‘எத்தனை இலகுவாய் இப்போதும் சொல்கிறார்?’ என மனதினோரம் அவரின் ஆவி துடித்துக்கொண்டிருந்தது ஜெயந்தனின் வார்த்தையாடலில்.
அப்படி ஒரு நிகழ்வு மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் இன்று என் குடும்பமும், என் பெண்ணும் எத்தனை நிம்மதியுடன் மகிழ்ச்சியாய் வாழ்ந்திருக்க கூடும் என்ற ஆதங்கம் பேரெழுச்சியை தொட்டிருந்தது.
தொண்டை வரை வந்துவிட்டது. ‘என் பெண்ணின் இந்த நிலைக்கு காரணமே நீ தான், நீ மட்டும் தான்’ என்று சொல்லி கத்தி அவரை வார்த்தைகளால் மட்டுமின்றி கைகள் நோகும் அளவிற்கு அடித்து சாய்க்க ஆவேசம் எழுந்தது.
எதுவும் செய்யமுடியாததில் சட்டென உடல் தளர்வடைய துவண்டு போய் சாய்ந்தார் சபர்மதி.
ஏற்கனவே காய்ந்துகொண்டிருந்த ரணத்தை கீறிவிட்டதை போலொரு வலி அவரின் மனதில்.
எத்தனை முயன்றும் கண்ணினோரம் கசியும் நீரினை கட்டுப்படுத்த முடியவில்லை.
ஆத்திரம், ஆத்திரம். அத்தனை ஆத்திரம் அவரின் மனதில். பேச்சுக்கள் நீண்டால் இன்னும் ரசாபாசமாகிவிடும் என்பதில் அத்தனை உறுதியாய் இருந்தார்.
அதன் பொருட்டே முதல்நாள் இரவும் அறைக்கு வரவில்லை. திருமணபந்தத்தின் முழுமையான சந்தோஷத்தை அனுபவிக்கமுடியாமல் மகளின் அந்த கண்கள் காட்டிய தவிப்பு அவரின் வயிற்றை கனமாக்கியது.
அவரை சாந்தமாக்குவதை போல மகளை அழைத்துக்கொண்டு வேறிடம் சென்ற மருமகனின் புரிதலில் நெக்குருகி போனார் சபர்மதி.
இந்த புரிதலும், சந்தோஷமும் காலத்திற்கும் அவர்களுக்கு இருக்கவேண்டும் என்ற வேண்டுதல் மட்டுமே அவரிடம்.
————————————–
உறக்கம் கலைந்தவள் மெல்ல அவனின் கைகளுக்குள் இருந்து தன்னை விடுவித்துக்கொண்ட சௌபர்ணிகா தனது போனை எடுத்து பார்க்க நேரம் மூன்றை தொடவிருந்தது.
கைபேசியை எடுத்த இடத்தில் வைத்துவிட்டு திரும்பி பார்க்க ஆழ்ந்த உறக்கத்தில் ஆரோன் ரிஷபன்.
உறக்கத்திலும் கூட அவன் முகத்தில் இலகுவாய் குறுநகை குடியிருக்க பார்த்தபடி சில நொடிகள் இருந்தவள் எங்கே விழித்துக்கொள்வானோ என எழுந்து சென்று தண்ணீரை அருந்திவிட்டு பின்பக்க கதவை திறந்து பார்த்தாள் சௌபர்ணிகா.
இரவை விட இப்போதைய நேரம் குளிர் இன்னும் அதிகத்திற்கும் இருக்க அவள் அணிந்திருந்த மெல்லிய இரவு உடையை ஊடுருவியது குளிர்.
இரு கைகளையும் கட்டியபடி சலனமற்ற அந்த இரவின் நிசப்தத்தை ரசித்துக்கொண்டே வந்து அங்கிருந்த நீளமான ஒய்வு இருக்கையில் சாய்ந்து அமர்ந்தாள்.
இரவெல்லாம் அவனுடனான பொழுதுகள் நாணத்தை தூவ மெல்லிய புன்னகை முகத்தில்.
“ரிஷி…” என்றாள் சத்தமின்றி வாயசைத்து.
ஒரு பெயர் அவளுள் அத்தனை மாற்றங்களையும் நிகழ்த்தி இருக்க அதனை சாதித்துக்கொண்டவன் மேல் நேசம் பெருக்கெடுத்தது.
‘உன் முகத்துல உள்ள டென்ஷன் எனக்குள்ள ஒட்டிருச்சு. உன் முகத்துல காதலையும் தாண்டிய ஒரு உணர்வு.’ என்றானே?
