வந்ததிலிருந்து மகளை பார்த்தபடி இருந்தவருக்கு பேச்சு துணையாக ஸ்டீபன் சேர்ந்துகொண்டார்.
இரவு உணவு முடிந்ததும் பொன்னரசி மகளை கிளம்ப சொல்ல சபர்மதி இவர்களுமா கிளம்புகிறார்கள் என்று பார்த்தார்.
அவர்கள் தங்குவதாக நினைத்திருக்க அவரின் எண்ணம் புரிந்ததை போல ஆராதனாவும் சிரிப்புடன்,
“இனி இந்தமாதிரி நேரங்கள் அவங்களுக்கானது மதி. ரிஷி எப்பவுமே சௌபி கூட இருக்க போறதில்லை. அதனால முடிஞ்சளவு அவங்க தனிமையை நாம தொந்தரவு செய்யவேண்டாம் பாருங்க…..” என்றவர்,
“இப்ப போய்ட்டு நாளைக்கு பார்த்துப்போம். அவங்களுக்கும் ஏதாவது ப்ளான் இருக்கும். நாம இருக்கோம்ன்னு அதை மாத்திடக்கூடாதுல. இதையெல்லாம் கடந்து வந்தவங்க தானே நாம…” என்றார் புரிந்துணர்வுடன்.
“ஒருமாதிரி கில்டி பீல்…” என்றவள் தொண்டை அடைத்ததும்,
“ம்மா, ரிஷபன்கிட்ட நான் வெளிப்படையா இல்லையோ?…” என்ற கேள்வியில் சபர்மதி கலங்கி போனார்.
‘இதென்ன தன் மகளுக்கு இப்படி ஒரு சாபம்?’ என்று தான் நினைக்க தோன்றியது.
ஒருபக்கம் மருமகன் எதையும் மகளிடம் சொல்ல கூடாதென்றிருக்க, இன்னொருபுறம் மகள் சொல்லாமலும் தவிக்கிறாள், சொல்ல விரும்பாமலும் தவிக்கிறாள். பயந்துதான் போனார் சபர்மதி.
“சௌபிம்மா, நீ தானே சொன்ன அவருக்கு தெரியவேண்டாமேன்னு…”
“ஆமாம்மா…” என்றவளால் மேலும் பேசமுடியவில்லை.
இருக்கும் இடமும், சூழலும் அதற்கு ஒத்துழைக்காமல் இருக்க கலங்கிய கண்களை துடைத்தபடி நின்றாள்.
தூரத்தில் ஆரோனின் பார்வை பட்டும்படாமல் மனைவியை தான் கவனித்தது. கூடவே சபர்மதியின் பரிதவிப்பும்.
பெருமூச்சுடன் அவர்களை நெருங்கிவிட்டான் அவன். சௌபர்ணிகா முகம் சட்டென இயல்பு நிலைக்கு திரும்ப,
“என்னாச்சு அம்மா வீட்டுக்கு போகனுமா பிரபஞ்ச பேபிக்கு?…” என்று புன்முறுவலுடன் கேட்க,
“யார் பேபி?…” என்று இஷாந்த் வந்துவிட,
“வேற யார்? உங்க தங்கச்சி தான்…” என ஆரோன் கிண்டல் பேச,
“ம்ஹூம், அவ சௌபர்ணிகா. இன்னொரு சபர்மதி எல்லாம் இல்லை. இன்னொரு சபர்மதி வேண்டாம்…” என்று உடனடியாக சபர்மதியிடம் இருந்து பதில் வர இவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஜெயந்தனுக்குமே தூக்கிவாரிபோட்டது.
அப்படி இருந்தது அவரின் குரலின் இறுக்கம். அத்தனை இரும்பை போன்ற கடினத்துடன்.
அதில் கலங்கிப்போனது பிள்ளைகள் இருவர் மட்டுமல்ல. அவரின் வார்த்தையில் ஆரோனுமே வருத்தத்துடன் பார்த்தான் சபர்மதியை.
