“காலையில பால் பாக்கெட்டோட போய் என் பொண்டாட்டியை எழுப்பவும் மச்சான்…” என்று தான் எடுத்ததும்அவன் சொல்லியது.
“ஸாரி, ராங் நம்பர்…” என தூக்க கலக்கத்தில் இஷாந்த் சொல்லியிருக்க,
“தங்கச்சி நம்பருக்கு வேணும்னா கால் பண்ணவா? ரைட் நம்பர்ல…” என கேட்டு அவனை எழுப்பிவிட்டவன்,
“அவ தனியா போறேன்னா சரின்னு சொல்லுவியா மேன் நீ? உங்க புடலங்கா பாசத்துல வந்து பொரியல் பன்றேன் நான். கூட யாராவது போயிருக்க வேண்டாமா? இல்லை என்கிட்ட சொல்லியிருந்தா பொன்னரசி ப்யூட்டியை கூட அனுப்பியிருப்பேன்…” என்று ஆரோன் சொல்ல,
“சௌபி அதெல்லாம் இருந்துப்பா. இது ஒரு விஷயமா?…”
“அது முன்னாடி. இப்ப அப்படி இல்லை…” என்ற ஆரோன் குரலில் மெல்லிய மாற்றம்.
முன்பு எப்படியோ, இனி அவன் மனைவியாக அவள் இருக்கும் நிமிடங்கள் எல்லாம் அவள் எப்படி கடந்துசெல்வாள் என்று தான் அவன் எண்ணமெல்லாம்.
“உங்க தங்கச்சி துணிச்சல்ல எனக்கு எந்த டவுட்டும் இல்லை. ஆனா ரிஷபன் வொய்ப் சரியான தொட்டாச்சிணுங்கி. இதுக்கு மேல கேட்காதய்யா. காலையில போய் கூட்டிட்டு வந்திருங்க. அவ்வளோ தான்…” என்றவன்,
“அவ வரமாட்டேன்னு சொன்னா கூட யாராவது இருங்க. இல்லைன்னா நான் பாட்டியை போய் இருக்க சொல்றேன்…” என சொல்லியவன் குரல் மாறுபாட்டில் இஷாந்தும் அமைதியாக,
“ரொம்ப படுத்தறேனோ?…” என்றான் ஆரோன்.
“அப்படின்னு இல்லை…” இஷாந்த் இழுக்க,
“அப்படின்னே நினைச்சுக்கோயேன். அப்படித்தான் படுத்துவேன். போய் என் பிரபஞ்சம் என்ன பன்றாங்கன்னு பார்த்துட்டு மெசேஜ் பண்ணவும்…”
“இப்பவா?…”
“குட்மார்னிங் மச்சான். இதுக்கு மேல என்ன தூக்கம்? எனக்கு கால் பண்ண வேண்டாம். கால் எடுக்கமுடியுமான்னு தெரியலை. ப்ரீயானதும் நானே கூப்பிடறேன்…” என்று சொல்லி வைத்திருந்தான் ஆரோன்.
இப்போதும் அதை நினைத்து இஷாந்த் சிரித்துக்கொண்டே சௌபர்ணிகாவை அழைத்துக்கொண்டு வீடு வந்தவன் தாயிடம் விஷயத்தை சொல்ல,
“போய்ட்டு வா சௌபி…” என்றார் சபர்மதி.
ஒருவழியாக ஏர்போர்ட் வந்து விமானம் ஏறும்முன் அத்தனை முறை சொல்லியிருந்தாள் சௌபர்ணிகா.
“நான் கிளம்பறதை…”
“கண்டிப்பா சொல்லமாட்டேன். கடையை நாங்க பார்த்துக்கறோம். ஹேப்பி ஜர்னி…” என்று அனுப்பி வைத்தான் இஷாந்த்.
அன்றைகென்று வானிலையினால் விமானமும் இரண்டுமணி நேரம் தாமதித்தே கிளம்பி இருக்க சௌபர்ணிகா மனதில் மற்ற விஷயங்கள் எல்லாம் ஓரம்கட்டப்பட்டு தன்னை பார்த்ததும் தன் கணவன் என்ன செய்வான் என்ற நினைவுகள் மட்டுமே அவளிடம்.
எப்பொழுதும் உடுத்தும் புடவை. உயர்ரக காட்டன் சில்க். க்ளிப்பில் கூட அடக்காத விரிந்த கூந்தல் என்று அவள் வந்த தோற்றம் அவள் வரவை எதிர்நோக்கியவன் விழிகளில் வர்ணஜாலங்கள் புரிய சத்தமின்றி விசிலடித்துக்கொண்டான் அவன்.
தனது போனை எடுத்து அழைப்பு எதுவும் வந்திருக்கிறதா என பார்த்துக்கொண்டே லக்கேஜை எடுக்க நின்றவள் அதனை எடுத்து திரும்பி நடந்தாள்.