எத்தனை தன்னை கவனித்திருக்கிறான் என நினைக்கையில் பிரமிப்பு எழுந்தாலும் கவலையும் எழுந்தது.
அவனின் சந்தோஷத்தை தன்னையறியாமலே குறைத்திருக்கிறோம் என்பதே அவளை வாட்ட ஆரம்பித்தது. இதற்கு தானே அவள் பயந்தது.
எத்தனை எத்தனை போராட்டம்? எவ்வளவு வேதனைகள்? சட்டென மனது திருமணத்தின் போதான நிகழ்விற்கு தாவ அவளுள் அடங்கியிருந்த அந்த அச்சம் இப்போதும் தலைதூக்கியது.
ஆம் அச்சமே. இலகுவாய் கடந்துவிட்டாள் என்றெல்லாம் இல்லை. ஆனால் கடக்கவேண்டி மனதை திடப்படுத்தினாள்.
அவளுக்கே தெரியவில்லை அதனை ஆரோன் தெரிந்து செய்தானா இல்லையா என்பது.
ஆனால் அதனை தாண்ட அவனின் பங்கு தான் அங்கு பிரதானமே. அவன் ஒருவனே அவளின் ஆதாரம்.
திருமணம் வரையிலும் கூட சமாளித்துக்கொண்டாள். சமாளிக்க தான் செய்தாள் அவள்.
எத்தனை தூரம் அவளின் மனதில் உற்சாகமும், ஆசையும், ஆவலும் அதிகத்திற்கும் அரேங்கேறிக்கொண்டே இருந்ததோ, அதற்கு ஈடாக அவளின் கசப்பான உருவகங்கள் அவளை இம்சிக்க தயங்கவில்லை.
ஜெயந்தன். பாசமாய், பரிவாய், சந்தோஷமாய் தன்னை பார்த்த தந்தையின் அந்த அன்பிற்கு முன் அவளை இத்தனை வருடங்களாய் துரத்திய எண்ணங்கள் தான் முன்னின்றது.
தகப்பனை பார்த்த மாத்திரம் அருகிருந்தவன் கைகளில் அவளறியாமல் கொடுத்த அழுத்தம் ஆரோன் கவனம் மொத்தமும் அவளிடம் மட்டுமே.
ஒவ்வொரு நொடியும் அவனுடனான பேச்சுக்களும், சம்பிரதாயங்களும் என நேரம் கடந்துவிட்டது.
அதுவும் ஆரோன் ரிஷபன் முறைப்படியும் திருமணம். முறைப்படி என்றால் உறவுகளை முன்னிலையில் தங்கச்சங்கிலியிட்டு, மோதிரம் மாற்றிக்கொண்டனர்.
அப்போதே திருமண பதிவும் செய்தாகிற்று. ஸ்டீபன் பக்கத்தில் அனைவருமே நிச்சயத்திற்கு கூட அழைக்கவில்லை என்ற பேச்சுக்களுக்கு மதிப்பளித்து இருபக்கமும் நிறைவுறும் வகையில் நடந்தேறியது திருமணம்.
மாலை நேரம் வரவேற்பிற்கு தயாராக சௌபர்ணிகா சபர்மதியை அதிகமாய் தேடினாள்.
“ரிஷி அம்மாவை பார்க்கனும்…” என்று போனில் சொல்ல,
“உன்னோட மேக்கோவர் முடிஞ்சதா? நான் சொன்ன மாதிரி தானே?…” என்றவன் பேசிக்கொண்டே வந்துசேர்ந்தான் அவளின் அறைக்கு.
அதிக வேலைபாடுடனான லேஹெங்கா அணிந்திருந்தவளின் அத்தனை அலங்கரிப்பும் ஆரோன் ரிஷபன் சொல்லியது மட்டுமே.
“ஹேர் ட்ரெஸ் பண்ண கூட இன்னொருத்தரை சொல்லனுமா ரிஷபன்?…” என்றவளிடம்,
“நீ பிரபஞ்ச ப்யூட்டியாச்சே? அதுவும் இப்போ ஆரோன் ரிஷபன் குயின் நீ. பேஷன் வேர்ல்ட் ஃபுல் இப்ப நீ தான். ஹாட் டாப்பிக் உன்னையும், என்னையும் வச்சு தான். அப்பியரன்ஸ் சும்மா அப்படி இருக்கவேண்டாமா பிபி?…” என்று கண்சிமிட்டியவனிடம் மறுக்க முடியுமா?
