“ரொம்பநேரம் நாம சீரியஸா பேசற மாதிரி இருக்கு. வாங்க சேர்ந்து உட்காருவோம்…” என்று உடன் அவரை அழைத்துக்கொண்டு சென்றான் இஷாந்த்.
அன்றிரவு வரை இருந்துவிட்டு சபர்மதி குடும்பத்துடன் கிளம்பியிருக்க மகளை பிரியமுடியாமல் கலங்கியபடி சென்ற தாயையும், தமையனையும் எண்ணி கண் கலங்க அவர்கள் அறையில் அமர்ந்திருந்தாள் சௌபர்ணிகா.
அத்தனைபேரும் பார்க்க தாயை கட்டிக்கொண்டு அழ தோன்றிய உணர்வுகள் பார்வையில் வெளிப்படுத்தியபடி நின்றவளை தோளோடு அணைத்த இஷாந்த்,
சபர்மதி எதுவும் பேசாமல் மகளின் கையை பிடித்து அழுத்தம் கொடுத்தபடி நின்றவர் மனது மகளின் பிரிவில் உள்ளுக்குள் கதறியது.
இஷாந்த் பிள்ளைகள் இருவரும் சௌபர்ணிகாவை கட்டிக்கொண்டு ஆரோனிடம் பேசினார்கள்.
“எங்கத்தையை பத்திரமா பார்த்துக்கோங்க…” என்று சொல்ல,
“பெரிய மனுஷங்களா, யார் சொல்லிக்குடுத்தா?…” என்று இருவரின் கன்னத்தை கிள்ளி சிரிப்புடன் ஆரோன் கேட்க,
“எங்கம்மா தான் சொன்னாங்க. எங்கத்தையை நீங்க தான் சந்தோஷமா பார்த்துக்கனுமாம். உங்ககிட்ட தான் சொல்லனுமாம். நீங்க தான் நல்லா அவங்களை சிரிக்க வைப்பீங்கலாம். அதனால உங்ககிட்ட தான் சொல்லனும்ன்னு சொல்லித்தந்தாங்க…” என்று பிள்ளைகள் சொல்லிவிட,
“அட கடவுளே?…” என சந்தனா மாமியாருக்கு பயந்து இஷாந்தின் பின்னால் ஒளிந்து நின்றவள்,
“நான் சும்மா சொன்னேன்….” என இஷாந்தை பாவம் போல் பார்க்க சிரிப்போடு மனைவியை முன்னால் கொண்டுவந்தான் இஷாந்த்.
“சௌபி…” என ஜெயந்தனும் வர அன்று போல் இன்று எதுவும் சொல்லிவிடுவாரோ என அவள் பதட்டமாய் பார்க்க,
“நீங்க கவலைப்படவேண்டாம். நான் பத்திரமா என் மனைவியை பார்த்துப்பேன்…” என்று சௌபர்ணிகாவின் தோளில் கையிட்டு சேர்ந்து நின்றான் ஆரோன் ரிஷபன்.
“டேக் கேர் சௌபி…” என்று சந்தனாவும் சொல்லிவிட்டு கிளம்பிவிட ஒவ்வொன்றாய் அதனை நினைத்தபடி இருந்தவள் கவனம் கலைத்தான் ஆரோன்.
“அழுது முடிச்சாச்சா?…” என கையில் பிளாஸ்க்குடன் அவன் வர கண்களை துடைத்துவிட்டு திரும்பி அமர்ந்தாள் அவன் பக்கமாய்.
“பால் குடுத்துவிட்டாங்க அம்மா…” என்று பிளாஸ்க்கை காண்பிக்க,
“என்னை கேட்டாங்களா?…” என்றாள் சௌபர்ணிகா.
“ஹ்ம்ம், என்ன பன்றன்னு கேட்டு, உன் கூட என்னை இருக்க சொல்லி அடிச்சு அனுப்பிவிட்டுட்டாங்க…” என்றான் சிரித்தபடி.
