ஜெயந்தனுக்கு பொறுக்கவில்லை. அவரும் சௌபர்ணிகா வந்ததிலிருந்து பார்த்துவிட்டார்.
தாயும், பிள்ளைகளும் என்னவோ பேசிக்கொண்டாலும் எதுவும் அவரின் கவனத்திற்கு வரவில்லை.
ஆனால் என்னவோ உள்ளது என தெரிகிறது. இந்த வீட்டில் தான் யார் என்ற கேள்வி அவரின் அமைதியை சோதிக்க மருமகளிடம் கூட கேட்டுவிட்டார்.
“என்னம்மா சொல்றான் இஷாந்த்?…” என்று கேட்க,
“எனக்கு தெரியலை மாமா. எதை பத்தி கேட்கறீங்க?…” என்றாள் அவள் அப்பாவியாய்.
நிஜத்திற்கும் அவளுக்குமே முழுதாய் தெரியவில்லை. ஆனால் இஷாந்த் சொல்லியிருந்தான் ஆரோன், சௌபி இருவருக்குள் என்னவோ மனஸ்தாபம் என்று.
ஆனால் அதனை தான் சொல்லி அது ஒரு பிரச்சனையாவதா என வாய் திறக்கவில்லை சந்தனா.
“என்னம்மா நீயும் என்கிட்ட சொல்லக்கூடாதுன்னு நினைக்கிறியா?…” என அவளிடம் கேட்கும் பொழுதே ஜெயந்தனின் முகம் மாறிவிட்டது.
“அச்சோ அதெல்லாம் இல்லை மாமா. எனக்கு நிஜமாவே தெரியாது…” என்றாள் அவள் சங்கடத்துடன்.
“என்னவோ பிரச்சனை. ஆனா எல்லாரும் சேர்ந்து எனக்கு தெரியக்கூடாதுன்னு நினைக்கறீங்க…” அப்போதும் விடாமல் அவளிடம் அவர் பேச இது புதிதாய் இருந்தது.
திருமணம் செய்துகொண்டு வந்து இத்தனை வருடங்களில் ஜெயந்தன் இவ்வளவு எல்லாம் பேசியதில்லை.
இப்போது இப்படி கேட்கவும் சந்தனாவிற்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.
“அவங்க விரும்பி கல்யாணம் செஞ்சுக்கிட்டாங்க. என்ன பிரச்சனை இருக்க போகுது மாமா? அதுவும் இல்லாம சௌபி ப்ளாட்ல தனியா இருக்க முடியாதுன்னு தான் இங்க இருக்கறதா டிஸைட் பண்ணினாங்க. இது ஒரு பிரச்சனையா?..” என்று சந்தனா சமாளிக்க,
“ம்ஹூம், என் பொண்ணு கல்கத்தா போய்ட்டு வந்ததுல இருந்தே ரூமை விட்டு வெளில வரமாட்டேன்றா. நான் போய் பேசினாலும் பதிலில்லை. கையில அடிபட்டிருக்கு…” என ஒவ்வொன்றாய் சொல்ல,
“நீங்களா எதையும் நினைச்சுக்காதீங்க மாமா. டின்னருக்கு போன இடத்துல கிளாஸ் உடைஞ்சு காயமாகியிருக்கு. ஒன்னொண்ணுக்கும் அர்த்தம் பார்ப்பீங்களா?…” என்றவளுக்கு யாராவது வந்து தன்னை காப்பாற்ற மாட்டார்களா என்றிருந்தது.
இத்தனை தூரம் அவள் எதையும் சமாளித்ததில்லை. பிரச்சனையாகவே இருந்தாலும் அது அவர்கள் இருவருக்குள்.
‘தலையிட என்ன தேவை அவர்களாக அழையாத பொழுது?’ என்றுதான் தோன்றியது சந்தனாவிற்கு.
அதனை மாமனாரிடம் சொல்லும் தைரியம் தான் இல்லை. அதனால் சுற்றி சுற்றி அவள் பேச,
“நீயும் என்கிட்ட எதையும் சொல்லக்கூடாதுன்னு நினைக்கிற என்னம்மா?…” என்றதும்,
“அப்படியெல்லாம் இல்லை மாமா. நீங்களா நினைச்சுக்கறீங்க…” என்னும் பொழுதே இஷாந்த் வந்துவிட்டான்.