அழகாய் அசத்தலாய் இருவரின் பொருத்தமும் அனைவரின் கண்களை பறிப்பதாய் இருக்க அறைக்குள் எத்தனை பூரித்தாளோ மேடையில் அப்படி இல்லை.
சிறிது நேரத்திலேயே வந்திருந்த விருந்தினர்கள் தாண்டி ஆரோனிடம் நெருங்கும் அவன் வட்ட மக்கள் சௌபர்ணிகாவின் திடத்தை வெகுவாய் பரிசோதித்தார்கள்.
மனவுறுதி ஊசலாடும் போலிருக்க முயன்று தன்னை நிலைப்படுத்த போராடினாள்.
“இவங்க…” என்று ஆரோன் அவர்களை அறிமுகப்படுத்த திரும்பும் நிமிடங்கள் அவனின் கண்களில் ஒளிர்ந்ததே ஒரு பாவம்!
விளங்கவில்லை என்றாலும் ‘நானிருக்கிறேன்’ என்பதை போன்ற அவனின் செயல் அவளின் மொத்த சக்தியையும் மீட்டெடுத்து கையில் தந்தது.
“மிஸ் பண்ணிட்டேன் ஆரோன்…” என அவனிடம் முன்பு காதல் சொல்லிய பிரபஞ்ச அழகியின் பேச்சில் ஒளிந்திருந்த ஏமாற்றம் கலந்த கிண்டலில் உண்மைக்கும் சௌபர்ணிகா துணுக்குற்றாள்.
“நீங்க ரொம்ப லக்கி….” என்று அவளிடம் வேறு அப்பெண் சொல்ல,
“ஆஹாங், ஆமாவா மிஸஸ் ரிஷபன்?…” என்று சௌபர்ணிகாவின் தோளில் கைகளால் அணையிட்டு அவளிடம் புன்சிரிப்புடன் கேட்க பதில் எதுவும் சொல்லாமல் அவனின் புன்னகையை மட்டுமே உள்வாங்கிக்கொண்டிருந்தாள் சௌபர்ணிகா.
“என்ன சௌபி?…” என்று மகளின் தவிப்பை கண்டு சபர்மதி இடையில் கேட்க,
“என்னால கண்ட்ரோல் பண்ண முடியலை ம்மா. ஒருமாதிரி தோணுது. அதுவும் ரிஷி என்னை திரும்பி பார்க்கும் போதெல்லாம் பயந்து போறேன். என் சந்தோஷம்…” என்றவள் தொண்டை அடைக்க பேச்சை நிறுத்த,
“என்ன இது சின்ன பிள்ளை மாதிரி?…” என்றவரின் பதட்டம் மகளை அடையாமல் பார்த்துக்கொள்ள மீண்டும் மேடைக்கு வந்துவிட்டாள் சௌபர்ணிகா.
“என்னை விட்டு எங்க போற நீ?…” என்று அவளின் கையை கோர்த்துக்கொண்டவன் தான்.
“எங்கயும் போகமாட்டேன். கையை விட்டுடக்கூடாது…” என்று சொல்லியவளிடம் வார்த்தைகளால் அல்லாது பார்வையால் பதிலளிக்க,
“இன்னும் கொஞ்சம் கிட்ட நின்னா மீடியால எப்படி போட்ரே ஆகும் ரிஷபன்?…” என்று வேறு சௌபர்ணிகா கேட்க,
“புருஷனும் பொண்டாட்டியும் எவ்வளோ க்ளோஸ் அப்படின்னும் பேசுவாங்க. மேடையில கூட இப்படி நிக்கறாங்கப்பா, அவ்வளோ லவ் போலன்னும் பேசுவாங்க. அட இங்க கூடவா ஒட்டிட்டே நிக்கனும்ன்னும் கூட பேசுவாங்க. என்ன பேசினா நமக்கென்ன?…” என்றவன் இன்னும் நெருங்கி நின்றான் அவளின் அனைத்துமாய்.
‘வேறு என்ன வேண்டுமாம்? இந்த நாள்ல என் வாழ்க்கை முழுசுக்கும் எடுத்துட்டு போக எக்கச்சக்க சந்தோஷங்கள் இருக்கு. நினைச்சு நினைச்சு வாழ பொன்னான நிமிஷங்கள் இருக்கு. சௌபி கமான்’ என தனக்கு தானே உருபோட்டுக்கொண்டாள்.
ஆரோனின் சந்தோஷத்தை பறித்துவிடுவோமோ என்ற எண்ணத்திலேயே உருவமற்ற அந்த அச்சுறுத்தலில் இருந்து மீள முயன்று அதில் வெற்றியும் கண்டுவிட்டாள் பெண்.
