எதற்கு அந்த பார்வை? தன்னை பார்க்க கூடாதென்று அவள் தவிர்த்தாலும் தன்னைபோல் மகளின் பார்வை அவரிடத்தில் வந்திருக்க அந்த நிமிடம் எதையும் யோசிக்கமுடியவில்லை ஜெயந்தனால்.
ஆனால் அந்த வித்தியாசத்தை, அதன் வேறுபாட்டை உணர்ந்தவருக்கு ஏன், என்ன காரணம் என எதுவும் தெரியவில்லை.
இஷாந்திடம் பேசிய பின்பு திருமண வேலைகளும் நில்லாமல் நடந்தேற அவரும் அதில் கடைமைக்கு கலந்துகொள்ள வேண்டியதானது.
முதலில் பிடிக்கவில்லை. அறவே பிடித்தமில்லாத ஒரு சம்பந்தமாக பார்த்தாலும் சௌபர்ணிகாவின் மகிழ்ச்சியை கண்டு மனதில் மாற்றம் உருவானதென்னவோ உண்மை.
அந்த மாற்றமும் அவருக்கு பதட்டத்தை தான் தந்திருந்தது. எப்படியாகினும் மகள் எந்தவித சங்கடமும் இன்றி மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதில் பேராசை.
தன் மறுப்பும், அதற்கு மகனின் பேச்சும், அதன் பின்னான நிகழ்வும் அவரை நகர்த்தி செல்ல திருமண வேலைகளில் மகளுக்காக, அவளின் எதிர்காலம் நன்றாக இருக்கவேண்டும் என்றபடி தான் கலந்துகொண்டார்.
திருமணம் நெருங்க நெருங்க வீட்டினுள் வழக்கம் போல ஓரிருவார்த்தைகள் பேச்சு பரிமாற்றங்கள் தான் என்றாலும் மணமேடையில் அதென்ன ஒரு பார்வை?
என்ன சொல்ல நினைத்தாள்? இல்லை என்ன நினைத்திருந்தாள்? அவருக்கு பிடிபடவில்லை.
இத்தனை யோசனையிலும், குழப்பத்திலும் கூட தன்னை பற்றி மகள் அறிந்திருக்க கூடும் என ஒருசதவீதம் கூட நினைக்கவில்லை.
சபர்மதி பிள்ளைகளுக்கு இதனை தெரிவித்திருக்கமாட்டார் என்பதில் அத்தனை திண்ணம்.
ஆனால் ஏன் ஏன் எதற்கு என மூளையை கசக்காத குறை தான் ஜெயந்தனுக்கு.
எத்தனை இருப்பினும் அதை எல்லாம் தாண்டிய அந்த நிறைவு. ஒரு பெண்ணின் தகப்பனாய் மகளின் திருமணத்தை கண் குளிர பார்த்து பூரிக்கத்தான் செய்தார்.
அத்தனை சஞ்சலங்களையும் மீறிய ஒரு மகிழ்ச்சி பிராவகம் அவருள் ஊற்றெடுத்தது.
அத்தனை அழகாய் மகளை அவன் பார்த்துக்கொண்ட பாங்கும், அவனின் குடும்பத்தார் நடந்துகொண்ட மரியாதையான முறையும் என்று அவரின் சந்தோஷத்தை அதிகப்படுத்தியது.
எல்லாம் முடிந்து வீடு வந்த நேரம் அனைத்தையும் தனியாய் அசைபோட இதே போல முழுமனதுடன் தானே தானும் தன் மனைவியை கை பிடித்தோம் என்ற எண்ணமும் மேலோங்க ஆரம்பித்தது.
அதன் தொடர்ச்சி தங்களுடைய மகிழ்வான வாழ்க்கையும், தன்னுடைய கசப்பான சபலமும், அதனை தொடர்ந்த வெறுமையும்.
இப்படி ஒரு எதிர்காலம் மகளுக்கு ஏற்பட்டுவிட கூடாதே. அப்படி ஒன்று நிகழுமானால் தன்னால் தாங்கவியலுமா?
அப்போது துவங்கியது மகள் பார்வைக்கான அர்த்தத்தை தேடும் பணி. மனதிற்குள் சுருக்கென்ற ஒரு வலி.
அவரின் யோசனையை கலைப்பதை போல அந்த அறைக்கு உறங்க வந்து சேர்ந்தார் சபர்மதி.
வந்தவர் வழக்கம் போல ஜெயந்தன் என்றொருவர் இருப்பதாகவே உணரவில்லை.
இரவு உடையை எடுத்துக்கொண்டு உள்ளறைக்கு சென்று மாற்றிவிட்டு வந்தவர் கைபேசியில் சத்தத்தை குறைத்து வைத்துவிட்டு படுக்க செல்ல,
“மதி…” என்று நிறுத்தினார் ஜெயந்தன்.