“ஓகே, ஓகே சபர்மதி சபர்மதி தான். சௌபர்ணிகா பேபி தான்…” என்று ஆரோன் அவ்விடத்தை இலகுவாக்க,
“கண்ணை துடைடா சௌபி. இந்த நேரம் நீ கேட்டிருக்க வேண்டாமா?…” என்று நொடியில் சுதாரித்து தங்கையிடம் இஷாந்த் சொல்ல,
“உக்கார்ந்து பொறுமையா இதை ஆராய்வோமே?…” மீண்டும் அமர சொன்னான் ஆரோன்.
“இல்லை மாப்பிள்ளை. கிளம்பறோம். நாளைக்கு நீங்க ப்ரீயா இருந்தா சௌபியோட வீட்டுக்கு வாங்க…” என்று சொல்லி விடைபெற்று கிளம்பினார் சபர்மதி.
மற்றவர்களும் கிளம்பிவிட ஆரோனுக்கு போன் வரவும் சௌபர்ணிகா பால்கனி பக்கம் வந்து நின்றாள்.
என்ன நினைக்கிறோம் என்றே இல்லாமல் ஏதேதோ எண்ணங்கள் அலைமோதிக்கொண்டிருந்தது அவளுள்.
திருமணம் முடிந்து இத்தனை நாட்கள் இல்லாத அந்த அலைப்புருதல் மொத்தமாய் அவளிடம் வந்து ஒட்டிக்கொண்டதை போலிருந்தது.
“எப்படி இருக்க சௌபி? மாப்பிள்ளை உன்னை நல்லபடியா பார்த்துக்கறாரா?…” என வந்ததுமே மகளை தனியே அழைத்து கேட்ட ஜெயந்தன்,
“எதையோ நினைச்சு மனசுக்குள்ள மருகிட்டு இருக்க. எதுவானாலும் தயங்காம என்கிட்ட வந்து சொல்லும்மா. அப்பா இருக்கேன். என்ன பிரச்சனைன்னாலும் தைரியமா அப்பாக்கிட்ட சொல்லு…” என அழுத்தி அழுத்தி சொல்லியவரை அசையாது பார்த்தவள் பதிலுக்கு எதுவும் பேசவில்லை.
“அதேமாதிரி மாப்பிள்ளை மேலையும் ஒரு பார்வை வச்சுக்கோடா சௌபி…” என்று வேறு சொல்ல வெறுமையாய் பார்த்தவள்,
“அம்மா கூப்பிடறாங்க…” என்று நகர்ந்துவிட்டாள் அவள்.
உள்ளுக்குள் எரிமலை வெடிக்காதது தான் குறை. ஏற்கனவே வெதும்பி போயிருப்பவள் காயத்தில் மேலும் எரிதழலை ஊற்றியதை போலிருந்தது.
இப்போது நினைக்கையில் பதிலுக்கு பேசியிருக்க வேண்டுமோ என்று ஆற்றாமை பொங்க அங்கே நிற்க நிற்க என்னென்னவோ தோன்றியது.
“ஓஹ் காட்…” என்று அந்த எண்ணங்களை விரட்ட முயன்றவள் வீட்டினுள் திரும்பினாள்.
காதில் ஜெயந்தன் குரல் ஒருபுறம். இன்னொரு சபர்மதி என எதார்த்தமாக சொல்லிய இஷாந்த் குரல் ஒருபுறம், இன்னொரு சபர்மதி வேண்டவே வேண்டாம் என்ற தாயின் உடைந்த குரல் ஒருபுறம் அவளின் காதுக்குள் ஒலிக்க,
“ரிஷி…” என்றவள் சத்தம் அந்த வீட்டை அதிர செய்ய, படுக்கை அறைக்குள் போனை சார்ஜில் போட்டுவிட்டு திரும்பியவன் என்னவோ என பதறி போனான்.
“ரிஷி, ரிஷபன்….” என்றவள் கத்திக்கொண்டே அங்கிருந்த அறைகளில் அவனை தேட,
“சௌபர்ணிகா…” என்றவன் குரல் கேட்ட திசையில் ஓடியவள் அவனை கண்டதும் கைகளுக்குள் ஒளிந்துகொண்டாள்.
“ம்மா…” என்றொரு ஆசுவாசமும், உடலில் நடுக்கமும் வெளிப்படையாய் தெரிய,
“என்னம்மா?…” என்றான் அவளின் தலையை வருடி.