சென்னை விமானநிலையத்தில் இருக்கையில் ஆரோன் அழைத்திருக்க எடுக்கவே இல்லை.
எடுத்தால் இங்கே கேட்கும் அறிவிப்பு குரலை வைத்தே கண்டுகொள்வான் என்று ‘பிஸி’ என்று மட்டுமே அனுப்பியிருந்தாள்.
அதன்பின் அழைத்திருப்பானா என பார்க்க சிக்னல் கிடைத்ததும், அவன் ஒருமுறை அழைப்புக்கு முயற்சி செய்தது வந்திருந்தது.
“அவ்வளோ தானா, கூப்பிடவே இல்லை…” என்றபடி வெளியே வந்தவள்முன்,
“வெல்கம் சில்க் ப்யூட்டி…” என்று நின்றான் ஆரோன் ரிஷபன்.
அவனின் திடீர் செயலில் தூக்கிவாரிப்போட பின்னால் நகர்ந்தவள் நெஞ்சில் கைவைத்து பார்த்த பின்னர் தான் ஆசுவாசம் பெற்றாள்.
“சொல்லியிருந்தா நானே கூட்டிட்டு வந்திருப்பேனே பிபி?…” என குறும்பாய் புன்னகை வேறு.
இன்னும் அவள் நிதானிக்கமுடியாமல் மூச்சுவாங்கிக்கொண்டு நிற்க அடக்கமாட்டாமல் சிரித்தான் ஆரோன்.
“ஓகே ஓகே கார்ல போய்ட்டே பேசலாம்…” என்று அவளின் ட்ராலியை தான் வாங்கிக்கொண்டு இன்னொரு கையில் மனைவியை பிடித்துக்கொண்டு நடக்க சௌபர்ணிகா எதுவும் பேசவில்லை.
“சௌபி ரீச்சாகிட்டியா?…” என்ற செய்தி இஷாந்திடமிருந்து.
“கார்ல ஏறு…” என்று ஆரோன் காண்பித்த வண்டியில் அமர்ந்தவள் அவனே சொல்லட்டும் என்று பார்த்திருக்க,
“என்ன? என்ன பார்வை?…” என்றான் அவளருகில் அமர்ந்தவாறே.
அவளின் முறைப்பில் சிரித்தவன் ஓட்டுனரிடம் தான் தங்கியிருக்கும் நட்சத்திர விடுதியின் முகவரியை சொல்லியவன்,
அவள் இன்னும் அவன் கொடுத்த அதிர்வின் தாக்கத்தில் இருந்து வெளிவரவே இல்லை.
“என்ன லுக்? எனக்கெப்படி தெரிஞ்சதுன்னா?…” என்றவன்,
“உன் அண்ணன் இல்லைம்மா. நீ சொல்லி அவன் என்கிட்ட சொல்லிருவானா?…” என்று சிரிக்க,
“என்ன கிண்டலா?…” என்று முறைத்தாள்.
ஆனாலும் சௌபர்ணிகாவின் மின்னும் விழிகளில் அவனுக்கான நேசத்தை கொட்டிக்கொண்டிருந்தது.
“உனக்கு கால் பண்ணேன். மேம் பிஸின்னு மெசேஜ். எதுக்கு கூப்பிட்டேன்னு நான் சொல்ல கூட நீ அட்டன் பண்ணலை. அதான் உங்கண்ணனுக்கு கூப்பிட்டேன். வீட்டுக்கு வந்து உன்னை பார்த்தாச்சான்னு கேட்க. ஸார் அட்டன் பண்ணும் போது ஏர்போர்ட்ல இருக்கறது தெரிஞ்சது…”
“என்னன்னு கேட்கறதுக்குள்ள அவசரமா ப்ரெண்டை ட்ராப் பண்ண வந்ததா சொன்னார். சரின்னு உன் ப்ரான்ச் நம்பருக்கு கூப்பிட்டேன். துளசி நீ வரலைன்னு சொன்னாங்க. கால்குலேஷன் கரெக்ட்டா இருந்ததா? உன் அண்ணன் வந்த டைம் எல்லாம் வச்சு ப்ளைட் பார்த்து நானே ஏர்போர்ட் வந்துட்டேன்….” என்றான் வேகமாய்.
“ரொம்ப பெருமை தான்…” என்று சொல்லியவள் வெளிப்பக்கம் திரும்பிக்கொள்ள இருட்டிக்கொண்டிருந்த வானம் மீண்டும் தூறல் போட ஆரம்பித்தது.
“சரி இப்ப என்ன? வேணும்னா ஒன்னு பண்ணு, நான் இந்த கார்ல ஹோட்டலுக்கு போயிடறேன். நீ திரும்ப ஏர்போர்ட் போயிட்டு அப்ப வர மாதிரி வாயேன்….” என்று சொல்ல,
“ஆமா, இன்னைக்கு ஷூட் இருக்குன்னு சொன்னீங்க?…” என்று திரும்பினாள்.