“ஸோ ஸ்வீட்…” என சௌபர்ணிகா சொல்ல,
“இன்னும் கிட்டயே வரலை? அதுக்குள்ள ஸ்வீட்டா?…” என்று கண் சிமிட்டியவன் கன்னத்தை பிடித்து வலிக்க இழுத்தாள்.
“வேணும்னா கிட்ட வர போறேன். வயலன்டா பிஹேவ் பன்றதே வேலையா போச்சு…” என்று அவன் நெருங்க,
“என் மடில உட்காராதது தான் குறை. தள்ளி போங்க…”
“என்னடா கொடுமை இது? வெளில இருந்தா பொண்டாட்டியை பாருன்றாங்க. பொண்டாட்டி தள்ளி போன்றா. அடுத்தவாரம் நீ தேடினா கூட என்னால உடனே வரமுடியாதும்மா…” என்று சொல்லியவன் கன்னத்தோடு மீசையையும் பிடித்து இழுத்தாள்.
“உன் பொய் எனக்கு தெரியாதா? என்னை லவ் பண்ணவே இல்லன்ன தானே?…”
“ரிஷி…”
“உண்மை ப்யூட்டி…” என்று சொல்லியவன் அவள் முகம் வாடவும் இன்னும் அருகில் சென்று நெஞ்சில் சாய்த்துக்கொண்டான்.
“சும்மா சும்மா டல்லாக கூடாது பிபி. எதிர்த்து சண்டை போடு. பர்ஸ்ட் டைம் மீட் பன்றப்போ பார்வையில பயரை தெறிக்கவிட்ட பார். அப்படி இரு…” என்று சொல்லியவன்,
“உன் முகம் பார்த்தே நீ சொல்லாத காதலை கண்டுபிடிச்சவன் நான். என்கிட்ட ஒளிய பார்த்தா, நீ அவுட் தான்…” என்று கிண்டலாய் சொன்னாலும் அவன் சொன்னதன் உண்மையில் எப்போதும் போலொரு பிரமிப்பான பார்வை அவன் மேல்.
“நான் கிளம்பிருவேன். நீ என்ன பன்றதா இருக்க? என்ன நினைக்கிற சௌபர்ணிகா?…” என்றவன் கேள்வியில் அவள் விழிக்க,
“ஓகே, இப்ப சொல்லவேண்டாம். யோசிச்சு எப்போ சொல்லனுமோ சொல்லு. என்னால உன்னோடான இந்த நேரத்தை வெறும் பேச்சில மட்டும் தொலைக்க முடியாது. மொத்தமா எடுத்துக்கோ சில்க்…” என்றவன் கைகள் அவளை பட்டுபோல் தழுவ கண் மூடி அவனை மட்டும் மனதில் நிறுத்தி அவனுள் தொலைந்துபோக ஆரம்பித்தாள் சௌபர்ணிகா.
அங்கிருந்த நாட்கள் எல்லாம் சுவர்க்கம் தான். அவ்வளவுக்கவ்வளவு அவனோடும், அவன் குடும்பத்தோடும் நீக்கமற நிறைந்து போனாள் சௌபர்ணிகா.
அவன் கிளம்பும்முன் தான் நினைத்ததையும் ஆரோனிடம் மட்டுமல்லாது வீட்டினரை வைத்துக்கொண்டே சொல்ல ஆராதனாவிற்கு அதில் அத்தனை மகிழ்ச்சி.
“உன்னோட ஐடெண்டி எந்தவிதத்துலையும் நீ இழக்க வேண்டாம் சௌபி. நானும் ஆராவும் கூட இதை தான் நினைச்சிருந்தோம். ரிஷிகிட்ட சொன்னோம். அவன் தான் நீயே முடிவெடுத்து சொல்லட்டும்ன்னு சொல்லிட்டான். நீ என்ன நினைக்கிறன்றது தான் முக்கியம்ன்னு…” என்றார் ஸ்டீபன்.
ஆம், பிரபஞ்ச அழகி இனியும் பிரபஞ்சத்தில் தான் தொடர்ந்து. சௌபர்ணிகா தான் முன்பிருந்ததை போலவே அவளின் கடையையும் பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்ல அதற்கு மறுப்பில்லை குடும்பத்தில்.
