சௌபர்ணிகா அமர்ந்த இடம் விட்டு அசையவில்லை. ஆரோனை பாராமல் அவனை தவிர்த்து பார்வைகள் எங்கெங்கோ அலைபாய்ந்தது.
அத்தனை நாட்கள் அவள் அனுபவித்த அத்தனை துயரங்களும் ஒன்றுமே இல்லை என்பதை போல் காண்பித்துவிட்டானே?
‘எல்லாம் தெரியுமாம். எப்பொழுதோ தெரியுமாம்’ சட்டென அதனை கிரகிக்க முடியாமல் இன்னும் அந்த அதிர்விலேயே அவளிருக்க, நாசியில் காபியின் நறுமணம்.
“பிடி. குடிச்சிட்டு சிந்தனை செய்யலாம்…” என்றான் ஆரோன் ரிஷபன் நக்கலாக.
“என்ன கிண்டலா?…”
“அப்படியா தெரியுது?…” என்றவன் இதழ்கள் அடக்கப்பட்ட புன்னகையில் துடிக்க,
“ரிஷபன்…”
“ப்ச், கால் மீ ஆரோன் ரிஷபன். அவ்வளோ கோபமா என்னைவிட்டு கிளம்பி வந்த பொண்ணு உரிமையா ஏன் கூப்பிடனும்? இப்ப ஏன் கூட வரனும்?…” என்றான் அலட்சியத்துடன்.
அதில் தொனித்திருந்த ஆதங்கம் அவள் கண்களில் அகப்படாமல் எப்படி? வருத்தம் தான்.
மௌனமானாள் உடனே. தான் ஒன்று நினைத்து வந்திருக்க அவன் ஒன்று நினைத்து பேசியிருக்க எல்லாம் சூழ்நிலை என்றது மனசாட்சி.
“இப்ப சொல்லு, நான் வேண்டாமா? நல்லா யோசிச்சே சொல்லலாம்…” என்றவன் அவள் முகம் நிமிர்த்தி இதழ்களை பார்த்தான்.
“காயம் கொஞ்சமே கொஞ்சம் அதிகமோ?…” என்று கேட்க,
“ப்ச், உங்களுக்கு எல்லாம் ஈஸி இல்ல?…” என்றாள் சௌபர்ணிகா.
“ம்ஹூம், எல்லாமே கஷ்டம். உன்னை ஹேண்டில் பன்றது அதைவிட கஷ்டம். எல்லாம் தெரிஞ்சும் தெரியாத மாதிரி என்னால சிலமாசம் கூட நகர்த்த முடியலை. ஆனா ஸ்யப்பா நீ இருக்கியே? கத்துக்கனும் போ…” என்றான் விளையாட்டாய் அதையுமே.
“ரிஷி…”
“என்ன, என்ன ரிஷி? இப்பவும் சொல்றேன். நீ காதலை சொல்லாமலே உணர்ந்தவன் நான். என்னை விட்டுட்டு போகனும்ன்னு முடிவெடுக்க நீ யார்? இது என்ன உன் வாழ்க்கை மட்டுமா? என்னோடதும் தான். என் சந்தோஷம் எங்க யார்கிட்டன்னு நான் தான் முடிவு பண்ணுவேன்….”
குரலை உயர்த்தாமல் உறுதியுடன் அழுத்தமாய் அவளுக்கு வலிக்கும்படியே அவன் சொல்ல,
“என் நிலையில இருந்து…”
“எப்போ இருந்து உன்கிட்ட இந்த கழிவிரக்கம்? என்ன உன் நிலை? உன் நிலைக்கென்ன?…” என்றவன் அதட்டலில் சௌபர்ணிகா விழிகள் சுருங்கியது.
“என்ன லுக்? ஹ்ம்ம், எல்லாத்தையும் தைரியமா கடந்து வந்த உன்னால அதை என்கிட்ட சொல்ல மட்டும் கஷ்டம். சொல்லலையேன்னு எனக்கொன்னும் ஈகோ இல்லை. அதை தெரிஞ்சா மட்டும் என்னவாகிடும்? என்ன மாறிடும்? இப்பவும் நான் அதே ரிஷபன் தான்…” என்றவன்,
“அன்னைக்கு நான் சந்தேகப்பட்டு எல்லாம் அப்படி நடந்துக்கலை ரிஷி. அது உங்களுக்கு புரியுதா?…” என்றாள் அதிலேயே நின்றுகொண்டு.
