“எல்லா புள்ளைங்க மாதிரி தான் அதுவரைக்கும் எங்கப்பா எனக்கு ஹீரோன்னு நினைச்சிருந்தேன். ஆனா நீங்க அப்படி இல்லை. கல்யாணத்துல முதல்படியே நம்பிக்கை தான். எங்கம்மாவோட நம்பிக்கையை உடைச்சதோட இல்லாம இப்ப வரைக்கும் அதை உணராம இருக்கீங்க பாருங்க…”
“இப்பவும் எங்கம்மாவோட உணர்வுகளை தான கூறு போடறீங்க நீங்க? எவ்வளோ சுயநலம்? நீங்களா இப்படின்னு ஜீரணிக்கவே எனக்கு சில வருஷமாச்சு. ஆனா இப்பவரைக்கும் அந்த தவறை நீங்க உணரவே இல்லை இல்ல?…” என கேட்க,
“இப்ப இப்ப நினைச்சாலும் எனக்கு அப்படியே கூசி போகுது. எப்படிப்பா? எப்படி உங்களால இன்னொருத்தர் மனைவிக்கிட்ட அப்படியெல்லாம் பேச முடிஞ்சது? ஐயோ…” என்றவள் இப்போதும் காதை பொத்திக்கொண்டு கத்த ஜெயந்தன் கூனி குறுகி போனார்.
“நீங்க அவங்களோட பேசின ஒவ்வொரு வார்த்தைகளையும் உங்களுக்கு அன்னைக்கு படிச்சு காமிச்சாங்களே அம்மா. அவங்களுக்கு எப்படி இருந்திருக்கும்? அந்த வலியை அவங்க வார்த்தையா கேட்டதுக்கே நான் துடிச்சு போனேன். அதை முழுமையா எப்ப உணர்ந்தேன் தெரியுமா?…”
“என் புருஷனை இன்னொருத்தி அவ கூட கூப்பிட்டப்போ. அந்த நிமிஷம் நான் பட்டபாடு இருக்கே? அதை எப்படி, எப்படி உங்ககிட்ட சொல்ல? அப்பாவாச்சே நீங்க? எப்படி எனக்கு உங்ககிட்ட எப்படி அந்த உணர்வை சொல்லி புரிய வைக்கன்னு எனக்கு தெரியலைப்பா…” என்றாள் இரு கைகளையும் காண்பித்து இயலாமையுடன்.
“அப்படியே என் மண்டைக்குள்ள ஓடற ஒவ்வொரு நரம்பையும் யாரோ கை விரலால சுருட்டி இழுக்கற வேதனை. சின்ன சின்ன ஊசியை வச்சு என் உடம்புல வலிக்க வலிக்க குத்துற மாதிரி என்னால தாங்கவே முடியல. அந்தநிமிஷம் என் ரிஷி தடுமாறியிருப்பாருன்னா நினைக்கறீங்க? கிடையவே கிடையாது…”
“அந்த மனுஷனுக்கு எல்லாம் நான் தான். பொண்டாட்டின்னா நான் மட்டும் தான். இந்த உலகத்துல நான் இல்லைன்னாலும் ரிஷிக்கு நான் மட்டும் தான். இதை யாரும் இல்லைன்னு சொன்னாலும் நம்பமாட்டேன்…” என்றவள் கண்கள் கணவனுக்கான காதலை வெளிப்படுத்திய அதேநேரம்,
“அப்படிப்பட்டவர் ஒழுக்கத்தை பத்தி நீங்க பேசறீங்களா? பொண்டாட்டியோட ப்ரெண்ட் கூட பழகும்போது எங்க போச்சு அந்த ஒழுக்கம்? ஊருக்கு உபதேசமா? யாரை பேசறீங்க?…” என்று வீறுகொண்டு அவள் கேட்க ஜெயந்தனால் மகளை நிமிர்ந்து பார்க்கமுடியவில்லை.
