பேச ஆயிரம் வார்த்தைகள் இருந்தாலும் தன்னை தானே தண்டித்துக்கொள்பவளை வார்த்தைகளாலும் கொல்ல வேண்டுமா?
முடிந்தளவு இதனை சுமூகமாக சரிசெய்ய முயன்றான் இஷாந்த். அவள் படுகின்ற வேதனை போதுமே.
இனியுமா என தோன்ற ஆரோன் வரும்வரை அமைதியாக இருக்க முடிவெடுத்தான் இஷாந்த்.
“ஓகே, நீ ரெஸ்ட் எடு…” என்று எழுந்துகொண்டவன்,
“பசங்க வந்துட்டாங்க. யூனிபார்ம் மாத்திட்டிருக்காங்க. கொஞ்ச நேரத்துல கூட்டிட்டு வரேன்…” என்று சென்றுவிட்டான்.
“ஹ்ம்ம்…” என்றவள் அருகிலிருந்த டீப்பாயின் மேல் சௌபர்ணிகாவின் அலைபேசி.
“போன் ஆன் பண்ணலையா சௌபி?…” என்றான் இஷாந்த் அதனை பார்த்து.
“ம்ஹூம்…” என்று தலையசைக்க,
“முக்கியமான விஷயம் எதுவும்ன்னா எப்படி கான்டேக்ட் பண்ண? ஆன் பண்ணி வை…” என்று சொல்ல அதனை எடுத்து அவனிடம் நீட்டியவள்,
“எனக்கு இப்போதைக்கு போன் வேண்டாம்….” என்றவளை முறைக்க கூட முடியாமல் பார்த்தான்.
“ஏன்டாம்மா இப்படி பன்ற?…” என்றவன்,
“சரி நான் எதுவும் கேட்கலை. மொபைல் உன்கிட்டயே இருக்கட்டும். எப்ப தோணுதோ அப்போ ஆன் பண்ணிக்கோ…” என்று சொல்லி கதவை சாற்றிவிட்டு வெளியேறினான்.
அவன் பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுத்தவன் அதில் தெரிந்த ஆரோனிடம்,
“பார்த்தாச்சா?…” என்றான் இஷாந்த்.
“ஹ்ம்ம், ஓகே…” என்றுமட்டும் அவன் சொல்ல,
“சௌபியை இப்படி பார்க்க கஷ்டமா இருக்கு…”
“எனக்கு இங்க சந்தோஷமா இருக்கா? என்ன மேன்?…” என்றவன் முகத்தில் வலியுடனான புன்னகை.
“ஓகே, அடுத்து போகும் போது கால் பண்ணுங்க…” என்றான் ஆரோன்.
“சரி…” என இஷாந்தும் சொல்லிவிட்டு சென்றுவிட அறைக்குள் சௌபர்ணிகா கையிலிருந்த உயிரற்ற கைபேசி அவளிடம் ஆயிரம் கதைகள் கூறியது.
தன்னை உயிர்ப்பித்து திறந்து பார்க்கும்படி அவளிடம் ஆணையிட்டது. அதன் பிரம்மையில் கைகள் நடுங்க பார்த்தவள் வீசி சுவற்றில் எறிந்துவிட்டாள்.
“ம்மா….” என்றவளின் குரல் வெளிவராமல் ஒரு அலறல்.
தொண்டையை தாண்டி வரவில்லை. ஆனால் குரல்வளையில் அப்படி ஒரு வலியை உணர்ந்தாள்.
“என்னை புரியலையா உனக்கு?…” என்றவன் வார்த்தைகள் அவளை சுழற்றி கிழிக்க,
“உன்னை எனக்கு புரியும்ன்னு உனக்கு புரியலை ரிஷி…” என்ற அரற்றலுடன் காலை மடித்து அதில் முகம் புதைத்துக்கொண்டாள் சௌபர்ணிகா.
எத்தனை ஆசையுடன் சந்தோஷமாய் கணவனை பார்க்க அத்தனை தூரம் பயணம் மேற்கொண்டாள்.
அதனை செய்திருக்கவே கூடாதென்று லட்சாதிலட்சம் முறை நினைத்தவளுக்கு நடந்ததை மாற்றமுடியாததில் உயிர் வேதனை.
இப்போது நினைத்தாலும் உடலெல்லாம் நடுங்கி உதறல் எடுக்க கைகளை ஓங்கியவன் தோற்றம் கண்ணுக்குள் வலியாய் ஊடுருவியது.
அத்தனை நடந்தும் அதில் அவன் மேல் துளியளவு சந்தேகமில்லையே. ஆனால் அவனை அணுகும் பெண்களை அப்படியே எப்படி விடமுடியும்?
