அடுக்குமாடி கட்டிடத்தினுள் நுழைந்த வாகனத்திலிருந்து இறங்கிக்கொண்டவர்களை விடுத்து கார் கிளம்பி செல்ல,
“டென்த் ஃப்ளோர்…” என்றான் ஆரோன்.
“ஹ்ம்ம் ஞாபகம் இருக்கு ரிஷி…” என்றவள் லிப்ட் உள்ளே நுழைந்தும் அமைதியாய் நிற்க,
“புருஷன் வீட்டுக்கு வரோம்னு கொஞ்சமாச்சும் எக்ஸைட்மென்ட் இருக்கா மிஸஸ் பிபி?…” என்று வம்பிழுக்க அதற்குமே திகைத்து தான் பார்த்தாள்.
‘என்ன நினைக்கிறேன் நான்? அவன் எதிர்பார்ப்புகள் ஒவ்வொன்றையும் ஏமாற்றம் அடைய செய்கிறேன்’ என உள்ளுக்குள் அலண்டு போக,
“ஸாரி ரிஷி….” என்ற வார்த்தையை தவிர வேறு வரவில்லை.
அவன் என்ன நினைப்பானோ என்கிற பதட்டம் ஒருபுறம். இப்படி இருக்கிறோமே என்கிற பச்சாதாபம் ஒருபுறம் என அவளை அலைகழிக்க விரல்கள் லேசாய் நடுங்கியது.
“சௌபர்ணிகா…” என்று அழுத்தமான குரலில் அழைத்தவனை நிமிர்ந்து பார்க்காமல் தவிர்த்தவள், வேறு எதுவும் கேட்டுவிடுவானோ என்று நினைத்தாள்.
“வேதாளம் என்னடி இது?…” என்று குரலை இலகுவாக்கி சட்டென அவளை தன் கைவளைவிற்குள் கொண்டுவர,
“என்ன பன்றீங்க ரிஷி? யாராச்சும் வந்திருவாங்க…” என்று அவனின் அணைப்பிலிருந்து வெளிவர பார்க்க,
“ஜஸ்ட் ஜென்டில் ஹக் தான். அதுவும் யாரும் வரமாட்டாங்க இந்தநேரம்….” என்றவன் பத்தாம் மாடி வரை விடவில்லை அவளை.
“எத்தனை நாள் இங்க இருப்போம் நாம?…” என்று அவனிடம் கேட்க,
“இன்னும் வீட்டுக்குள்ளவே நுழையலை. அதை அப்பறம் பேசிப்போம்…” என்றவன் உடமைகளை நகற்றிக்கொண்டு வீட்டின் முன்னால் நிற்க கதவின் வேலைபாட்டை கவனித்தாள் சௌபர்ணிகா.
இன்னும் அவன் திறவாமல் நிற்பதை கண்டவள் சாவியை தேடுகிறானோ என பார்க்க,
“டோர் நல்லாருக்குல?…” என கேலி வேறு அவன் குரலில்.
“என்ன கிண்டலா? கதவை திறங்க…” என்றவள்,
“சாவியை எங்கயும் வச்சிட்டீங்களா?…” என கேட்க,
“பொறு, திறப்பாங்க…” என்ற பொழுதே உள்பக்கமாக கதவு திறக்கப்பட்டது.
ஆரத்தி தட்டுடன் இரு குடும்பத்தினரும் வீட்டினுள் இருந்து வெளியே வந்தனர் ஆராவாரத்துடன்.
“இதுதான் லாஸ்ட் சர்ப்ரைஸ்…” என்று கண் சிமிட்டி அவன் சொல்லவும் சௌபர்ணிகா மனது நெகிழ்ந்து போனது.
“வந்ததும் பிள்ளையை கண்ணு கலங்க வச்சிட்டு இருக்க?…” என்று ஆராதனா மகனை அதட்டிவிட்டு இருவருக்கும் ஆரத்தி எடுக்க சொல்லவும் சேர்ந்தாற்போல உள்ளே நுழைந்தனர்.