“அதை ஈவ்னிங் மாத்திட்டாங்க. ஹீரோயின்க்கு சிக்னெஸ். அதனால ப்ரோக்ராம் மாத்தியாச்சு. நானும் ப்ரீ. அதை சொல்ல தான் மார்னிங் கால் பண்ணேன்…” என சொல்ல கார் அந்த விடுதியின் முன் சென்று நின்றது.
ஆரோன் அங்கு வந்த பணியாளரிடம் சௌபர்ணிகா உடமை அடங்கிய பெட்டியை தந்து தன் அறை எண்ணை சொல்ல,
“ஹலோ நான் தனியா தான் வந்தேன். வேற ரூம் எடுத்துக்கறேன்…” என்றாள் வேண்டுமென்றே.
“நோ இஷ்யூஸ். என் லக்கேஜை இப்பவே உன் ரூம்க்கு ஷிப்ட் பண்ணிடறேன்…” என்றான் அலட்டிக்கொள்ளாமல் சிரிப்புடன்.
“ஹப்பா நீங்க இருக்கீங்களே?…” என சிரித்தவள் புன்னகையை அன்றைய நாள் முழுவதும் கொண்டுவந்தான் ஆரோன்.
மாலை அவனுடனே ஷூட் நடக்கும் இடத்திற்கு சௌபர்ணிகாவும் சேர்ந்தே செல்ல,
“உனக்கு போரடிச்சா சொல்லு. உன்னை ரூம்க்கு அனுப்பி வைக்கறேன்…” என்றான் ஆரோன்.
“உங்களக்கு தொந்தரவா இருந்தா சொல்லுங்க. நான் ரூம்க்கு போயிடறேன்…” என்று சொல்லியவள் குரலில் இருந்த பொருளில் அவளை முறைத்தான் அவன்.
படப்பிடிப்பில் இருந்தவர்கள் அனைவருமே சௌபர்ணிகாவிடம் வந்து பேசிவிட்டு செல்ல அந்த கதாநாயகியிடம் கூட மனைவியை அறிமுகம் செய்துவைத்தான் ஆரோன் ரிஷபன்.
அவரும் வாழ்த்து சொல்லி சௌபர்ணிகாவை அணைத்து விடுக்க நடாஷா முகத்தில் வெறுமனே புன்னகை.
கை கொடுத்து தலையசைத்து வாழ்த்தியதோடு சரி. அருகில் வரவில்லை. சௌபர்ணிகாவும் பெரிதாய் எடுத்துக்கொள்ளவில்லை.
ஆனால் நெஞ்சமெங்கும் பயப்பந்து. நடாஷாவின் பார்வை ஆரோனை தொட்டு விழுங்கும் காட்சி எல்லாம் அடிவயிற்றில் அமிலம் சுரக்க செய்வதாகவே இருந்தது.
அன்றைய படப்பிடிப்பு நல்லபடியாக நடந்து முடிக்க இன்னும் எடுக்கவேண்டியதை மறுநாள் பகலில் வைத்துக்கொள்வதென முடிவாகி கிளம்பவே பதினோரு மணியாகிவிட்டது.
அதுவரை உஷா தான் சௌபர்ணிகாவோட்டு இருந்தாள். அவளையுமே தான் இருந்துகொள்வேன் என்று ஆரோனுக்கு உதவியாய் அனுப்பிவைத்தாள் சௌபர்ணிகா.
ஒருவாறு அனைவருமே விடுதிக்கு வந்து சேர உஷாவிடம் மறுநாள் என்னென்ன தேவை என்று எல்லாம் குறிப்பு கொடுத்துக்கொண்டு வந்தான் ஆரோன்.
அவனின் அருகில் அவனுடன் சௌபர்ணிகா. ஆனால் அவளின் பார்வை நடாஷாவிடம்.
அப்படி ஒரு எரிச்சலில் மனம் தகிக்க அதனை காண்பித்துகொள்ளாமல் இருக்க அரும்பாடுபட்டு போனாள் சௌபர்ணிகா.
“ஓகே ஆரோன். குட்நைட்…” என கதாநாயகி சொல்ல,
“குட்நைட் மேம்…” என அவரிடம் கை குலுக்கியவனை சட்டென நடாஷா அணைத்து விடுத்து,
“குட்நைட் மேன். இன்னைக்கு மேக்கோவர் வாவ். நான் எக்ஸ்பெக்ட் பண்ணினதை விட டாப்…” என்று அவன் கைகளை விடாமல் பற்றிக்கொண்டு சொல்ல இன்னும் ஓரிருவர் அங்கே நின்றனர்.