“அவ ரொம்ப டவுனா ஃபீல் பண்ணுவா. இப்ப நீங்க பக்கத்துல இருக்கனும்…” இஷாந்திற்கு தங்கையின் அந்த முகம் காண முடியவில்லை.
“இல்லை இஷாந்த். நான் கிட்ட போனா தான் அவ உடைஞ்சிருவா. அது வேண்டாம்…” என்ற ஆரோன்,
“அங்க பாரு மேன். எவ்வளோ நம்பிக்கையோட உக்கார்ந்திருக்கா. இப்ப இந்த தைரியம் நான் பக்கத்துல போனா எங்க போகுமோ? எல்லாத்தையும் என்கிட்ட தூக்கி குடுத்திட்டு அழ ஆரம்பிச்சிருவா. என்ன சொல்லி தேத்த முடியும்?…”
“ஆரோன்…”
“நான் இங்க தான் இருப்பேன். எங்க போக போறேன்? அவளுக்கும் அது தெரியும். அவளை விட்டு நான் போகமாட்டேன்னு….” என்றவன் அங்கேயே மனைவியின் பார்வை படும் தூரத்தில் அமர்ந்துகொண்டான்.
அவன் எண்ணங்கள் அறியாதவளா? அவன் தன் அருகில் வந்துவிட்டால் நிச்சயம் தளர்ந்துவிடுவோம்.
எல்லாம் கேட்டிருந்திருக்கிறான். அதை பற்றி எண்ணும் நேரம் இதுவல்ல. நினைக்கவும் முடியவில்லை.
கண்களை மூடியபடி இருப்பவள் அவ்வப்போது அருகில் கேட்கும் காலடி ஓசைகளில் விழிப்பதும், கண் மூடுவதுமாய் இருக்க இஷாந்த் அவளருகில் வந்தமர்ந்தான்.
“கொஞ்சம் தண்ணி குடி சௌபி…” என்று கேட்க,
“என்னால தான ண்ணா?…” என்றாள் கண்ணீருடன் சௌபர்ணிகா.
“அதெல்லாம் இல்லைடா…” என்றான் அவளிடம்.
இஷாந்திற்கு என்ன நடந்தது என்று எதுவும் தெரியவில்லை. வந்ததில் இருந்து ஆரோனும் சொல்லவில்லை. சௌபர்ணிகாவும் சொல்லும் நிலைமையில் இல்லை.
ஜெயந்தனும் இருந்தார். ஆனால் யாரிடமும் எதுவும் பேசாமல் ஓரிடத்தில் அவர் நின்றவிதமே என்னவோ பிரச்சனை என்று புரிந்தது.
தனக்கு தகவல் சொல்லி வரவழைத்த ஆரோனிடம் தான் நடந்ததை கேட்டான்.
“எனக்கு தெரியலை. என்னவோ ஆர்க்யூமென்ட். நான் போனப்போ அத்தை மயங்கி இருக்கறதை பார்த்தேன்….” என்று ரத்தின சுருக்கமாய் சொல்லிவிட்டவனிடம் வேறு என்ன கேட்க முடியும்?
ஆரோன் அதற்கு மேல் எதுவும் சொல்லவில்லை. முதலில் எல்லாம் சரியாகட்டும் என்று இரண்டு வரிகளில் முடித்துக்கொண்டான்.
சந்தனா பிள்ளைகளுடன் வெகுநேரம் இருக்க முடியாமல் தன்னுடைய தாயை வரவழைத்து பிள்ளைகளை அனுப்பி வைத்துவிட்டாள்.
உடன் இருக்கிறேன் என்றவர்களையும் அனுப்பிவிட்டாகிற்று. என்ன பிரச்சனையோ என்னவோ என எதுவும் தெரியவில்லை.
தன்னுடைய வீட்டாரும் இருந்து அவர்களுக்கு இது தெரிய அவளும் விரும்பவில்லை.
ஆனால் பயந்து போயிருந்தாள் சந்தனா. அவ்வப்போது அவள் தான் ஜெயந்தனிடம் சென்று பேச, ஒருவார்த்தை கூட அவர் பதில் பேசவில்லை.
எதை கேட்டாலும் மறுப்பாய் தலையசைப்பு தான். இல்லை என்றால் அதுவும் இல்லை.
“நீங்க போய் என்னன்னு கேளுங்களேன்…” என கணவனிடம் சொல்ல,
நிச்சயம் ஆரோன் விஷயமாக தான் பிரச்சனை சென்றிருக்கும் என்பதில் உறுதியாய் இருந்தான்.
மீண்டும் மருத்துவர்கள் வந்து உள்ளே நுழைந்திருக்க சௌபர்ணிகா உடலில் நடுக்கம்.
“ஒன்னும் இல்லைடாம்மா. அம்மா வந்திருவாங்க சௌபி…” என்றவன் தன் தோளில் சாய்த்துக்கொள்ள,
“என்னால தான். நான் தான் பேசிட்டேன். பேசக்கூடாததெல்லாம் பேசி, பிடிவாதம் பண்ணி. என் தப்பு தான், இல்லண்ணா?…” என்றவள் கண்களில் கண்ணீர் உருண்டு விழ, ஆரோன் சற்று நெருங்கி வந்து நான்கு இருக்கைக்கு தள்ளி அமர்ந்துகொண்டான்.
