சௌபர்ணிகா சொல்லியவிதத்தில் அவனுக்குமே அதுவே சரியென்று தோன்றியது.
எதையுமே பேசி, தீர்மானித்து நடக்க இது ஒன்றும் திட்டமிடும் விழா ஏற்பாடு அல்லவே.
வாழ்க்கை, வாழ்ந்து தான் உணரவேண்டும். சிலபல சறுக்கல்கள் இருந்தாலும் எழுந்து மீண்டும் பயணத்தை தொடர வேண்டும்.
இரு கை ஓசையின் இணைவு தான் வாழ்வியலின் அங்கம். இருவரின் புரிந்துணர்வும், விட்டுக்கொடுத்தலும் மட்டுமே அவர்கள் சந்தோஷத்தின் ஆணிவேர்.
அதன்பின்னான நாட்கள் இலகுவாய் உருண்டோட சௌபர்ணிகாவின் பிரபஞ்சம் அவன் ஒருவனே என்றானான்.
இருவரின் வாழ்விலும் சிறு சிறு தடுமாற்றங்கள் நிகழ்ந்தாலும் இருவருக்குமான அந்நியோன்யம் பெரும் பிரளையத்தை உருவாக்காமல் மெல்லிய சலசலப்பு எழுந்தாலும் பின் தெளிந்து மீண்டும் நீரோடையாகியது.
சௌபர்ணிகாவிற்கு தெரிந்திருந்தது தன் கணவனுக்கு தான் எப்படியோ அதைப்போல அவனின் தொழிலும்.
அதில் அவளால் சிறு தொந்தரவு என்றாலும் அது அவன் மீதான தன் நம்பிக்கையின்மை போலாகிவிடும் என்பதில் தெளிவாய் இருந்தாள்.
முன்பிருந்த பதட்டமும், படபடப்பும் முற்றிலும் தொலைந்துவிட்டது விட்டது என்றெல்லாம் இல்லை.
இப்போதும் யாருடனும் ஆரோனை காண்கையில் அவளறியாமல் அவளுக்குள் வளர்ந்து விட்டிருந்த அந்த உணர்வு லேசாய் தலைதூக்கினாலும் அதனை கட்டுக்குள் வைத்துக்கொள்ளும் தன்மையும் அவளிடம் நிறைந்திருந்தது.
எந்தவித எதிர்பார்ப்புமின்றி தன் காதலை அறிந்து, தன்னையும் அறிந்து, அவனாகவே தன்னிடம் கை சேர்ந்து, இந்த வாழ்க்கையை காதலாய் மாற்றிக்கொண்டிருந்தவனின் நேசத்திற்கு அர்த்தம் சேர்த்துக்கொண்டிருந்தாள் சௌபர்ணிகா.
சபர்மதிக்கு மகளின் இந்த மாற்றத்தில் மனதெல்லாம் நிறைவு. அது அவரின் முகத்திலும் தெரிய இன்னும் கம்பீரமாய் வலம் வந்தார்.
அவரின் பலமே பிள்ளைகளும், அவர்கள் குடும்பமும். இப்போது இருந்த சொச்ச வாழ்க்கையும் அவர்களுகென்றே மாறிவிட்டது.
ஜெயந்தன் சுத்தமாய் பேச்சை மறந்திருந்தார். ஓரிரு வார்த்தைகள் மட்டுமே. முடங்கிவிட்டவருக்கு தொழில் மட்டுமே இப்போது ஆறுதல்.
கடைக்கு செல்வதும், வருவதும் என தனக்கு தானே தனிமையை செதுக்கிக்கொண்டார்.
பேரப்பிள்ளைகளுடன் சிறிது நேரம் செலவழிப்பது மட்டுமே அவரின் அன்றாட சந்தோஷம்.
மகன், மகள்களிடம் அவராகவே ஒதுங்கிக்கொண்டார். மருமகள் மட்டும் விடாது பேச ஒற்றை வார்த்தை பதில் தான் அவளுக்கும்.