“இப்ப நான் வந்ததுக்கு காரணம் ரிஷியோட சந்தோஷத்தை, அவர் எதிர்காலத்தை என்னோட செயல் பாதிச்சிடக்கூடாதுன்றது மட்டும் தான். உங்களுக்கு தெரியுமா? ரிஷி பக்கத்துல தவறான நோக்கத்தோட எந்த பொண்ணு போனாலும் அது சுலோக்ஷனாவா உருவகமாகுதே தவிர, என்னைக்கும் ரிஷி ஜெயந்தனா எனக்கு தோணினதில்லை…”
“நான் அவரை சந்தேகப்படறேன்னு நினைச்சிட்டார்ன்னா அது காலத்துக்கும் முள்ளு மாதிரி வலியை குடுத்துட்டே இருக்கும். நினைக்க கூடாதுன்னாலும் அந்த எண்ணம் வந்திரும். அவர் யாரோடையாவது பழகினா நான் தப்பா நினைப்பேனோன்னு அவருக்கு நிம்மதி போயிரும்…”
“அதுக்காக தான் நான் விலக நினைச்சு தள்ளி வந்தது. அதுக்காக தான் ரிஷியை கல்யாணமே செஞ்சுக்க வேண்டாம்ன்னு சொன்னது. ஆனா எல்லாம் மீறி நாங்க ரெண்டுபேரும் வாழ்க்கையை ஆரம்பிச்சா, எனக்குள்ள நீங்க குடுத்த பயம் இப்ப மொத்த நிம்மதியையும் சாகடிச்சிருச்சு…” என முகத்தை மூடிக்கொண்டு அவள் அழ,
“சௌபி…” என்றார் ஜெயந்தன் அவமானத்துடன் கண்கள் கலங்கி.
“என்னால அப்பாவும் எனக்கு இப்படி ஒரு பாதிப்பு, அதான் நான் அப்படி நடந்துக்கிட்டேன்னு சொல்ல முடியலையே. என்னோட அப்பாவா, அம்மாவோட கணவனா, உங்களை என் புருஷன் மதிப்பா பார்க்கனும்ன்னு நினைச்சேன்….”
“என் அம்மாவுக்கு சின்ன தலைகுனிவோ, பரிதாபமான பார்வையோ யாருமே குடுத்திடக்கூடாதுன்னு நினைச்சேன். ஏன் பாவப்படனும்? அம்மா என்ன தப்பு பண்ணினாங்க பாவம் பார்க்க? தப்பு செஞ்சது நீங்க. ஆனா பலனை சுமக்கறது நானும், அம்மாவும்…”
“கொஞ்சநாள் தான் பேசினேன். தெரியாம பேசிட்டேன்னு அன்னைக்கு அம்மாக்கிட்ட சொன்னீங்களே? அம்மாவுக்கு தெரியாத நாட்கள் நீங்க மாட்டிக்காத நாட்கள் இல்லை. அவங்க உங்கமேல வச்சிருந்த அன்பும், நம்பிக்கையுமான நாட்கள். அப்படி பார்க்க முடியலைல உங்களால?…”
“இல்லம்மா சௌபி. அப்பா பேச மட்டும் தான். தப்பு பண்ணலைடா…” என்று அப்போதும் ஜெயந்தன் கெஞ்சாத குறையாக சொல்ல,
“ச்சீ, இப்படி சொல்ல வெக்கமாயில்லையா உங்களுக்கு? ரொம்ப ஈசியா போச்சு. பேசத்தானே செஞ்சேன்னு சொல்றீங்க. ஆனா என் புருஷன் யாரோடையோ டான்ஸ் ஆடினார்ன்னு எவ்வளோ கீழ்த்தரமா பேசறீங்க. எவ்வளோ ஆத்திரம் வந்துச்சு. மக வாழ்க்கை போயிரும்ன்னா?…”
“ஏன் என் அம்மாவும் யாருக்கோ மகள் தானே? அவங்களையும் எப்படியெல்லாம் வளர்த்திருப்பாங்க. அவங்களுக்கும் எவ்வளோ கனவுகள், ஆசைகள் இருந்திருக்கும்? அது உங்களுக்கு பொருட்டே இல்லை, அப்படித்தானே?…” என்றவள் வார்த்தைகள் பொசுக்கியது.
“பொண்டாட்டின்னா பொறுத்துட்டு போகனும். மகன்னு வந்தா பொங்கி எழனும். அதுவும் நீங்க உத்தமர் மாதிரி. மனசளவுல கூட சுத்தமானவர் மாதிரி. எவ்வளோ பேச்சு?…” என்று எள்ளலாய் பேச மூச்சுவாங்கியது சௌபர்ணிகாவிற்கு.
