“நீங்க மாத்திரை எடுக்கனும். நீங்களும் எதுவுமே சாப்பிடலை. ப்ளீஸ் வாங்க…” என்று விடமுடியாமல் அவன் கேட்க அப்போதும் மறுத்துவிட்டார் ஜெயந்தன்.
“அப்ப இருந்து இப்படித்தான் இருக்காங்க. எதுவுமே பேசலை. அமைதியா இருக்காங்க. நாம வரும்போது வாங்கிட்டு வருவோம்…” என்றாள் சந்தனா.
தலையசைப்புடன் அவர்கள் இருவரும் செல்ல அதை பார்த்துக்கொண்டிருந்த சௌபர்ணிகாவிற்கு மீண்டும் கண்கள் கரித்துக்கொண்டு வந்தது.
“அண்ணா ரொம்ப பாவம்…” என்றாள் அவளாகவே.
“ஹ்ம்ம், ஆமாம்…” ஆரோன் சொல்ல,
“அவனாவது நிம்மதியா இருக்கனும். எப்பவும் சொல்லிடவேண்டாம் ரிஷி…” என்று கணவனை கெஞ்சுதலாய் பார்த்தவள்,
“அவனால தாங்க முடியாது. பார்க்க தான் ரொம்ப ஸ்ட்ராங். ஆனா பூஞ்சை மனசு. தாங்கிக்கமாட்டான். உடைஞ்சு போயிருவான். இந்த சிரிப்பு எல்லாம் தொலைஞ்சுடும்…” என்று சொல்லியவள்,
“என்னோட இந்த வாழ்க்கையை வாழறது உங்களுக்கு ரொம்ப கஷ்டம் இல்ல ரிஷி?…” என்றாள் வேதனையான குரலில்.
“ம்ஹூம், என்னோட வாழ்க்கையை வாழறது ரொம்ப ரொம்ப ஈஸி. யார் வேணா வாழலாம். ஆனா நீ, உன் அம்மா எல்லாம் ரொம்ப சவாலான வாழ்க்கையை வாழ்ந்திட்டிருக்கீங்க. பெரிய விஷயம்….” என்றவன்,
“உனக்கு தெரியும்ன்னு உங்கம்மாவுக்கு தெரியாம நீயும், உனக்கு தெரிஞ்சிருச்சுன்னு தெரிஞ்சதுல இருந்து உங்கம்மாவும் எவ்வளோ வலியை தாங்கி கடந்து வந்திருக்கீங்க….” என்றான்.
“உங்ககிட்ட மறைச்சிட்டேன். இன்னும் மறைச்சிருக்கேன்…”
“ஸோ வாட்? எனக்கு தெரியனும்ன்னா தானா தெரியட்டும்…”
“ரிஷி, நான்… நான்… எல்லாம் நானே சொல்லனும்…” என்றாள் அவள் மென்று விழுங்கும் குரலுடன்.
அதற்குள் இஷாந்த் வந்துவிட மருத்துவரும் சபர்மதியை பார்க்க அனுமதித்திருந்தார்.
“அம்மா கண்ணு முழிச்சிட்டாங்க…” என்று சொல்லியவள் வேகமாய் எழுந்து செல்ல,
“நீ முதல்ல போய் பாரு சௌபி…” என்று இஷாந்த் அனுப்ப ஆரோனும் சேர்ந்தே சென்றான் சௌபர்ணிகாவுடன்.
கண்கள் மூடி படுத்திருந்தவரின் தோற்றத்தில் விம்மி வெடிக்கவிருந்த அழுகையை அடக்கிக்கொண்டவள் ஆரோனின் கை பிடித்து செல்ல மெல்ல கண் மலர்ந்தார் சபர்மதி.
“சௌபி…” என அவரின் இதழ் அசைய,
“ம்மா உங்களுக்கு எதுவுமில்லை. நீங்க சரியாகிட்டீங்க…” என்று சொல்லும்பொழுதே குரல் தழுதழுத்து அழுகை சேர்ந்துகொள்ள சபர்மதியின் இதழ்கள் மகள் கணவனோடு இருப்பதை கண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி புன்னகைத்தது.