பதில் எதுவும் சொல்லவில்லை. விழிகள் கசிந்தது. வார்த்தைகள் வெளிவராமல் இதழ்கள் துடிக்க சில நொடிகள் தேவைப்பட்டது அவள் நிதானமாக.
இந்தளவிற்கு அவள் தன்னுணர்விழந்து தடுமாறியது இன்றுதான். அவனின் அணைப்பிற்குள் நின்றவள் உள்ளம் ஒருவகையில் அமைதி பெற மெல்ல அவனை விட்டு விலகி முகம் பார்த்தாள்.
“என்னவாம்? என் முகத்துல எதாச்சும் எழுதி ஒட்டியிருக்கா?…” என்று அவளின் நெற்றியோடு முட்டி கேட்டவன்,
“இப்படி வேர்த்து போயிருக்கு…” என மீண்டும் அவள் முகத்தை தன் நெஞ்சில் சாய்த்து டிஷர்ட்டில் அவள் முகத்தை தேய்த்தான்.
“ரிஷி, ரிஷி…” என மீண்டும் கேட்டு அவன் முகம் பார்த்தவள்,
“ஒன்னு சொல்லனும்…” என்றாள்.
“சொல்லு…”
“ஆனா சொல்ல பயமா இருக்கு…” என சொல்லியவள் கண்கள் அப்பட்டமாய் பயத்தை காண்பிக்க,
“பயம் பலவீனம் சௌபர்ணிகா. புருஷனா இருந்தாலும் அதை எல்லாம் காமிச்சிடாத. நாளைக்கு நான் யூஸ் பண்ணிட போறேன்…” என்று கேலியாய் அந்த நிகழ்வை ஒதுக்கிவைத்தவன் மனதிற்குள் பெரும்வலி.
ஜெயந்தன் அவளிடம் பேசியதையும், பேசும் பொழுது அவள் வெளிப்படுத்திய பார்வையின் பாவனைகளையும், உணர்வுகளையும் கவனித்திருந்தவனுக்கு மனைவியின் உணர்வுகள் விளங்கியது.
“ஒருமாதிரி எனக்கு மூச்சுமுட்டுது ரிஷி…” என்றவள் தொண்டைக்குழி ஏறி இறங்க சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் அவள் படும் அவஸ்தை அவனை அசைக்க,
“ஒண்ணுமில்லைடா…” என்றான் மீண்டும் தன் நெஞ்சில் சாய்த்து.
இங்கே வந்து சேர்ந்த ஒருநாளைக்குள் இத்தனையா என்று அயர்ந்து போனவன் தள்ளாடி நின்றான்.
“கொஞ்சநேரம் எதையும் பேசாத நீ. நம்ம வீடு. முதமுதல்ல நம்ம ரெண்டுபேரும் இந்த வீட்டுல சேர்ந்து இருக்கற இந்த நாள், இந்த நிமிஷம். இங்க நம்மோட தவிர வேற எந்த நினைப்பும் இருக்கலாமா?…” என்று கேட்க,
சௌபர்ணிகா கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்துவிட இன்னும் அவனை நெருங்கி நின்றவள்,
“சொல்லவேண்டாம். சொல்லலை. ஆனா…” என்றவள் மேலும் எதுவும் பேசிவிடுவோமோ என அவனின் முகத்தோடு அழுத்தமாய் ஒன்றி, சில நொடிகளில் அவன் இதழ்களை விடுவித்து விலகி பார்க்க,
“சால்ட்டி கிஸ்…” என்றான் இலகுவாய் புன்னகையுடன்.
“நான் எவ்வளோ பீலிங்ல கிஸ் பண்ணினா…” என்று அவனின் மீசையை பிடித்து இழுக்க,
“என்னா என்னா பீலிங்? எங்க இன்னும் கொஞ்சம் காமிங்க…” என்று மீண்டும் மீண்டும் வம்பு செய்து தேவைக்கு அதிகமாகவே கொடுத்தும், பெற்றும் வள்ளலானான்.
சௌபர்ணிகாவின் மனநிலை முழுதாய் தெளியும் வரை அவளை விடவில்லை.
அவளை ஆட்கொண்டு ஆட்டிப்படைத்தவன் உள்ளம் அவளிடம் அளவில்லாத உருக்கம் பெற்றது.