“இத்தனைக்கு பின்னாடியும் நீங்க ரிஷியை பத்தி ஒருவார்த்தையும் பேசக்கூடாது. எங்க வாழ்க்கை எப்படி பார்த்துக்கனும்ன்னு எங்களுக்கு தெரியும்….” என்றவள்,
“என்ன சொன்னீங்க, நான் இல்லைன்னா இந்நேரம் வேற யார்கூடவாச்சும்ன்னு எவ்வளோ அசிங்கமா பேசறீங்க? வார்த்தைகள் ஜாக்கிரதை. அவ்வளோ தான் சொல்லிட்டேன்…” என்றவள் எச்சரிக்கையில் ஜெயந்தன் மகள் முகம் பார்க்கமுடியாமல் தடுமாறி நிற்க,
“உங்ககிட்ட ஒன்னு கேட்கட்டுமாப்பா?…” என்றாள் அத்தனை நேரமிருந்த ஆவேசத்தை குறைத்து இறைஞ்சுதலான பார்வையுடன்.
“எங்கம்மாவுக்கு நிம்மதின்றதை எப்பவுமே நீங்க தரமாட்டீங்களா?…” என்று கேட்க,
“சௌபி…” என்றார் அழுவதை போல.
“ஏம்ப்பா எங்கம்மாவை இப்படி ஏமாத்தினீங்க? அவங்க நம்பிக்கையை மட்டுமில்லை எங்க நம்பிக்கையும் உடைஞ்சு போச்சே? உங்களுக்கு புரியுதாப்பா? எங்களுக்கு வழிகாட்ட வேண்டிய நீங்களே இப்படி தடுமாறலாமா?…” என்று கேட்க நிலைகுலைந்து போனார் ஜெயந்தன்.
“அம்மாவை எப்பவோ நீங்க கொன்னுட்டீங்கப்பா. உங்களுக்கு அது புரியுதா? வெறும் ஜடத்தை இன்னும் இப்பவும் நீங்க நோகடிக்கிறது புரியுதா உங்களுக்கு?…” என்றவள் கேள்வியில் இருந்த வேதனையை அவர் இப்போது உணர,
“நீங்க செஞ்சது சரியில்லைன்னு உங்களுக்கு தெரிஞ்சதா?…” என்று கேட்க ஜெயந்தன் கண்களில் கண்ணீர்.
“எனக்கு தெரியும்ப்பா. உணர்ந்திருந்தா இன்னும் இந்த வார்த்தையை, வெறும் பேச்சு தானேன்ற வார்த்தையை சொல்லியிருக்கமாட்டீங்க. அவ்வளோ ஆணவம் இல்லையா? என்ன செஞ்சுட்டோம் அப்படின்ற அகம்பாவம். என்ன செஞ்சிடமுடியும்ன்ற திமிர். அதானே?…”
“சௌபிம்மா, தப்பு பண்ணிட்டேன்டா….” என்று சொல்ல,
“இந்த வார்த்தையை சொல்லாதீங்கப்பா. நம்ப முடியலை. நான் கேட்டேன்றதுக்காக சொல்றீங்களோன்னு தோணுது. தப்பு பண்ணினது அம்மா தான். விஷயம் தெரிஞ்சப்போ பிள்ளைங்களோட எதிர்காலத்துக்காக, சமூகத்துல யாரும் எங்களை எதுவும் சொல்லி நோகடிச்சிட கூடாதுன்றதுக்காக அவங்க தினம் தினம் நரக வேதனை அனுபவிச்சிட்டு இருந்திருக்காங்க…”
“அதுக்கு பதிலா நீங்க இப்படின்னு காமிச்சிட்டு, எங்களை அதை பேஸ் பண்ண பழக்கிருந்திருக்கனும். அவங்களுக்கு தினமும் உங்களை பார்த்துட்டு, உங்களோட சேர்ந்து ஒரே ரூம்ல வாழ்ந்துட்டு, பேசிட்டு, எங்களுக்காக சிரிச்சுட்டு இருக்கற வேதனை மிஞ்சிருக்கும்…”
“இதையே ஒரு பொண்ணு இன்னொரு ஆணுக்கு செஞ்சிருந்தா என்னென்ன பேச்சுகள்? எத்தனை பட்டங்கள்? எவ்வளவு தூற்றல்? ஆனா நீங்க ஜஸ்ட் பேச்சு தானே? இந்த இடத்துல உங்களோட மொத்த டிக்னிட்டியையும் இழந்துட்டீங்க ப்பா…”
“முன்னாடியெல்லாம் அப்பான்னு சொல்லும் போது பெருமையா இருக்கும். ஆனா இப்ப வரைக்கும் அம்மாவுக்காக, அண்ணாவுக்காக, இப்ப நம்ம குடும்பத்துக்காக அப்பான்னு கூப்பிடறேன். வெறும் வார்த்தையா தான். உணர்வால இல்லை. அது செத்துருச்சு…” என்றவள் பேச்சில் ஜெயந்தன் தான் வீழ்ந்து போனார்.