“அட அறிவே, சந்தேகப்பட்டு கூட என்னை ரெண்டு சாத்திருக்க வேண்டியது தானே? அதுவுமே தப்பிலைன்னு சொல்றேன். பொசஸிவ் இருக்கனும். அதுக்காக எக்ஸ்ட்ரீம் லெவல் தான் கூடாது. லவ்ல இதுவும் இல்லைன்னா எப்படி?…” என சொல்லி,
“நானும் அன்னைக்கு பேசிட்டேன் தான். கோபம். உனக்கு எதுவும் பிரச்சனை வந்திருமோன்னு ஒருபக்கம் பயம். இன்னொன்னு நடாஷா…” என்று சொல்ல சௌபர்ணிகா முகத்தில் அப்பட்டமான முறைப்பு.
“உண்மையை நான் மறைக்கவே மாட்டேன். மறைச்சு என்னால ப்ரஷரோட இருக்க முடியாதும்மா. அந்த பொண்ணு கேரேக்டரை ஜட்ஜ் பண்ண நான் யாரோ. எனக்கு அது அவசியமில்லை. ஆனா ஒரே பீல்ட்ல இருக்கறதால ஒன்னே ஒன்னு யோசிச்சேன்…”
“நடாஷாவோட மூலதனம் அவங்க முக அழகு தான். நீ அடிச்ச அடில இன்னும் காயம் ஆழமா பட்டிருந்தா நிச்சயம் அடுத்து அவங்களோட வாழ்வாதாரம் பாதிக்கப்படும். நம்மால ஒருத்தர் வாழ்ந்தாங்கன்னு இருக்குதோ இல்லையோ, வாழ்க்கையை தொலைச்சாங்கன்னு இருக்கக்கூடாது சௌபர்ணிகா…” என்றான்.
“என் வாழ்க்கையை எடுத்துக்க நினைச்சது தப்பில்லையா?…” இன்னும் அதனை ஆரோன் கண்ணோட்டத்தில் பார்க்க அவளால் முடியவில்லை.
“ஆசைப்படறது எல்லாருக்குமே இருக்கறது தான். அதுக்காக ஆசைப்பட்டதெல்லாம் கிடைச்சுடுமா என்ன?…” என்றவன்,
“என்னையே எடுத்துக்கோ, எனக்கு எப்பவும் டென்ஷன், கோபம் இதெல்லாம் ஒத்துவராத விஷயங்கள். எப்பவும் சந்தோஷமா இருக்கத்தான் ஆசைப்பட்டேன். ஆனா என் லைஃப் பிபில தான் அப்படின்னும் போது யாரால மாத்த முடியும்? விதி…” என்று நெற்றியை காண்பித்து பேச,
“யூ…” என்றவள் தலையணையை கொண்டு அவனை மொத்த துவங்க அவன் கையில் குடிக்கப்படாமல் இருந்த காபி அவள் மேல் சிதறியது.
“அச்சோ போச்சு…” என்று புடவையை உதறியபடி எழுந்தாள் சௌபர்ணிகா.
“எங்க போச்சு?…” என அடக்கப்பட்ட சிரிப்புடன் கேட்டவனின் தலையில் தட்டியவள் குளியலறை நோக்கி செல்ல கைபேசியுடன் நகர்ந்தான் ஆரோன்.
“என்ன மாப்பிள்ளை வீட்டுக்கு போயாச்சா?…” என்று இஷாந்த் கேட்க,
“அதை நீங்க கால் பண்ணி கேட்கனும் மச்சான். நான் பண்ணும் போது கேட்க கூடாது…” என்று அவனை ஆரோன் வாரிவிட,
“தப்புத்தான் தப்புத்தான்…” என்று உடனே சரணடைந்தான்.
“அந்த பயம் இருக்கட்டும். அத்தை சாப்பிட்டாங்களா? இப்ப என்ன சொல்றாங்க?…”
“அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம் உங்களுக்குள்ள எல்லாம் சரியாகிருச்சுன்னு இப்ப தான் நிம்மதி…”
“இல்லம்மா, இப்ப தான் ப்ளாட்டுக்கு வந்தோம். இனிமே தான் தூங்கனும்…”
“ஓஹ் வந்தாச்சா? இன்னும் ரெண்டுமூணு நாள் இருப்பீங்கன்னு நினைச்சேன்…” என்றவர்,
“சௌபி எப்படி இருக்கா?…” என்றார்.