அதையும் மீறி அவள் கைகளால் கொடுக்கும் அழுத்தங்களில் ஆரோனும் அதனை உணர்ந்து அவளை இலகுவாக்கி இயல்பாக்க முயன்று வரவேற்பும் நல்லவிதமாகவே முடிந்தது.
ஆனால் அதற்குள் பெரிதாய் உடலளவிலும், மனதளவிலும் சோர்ந்து களைத்து போனாள் சௌபர்ணிகா.
வீட்டில் இரவு சடங்கிற்கு ஏற்பாடு செய்திருக்க காலையில் இருந்து அலைக்கழித்த உணர்வுகளோடு அவனுடன் முழுமையாய் ஒன்றிவிட முடியுமா என்ற சிந்தனை முகத்தில் தெரிந்தததோ?
ஆரோன் கண்டுகொண்டிருந்தான். அறைக்குள் வந்ததுமே உடை மாற்றிவிட்டு வந்தவன்,
“மார்னிங் ப்ளைட் பிபி. செம்ம டயர்ட். படுத்து தூங்கு…” என்று சொல்ல திகைத்து தான் பார்த்தாள் அவனை.
தன் முகம் பார்த்து கண்டுகொண்டானோ என அவனையே பார்வையில் தொடர,
“ஏற்கனவே ஒருமாதிரி கசகசப்புடா பிபி. இந்த மைண்டோட வேண்டாமேன்னு நினைச்சேன். உனக்கு ஓகேன்னா நானும் ரெடி…” என்று துள்ளி எழுந்தவனை முறைத்தவள்,
“அதான் மார்னிங் ப்ளைட் இருக்குன்னு சொன்னீங்களே? குட்நைட்…” என்று அவனருகே படுத்தவள் அவனையும் இழுத்து அருகில் போட்டுக்கொண்டு உறங்க முற்பட நிமிடத்தில் தூங்கியும்போனாள்.
ஒவ்வொன்றும் இப்போது நினைக்க நினைக்க மனதின் சந்தோஷத்தை வெம்மை ஆட்கொள்வதை போலிருக்க சட்டென எழுந்தவள் நீச்சல் குளத்தில் பாய்ந்துவிட்டாள்.
உடலுக்குள் ஊசியாய் ஊடுருவும் குளிரையும் பொருட்படுத்தாது சோர்வுறும் வரையிலான ஓட்டம் அவளிடம்.
வெகுநேரம் நீந்திக்கொண்டிருந்தவள் அப்போதுதான் அந்த குறுகுறுப்பை உணர்ந்து பார்க்க அங்கே ஆரோன் ரிஷபன் நின்றிருந்தான்.
என்ன ஏது என்று எந்த கேள்வியும் இல்லை. சில நொடிகள் அவனை பார்த்தவள் பார்வையில், அவன் தன் கைகளை விரிக்க அடுத்த நொடி தண்ணீரிலிருந்து வெளியேறி அவன் கைகளுக்குள் கட்டுண்டாள் சௌபர்ணிகா.
“என்னை விட்டு எங்க போற நீ?…” என்றவன் கோபம் அவனின் கைகளில் தென்பட,
“என்னைவிட்டு ஏன் தூங்கின நீ?…” என்றாள் பதிலுக்கு.
“அதுதான் தப்போ?…”
“பெரிய தப்பு…” என்றவள் அவனை போலவே கண்சிமிட்ட, அவளின் ஈர உடல் அவனையும் குளிர்விக்க இருவரின் அணைப்பும் இன்னும் வலுபெற,
“இப்படியா நைட் ட்ரெஸ்ஸோட ஸ்விம் பன்றது?…” என்றான் கேலியாய்.
“ரிஷி…”
“எஸ் வேதாளம்….”
“குளிருது…”
“திரும்ப தண்ணிக்குள்ள போய்ட்டா குளிராதாம்…” என்றவனின் உடல் சிரிப்பில் குலுங்க,
“என்ன நினைச்சு சிரிச்சீங்க?…” என்றாள் முறைப்புடன் அவன் முகம் பார்த்து.
“மாட்டேன்…”
“ரிஷி…”
“முடிஞ்சா தெரிஞ்சுக்கோ. என் கூடவே, என் கைக்குள்ளையே இருந்து…” என்றவன் அவளை கைகளில் அள்ளிக்கொண்டு நீச்சல் குளத்தில் அல்லாது சுற்றியிருந்த கடல் நீரில் விழுந்தான் ஆரோன் ரிஷபன்.