“எங்க கேட்கறா? எப்ப பார்த்தாலும் எதிர்த்து பேசறது. அடம் பிடிக்கிறது. இப்ப கூட பாருங்க நான் தான் ட்ரைவ் பண்ணுவேன்னு காரை ஓட்டிட்டு வரா. நமக்கு எப்பவுமே விட்டுக்குடுக்கற மனசு. அதான் அவ ஆசையை ஏன் கெடுப்பானேன்?…” என்று சொல்ல, நறுக்கென்று கிள்ளி வைத்தாள் சௌபர்ணிகா.
“மிஸ்டர் மச்சான், இதெல்லாமா கேட்டுட்டு? போய் ப்ளைட்டை பிடிச்சு ஊர் போய் சேரும். எப்ப பார்த்தாலும் சின்ன பையனை ஃபாலோ பண்ணிட்டு. நாட்டி பாய்…” என்று சொல்ல,
“ரிஷி…” என்றாள் சௌபர்ணிகா முறைப்புடன்.
“மேலிடம் பொங்க ஆரம்பிச்சாச்சு. வர்ட்டா…” என்று சொல்லி ஆரோன் அழைப்பை துண்டிக்க,
“இப்படித்தான் நான் இருக்கும் போது அண்ணன்கிட்ட பேசுவீங்களா?…” என்றாள் முறைப்புடன்.
“நீ இருந்தா என்னவாம்? இதைவிட பேசுவேன். கேட்கிறியா?…” என மீண்டும் அழைப்பு விடுக்க போக,
“ஆணியே…” என்று சொல்லியவள் கீழுதட்டை கடித்து பேச்சை நிறுத்தி போனை பிடுங்கி தன் பக்கம் வைத்துக்கொண்டாள்.
“ஏன்டா படுத்தற?…” என சொல்லியேவிட்டாள் தாளமாட்டாமல்.
“இப்படி ட்ரைவ் பண்ணிட்டு போனா இன்னும் ரெண்டுநாள் ஆகிடும். முடியலை…” என்று சௌபர்ணிகா தலையை பிடிக்காத குறை தான்.
“ட்ரைவிங்ன்னா என்ன? சும்மா பாட்டை மட்டும் போட்டுவிட்டுட்டு போற, வரவங்களை வேடிக்கை பார்த்துட்டு வண்டி ஓட்டறதா?…” என கேட்டவன்,
“எப்படியான சூழ்நிலையா இருந்தாலும் நம்ம கைகளும், கண்களும் போற இலக்கை நோக்கி தான் போகனும். சந்தோஷமோ, பதட்டமோ அது உயிரை பறிக்கிற அளவுக்கு இருக்கக்கூடாது. சும்மா சும்மா இப்படி காரை நிறுத்தவும் கூடாது. இப்ப ட்ரைவ் பண்ணு…” என்று சொல்லியவன் நன்றாக சாய்ந்தமர்ந்து கண்களை மூடி கையை கட்டிக்கொண்டான்.
முகத்தில் ஏகத்திற்கும் அமைதி. சௌபர்ணிகா அவன் சொல்லியதில் ஸ்தம்பித்து அமர்ந்திருந்தாள்.
தான் ஒருமுறை பதட்டத்தில் விபத்திற்குள்ளானதை சொல்கிறான் என்று புரிந்தது நன்றாகவே.
“ரிஷி…” என அவனின் குர்தாவை பிடித்து இழுக்க,
“ட்ரைவ் பண்ணும்மா. இங்க தான் இருக்கேன். ஜஸ்ட் ஒரு டென் மினிட்ஸ்…” என்று கண் திறவாமல் சொல்ல ஆழ்ந்த மூச்செடுப்புடன் காரை கிளப்பியவள் அமைதியில் சில நிமிடங்கள் ஆரோனும் கலந்துபோனான்.
அரைமணி நேரம் சென்றிருக்கும். அவளின் அமைதி அவனையும் அசைக்க கண் திறந்து பார்த்தவன் இதழ்களில் குறுநகை.
“என்னவாம் வேதாளம் மரத்துல ஏறிடுச்சா?…” என்றான் வழக்கமான சிரிப்புடன்.
சௌபர்ணிகா பதில் சொல்லவில்லை. அவன் கிண்டலை கவனித்தாலும் கவனம் சாலையில்.
அவன் குறிப்பிடாமல் இருந்திருந்தால் கூட கவனமாக சென்றிருக்கலாம். அந்த நிகழ்வை சுட்டிக்காட்டியதும், கிளம்பும்பொழுது தான் பேச வந்து நிறுத்தியதும் என மனதை பதட்டமுற செய்ய, பத்திரமாய் சென்று சேர்ந்துவிட வேண்டும் என்பதில் தான் அத்தனை வேண்டுதல்.