“டூ இன் ஒன். ஒரே கல்லுல ரெண்டுமாங்கா…” என்று ஆரோன் குதித்தான்.
“இனி நம்ம ஸ்டூடியோவையும் மிஸஸ் ஆரோன் தான் பார்த்துக்க போறாங்க…” என்று சொல்ல,
“சரிதான். ரிஷி வர நேரம் அவங்க ரெண்டுபேரும் இங்க வரட்டும். அவனும் இல்லாம சௌபிக்கு இங்க இருக்க கஷ்டமா இருக்கும்….” என்று சொல்லிவிட்டார் ஆராதனா.
அதனைக்கொண்டு சௌபர்ணிகாவின் இருப்பிடம் சென்னை என்றாக ஆரோன் வரும்நேரம் அவர்களின் பிளாட்டிலும், மற்ற நேரம் வழக்கம் போல சபர்மதி வீட்டிலும் என்று முடிவானது.
இதோ ஆரோன் ரிஷபன் கல்கத்தா கிளம்பி சென்று நான்கு நாட்கள் கடந்திருந்தது.
நள்ளிரவு தான் ஹோட்டல் அறைக்கு திரும்பியிருந்தான் அவன். முதல்நாள் இரவு மனைவியிடம் பேசியது.
முழுதாய் ஒருநாள் கடந்திருக்க அறைக்கு வந்ததுமே அவளுக்கு அழைப்பு விடுத்தான் ஆரோன்.
“தூங்கிட்டிருக்கேன்…” அவளிடமிருந்து குரல்வழி செய்தி உடனே வர,
“முழிச்சுக்கோ பிபி. இன்னும் ரெண்டுமணி நேரத்துல நான் திரும்ப கிளம்பிருவேன் மிஸஸ் ரிஷபன்…” என்று பதிலுக்கு இவன் அனுப்பியதும் தான் உடனே அழைப்பு வந்தது.
“ப்ச், வீடியோ கால் வாம்மா…” என அயர்ந்த குரல்.
“சும்மா இப்படியே பேசுங்க…”
“சௌபர்ணிகா…” என்றதும் அழைப்பை துண்டித்து வீடியோ கால் வர முகத்தை தேய்த்தபடி கண்களை கசக்கியவன் விழிகள் பெரிதாய் விரிய உடலிலிருந்த சோர்வெல்லாம் பறந்தோடியது.
முகமெல்லாம் புன்னகை பூக்கள் விரிவடைய கால்கள் பால்கனி நோக்கி செல்ல அங்கிருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டான் இலகுவாய்.
“ஹப்பா எவ்வளோ சிரிப்பு? பார்த்தாச்சா?…” என்று அவள் கேட்க சன்னமான புன்னகையுடன் தலையாட்டியவன் விழிகளில் ஏகத்திற்கும் தேடல்.
“இதுக்கு தான் வீடியோ கால் வரமாட்டேன்னு சொன்னேன். இனி ஓவரா ஆடுவீங்களே?…” என படுக்கையில் இருந்து எழுந்து சாய்ந்தமர்ந்தவளை கண்கள் பனிக்க பார்த்தான்.
“ரொம்ப மிஸ் பன்றேன் பிபி. கிட்ட வாயேன்…” என்று சொல்லியவன் அணைப்பதை போல கைகளை தூக்க,
“ரிஷி…” என்று சிரித்தாள் சௌபர்ணிகா.
“எப்போ வந்த? கூட யார் இருக்கா?…”
“யாருமில்லை. யாரும் வேண்டாம்ன்னு சொல்லி நானே வந்துட்டேன்…”
“தனியாவா வந்திருக்க ப்ளாட்டுக்கு?…”
“ஹ்ம்ம், ஆமா. இங்க என்ன பேயா பூதமா பயப்பட?…”
“அதானே. அதுக்குத்தான் நீ இருக்கியே…” என்று கேலி செய்தவன்,