்லியாட்டம் இவ்வளோ காயறீங்க?…” என்றான் குறுஞ்சிரிப்பு மின்ன.
“ஹேய் அங்க நிக்கிறார். ஹாய் ரிஷப். செம்ம ஹேண்ட்சம். உங்களை இவ்வளோ பக்கத்துல பார்த்துட்டேன். ரிஷப் ஒரு செல்பி…” என அப்போது தான் உள்ளே நுழைந்த பெண்கள் குழு அவனிடம் வந்து சுற்றிக்கொள்ள சௌபர்ணிகா நகர்ந்து நின்றாள்.
“கேர்ள்ஸ் செஷன் முடிச்சிட்டு கண்டிப்பா ஸ்நாப் எடுத்துக்கலாம். ப்ளீஸ்…” என்ற ஆரோன் ரிஷபன்,
“உஷா..” என்றான் சத்தமாய்.
“எஸ் பாஸ்…” என்றவள் வந்த பெண்களை அழைத்துக்கொண்டு செல்ல,
“ஊஃப்…” என மூச்செடுத்துக்கொண்டவன்,
“என்ன பேசினோம்? ஆங், மாடல். நீங்களே ஒரு மாடல் மாதிரி தானே இருக்கீங்க ப்யூட்டி. அதுவும் பிரபஞ்சத்தோட ப்யூட்டி…” என்றவனை விழிகளால் எரித்துவிட்டாள் சௌபர்ணிகா.
“மேனர்ஸ் இல்லை…” என்று பல்லை கடித்து வார்த்தைகளை துப்ப,
“வேணுமா? எக்கச்சக்கம் இருக்கு ஹாட் ப்யூட்டி. ஆனா இப்ப தர டைமில்லை. ப்ரோக்ராம் முடியட்டும்…” என்றவன்,
“அட்வைஸ்ன்னு இல்லை. ஆனா சொல்லனும்ன்னு தோணுது. எதுக்கு இவ்வளோ கோபம்? நார்மலா இருங்க. இவ்வளோ கோவமா இருந்தா திரும்ப திரும்ப உங்களை பார்க்க தோணுது. கூல் ப்யூட்டி…” என்றவன் சௌபர்ணிகா பதில் சொல்லும் முன் புன்னகையுடன் விடைபெற்று சென்றான்.
மேடையில் சென்று நின்றவன் மீண்டும் அவளை தான் பார்க்க கோபத்தை அடக்க முடியாமல் அவன் சொல்வது நிஜமோ என தான் நின்ற இடத்தில் இருந்த ஆளுயர கண்ணாடியில் தன்னுருவம் பார்த்தாள் சௌபர்ணிகா.
‘உங்க சேரி பாடர் கலர்ல முகம் மாறிடுச்சு’ என்றவனின் கூற்று உண்மையோ உண்மை.
அவளின் செய்கையில் ஆரோனின் புருவங்கள் மேலெழும்ப மீண்டும் மீண்டும் சௌபர்ணிகாவை தான் விழிகளால் அளந்த ஆரோன் ரிஷபனின் புன்னகை இதழ்களுக்குள் மாயமாய் மந்திரம் புரிந்தது.
சிற்பம் கவிதை ஓவியம்
மூன்றும் சேரும் ஓரிடம்
கண்டேன் பெண்ணே நான் உன்னிடம்
பெண்ணெல்லாம்
பெண் போலே இருக்க
நீ மட்டும் என் நெஞ்சை மயக்க
பூமிக்கு வந்தாயே தேவதை போலவே