“ரிலாக்ஸ் பிபி…”
“பிபி ஏத்திவிட்டுட்டு இப்ப ரிலாக்ஸா? போயா…” என்றவள் அவன் புறம் திரும்பவே இல்லை.
அவளின் பேச்சில் மௌனமாய் சிரித்துக்கொண்டவன் மீண்டும் பாடலை சத்தமாய் ஒலிக்கவிட்டு தானும் பாடி, லேசாய் ஆடி என அத்தனை சந்தோஷமாய் வந்தான் ஆரோன்.
இரவு உணவு வரை இப்படித்தான் சென்றது அவர்கள் பயணம். ஓரிடத்தில் காரை நிறுத்திவிட்டு அவசர தேவைகள், உணவு எல்லாம் முடித்துக்கொண்டு இந்த முறை ஆரோன் ஓட்டுனர் இருக்கையில் அமர,
“தேவையே இல்லை. இதுக்கப்பறமும் நானே ட்ரைவ் பண்ணிக்கறேன். அந்த வில் பவர் எனக்கு இருக்கு. நம்பிக்கை இல்லைன்னா நீங்க ட்ரைவ் பண்ணுங்க…” என்று அவள் சொல்ல,
“ப்ச், சென்டியா பேசியே…” என்றபடி எழுந்தவன் மறுபக்கம் சென்றுவிட மீண்டும் சௌபர்ணிகாவின் கைகளில் கார் பறந்தது.
இத்தனை நேரம் கவனமாய் இருக்கவேண்டும் என்றிருந்த பதட்டம், இப்பொழுது அப்படி என்ன கவனமில்லாமல் சென்றுவிடுவோம் என்ற நம்பிக்கையாய் மாறியிருக்க இதழ்களில் உறைந்திருந்த புன்னகையுடன் பயணத்தை தொடர்ந்தாள்.
அவளின் பலமும், பலவீனமும் அவன் ஒருவனே என்று முற்றும் அறிந்திருந்தவள் மனதில் நம்பிக்கை கூடுதலாகியிருந்தது.
பயணம் முழுவதும் சீண்டலும், தூண்டலுமாய் இருவரின் சம்பாஷனைகள் தான் அவ்விரவை நிறைத்தது.
அதிகாலையே சௌபர்ணிகா தன் புகுந்தவீட்டின் முன் காரை நிறுத்தியிருக்க அந்த பங்களாவின் எதிர் வீடான உறவுக்காரர் வீட்டிற்கு தான் முதலில் சென்றனர்.
குளித்து கிளம்பி பட்டுடுத்தி மணமக்களாய் இருவரும் ஆராதனா, ஸ்டீபன் இல்லத்தில் காலெடுத்து வைக்க திருமணத்தை போல அத்தனை உறவுக்கூட்டம்.
“எவ்வளோ ரிலேட்டிவ்ஸ்…” என்று வாய்பிளந்துவிட்டாள் சந்தனா.
அவள் பக்கமும் இத்தனை இல்லை. இஷாந்த் பக்கமும் இவ்வளவு சொந்தங்கள் இல்லை.
ஆனால் அனைத்தும் இங்கிருக்க ஒவ்வொன்றையும் பெரிதாகத்தான் பார்த்தாள் அவள்.
“சென்னைல ஆராம்மா வீட்டை விட இது எவ்வளோ பெருசு பாருங்க. நம்ம வீட்டை விட பெருசு…” என்று சந்தனா சொல்ல,
“மனுஷங்க மனசும் பெருசு. அதை பாரு…” என்றான் இஷாந்த் சிரிப்புடன்.
“எப்பவுமே பிலாசபியா? இப்ப என்ன சொல்லிட்டேன்னு க்ளாஸ் ஆரம்பிக்கறீங்க?…” என்று அவளுக்கு அவள் கவலை.
‘பார்த்தாயா? ஆராதனா அவளை மாதிரியே பொண்ணை எடுத்துக்கிட்டா? கேட்டா லவ் மேரேஜாம்?’ என ஸ்டீபனின் சில சொந்தங்கள் பேசினாலும் மறவர்களின் அரவணைப்பில் அந்த பேச்சுக்கள் அடங்கி போனது.
சபர்மதிக்கு அத்தனை நெகிழ்ச்சி. தன் பெண்ணின் வாழ்க்கை நினைத்ததைவிட சிறப்பாய் அமைந்துவிட்டதில் பூரித்து போனார்.
ஜெயந்தனுக்கும் சந்தோஷம் தான். அவரின் முகமே அதனை வெளிப்படுத்தியது.