“வாஷ்ரூம் போயிருக்கா. வரவும் பேச சொல்லவா?…”
“ஹ்ம்ம், ஓகே. ரொம்ப மெலிஞ்சு போயிருக்கா. அம்மாவுக்கு இப்படி ஆனதால இருக்கும். பார்த்துக்கோ…” என அவனிடம் மருமகளை பற்றி பேசிக்கொண்டிருக்க சௌபர்ணிகா வந்துவிட்டாள்.
குளித்துவிட்டு இரவு உடைக்கு மாறி வந்தவள் மீதான பார்வையை வலுக்கட்டாயமாக பிரித்துக்கொண்டவன்,
“அம்மா…” என்று அவளிடம் நீட்டினான்.
சௌபர்ணிகா ஆராதனாவுடனும், ஸ்டீபனுடனும் பேசி முடித்துவிட்டு பார்க்க ஆரோன் ஹாலில் இல்லை.
“ரிஷி…” என்றபடி அவனை தேடி செல்ல எந்தவித சப்தமும் இன்றி படுக்கையறையில் படுத்திருந்தான் அவன்.
“தூங்கிட்டீங்களா அதுக்குள்ள?…” என்று அவனின் கண்களை மறைத்திருந்த கையை விலக்கி அவனருகில் அமர,
“இல்லை சும்மா தான்…” என்று சொல்லியவன் அவள் பிடித்திருந்த கையை தான் பிடித்துக்கொண்டான்.
பார்வை அவள் உள்ளங்கையில் நிலைபெற அன்று காயம்பட்டிருந்த கோடுகள் ஆறிக்கொண்டிருக்க அதில் முகம் புதைத்தவன் மனதும் இன்னும் அமைதியுறவில்லை.
எத்தனை விளையாட்டாய், கேலியாய், அதட்டலாய் பேசிவிட்டாலும், மனைவி தன்னுடன் வந்துவிட்டாலும் உள்ளூர அந்த அலைப்புருதல் கொஞ்சமாய் இருக்கத்தான் செய்தது.
“நமக்குள்ள எதுவும் இன்னும் சரியாகலை இல்லையா ரிஷி?…” என்றாள் சௌபர்ணிகா.
“அப்படின்னு சொல்லமுடியாது. எல்லாத்துக்கும் நம்ம மனசும், மூளையும் தான் காரணம். நம்மளை மீறி நடக்கற விஷயங்களுக்கு நாம பொறுப்பாக முடியாதுன்னு எல்லாம் சொல்லமுடியாது. அதை சரிபண்ண பார்க்கனும். ஓடி, ஒளியாம…” என்றான் ஆழ்ந்த பார்வையுடன் அவளிடம்.
“நான் ஒன்னும் ஓடி ஒளியல. ஓகே. பேசிடலாம்…” என்றவள்,
“என் தப்பு தான். அன்னைக்கு சூழ்நிலை, என்னை பத்தி எதுவும் தெரியலைன்னாலும் என்னோட ஃபீலிங் அந்தநிமிஷம் எப்படி இருந்திருக்கும்ன்னு இப்போ புரியுதா உங்களுக்கு?…” என்று கேட்க,
“ப்ச், எழுந்து உக்கார்ந்து பேசுங்க ரிஷி…” என்று அவனை எழுப்ப,
“இப்படியே சொல்லு. கேட்டுக்கறேன். எழுந்தா உன்னை எதாச்சும் செய்ய தோணும். பேசாமலே, ப்ச். வேண்டாம். நீ சொல்லு…” என்றவனிடமிருந்த தன் கையை உருவிக்கொள்ள பார்க்க,
“கை இருக்கட்டும். என்ன கஷ்டம் உனக்கு?…” என்றான்.
சௌபர்ணிகா அமைதியாக பார்க்க உண்மையில் அவளை தான் டென்ஷன் செய்வது புரிந்தது.
“ஓகே,பேசு…” என்று எழுந்து அமர்ந்துகொண்டான்.