“வெல்கம் வேதாளம்…” என்றால் காதின் அருகே ஆரோன் ரிஷபன்.
“என்னடா ரகசியமா? என்ன சொன்ன?…” பொன்னரசி இடுப்பில் கைவைத்துக்கொண்டு பேரனிடம் கேட்க,
“உங்ககிட்ட ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும்ன்னு சொன்னேன்….” என சத்தமாய் ஆரோன் சொல்ல அனைவரின் முகத்திலும் சந்தோஷமும், சத்தமான சிரிப்பும்.
“சம்பிரதாயத்துக்கு அம்மா வீட்டுக்கு போய் அன்னைக்கு விளக்கேத்திட்டாலும் இனி நீங்க சேர்ந்து வாழப்போற வீடு. வந்து விளக்கேத்து…” என்றார் ஆராதனா சௌபர்ணிகாவிடம்.
அவர் சொல்லவும் சௌபர்ணிகா விழிகள் ஆரோனை நோக்க கண்ணமர்த்தி ஆமோதித்தவன் கண் சிமிட்டி புன்னகைக்க,
“சரியான சிமிட்டன்….” என்ற சௌபர்ணிகா சந்தோஷமும் பூரிப்புமாக விளக்கேற்ற,
“என்ன சொன்ன?…” என காதை அவளருகில் கொண்டுசென்றவன் அவளுக்கு உதவுவதை போல குனிந்துகொண்டு கேட்க,
“சிமிட்டிக்கு ஆண் பால் சிமிட்டன்….”
“யூ மீன் அழகா இருக்கேன்னு சொல்ற?…”
“ரிஷி…”
“ரிஷபன்…” என்று பதிலுக்கு அவன் சொல்லவும்,
“எவ்வளோ நேரமா விளக்கேத்துவீங்க? அவ ஏத்த, நீ புசுபுசுன்னு மூச்சுவிட இன்னைக்கு ஏத்தின மாதிரிதான்…” என பொன்னரசி இருவரையும் போல குனிந்து அதட்ட,
“சரியா எரியுதான்னு செக் பண்ணேன் பாட்டி…” என்றான் அவன்.
“தீவுக்கு கூட்டிட்டு போனியே. சொல்லித்தர வேண்டியதுதான? இங்க வந்து செக் பன்ற?…” என்று இருவரின் ஆர்ப்பாட்டமும் அங்கே அதிகமாகியது.
வீட்டை சுற்றி காண்பிக்க அத்தனை நேர்த்தி அந்த வீடு. அதில் ஆங்காங்கே புகைப்படங்கள்.
அவர்களின் தனிப்பட்ட அறையில் இன்னுமே பெரிதாய் இருவரின் திருமண புகைப்படங்கள்.
வரும்முன்பே இதனை எல்லாம் அவன் செய்ய சொல்லியிருப்பது புரிந்தது. மற்றவர்கள் முன் காண்பிக்க முடியவில்லை அந்த சந்தோஷத்தை.
அவர்களுக்கென ஒரு விருந்தே தயாராக இருக்க வீடு நிறைய இருந்த ஆட்களும் கொஞ்சம் கொஞ்சமாய் விடைபெற்று கிளம்பினார்கள்.
இறுதியாய் எஞ்சி இருந்தது இருகுடும்பத்தின் பெற்றோர்கள் மட்டுமே. ஜெயந்தன் மாலை தான் அங்கே வந்திருந்தார்.
“வாங்க மாமா…” என அவருக்கான மரியாதையில் ஆரோன் எவ்வித குறையும் வைக்கவில்லை.
வித்தியாசம் காட்டாமல் தான் பழகினான் அவன். அவருக்கு தான் இன்னும் ஒன்றமுடியவில்லை.