“சௌபி…” என மீண்டும் சொல்லியவர் கண்கள் ஓரம் கண்ணீர் கசிய,
“ப்ச், அத்தை. எல்லாம் சரியாகிடுச்சு. நீங்க சீக்கிரம் குணமாகி உடம்பை தேத்திட்டு வாங்க. எவ்வளோ வேலை இருக்கு நமக்கு?…” என்றான் ஆரோன் அவரிடம்.
அவனின் முகமும், புன்னகையும் அவருக்கு கொடுத்த பலத்திற்கு நிகர் எதுவுமில்லை என்று தான் தோன்றியது சபர்மதிக்கு.
“சௌபி என் பொண்ணு…” என்றார் மீண்டும் காற்றாய் வார்த்தைகளை வெளிப்படுத்தி.
“உங்க பொண்ணு தான். என்னோட வொய்ப் தான். ரொம்ப நல்லா இருக்கா. தைரியமா, சந்தோஷமா, இப்ப நிம்மதியாவும்…” என்று சொல்லியவன் இன்னும் அவர் எதையோ எதிர்பார்ப்பதை கண்டு புன்னகைத்தான்.
“புரியுது. இனி நீங்க எதையும் நினைச்சு பயப்படவேண்டாம். அவ மனசுல உள்ளதெல்லாம் வெடிச்சு வெளில வந்திருச்சு. மனஅழுத்தத்துக்கு முக்கிய காரணமே நாம நினைக்கிறதை வெளில சொல்லவோ, கேட்கவோ முடியலைன்றது தான்….”
“சௌபர்ணிகாவுக்கும் அதுதான். அவளால அவ அப்பாக்கிட்ட இதை நேரடியா கேட்க முடியலை. தினம் தினம் உங்களோட வலியை பார்த்து வளர்ந்தவளுக்கு அதுக்கு காரணமானவர்கிட்ட உடைச்சு கேள்வி கேட்க முடியலையேன்றது தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம்….”
“அவ மனசுக்குள்ள அடக்கி வச்ச எல்லாம் கேள்வியா வெளில வந்திருச்சு. இனி எந்த அழுத்தமும் இல்லை. கவுன்ஸிலிங் கூட தேவை இல்லை. நீங்க பயப்படற மாதிரி எதுவும் நடக்காது…” என்று அவன் பேசி முடிக்க இன்னும் அவன் சொல்லியவற்றில் சௌபர்ணிகா உணர்ந்தது ஒன்று தான்.
தன் கணவனுக்கு தன்னை பற்றி இன்றல்ல என்றோ தெரியும் என்பது. அவளால் நம்ப முடியவில்லை.
ஒருவிதமாய் உள்ளுக்குள் பதட்டமும், படபடப்பும் உண்டாக, மனைவியின் அமைதியில் அவள் புறம் திரும்பியவன்,
“என்ன வேதாளம், நீ திரும்ப தலைக்கு ஏறிடுவியா? உன்னை நம்பி என் மாமியார்கிட்ட வாக்கு எல்லாம் குடுத்துட்டேன்…” என்று சொல்லி கண் சிமிட்டி புன்னகைத்தவன்,
“ஓகே அத்தை. சீக்கிரம் வாங்க. பேரப்பிள்ளைங்க எல்லாரையும் பார்க்க வேண்டாமா? மகனுக்கு மட்டும் வளர்த்துவிட்டாச்சு. உங்க பொண்ணுக்கு எதுவும் தெரியாது. சொல்லித்தரவேண்டிய நீங்க இல்லாம எப்படி? அதனால வந்திருங்க…” என்றவன்,
“மாமியார் ப்ராமிஸ். நானே எடுத்துக்கறேன்…” என்றான் அவரின் கையை பிடித்து அழுத்தம் கொடுத்து.