“திரும்பவும் இப்படி ஒரு சூழ்நிலை வந்தா என்ன பன்றதுன்னு தானே உங்க டென்ஷன். சரியா?…” அவள் கேட்க,
“இருக்கறத இல்லைன்னு உன்னை மாதிரி பொய் சொல்லமாட்டேன்…”
“ரிஷி, சத்தியமா கடிச்சு வச்சிருவேன். பேசவும் சொல்லி, பேசவும் விடாம…” என்றதும் அவன் இதழ்களை குவித்து முன்னால் முகம் காண்பிக்க,
“என்ன?…” என்றாள் அவள்.
“இல்ல, எவ்வளோ நாள் தான் கையை, கன்னத்தை கடிக்க? அதான் இங்க. டூ இட்…” என்று சொல்ல சௌபர்ணிகாவின் பொறுமை சுத்தமாய் பறந்துவிட்டது.
“உன்னை…” என்றவள் அடிக்க பாய்ந்தவள் உயர்த்திய கைகளை அப்படியே வைத்துக்கொண்டு காபி இருக்கிறதா என பார்க்க,
“காபி இல்லை. நீ கண்டினியூ பண்ணு…” என்றான் ஆரோன்.
“ஏன் ரிஷி இப்படி பன்றீங்க?…” என ஆற்றமாட்டாமல் சொல்லியவள் முகத்தை மென்மையாக தன் கைகளில் தாங்கியவன்,
“ப்ச், உண்மையை சொல்லனும்ன்னா இதை பேசவே எனக்கு இஷ்டமில்லை. ஆனா நீ கிளியர் பண்ணனும்ன்னு நினைக்கிற. எனக்கு வேண்டாம்ன்னு தோணுது. இனி அப்படி நடக்காது, நான் பார்த்துக்கறேன்ற ஓவர் கான்பிடேன்ட் தான் அலட்சியத்துக்கு முதல் படியே…”
“சொல்லபோனா அது தான் நான் வார்த்தையை விட்டதுக்கும் காரணம். சூழ்நிலை எப்பவும் ஒரே மாதிரி இருக்காது சௌபர்ணிகா. நம்மளை மீறி நடக்கும் போது அதை அடுத்து எப்படி சேர்ந்து சமாளிக்கன்னு பார்ப்போம். இப்ப இது வேண்டாம். நீ எந்த விளக்கமும் சொல்லவேண்டாம்…” என்றான் அவன் அழுத்தம் திருத்தமாக.
“ஆனா நான்…” என்றவள் வார்த்தைகள் சில நொடிகள் மௌனத்தினுள் சிறைபட, அவள் முகம் விடுத்து விலக அவன் இதழ்களை கைகொண்டு மூடியவள்,
“என்னோட பாஸ்ட் இனி என் ப்யூச்சரை பாதிக்காம பார்த்துக்கனும்ன்னு நினைக்கறேன். உண்மை தான், நான் அப்பாக்கிட்ட பேசின பின்னாடி ரொம்ப ரிலீஃபா ஃபீல் பன்றேன். அதேநேரம் உங்ககிட்ட மறைக்கிறேன்ற குற்றவுணர்ச்சி இனி எனக்கில்லை. எதையும் பார்த்துக்கலாம்ன்னு தான் நானும் இருக்கேன்…” என்றாள் புன்னகைத்து.
“ஸோ இனி நான் எந்த பொண்ணோடயும் க்ளோஸா இருந்தா மேடம்க்கு பதட்டம் வராது…”
“தெரியலை…”
“இப்ப தான வாக்கு எல்லாம் குடுத்த? அதுக்குள்ள தெரியலைன்ற?…”
“குடுத்தேன். ஆனா எதுவுமே வாய்வார்த்தையால, வாக்கால எல்லாம் தீர்மானிக்க முடியாது. சந்தர்ப்பங்களை பொருத்து தான் சம்பவங்களும். பார்க்கலாம்…” என்றவள்,
“நம்பிக்கைன்றது வேர் மாதிரி ரிஷி. எனக்குள்ள ரொம்ப ஆழமா வேரூன்றிருச்சு. இப்ப உங்களுக்கு தான் மிகப்பெரிய பொறுப்பு. அதை காலத்துக்கும் காப்பாத்தவேண்டிய பொறுப்பு. நான் ஃப்ரீயா இருப்பேன்…” என்றாள் அவள்.