ஆரோனின் வருகையில் முன்னிற்க முடியாமல் அவர் விலகும் தருணங்கள் எல்லாம் எத்தனை வலியை அனுபவிக்கிறார் என்பது அவர் மட்டுமே அறியும் ஒன்று.
மகனுக்கும் இது தெரிந்திருந்தால்? இந்த பதட்டம் அவரை இன்னும் ஒடுங்க செய்துவிட்டது.
இஷாந்த் எதையும் காட்டிக்கொள்ளவில்லை. இறுதிவரை அது தனக்கு தெரியும் என்பது யாருக்கும் தெரியாமலேயே போகட்டும் என்ற முடிவில் இருந்தான்.
எந்த சூழ்நிலையிலும் நிதானத்தை கைவிடாதவனின் பொறுமையை சோதிக்கும் நிகழ்வுகள் இனியும் நடந்தேற போவதில்லை.
வாழ்க்கை வாழ்வதற்கே. அதனை அனுபவித்து வாழ்ந்தனர் சௌபர்ணிகாவும், ஆரோனும்.
———————————————-
பொன்னான சில வருடங்களுக்கு பிறகு….
“எங்க இருக்கீங்க ரிஷி?…” என்ற மனைவியின் குரலை கேட்டவன் அவளுக்கு பதில் சொல்லாமல்,
“வாவ் வாவ் வொண்டர்ஃபுல்…” என்று கைதட்டி விசிலடித்தான் ஆரோன் ரிஷபன்.
ப்ளூடூத் சொருகியிருந்தவன் காதில் அவள் குரல் கேட்டாலும் சட்டென்று எழுந்துவிட்ட கைதட்டல், கூச்சல்களில் அவன் பதில் சொன்னாலும் அவளுக்கு கேட்கவில்லை.
“வாவ் வாவ் வாவ், கலக்கிட்டடா குட்டி…” என்று ஆர்ப்பரிப்புடன் தன்னை நோக்கி ஓடிவந்த ஐந்துவயது மகளை கைகளில் அள்ளி தலைக்கு மேல் தூக்கி சுற்றினான் ஆரோன் ரிஷபன்.
“டாடி மீ…” என்று அவனிடையை கட்டிக்கொண்ட மகனையும் சேர்த்தே தூக்கிக்கொண்டான் ஆரோன் ரிஷபன்.
“என் ரெண்டு குட்டீஸும் எப்பவும் பெஸ்ட். நீ சீனியர்டா கண்ணா. நம்ம பேபி இப்ப தானே பர்ஸ்ட் டைம் வரா…” என்று சொல்லி இருவருக்கும் முத்தமிட,
“நானும்…” என்று மூத்தவன் தகப்பனுக்கு முத்தம் பதிக்க,
“பேபி பேபி…” என்று தானும் அவனின் கன்னத்தில் முத்தமிட்டாள்.
அன்று ஆரோன் ரிஷபனின் ஜீன்ஸ் விளம்பரத்திற்கான படப்பிடிப்பு. குழந்தைகளுக்கான பிரத்யேக தயாரிப்பில் இன்றளவும் முதலிடம் வகித்திருக்க அதற்கான அடுத்த வருடத்தின் புதுவிதமான விளம்பரம் இப்போது எடுக்கப்பட்டது.
தன் மக்களை கொண்டே அவன் அந்த விளம்பரத்தை எடுத்திருந்தான். வேறு யாரும் இதற்கு பொருத்தமாய் இருந்துவிட முடியும் என தோன்றவில்ல.
பிள்ளைகள் இருவரையும் அந்த துறையில் இணைக்கவேண்டும் என்று திட்டமிட்டு இணைக்கவில்லை.
வேறு ஒருவரை வைத்து விளம்பரம் தயாரிக்க அதனை பார்த்து மகன் அதைப்போலவே செய்துகாட்ட, ஆர்வம் இருப்பதினால் மகனை அதில் இறக்கியவன், இப்போது மகளையும் சேர்த்திருந்தான்.
“இதுதான் இவங்க ப்யூச்சர்ன்னு நாம இப்பவே டிஸைட் பண்ண முடியாது. வளரும் போது அவங்களுக்கு எது பிடிக்குதோ அப்படியே இருக்கட்டும்…” என்று சொல்லிவிட்டான் அனைவரிடமும்.