குழந்தைகள் இருவரும் உணவு மேஜைக்கு சென்றிருக்க சந்தனாவுடன் பேசிக்கொண்டிருந்த தகப்பனை பார்த்தான்.
“ஏன்ப்பா, என்ன விஷயம்?…” என்று மனைவியின் முழியை வைத்தே கண்டுகொண்டு வந்துவிட்டான்.
“என்ன, என்ன விஷயம்? என் மருமக கூட நான் பேசிட்டிருக்கேன். உனக்கென்ன?…” என்று வெடுக்கென்று அவர் கேட்க,
“ஓகே பேசுங்க…” என்றவன்,
“ஆனா சாப்பிட்டு வந்து பேசலாம். குட்டீஸ் வெய்ட் பன்றாங்க…” என்று சொல்லி மனைவியை கண்களால் வரும்படி அழைத்து சென்றுவிட்டான்.
அதற்கு மறுநாளே ஜெயந்தனின் கோபத்தின் அளவு எல்லையை கடக்க போனை எடுத்துக்கொண்டு சபர்மதியிடம் வந்தார் ஜெயந்தன்.
மகளுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த சபர்மதியின் முன்னால் படுக்கையில் தன் போனை வீசி எறிய இருவரும் என்னவென்று பார்த்தனர்.
“இந்த கன்றாவிக்கு தான் பிரச்சனையா உங்க ரெண்டுபேருக்குள்ள?…” என்று போனை காண்பித்து கேட்க சபர்மதி அதனை கையிலெடுத்து பார்த்தார்.
அதில் ஓடிக்கொண்டிருந்த வீடியோவை சற்றுமுன் தான் யாரோ பகிர்ந்திருந்தனர்.
கல்கத்தாவில் நடந்த விளம்பர படப்பிடிப்பு பற்றிய ஒருசில புகைப்படங்களும், கூடவே அன்று இரவு நடந்த பார்ட்டியும் அதில் வரிசையாக வர ஆரோன் ரிஷபன் பெயரையும் இணைத்திருக்க கீழே அதிகத்திற்கும் கருத்துக்கள்.
அதில் சௌபர்ணிகாவுடனான அவனின் திருமணமும், நடாஷா, பிரஷாந்திகா இருவரும் நெருங்கி நடனமாடுவதும் என்று இடம்பெற்றிருக்க கருத்துக்களில் அவரவர் யூகங்கள் தலைவிரித்தாடியது.
“இதை வச்சு தான் உனக்கும் உன் புருஷனுக்கும் பிரச்சனையா?…” என்றார் ஜெயந்தன் கோபத்துடன் மகளிடம்.
சௌபர்ணிகா உடல் ஒருமுறை தூக்கிவாரிபோட்டது. அவளறியாமல் நடுக்கம் எழுந்தாலும் ஜெயந்தனை வழக்கமான பார்வை தான் பார்த்தாள்.
“இங்க பாரு நீ என்கிட்ட விலகல் காமிச்சாலும் நான் உன் அப்பா இல்லைன்னாகிடாது. நீ ஒதுங்கி ஒதுங்கி நின்னா நானும் வேடிக்கை பார்ப்பேனா சௌபி? என் பொண்ணு நீ…” என நரம்பு புடைக்க பேசியவர்,
“சொல்ல சொல்ல கேட்டியா நீ? லவ் பண்ணினா உடனே சரின்னு யாரை வேணா கல்யாணம் பண்ணி வச்சிருவியா? இப்ப பாரு யாருக்கு கஷ்டம்ன்னு. அவ சொல்லலைன்னா, நீங்க எல்லாம் என்கிட்ட மறைச்சா எல்லாம் சரியா?…” என்று கேட்க,
“என்ன பேசறீங்க?…” என எழுந்தார் சபர்மதி.
இஷாந்த் சந்தனாவுடன் அவர்களின் கடைக்கு சென்றிருக்க பிள்ளைகள் பள்ளிக்கு சென்றிருக்க வீட்டில் இவர்கள் மட்டும்.
இன்னும் ஆரோனுடன் மகள் பேசாததில் பயந்து போயிருந்தார் சபர்மதி. இதனை இப்படியே விடமுடியாதே என்று பேசிக்கொண்டிருக்க இடையில் ஜெயந்தனின் ஆர்ப்பாட்டம்.