முதல்நாள் தாங்கள் வந்ததில் இருந்து எவ்வளவு தங்களை கவனித்துக்கொண்டார்கள் என பார்த்தாரே.
வசதி, வாய்ப்பு, உறவுகள் என்று பார்த்தால் நிச்சயம் மகள் கொடுத்துவைத்தவள் தான் என எண்ணியவர் மனது உறுத்தும் விஷயம் மருமகனின் தொழில் மட்டுமே.
எத்தனை மாடல்களுடன் அவனின் புகைப்படம் நெருக்கமாக பார்த்திருக்க, அது ஒன்றே ஒவ்வாமையை தந்தது அவருக்கு.
இதில் ஃபேஷன் வேர்ல்ட் ஊடகங்கள் ஆரோனின் திருமணத்தை வைத்து சில வதந்திகளை கிளப்பியிருந்தது.
அதுவேறு ஒருபக்கம் அவரின் மனதில் அமர்ந்துகொண்டு நெருடலை கொடுக்க ஆரோனை பார்க்கையில் எல்லாம் அவரின் மனதிற்குள் அந்த பயம் வந்துவிடும்.
“என்னப்பா என்னவோ யோசிக்கிறீங்க?…” என்று அவரருகில் வந்துநின்றான் இஷாந்த்.
“இல்லப்பா, சும்மா தான்…” என அவர் சமாளிக்க,
“கண்டதையும் யோசிச்சு உள்ள சந்தோஷத்தை கெடுத்துடாதீங்க…” என்று படாரென மகன் சொல்ல,
“இஷாந்த்…” என்று அதிர்ந்து பார்த்தார்.
“இல்ல கெடுத்துக்கவேண்டாம்ன்னு சொன்னேன். உங்களுக்கும் நிம்மதி போயிரும் ப்பா. அவர் நம்ம மாப்பிள்ளை. சந்தேகமா பார்க்காதீங்க. உங்களறியாமலேயே ரொம்ப நேரமா நீங்க அவரை பார்த்துட்டு இருந்தீங்க. அதான் பக்கத்துல வந்தேன்…” என்று சொல்லவும் தடுமாறி தலையசைத்தவர்,
“இல்ல இல்ல. அதெல்லாம் யோசிக்கலை…” என கூறி,
“நாம நைட் கிளம்பறோம் தானே?…” என்றார்.
“ஆமா, நைட் ப்ளைட்….”
“சௌபி என்ன பன்றதா இருக்கா? ஏதாவது சொன்னாளா?…”
“ம்ஹூம். அவங்க வீட்டுல பேசிட்டு என்ன டிசிஷன் எடுக்க போறான்னு இனி தான் தெரியும். பார்ப்போம். இப்போதைக்கு அந்த பிராஞ்ச்சை நாம தான் மாத்தி மாத்தி பார்த்துக்கனும்…” என்றவன்,
“ஒருவேளை இங்க உள்ள பிஸ்னஸ் அவ பார்க்கனும்ன்னா நாம அதையும் புரிஞ்சுக்கனும். ஆனா என்னைக்கா இருந்தாலும் நம்ம பிரபஞ்சம் சௌபிக்குமானது. அவ உரிமை அங்க எப்பவும் அவளுக்கானது…” என்றான் அவர் கேளாமலே.
“இல்ல, நான் அந்த அர்த்தத்துல கேட்கலை இஷாந்த். என்னை நீ ரொம்ப கஷ்டப்படுத்தற….” என்றார் ஜெயந்தன் வருத்தத்துடன்.
“இல்லைன்னாலும் சொல்லவேண்டியது என் கடமைப்பா. ஒருவேளை நினைக்கலாம் இல்லையா? யார் எப்ப என்ன நினைப்பாங்கன்னு சொல்லமுடியாதில்லையா?…” என்றவன்,
“மாப்பிள்ளை கல்கத்தா போய்ட்டு வரவும் லீகலா இதை ப்ரசீட் பண்ணலாம்ன்னு அம்மா சொல்லிருக்காங்க…” என்றும் சொல்ல இதுவும் அவருக்கு கூடுதல் தகவல்.
“ப்ளைட்ல வரும் போது தான் பேசிக்கிட்டோம். நீங்க பெருசா எதுலையும் கலந்துக்க விரும்பறதில்லை. ஊருக்கு வரவும் உங்ககிட்ட சொல்லலாம்ன்னு இருந்தோம்…” என்று சொல்ல சபர்மதி மேல் அவருக்கு அத்தனை ஆதங்கம்.
கணவனிடம் கூட கலந்துகொள்ளாமல் இதென்ன முடிவு? அதுவும் பிள்ளை சொல்லி தான் தெரிந்துகொள்ளவேண்டிய நிலையா? கோபமும் அதிகமாய் வந்தது அவருக்கு.