வாளின் கூர்மையுடனான ஒரு பார்வை. ஒருநொடி அதில் தடுமாறி பேச்சை நிறுத்தியவர் இன்னும் மனைவி தன்னை பார்த்தபடி இருப்பதை கண்டு,
“சௌபி எத்தனை மணிக்கு மால்தீவ்ஸ் ரீச்சானா? பேசினியா நீ?…” என கேட்டுவிட,
“ஈவ்னிங் ஆகிடுச்சாம் வில்லா போய் சேர…” பதில் தந்துவிட்டேன் என்பதை போல ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டவர் கட்டிலில் சாய்ந்தமர்ந்து கண்களுக்கு கண்ணாடியை அணிந்துகொண்டார்.
“மதி ப்ளீஸ், நான் கொஞ்சம் பேசனும். என்கிட்ட கான்சன்ட்ரேட் பண்ணு…” என்று கெஞ்சுதலாய் கேட்கவும் புத்தகத்தை மூடி வைத்தவர் எழுந்து சென்று கதவை அடைத்துவிட்டு வந்தமர்ந்து,
“சொல்லுங்க…” என்றார்.
“நேத்தே பேசலாம்ன்னா நீ ரூம்க்கு வரலை. சௌபியை அனுப்பனும்ன்னு கீழயே இருந்துட்ட. நான் ரொம்ப நேரமா வெய்ட் பண்ணேன்…”
“ப்ச், என்னை கோபப்படுத்தாத மதி. உனக்கே தெரியும் எனக்கு இந்த கல்யாணத்துல பெருசா இஷ்டம் இல்லைன்னு. நீ தான் சௌபிக்கு பிடிச்சிருக்குன்னு சொன்ன. அதனால அவ சந்தோஷத்துக்காக சரின்னேன்…” என்று சொல்ல அவரிடம் மௌனம் மட்டுமே.
“கேட்கிற தானே?…” என்று ஜெயந்தன் அவர் முகத்திலேயே கவனம் வைக்க தலையை மட்டும் அசைத்தார் அவர்.
“இதெல்லாம் ரொம்ப ஓவர் மதி. நானும் பொறுமையா இருந்து பார்த்துட்டேன். என்னை ரொம்பவே இன்செல்ட் பன்ற. பதில் கூடவா சொல்ல முடியலை உன்னால….” என்று அவர் கேட்ட விதத்தில் சபர்மதியின் கண்கள் மெலிதாய் மூடி திறந்தது.
மூடிய அந்த நொடிநேரத்தில் சுலோக்ஷனாவிடம் ஜெயந்தன் குறுஞ்செய்தியில் பேசிய வார்த்தைகள் தான் படமாய் விரிய அசூயையில் முகம் சுளித்து சட்டென கண்களை திறந்துகொண்டார் அவர்.
இன்றளவும் கூட உறக்கத்திலும் மறக்கமுடியாமல் அல்லவா இருக்கிறது அந்த நரக தருணங்கள்.
“மதி…” என அருகில் வந்த ஜெயந்தனை பார்வையில் எட்டி நிறுத்தினார்.
“என்ன பேசனுமோ அதை மட்டும் பேசுங்க…” என்று சொல்ல,
“என்னை அவமானப்படுத்தற. போகட்டும். என் பொண்ணுக்காக தானே?…” என்றவர்,
“கல்யாணத்துல சௌபி முகத்துல என்னவோ தோணிட்டே இருந்துச்சு. எனக்கு என்னன்னு தெரியலை. அவ சந்தோஷமா தான் இருந்தா. ஆனா அதையும் மீறி அப்பப்ப சட்டுன்னு கண்ணு கலங்குது. அதை அவ ரொம்பவே சமாளிச்சிட்டா. நீ பார்த்தியோ என்னவோ நான் என் பொண்ணை மட்டும் தான் பார்த்தேன்…” என்றார்.
“அதுக்கு?…”
“என்ன மதி இப்படி சொல்ற? ரிசப்ஷன்லயும் சௌபி முகமே சரியில்லை. அதுவும் வந்தவங்களோட மருமகன் அவ்வளோ க்ளோஸா. ப்ச், எனக்கென்னமோ மனசுக்குள்ள பயமாவே இருக்கு…” என்று ஜெயந்தன் சொல்ல சபர்மதி எரிக்கும் பார்வை பார்த்தார் அவரை.
“கல்யாணம்ன்னா எல்லாருக்கும் எமோஷனலா தானே இருக்கும்? அதுவும் என் பொண்ணுக்கு…” என்ற சபர்மதி சட்டென வார்த்தையை அடக்கிக்கொண்டார்.
அவருக்கு தெரியுமே மகளின் அந்த உணர்வு போராட்டம் ஏன் என்று. திருமணம் முடிந்து வரவேற்பில் அவளால் தாளமாட்டாமல் தன்னை பரிதவிப்புடன் பார்த்த ஷணங்கள் தாயாய் மரித்து மரத்து உயிர்த்த கணங்கள் அவை.
கணவனிடம் தன்னுணர்வுகளை, மன போராட்டங்களை காண்பித்துவிட கூடாதென அவள் அனுபவித்தவையும், அவளுக்கே தெரியாமல் மனைவியின் தோளை பற்றியபடி அவளை தாங்கி நின்றவனையும் எண்ணி கலங்கி தான் போனார்.