“என்னை எங்க பேச விடற நீ? எல்லாம் உன் இஷ்டம். எல்லாமே உனக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்கனும். கொஞ்சமாவது புருஷன்னு மதிச்சியா? இல்ல பிள்ளைகளுக்காவது சொல்லி குடுத்தியா? பெத்த தகப்பன்னு எப்பவாச்சும் இவ என் பக்கம் வந்து ஏதாவது கேட்டிருப்பாளா?…”
மனைவியுடன் மகளையும் சேர்த்தே அவர் பேச சௌபர்ணிகா எழுந்துவிட்டாள்.
“இந்த சம்பந்தம் பேசும் போதே வேண்டாம்னு சொன்னேன். அவன் தொழில் நம்ம மக வாழ்க்கையை பாதிக்கும்ன்னு. இப்ப பார்த்தியா? நான் சொன்ன மாதிரி தான் நடந்திருக்கு…” என்று பேச சௌபர்ணிகா அமைதி கரையை கடக்கவிருந்தது.
“கட்டின பொண்டாட்டி கூட இருக்கும் போதே இந்த ஆட்டம் ஆடியிருக்கானே? அப்போ இவ இல்லன்னா? இப்ப மும்பைல என்னனென்ன பன்றானோ?….” என ஏகவசனத்தில் ஜெயந்தன் ஆரோனின் ஒழுக்கத்தை குற்றம் சட்ட,
“யாரை பேசறோம்ன்னு கொஞ்சம் யோசிச்சு பேசினா நல்லா இருக்கும்…” என்றாள் பல்லை கடித்துக்கொண்டு தன் பொறுமையை இழுத்து பிடித்து.
“அதை நீ முதல்ல தெரிஞ்சு பேசு சௌபி. அப்பா உனக்காக தான் பேசறேன்னு உனக்கு ஏன் புரியலை? இப்பவுமா நீ அவனை நம்பற?…” என்றார் சௌபர்ணிகாவிடம் ஜெயந்தன்.
“யாரை நம்பனும், நம்ப கூடாதுன்னு எனக்கு நல்லாவே தெரியும். கண்ணால் பார்க்கிறதெல்லாம் சரின்றது கிடையாது. பார்க்கிறவங்க எல்லாம் நல்லவங்களா இருப்பாங்கன்றதும் கிடையாது. அதனால என் புருஷனை பத்தி நீங்க எதுவும் சர்டிபிகேட் குடுக்க வேண்டாம்…” என்றாள்.
“பார்த்தியா இப்பவும் புருஷனை நம்பிட்டு நிக்கிறா இவ. கண்ணு முன்னால அவன் அவ்வளவு செஞ்சும் எப்படி பேசறா. ஆனா நீ…” என்று சபர்மதியை ஜெயந்தன் பேசியவர்,
“உன்னால உன் திமிர், அகம்பாவம், பிடிவாதத்தால என் நிம்மதி எல்லாம் போச்சு. இப்ப என் பொண்ணு வாழ்க்கையையும் பாழாக்கிருச்சு. இன்னும் உன் ஈகோவால என்னென்ன செய்ய போற?…” என்று சபர்மதியிடம் இரைய,
“வாயை மூடுங்க. எங்கம்மாவை பேச என்ன தகுதி இருக்கு உங்களுக்கு? எங்கம்மாவுக்கு ஈகோவா?….” என்றவள் ஆக்ரோஷத்தில் ஜெயந்தன் அதிர்ந்து பார்த்தார்.
“என்ன நினைச்சீங்க நீங்க? என் புருஷன் மேல கோபட்டு நான் இங்க வந்திருக்கேன்னா? ரிஷியை பத்தி என்ன தெரியும் உங்களுக்கு? இன்னொருத்தர் ஒழுக்கத்தை பத்தி விமர்சனம் செய்யற நீங்க முதல்ல எப்படின்னு நினைச்சு பார்த்தீங்களா?…” என்ற கேள்வியில்,
“நான், நான் மட்டும் தான் அவரை விட்டு விலகி வர காரணம். என்னால அவருக்கு எந்த நிம்மதியையும் குடுக்க முடியாதுன்னு தெரிஞ்சு போச்சு. போதும்ப்பா எனக்குள்ள நான் போராடி இப்ப அந்த போராட்டத்துல ரிஷியை இழுத்துவிட்டது எல்லாம் போதும்…” என்று சொல்லியவள் சத்தமிட்டு அழ,
“சௌபி காம்டவுன்…” என்றார் சபர்மதி.