“எங்கம்மா க்ரேட். உங்களை சகிச்சிட்டு வாழ்ந்திருக்காங்க. இனியும் வாழ்வாங்க. அந்த சகிப்பு போர்வைக்குள்ள இன்னும் நீங்க சுதந்திரமா, கௌரவமா வாழலாம். உங்களுக்கு எந்த குறையும் இல்லை…” என்று சொல்லிக்கொண்டிருந்தவள் விழிகள் திரும்பி சபர்மதியை காண அவர் அசையாது அமர்ந்திருந்தார்.
கண்ணோரம் நீர் கசிந்திருக்க இமைகள் மூடியிருக்க அதை பார்த்தவளுக்கு அடங்கியிருந்த அழுகை கேவலாய் உருவெடுத்தது.
“எங்கம்மாவுக்கு நீங்க தேவையே இல்லை. எனக்கும் தான். அண்ணாவுக்கா, அண்ணி, பிள்ளைங்களுக்காக இந்த வீட்டுல நீங்களும் ஒரு ப்ராப்பர்ட்டி. தட்ஸ் ஆல். எங்கம்மாவுக்கு நான் இருக்கேன்…” என்று சொல்லியவள் அப்போது தான் அங்கே நின்றிருந்த ஆரோனை பார்த்தாள்.
ஆம், அவன் வந்திருந்தான். வந்தவன் அனைத்தையும் கேட்டிருக்க இதை எதிர்பார்த்திராதவள் கண்கள் கண்ணீரை விட,
“ஆஹ் நோ…” என கதறலுடன் முகத்தை மூடிக்கொண்டு மடங்கி அழ ஆரம்பித்துவிட்டாள்.
அப்படி ஒரு அழுகை. வெடித்து சிதறும் எரிமலையாய் அவள் கதறல். அவன் முகமே சொல்லியது எல்லாம் கேட்டுவிட்டேன் என்பதை.
அதைத்தான் எதிர்கொள்ளமுடியவில்லை அவளால். மகளின் கண்ணீரை பார்த்த ஜெயந்தனும் திரும்பி பார்க்க மருமகனை அங்கே எதிர்பார்க்கவில்லை.
அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி. அவனின் அழுத்தமான பார்வையில் உடல் கூசி கூனிக்குறுகி போனார் ஜெயந்தன்.
அவன் வரும்பொழுதே சௌபர்ணிகா ஜெயந்தனிடம் கேட்டுக்கொண்டு இருந்ததை கண்டுதான் மௌனமானான்.
வெடிக்கட்டும். எல்லாம் சொல்லி பேசி முடிவுக்கு வந்து அழுத்தங்கள் தீர்ந்தாலே அவள் சரியாகிவிடுவாள் என்று விலகி நின்றவன் இப்போது அவளருகில் வந்தான்.
அவளுடன் தரையில் மடங்கி அமர எதுவும் சொல்லாமல் அவன் தோளில் சாய்ந்தவள் கேவல் பெரிதாகி சத்தமிட்டு அழுதாள்.
ஜெயந்தன் அசையாமல் அங்கேயே நின்றபடி மனைவியையும், மகளையும் தான் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தார்.
“ஓகே, ரிலாக்ஸ்…” என்று அவளின் தலையை வருடிய ஆரோன் திரும்பி சபர்மதியை பார்த்து,
“சௌபர்ணிகா முதல்ல அம்மாவை பாரு…” என்று சொல்லவும் தான் அவன் கைகளில் இருந்து விடுபட்டு எழுந்தாள்.
“ம்மா…” என்று சபர்மதியை நெருங்கி அணைக்க அவருடலில் எவ்வித எதிர்வினையும் இல்லை.
“ம்மா…” என்று சௌபர்ணிகா அவர் கன்னத்தை தட்ட சபர்மதி கண்விழிக்கவில்லை.
“ரிஷி…” என்று பதட்டத்துடன் திரும்பி அவனை பார்க்க,
“என்னாச்சு?…” என்றான்.
“அம்மா, அம்மா கண்ணு விழிக்கலை. அசையமாட்டேன்றாங்க. ரிஷி எனக்கு பயமா இருக்கு…” என்று அவனின் சட்டையை பிடித்திழுத்து சொல்ல,