கல்கத்தாவில் அன்றைக்கு நடக்கவிருக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு கதாநாயகியை தயார் செய்யவேண்டி புறப்பட்டு சென்றவனுக்கு மீண்டும் அறைக்கு வர நேரமில்லை.
அவனின் வருகைக்காக காத்திருந்தவள் நேரம் கடந்தும் அவன் வராததில் உஷாவிற்கு அழைத்தாள்.
“சொல்லுங்க மேம்…” என்றவளிடம்,
“உங்க பாஸ் எங்க உஷா? கால் ரீச்சாகலை?…” என்று கேட்க,
“பிஸி ஓகே, இந்த நேரம் பிரஸ் மீட் ஆரம்பிச்சிருக்குமே?…”
“எஸ் மேம். ஆனா நைட் பார்ட்டிக்கு இன்னும் ஒருமணி நேரம் தான் இருக்கு. மாடல் நடாஷாவுக்கு வொர்க் போய்ட்டிருக்கு மேம்…” என்றாள் உஷா.
“ஓஹ்…” என்ற சௌபர்ணிகாவிற்கு உள்ளூர எரிச்சலானாலும்,
“ஓகே, முடிச்சிட்டு கால் பண்ண சொல்லுங்க உஷா…” என்று வைத்துவிட்டாள்.
உஷா சொல்லியதை என்னவோ ஜீரணிக்கவே முடியவில்லை. மனதை உறுத்திக்கொண்டே இருக்க அதனை கொண்டே பயம் பிடித்தது.
‘என்ன பன்ற நீ? அந்த பொண்ணு அப்ரோச் பண்ணினா நீ ரிஷியை சந்தேகப்படுவியா?’ என அவளுள்ளம் எச்சரிக்க,
“ஃபுல்ஷிட். நான் சந்தேகப்படறேனா?…” என்று அவளே அதற்கு பதிலும் சொல்லிக்கொண்டாள்.
‘இதுக்கு பேர் சந்தேகமில்லாம? எத்தனை பேர் ஆசைப்பட்டாலும் உனக்கு நம்பிக்கை இல்லையா?’ என்றது அவளுள்ளம்.
“சியரப் சௌபி. யாருக்கும் வேணா யாரை வேணா பிடிக்கலாம். அதுவேற. எனக்கும் ரிஷிக்குமான உறவுக்குள்ள யாரும் வரமுடியாது…” என்று சொல்லிக்கொண்டவள் அலைப்புருதல் அதிகமாகியது.
இத்தனை நாள் கவுன்ஸிலிங், இருவரின் அன்பு என்று ஒவ்வொன்றாய் நினைத்தபடி கடந்தவள் மீண்டும் ஒருவாறு தன்னை நிதானித்துக்கொண்டாள்.
இத்தனை வேலைகளிலும் கணவனின் பார்வை தன்னை மட்டுமே மையம் கொண்டிருந்ததை கவனித்திருந்தவள் இதழ்கள் முறுவலை காண்பிக்க ஆரோனின் புகைப்படத்தை எடுத்து பார்த்தாள்.
‘வேதாளம்’ தன் பின்னிருந்து அவன் அழைப்பது போன்றொரு பிரம்மை தோன்ற சௌபர்ணிகா முகத்தில் விரிந்த புன்னகை.
புகைப்படத்தில் அவனின் புன்னகை அவளை சுண்டி இழுக்க மனதின் கலக்கங்கள் மாயமானது.
“எப்போடா வருவ?…” என்று லேசாய் அவன் கன்னத்தில் கிள்ளி கேட்டுக்கொண்டவள் பொழுது அவனுடன் இப்படியே செல்ல ஆரோனின் எண்ணிலிருந்து அழைப்பு.
“சௌபர்ணிகா…” என்றவன் குரலில் பரபரப்பு.
“ரிஷி, நீங்க ஓகே தானே?…” என்றாள் அவன் அழைப்பின் பேதத்தில்.
“அட ச்சே, உன்னை டென்ஷன் பண்ணிட்டேனா? ப்ச், அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை. நான் ஓகே தான். பட் ஸாரிடா…” என்றான் கெஞ்சுதலாய்.
“எதுக்கு ஸாரி? இன்னும் டைமாகுமா ரிஷி?…”
“இல்லை இல்லை. ஆனா என்னால இப்ப உன்னை கூப்பிட வரமுடியாது. உஷா அங்க வருவா. நீ உஷாவோட கிளம்பி வந்திடேன் ப்ளீஸ்…”
“நான் எதுக்கு? பார்ட்டிக்கு எல்லாம் வேண்டாம்…” என அவள் மறுக்க,
“நான் பார்ட்டில தான் இருப்பேன். எல்லாருக்கும் நீ வந்திருக்கறது தெரியும். இவ்வளோ தூரம் வந்திட்டு பார்ட்டில கலந்துக்கலைன்னா நல்லா இருக்காது…”