மகளின் பேச்சில், அவளின் நிலையில் அவரின் இதயம் அதிவேகமாய் துடிதுடித்தது.
“எல்லாத்துக்கும் ஆரம்பப்புள்ளி எது தெரியுமா? நீங்க, நீங்க மட்டும் தான்…” என்றவள் தாயின் தலையிடலை கண்டுகொள்ளவே இல்லை.
“எனக்கு எல்லாம் தெரியும். எல்லாம்ன்னா, எல்லாம். நீங்க, சுலோக்ஷனா ஆன்ட்டி. உங்களோட வாட்ஸ்ஆப் சாட்…” என்னும் பொழுதே அருவருப்பில் அவள் முகம் சுளிக்க, ஜெயந்தன் நெஞ்சை பிடித்துவிட்டார்.
“மதி…” என மனைவியை பார்த்தவர் உடனே,
“இல்லடா, அப்படியெல்லாம் எதுவும் இல்லை. அப்பா அப்படி இல்லை…” என மகளிடம் தன் பிம்பம் உடைபடுவதை விரும்பாமல் பதட்டம் கொள்ள,
“உங்கம்மா சொன்ன மாதிரி நான் தப்பா எல்லாம் இல்லைடா. எங்களுக்குள்ள சின்ன சண்டையில என் மேல கோபத்துல அப்படி சொல்றா. அப்பா அப்படியா சொல்லு?…” என மகளிடம் அவர் கேட்க சபர்மதி வலி தாங்கிய கண்களுடன் கணவரை பார்த்தார்.
“என்ன சொல்லனும்? என்ன சொல்லனும்?…” என்று மீண்டும் அடக்கப்பட்ட கோபத்துடன் அவரிடம் கேட்க மகளின் முகபாவனையில் இருந்து எதையும் கண்டுகொள்ள முடியவில்லை அவரால்.
“அதான் சொன்னேனே, எங்களுக்குள்ள சின்ன சண்டை. அப்பாவை உங்கம்மா சந்தேகப்பட்டு பேசறா. அவ சொல்றதை எல்லாம் நம்பாதடா….” என்றவரை தீர்க்கமாய் அவள் பார்க்க ஜெயந்தனின் குரல் தேய்ந்தது.
“இதுவரைக்கும் அம்மா உங்களை பத்தி ஒருதடவை கூட தப்பா பேசினதே இல்லை. தெரியுமா உங்களுக்கு?…” என்றதில் ஜெயந்தன் சபர்மதியை பார்க்க நிற்கமுடியாமல் அமர்ந்துவிட்டிருந்தார் சபர்மதி.
“இவ்வளோ நடந்த பின்னாடியும் எப்படி உங்களால அம்மா மேல பழியை போட்டு தப்பிக்க முடியுது? என்ன மனுஷன் நீங்க?…” என்ற கேள்வியில் பதில் சொல்லமுடியாமல் ஜெயந்தன் வியர்த்து மகளை பார்த்தார்.
“எனக்கு எப்போ தெரியும் தெரியுமா? அம்மாவுக்கு தெரிஞ்சு உங்ககிட்ட கேள்வி கேட்டாங்களே அன்னைக்கு. அப்போவே. அதை எல்லாமே நானும் கேட்டேன். எல்லாமே கேட்டுட்டேன். கேட்டதுல இருந்து இன்னவரைக்கும் செத்திட்டிருக்கேன்….”
“எந்த மகளுக்கும் இப்படி ஒரு நிலைமை வரவே கூடாது. ஸ்கூல்ல உங்க வயசுல ஒருத்தர் என்கிட்ட அப்படி நடந்துக்கிட்டப்போ எங்கப்பாவோட வரேன்னு உங்களை தேடி வந்தேன்…”
“அப்ப அந்தநிமிஷம் எப்படி இருந்திருக்கும் எனக்கு? செருப்பால அடிச்ச மாதிரி, இந்த சமூகம் என் முன்னாடி உங்கப்பா மட்டும் என்ன யோக்கியமான்னு என்னை கேட்டமாதிரி அசிங்கமா, அருவருப்பா என்னால அதை தாங்கிக்கவோ, அதை ஹேண்டில் பண்ணவோ முடியலையே…”