“என் வாழ்க்கை எப்படி போகுமோன்னு நினைக்க வச்சே அவங்களை இந்த நிலைமைக்கு தள்ளிட்டேன்…” என்றாள் மெல்லிய குரலில்.
“நீயா எதுவும் நினைக்காத சௌபி. அம்மா அப்படி யோசிச்சு படுக்கறவங்க கிடையாது. நீ சந்தோஷமா வாழறதை பார்க்கவேணும் வருவாங்கடா…” என்றான் இஷாந்த் கலங்கிய குரலில்.
“ண்ணா…” என்று நிமிர்ந்தவள் கண்களில் அப்போது தான் ஒளியே பிறந்தது.
“ரைட், கண்டிப்பா. நீ சொன்ன பாரு. கண்டிப்பா வருவாங்க…” என்று கண்ணீரும் சிரிப்புமாய் சொல்லியவள்,
“நாம கஷ்டப்பட கூடாதுன்றதுக்காக நிறைய கஷ்டத்தை தாங்கி வாழ்ந்தவங்க. அப்படியெல்லாம் விட்டுட்டு போக மாட்டாங்க. பாரேன்…” என்று சொல்ல அவனுக்கும் அது புரிந்தது.
இப்போதும் கூட இப்படி நடந்தது என தன்னிடம் எதையும் சொல்லாமல் உள்ளுக்குள் வைத்து மருகும் அவளை தாயை போல பார்த்தான் இஷாந்த்.
“ஆமா, வந்து உன் காதை பிடிச்சு திருக போறாங்க…” என்றான் அவனும் லேசாய் புன்னகைத்து நம்பிக்கையுடன்.
இருவருமாய் மாற்றி மாற்றி தங்களின் தைரியங்களை நம்பிக்கையாய் வளர்த்துக்கொண்டனர்.
அருகிலிருந்தவன் மனதும் மட்டுமல்ல கண்களும் பனித்து கிடந்தது அவர்களை காண்கையில்.
ஜெயந்தனை தனித்து விடமுடியாமல் அவர் பேசாவிட்டாலும் பரவாயில்லை என சந்தனா அவரருகில் அமர்ந்துவிட்டாள்.
வெகுநேரமான பின்பு வெளியே வந்த மருத்துவர்களின் முகம் கண்டு படபடத்தவர்கள் இதயம் அமைதியுற்றது.
“காட் இஸ் கிரேட்…” என்றார் மருத்துவர்.
அந்த ஒருவார்த்தைக்கு தானே தவமிருந்தது. அவர்களின் உயிர்ப்பே சபர்மதி எனும்பொழுது இதைவிட வேறு என்ன வேண்டும்?
“உங்க அம்மா ஆபத்து கட்டத்தை தாண்டிட்டாங்க. இனி பயமில்லை…” என்றார் புன்னகையுடன் மருத்துவர்.
அந்தநிமிடம் பிள்ளைகள் இருவருக்கும் அந்த மருத்துவர் தான் கடவுளாய் தோன்றினார்.
“தேங்க் யூ டாக்டர். தேங்க் யூ சோ மச்…” என்று இஷாந்த் சொல்ல சௌபர்ணிகா வாய்விட்டு நன்றியுரைக்கவில்லை.
கையெடுத்து கும்பிட்டவளின் அத்தனை நேர போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டதை போல மொத்த கண்ணீரும் கரையுடைத்து வெளியே வர இஷாந்த் தங்கையை ஆறுதலாய் தாங்கிக்கொண்டான்.
“வெய்ட் பண்ணுங்க. நாங்க சொல்லும் போது பார்க்கலாம்…” என்று நகர்ந்துவிட்டார் மருத்துவர்.
“ண்ணா…” என மகிழ்ச்சியில் இன்னும் அழுதவள் இப்போது கொண்டவனை தேட, மனைவியின் ஒவ்வொரு அசைவுகளையும் கவனித்திருந்தவன் கைகட்டியபடி அவளின் பார்வைக்காக காத்திருந்தான்.
“ரிஷி…” என்றவள் அழைப்பில் ‘வா’ என விழிகளை மூடி திறந்தவன் அழைப்பில் வேகமாய் அவனருகில் வந்து கை கோர்த்துக்கொண்டவள் பேச முடியாமல் தடுமாற,
“ஹேய் வேதாளம், இன்னும் என்னடி அழுகை?…” என்றான் அதட்டலும், சிரிப்புமாய்.
“ஸாரி…”
“நானும் சொல்லவா?…”
“கண்டிப்பா. இல்லைன்னா விடமாட்டேன்…” என்றவள் விழிநீர் கன்னம் தாண்டி இதழ்களில் வந்து தேங்க,
“சால்ட்டி கிஸ் உனக்கு நீயே குடுத்துப்பியா?…” என்றான் அவன் சிரிப்புடன்.