நெகிழ்ந்து போனார் சபர்மதி. அவரின் ரணமெல்லாம் காணாமல் போய்விட்டதை போலிருந்தது அந்த கணம்.
“உங்க பெரிய பையன் வெய்ட் பன்றார். நாங்க போய்ட்டு இஷாந்தை அனுப்பி வைக்கறோம். இப்படி கண்ணெல்லாம் கலங்கிடாதீங்க. தாங்கமாட்டாராம்….” என்றவன்,
“ரிஷி…” என்றவள் புன்னகையும், மருமகனின் இணக்கமும் சபர்மதிக்கு ஆயிரம் பலம் தருவதாய் இருந்தது.
எங்கே மகளின் சந்தோஷமான வாழ்க்கையை பார்க்காமல் சென்றுவிடுவோமோ என்று போராடி வந்திருந்தார் சபர்மதி.
தனக்காக தான் வருந்த கூடாதென்பதற்காகவே எதையும் தெரிந்ததை போல காண்பித்துகொள்ளாமல் வாழ்ந்தவள் மகள்.
இப்போது நடந்த சம்பவத்தில் தன் உயிர் பிரிந்திருந்தால் காலத்திற்கும் அதை எண்ணியே மாய்ந்து போவாளே என இறைவனிடம் மன்றாடி பிழைத்து வந்திருந்தார்.
“என் பிள்ளைங்களுக்கு என்னால குடுக்க முடிஞ்ச இந்த நிம்மதியை கூட நானே பறிக்கும்படி செஞ்சிடாதப்பா…” என்றவர் வேண்டுதல் கடவுளின் காதில் சென்றடைய உயிர் திரும்பியது.
சௌபர்ணிகா வெளியே வந்ததும் இஷாந்த் சந்தனாவுடன் உள்ளே சென்று பார்த்துவிட்டு வந்தான்.
ஜெயந்தன் அதற்கு கூட எழவில்லை. சந்தனா சென்று பார்க்கும்படி சொல்ல அதற்கும் அசையவில்லை.
எந்த முகத்தை வைத்துகொண்டு பார்ப்பது? அதுவும் மகளின் பார்வையை தாண்டி சென்றுவிட முடியுமா?
இத்தனை வருடங்களாகியும் மனைவியின் மன்னிப்பும், இளக்கமும் கிடைக்காததில் வெகுண்டிருந்தவர், இப்போது தன் தவறின் அளவை புரிந்திருந்ததனால் உண்டான குற்றவுணர்வே அவருக்கு தடைவிதித்தது.
“விடும்மா, அவருக்கா தோணினா போய் பார்க்கட்டும். கட்டாயப்படுத்தாத…” என்று சொல்லிவிட்டான் இஷாந்த்.
ஆனால் அவரை எல்லாம் கவனிக்கும் நிலையில் சௌபர்ணிகா இல்லை. பார்வை மொத்தமும் அவனிடம். ஆரோனிடம்.
ஆனால் வாய் திறந்து கேட்க தான் தைரியமில்லை. ‘இந்தளவிற்கா அவனை எதிர்கொள்ள முடியாமல் பலவீனமானோம்?’ என்று அவளுக்கவளே கேட்டுக்கொண்டாள்.
“என்ன?…” என்றவனிடம் கூட ஒன்றுமில்லை என்ற தலையசைப்பு தான்.
ஆனால் பார்ப்பதும், திரும்புவதுமாக இருக்க ஆரோனுக்கு பேசவேண்டும் என்று தோன்றினாலும் பேசவில்லை.
தங்களுக்குள்ளானது தனிமையில், தங்களிடத்தில் தான் என்பதில் உறுதியாய் இருந்தான்.
அதனால் சௌபர்ணிகாவின் பார்வையின் தொடுகையிலும் மௌனம் சாதித்தான் ஆரோன்.
நான்கைந்து நாட்களில் சபர்மதி பூரணகுணமடைந்து வீட்டிற்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
அவரை பார்க்க என ஸ்டீபன், ஆராதனா, பொன்னரசி என்று ஆரோன் பக்க சொந்தங்கள் எல்லாம் வந்து சென்ற வண்ணம் இருந்தனர்.
