“நான் ரெடி…” என்று இரு கைகளையும் விரித்தபடி வந்தவனை பார்த்து புன்னகைத்தவள் கைகளை கட்டியபடி நின்றிருந்தாள்.
“என்ன பிபி, காஸ்ட்யூம் சூட்டாகலையா?…” என தன்னை முன்னும் பின்னுமாய் எதிரிருந்த கண்ணாடியில் பார்த்துக்கொண்டான் ஆரோன் ரிஷபன்.
சௌபர்ணிகா மெரூன் வர்ண பாட்டியாலா, லாங் டாப்பில் நிற்க, அதற்கு ஏற்ப வெள்ளை நிற ஜீன்ஸ், மெரூன் வர்ண ஷார்ட் காட்டன் குர்தாவில் வந்துநின்றான் ஆரோன்.
அத்தனை பொருத்தம் அந்த உடை. அவளுக்கு ஏற்றவிதமாய் அணிந்துகொண்டு வர,
“என் ட்ரெஸ் கலருக்கு தான் ஸார் மேட்ச் பண்ணுவீங்களோ?…” என கிண்டலாக சௌபர்ணிகா கேட்க,
“நான் ஏற்கனவே எடுத்து வச்சிட்டேன். நீயும் இதே கலர் போட்டுப்பன்னு எனக்கு தெரியாதே? அதுக்காக நான் மாத்திக்க முடியுமா?…” என அவனும் கேலி பேசி,
“பார்த்துட்டே நிக்கிற? எப்படி இருக்குன்னு இன்னும் சொல்லலையே சில்க்?…” என்றான் அவளிடம்.
“நாட் பேட்…” என மிதப்பாய் சொல்லியவள்,
“சும்மா தான் பார்த்தேன்…” என்று கண் சிமிட்ட,
“சும்மா தானா? வேற எதுவும் இல்லையாமா?…” என கேட்டுக்கொண்டே கிட்சன் பக்கம் சென்றான்.
“எங்க போறீங்க ரிஷி?…” என அவளும் பின்னால் வர,
“சின்னதா ஒரு காபி. குடிச்சதும் கிளம்புவோம்…” என்று அடுப்பில் பாத்திரத்தில் தண்ணீரை பிடித்து வைக்க,
“ப்ளாக் காபியா?…” என்றாள் அவனுக்கு குடிக்க கப்பும், சர்க்கரையும் எடுத்தபடி.
“உனக்கு வேண்டாமா சௌபர்ணிகா? ஒரு கப் தான் எடுக்கற?…”
“ம்ஹூம். வேண்டாம்…” என்றவள் கப்பில் சர்க்கரையையும், காபி தூளையும் சேர்க்க பேசியபடி காபியை ஆற்றி குடித்து முடித்து வெளியே வந்தவன்,
“நீயே ட்ரைவ் பண்ணு…” என்று அவளிடம் சாவியை தூக்கி போட்டான்.
“அச்சோ ரிஷி…” என்று அதனை எதிர்பாராதவள் தடுமாறி பிடித்து நிமிர்ந்து பார்க்க அதற்குள் காருக்குள் ஓட்டுனர் இருக்கைக்கு அருகில் அமர்ந்துவிட்டான்.
இருவரும் ஹைதராபாத் செல்கின்றனர். மாலத்தீவில் இருந்து சென்னை வந்து நான்கு நாட்கள் கடந்துவிட்டது.
ஜெயந்தனிடம் அன்று பேசியதோடு சரி. அதன் பின் இன்னுமே அவரை தவிர்க்க தான் பார்த்தாள் சௌபர்ணிகா.
அவரின் பார்வைகள் அவளை தைரியமிழக்க செய்வதை போல ஒரு பிரம்மை.
அவளின் மனதைரியம் அங்கே அவளுக்கு கைகொடுக்காமல் ஆரோனின் அருகாமைக்கு அவளை பயந்து ஓடவைக்க ஓரிரு நாளில் சுதாரித்துவிட்டாள்.
இது எங்கள் வாழ்க்கை. இதை தானே சிக்கலாக்கிக்கொள்வோமோ என்றொரு அச்சம் பிறக்க முயன்று அதிலிருந்து மீண்டுவந்தாள்.
அன்றைய பயமும், பதட்டமும் ஏன் என ஆரோன் அவளிடம் எதையும் கேட்கவில்லை.
அதுவே அவளை உள்ளுக்குள் மருக செய்ய அப்படியான சூழல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டிய மெனக்கெடல்கள் அதிகமாகியது.
அதிலிருந்து அவளறியாமலேயே வெளிக்கொண்டு வந்ததில் அவளின் கணவனின் பங்கு தான் அதிகத்திற்கும் கூடுதல்.