“எந்த சூழ்நிலையிலையும் எனக்கு விஷயம் தெரியும்ன்னு உங்க பொண்ணுக்கு சொல்லிடாதீங்க. காலத்துக்கும் அது என்னோடவே இருந்திடட்டும். ப்ராமிஸ். நீங்க சொல்லலைன்னாலும் நானே எடுத்துப்பேன்….” என்று சபர்மதியிடம் ஆரோன் சொல்லியிருக்க அவனின் பேச்சையும் கொடுத்த வாக்கையும் மீற முடியவில்லை.
மேடையில் மகளிடம் விழிகளால் தைரியம் சொல்லியவர் புன்னகைத்து காண்பிக்க மட்டுமே முடிந்தது.
இப்போது ஜெயந்தன் பேச பேச ஆத்திரம் கண்ணை மறைத்தாலும் பல்லை கடித்து மௌனம் சாதித்தார்.
“நான் சொல்லிட்டே இருக்கேன். நீ என்னடான்னா இப்படி பேசற?…” என கேட்கவும்,
“எல்லாரையும் உங்களை போலவே நினைச்சிட்டீங்களோ?…” என்று கத்தியில் விஷம் தோய்த்து அவரின் மேல் வீச, உடல் அதிர பார்த்தார் ஜெயந்தன்.
“மதி…” என்றவருக்கு நடுக்கம்.
“உண்மை தானே? நீங்க அப்படி இருந்தா எல்லாரும் அப்படியே இருப்பாங்களா என்ன? அதான் உங்களுக்கு எல்லாரும் உங்களை போலவே இருப்பாங்கன்னு தோணுது…” என்று சொல்ல,
“மதி போதும். எப்பவோ தப்பு பண்ணிட்டேன் தான். அதுக்குன்னு இத்தனை வருஷம் என்னை தண்டிச்சது போதாதுன்னு இப்பவும் இப்படி பேசற?…” என்று ஆற்றமாட்டாமல் கேட்க,
“ஓஹ் அப்போ இதே போல கண்கொண்டு பார்க்கமுடியாத வக்கிர வார்த்தைகளை நானும் இன்னொரு ஆணோட பேசி, என் உணர்வுகளுக்கு வடிகால் தேடிட்டு, வெறும் வாய்வார்த்தையா தான் பேசினேன்னு சொன்னா உங்க எதிர்வினை என்னவா இருக்கும்?…”
“மதி…” என அலறிவிட்டார் ஜெயந்தன்.
“வார்த்தையா கூட கேட்க முடியலை. அவ்வளோ அசிங்கப்படறவர் அந்த அசிங்கத்தை செஞ்சுட்டு என் முன்னாடி நிக்கும் போது எனக்கு எப்படி இருந்திருக்கும்? மன்னிப்பு, இந்த ஒருவார்த்தை எல்லாத்தையும் சரி பண்ணிடும்ன்னா யார் வேணா என்ன வேணா செஞ்சுட்டு மன்னிப்பை சொல்லி ஈஸியா க்ராஸ் பண்ணிடலாம் இல்லையா?…”
சபர்மதியின் வார்த்தைகளின் முன் ஜெயந்தன் ஆடிப்போய் நின்றார். இத்தனை வருடங்களுக்கு பின்னும் அதன் சூடு குறையாமல் அனலாய் அவரை சுட்டது சபர்மதியின் பார்வை.
“தண்டனைன்னா? யூ மீன் பேசறத குறைச்சத்தை மட்டும் சொல்றீங்களா? இல்லை…” என்று இழுத்து நிறுத்திய கேள்வியில் ஜெயந்தனின் மௌனத்தில் இன்னுமே முகம் கசங்கி போனார் சபர்மதி.
“என் உணர்வுகள் என்னைக்கோ செத்து போச்சு ஜெயந்தன். அப்பறம் எங்க நான் உங்களுக்கு தண்டனை குடுக்க? என் பிள்ளைங்களுக்காக வாழறேன். அவங்களுக்காக உங்களையும் விட்டுவச்சிருக்கேன். எப்படி தெரியுமா? சகிச்சிக்கிட்டு…”
‘சகித்துக்கொண்டு’ என்ற மனைவியின் வார்த்தையில் ஜெயந்தன் செத்துவிட்டிருக்கவேண்டுமோ என்று நினைத்துவிட்டார்.
என்ன பேச துவங்கி எங்கே வந்து நிற்கிறது? என் மகளின் வாழ்க்கையை கூட நான் முடிவெடுத்து பேசமுடியாத பாவியாகிவிட்டேனே என தான் சறுக்கிய நாட்களை எண்ணி வெதும்பினார்.
அவரால் சபர்மதியின் கேள்விக்கு இப்போதும் ஒருவார்த்தை பதில் சொல்லமுடியவில்லை.
“மன்னிப்பை தவிர என்னால வேற எதுவும் கேட்க முடியலை மதி. எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியலை. நீ இத்தனை வருஷம் கழிச்சும் இதை பேசறது சரியில்லை. இப்ப நம்ம பொண்ணை பத்தி பேசறேன். நீ என்னன்னா?…” என்றவரை வெறித்து பார்த்தார் சபர்மதி.