அந்த புன்னகை கண்களை எட்டினாலும் என்னவோ குறைவது தெரியவில்லை. அவன் இன்னும் முழுமையான சந்தோஷத்தை காண்பிக்கவில்லை என்று புரிந்தது.
இன்னும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. தீர்க்க ஆயிரம் இருந்தது. தீராத காதலும் இருந்தது.
அவன் விரல்கள் கொடுத்த அழுத்தம் வலியையும் சேர்த்தே தர அவன் முகம் பார்த்தாள்.
“மேம், கால் மீ ஆரோன் ரிஷபன்…” என்று சொல்ல சௌபர்ணிகா முகம் கூம்பிவிட்டது.
“ப்ச், இம்சை பன்ற நீ…” என்றவன் அவளை அமரவைத்து அருகில் அமர்ந்துகொண்டான்.
“நம்ம விஷயம் வீட்டுக்கு போய் பேசிக்கலாம். இப்ப இங்க வேண்டாம்…” என்றவன்,
“இஷாந்த், உட்காருங்க. டாக்டர் கூப்பிடவும் போகலாம்…” என்று அமர்ந்துகொள்ள சொல்ல இஷாந்தும் அமர்ந்தான்.
ஜெயந்தனை விட்டு சந்தனா கணவனிடம் வந்துவிட சபர்மதி பிழைத்துக்கொண்டதில் ஜெயந்தனும் பிழைத்தார்.
தான் செய்த தவறை சுட்டிக்காட்டியதன் ஆளுமையில் எத்தனை புகைச்சலில் இருந்தவரின் அடிவேர் வரை பற்றி எரிய வைத்துவிட்டாளே மகள்.
மொத்தமாய் சுருண்டு போனார். தான் செய்ததற்கு பெரிதாய் அவமானம் கொள்ளாமல் மனைவிக்கு தானே தெரியும் என்ற எண்ணத்தில், இதில் என்ன பெரிய தவறு என்ற அலட்சியத்தில் இருந்தவரின் ஆணவத்தை அடியோடு சாய்த்திருந்தாள் மகள்.
இப்போது அவரின் பயமெல்லாம் மகனுக்கும் இது தெரிந்திருந்தால்? வாழ்க்கையை வெறுத்த நிமிடங்கள் அவை.
இத்தனை வருடங்கள் தெரிந்தும் தெரியாததை போல மகள் வாழ்ந்திருக்க, ஒருவேளை அவனுக்கும் தெரிந்திருக்குமோ?
அதனால் தான் கடையில் வைத்து அன்றைக்கு அத்தனை பேசினானோ? இருக்குமோ, இருக்காதோ என்ற பதட்டத்தில் உயிர் போனது.
இப்போது ஜெயந்தனின் இதயத்துடிப்பு அவரின் உள்ளத்து கனத்தை கூட செய்து அங்கே இருக்கவிடவில்லை.
ஆனாலும் எழுந்து சென்றுவிட முடியாமல் சபர்மதியும் பிள்ளைகளும் அவரை பிடித்து வைத்திருக்க மருமகனின் பார்வை தன்னை தொட்டு மீள்வதில் செத்து பிழைத்தார்.
இனி எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவனிடம் பேசமுடியும்? சாதாரணமாக கூட முகம் பார்க்க முடியாதே?
வாழ்நாள் முழுவதற்குமான தண்டனை யாதென அவர் அறிந்துகொண்டிருக்க இப்பொழுதே தன்னுயிரை எடுத்துவிட கூடாதா இறைவனிடம் உள்ளம் இறைஞ்ச ஆரம்பித்திருந்தது.
நினைத்ததெல்லாம் நடந்துவிடுமா? உணரவில்லை, உணரவில்லை என்று அவர்கள் உணர்த்திய குற்றவுணர்வின் உண்மைத்துவம் உணர்ந்தவர் நரகவேதனை என்னவென புரிந்துகொண்டார்.
இத்தனை வருடங்கள் தான் செய்த தவறை உணராமல் ‘அதுதான் மன்னிப்பு கேட்டாகிற்றே’ என உதறி இருக்கிறோம் என்று புரிந்துபோனது.
உணர்ந்திருந்தால் இன்றைக்கு இந்த நிலைமை வந்திருக்காதோ என்றெல்லாம் நினைக்க ஆரம்பித்திருக்க நெஞ்சை அடைத்தது அவருக்கு.
இஷாந்தும், சௌபர்ணிகாவும் ஒருசேர தன்னை பார்ப்பதை உணர்ந்தவர் நிமிரவில்லை.
“என்ன சௌபி?…” என்று இஷாந்த் தங்கையின் பார்வையை கண்டு கேட்க,
“இல்லண்ணா, ஒன்னுமில்லையே…” என்றாள் உடனே பதறி.
“அப்பா எதுவும் பேசினாரா?…”
“ம்ஹூம் இல்லையே…” என அப்போதும் மறுத்தவள் எங்கே கணவன் எதுவும் சொல்லிவிடுவானோ என்று அவன் திரும்பி பார்க்க,