ஆராதனாவும், ஸ்டீபனும் இரண்டொரு நாட்கள் அவர்களோடு இருக்க ஸ்டீபன் ஜெயந்தனிடம் ஆறுதல் பேச அப்போதும் மௌனம் தான்.
“சம்பந்தி ரொம்ப அதிர்ச்சில இருக்காரு போல ஆரோன். பார்த்துக்கோ…” என்றார் மகனிடம்.
தலையசைத்துக்கொண்டவன் இன்னும் ஜெயந்தனிடம் பேசவில்லை. ஆனால் கவனித்துக்கொண்டு தான் இருந்தான்.
வீட்டிற்கு வந்த பின்னருமே ஜெயந்தன் சபர்மதி உறங்கிய நேரம் வந்து பார்த்துவிட்டு சென்று விடுவதொடு சரி.
அவரின் மாற்றம் புரிந்தாலும் யாரும் எதையும் கேட்கவில்லை. இஷாந்தும், சந்தனாவும் மட்டும் கவனித்துக்கொள்ள சௌபர்ணிகா முற்றிலும் பேச்சை நிறுத்தி இருந்தாள்.
ஒருவழியாக வீடு வந்தும் மூன்றுநாட்கள் ஆகியிருக்க அன்று ஆரோன் தன்னுடைய வீட்டிற்கு செல்ல கிளம்பினான்.
உடன் வர சௌபர்ணிகாவை வா என்றும் அழைக்கவில்லை. அழைப்பானா இல்லையா என்றும் அவள் யோசிக்கவில்லை.
அவள் வருவாள் என்பதில் அத்தனை திண்ணம். திருமணத்திற்கு முன்பே அவனை விட்டுக்கொடுக்க முடியாமல் தவித்து தேடி வந்தவள்.
வாழ்க்கையை வாழ்ந்த பின்னரா விலகி செல்வாள்? மென்னகையுடன் அவன் கிளம்பி வர,
“புறப்படறோம் ம்மா…” என்றாள் சௌபர்ணிகா ஆரோனுக்கு முன்னால் முந்திக்கொண்டு.
“சந்தோஷமா இருக்கனும். போய்ட்டு வாங்க…” என்று நிறைந்த மனதுடன் சபர்மதி சொல்ல இஷாந்தும், சந்தனாவும் வாழ்த்தி அனுப்பிவைத்தனர்.
காரில் செல்லும் பொழுது ஏதேனும் கேட்பான் பேசுவான் என்று எதிர்பார்த்தவள் நினைப்பை பொய்யாக்கியவன் மௌனத்தில் குழம்பி போனவள் வீடு செல்லும் வரை அந்த அமைதியில் பொசுங்கி போனாள்.
“ரிஷி…”
“ஷ்ஷ்ஷ்ஷ்…” என்று சொல்லியவன் வீட்டினுள் நுழைந்து கதவை திறந்ததும் விடுவிடுவென நேராக உள்ளே சென்றுவிட சௌபர்ணிகாவிற்கு கால்கள் தடுமாறியது.
தன்னை விட்டு எங்கே சென்றுவிட்டான் என கதவை அடைத்துவிட்டு திரும்பியவள் கண்முன்னே அன்று அவள் எழுதி வைத்துவிட்டு சென்ற அந்த காகிதம்.
“என்ன இது?…” என்று ஆரோன் அதனை விரித்து காண்பித்து கேட்க சௌபர்ணிகா திணறி போனாள் பதில் சொல்ல முடியாமல்.
“தேங்க்ஸ் வேற? காயப்படுத்தினியா? எப்படி? இப்படியா?…” என்றவன் அவளை மொழிய விடாமல் வன்மையாய் காயம் செய்ய, மெல்லிய சப்தங்களுடன் விழிகள் இரண்டும் மோதிக்கொண்டது ஆவேசமாய், ஆத்மார்த்தமாய்.