ஆம், சௌபர்ணிகாவை வேறு எதையும் சிந்திக்கவிடவில்லை. அந்த வாழ்க்கைக்குள் இன்னுமின்னும் இழுத்துக்கொண்டான் ஆரோன் ரிஷபன்.
வேறு எதையும் இப்போதைக்கு யோசிக்க வைக்கவேண்டாம் என்பதில் அத்தனை தெளிவாய் இருந்தவன் இப்போதும் அதற்கென்றே பயணத்தை மாற்றிக்கொண்டான்.
அதற்கு ஏற்றவாறு இருபக்கத்தின் சொந்தத்தில் அழைப்புகளுக்கு அங்கிருந்த அந்த நாட்கள் சரியாகிவிட, அடுத்து ஹைதராபாத் செல்லவேண்டுமே.
நல்லநாள் பார்த்து ஆராதனா சொல்லிவிட இதோ இருவருமாக கிளம்பியாகிற்று.
மற்றவர்கள் விமானத்தில் செல்ல ஆரோன் ‘காரில் வருவோம்’ என்றுவிட்டான் அவர்களிடம்.
“எல்லாரோடையும் சேர்ந்து போவோம் ரிஷி…” என்றவள் பேச்சிற்கு அங்கே செவிமடுத்தான் இல்லை.
“நீ சொல்றது ஓகே. இன்னும் ஒரு வாரத்துல நான் கிளம்பிருவேன். இப்ப ப்ளைட்ல போய்ட்டா அங்க எல்லாரும் உன்னை பிடிச்சுக்குவாங்க. இன்னும் மூணு நாள் அங்கயும் சொந்தபந்தம்ன்னு டைம் போயிரும். அப்போ நான்?…” என்றவனிடம் என்ன பதில் சொல்ல?
“அராஜகம் பன்றீங்க? இந்த மாதிரி நேரத்துல தான் எல்லாரும் சேர்ந்து இருப்பாங்க…”
“நீ என்கூட சேர்ந்து இரு. அப்பறம் அதை பார்ப்போம்…” என்றவனின் முடிவை மாற்ற முடியவில்லை.
இப்போது காரையும் ஓட்டாமல் சொகுசாக சென்று அமர்ந்துகொண்டவனை விழி பிதுங்கி பார்த்தாள் அவள்.
“எனக்கு அந்த ரூட் தெரியாது ரிஷி….” என சௌபர்ணிகா அவன் பக்கம் வந்து நிற்க,
“தெரிஞ்சுக்கோ. அதுவும் சென்னை டூ ஹைதராபாத்…” என இடுப்பில் கைவைத்து முறைத்தபடி கேட்க பதிலின்றி எதோ ஒரு பாடலை முணுமுணுத்துக்கொண்டிருந்தான் ஆரோன்.
“அட ஈஸ்வரா…” என வாயில் அடித்துக்கொண்டு சட்டென காரை நிறுத்திவிட்டு சில நொடிகள் அமைதியாகி கீழே இறங்கிவிட்டாள்.
வீட்டிலிருந்து கிளம்பி ஐந்துநிமிடம் ஆகவில்லை. அதற்குள் என்ன பேசிவிட்டோம் என்று தன்னையே நிந்தித்து தலையில் தட்டிக்கொண்டவள் திரும்பி காரினுள் பார்க்க ஆரோனும் இறங்கிவிட்டான் சிரித்தபடி.
அவளை திரும்பி பார்த்துவிட்டு பாடல்களை மெல்லிய சத்தத்தில் ஒலிக்கவிட்டவன் அதனுடன் சேர்ந்தே பாடிக்கொண்டு வர சௌபர்ணிகா மனதும் அமைதிப்பட்டது.
அவ்வப்போது அவள் விரல்களை கோர்த்துக்கொள்வதும், முகத்தில் வைத்துகொள்வதும் என எதையாவது செய்துகொண்டே இருந்தான்.
சிலநிமிடங்கள் பார்த்தவள் பின் அதற்கு பழகி போக காரும் வேகமெடுத்தது ஹைவேஸில்.
அதற்குள் சௌபர்ணிகா வீட்டிலிருந்து அழைப்பு வந்துவிட ஆரோன் தான் எடுத்தான்.
“என்ன மச்சான் நீங்க கிளம்பியாச்சா?…” என்று ஆரோன் கேட்க,
“ஏர்போர்ட்ல தான் இருக்கோம் மாப்பிள்ளை. நீங்க?…” இஷாந்த் வீடியோ காலில் கேட்க,
“நாங்களும் சென்னையை விட்டு வெளியேறியாச்சு. உங்க தங்கச்சி தான் ட்ரைவ் பன்றா…” என்று அவளையும் காண்பித்து தன் பக்கம் மீண்டும் கைபேசியை திருப்பிக்கொண்டவன் பேசும்முன்,