தகப்பனை போல இலகுவான குணாதிசயம் இருந்தாலும், தாயின் கண்டிப்பிற்கும் பணிந்து போயினர் பிள்ளைகள்.
“எங்கப்பா ஹீரோ…” என்று சொல்லிக்கொள்வதில் பிள்ளைகளுக்கு எந்தளவு பெருமிதமோ,
“என் புருஷன் ஹீரோ தான்…” என்பதில் அளவில்லா பெருமை சௌபர்ணிகாவிற்கு.
வருடங்கள் கடந்தும் இருவருக்கும் காதல் மட்டும் கசக்கவில்லை. குறையவும் இல்லை.
நாளொருமேனியும் பொழுதொருவண்ணமுமாய் வானவில் கோலங்கள் தான் இருவரின் நேச தோரணங்கள்.
கலவையான பேச்சு குரல்களுக்கு இடையில் அலையின் சத்தமும் சௌபர்ணிகா காதில் விழ உடனே உஷாவிற்கு அழைத்து அந்த பீச் வில்லா பக்கம் வந்து சேர்ந்தாள் அவள்.
“மேம், இங்க…” என்று உஷா அதன் வாசலில் வந்து நிற்க,
“எங்க உன் பாஸ்?…” என்றவள் முகத்தில் கொஞ்சம் கடுமை.
உஷாவிற்கும் அத்தனை முறை அழைத்திருக்க அவளுமே வேலை நேரத்தில் எடுக்கவில்லை.
ஒரே பெயரில் மூன்று பங்களாக்கள் வரிசையாய் இருக்க மூன்றிலும் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தது.
எதில் பிள்ளைகள் உள்ளனர் என்று தெரியாமல், ஆரோனும் பதிலளிக்காததில் எரிச்சலுடன் தான் வந்திருந்தாள்.
“லாஸ்ட் மினிட்ல பீச் சைட்லையும் சில ஷாட்ஸ் எடுக்கலாம்ன்னு ஸார் தான் அங்க கூட்டிட்டு போயிருக்காங்க…” என்றவள் சௌபர்ணிகாவுடன் நடந்துகொண்டே,
“ஸாரி மேம். பிள்ளைங்க மேல கவனமா இருக்க சொன்னதால கால் அட்டன் பண்ணலை…” என்றாள்.
“இட்ஸ் ஓகே, இனிமே இப்படி நடக்க கூடாது. காட் இட்…” என்றவள் சொல்லில் உஷா தலையசைக்க,
சற்றுதூரத்தில் கும்பலாய் ஆட்கள் இருக்க அதனை நோக்கி நடந்துகொண்டிருந்தனர்.
“மம்மி…” என பத்துவயதான அலெக்ஸ் மயூரன் தாயை நோக்கி ஓடி வர அவனின் சத்தத்தில்,
“டாடி லீவ் மீ…” என கத்த துவங்கிய மகளும் தானும் தாயிடம் செல்லவேண்டும் என்று அடம் பிடித்தாள்.
“ஆத்மி…” என அணைத்துக்கொண்டவனின் கைகளுக்குள் அடங்கவில்லை அவனின் பூஞ்சிட்டு ரிஷாத்மிகா.
“மம்மி வேணும்…” என்றவளை சமாளிக்க முடியாமல் கீழே இறக்கிவிட்டவன் தானும் சேர்ந்து நடக்க பிள்ளை வேகமாய் ஓட பார்த்தது தாயிடம்.
கடற்கரை மணலில் குழந்தையால் வேகநடையிட முடியாமல் தடுமாறி கீழே விழ,
“பேபி…” என்று ஓடிவந்து தங்கையை தூக்க முயன்றான் மயூரன்.
“அச்சோ பிபி பேபி விழுந்துட்டீங்களா?…” என்று ஆரோன் மகளை தூக்க சௌபர்ணிகாவும் வந்துவிட்டாள்.
“ரிஷா…” என்று மகளை அள்ளிக்கொண்டு இன்னொரு கையால் மகனை அணைத்துக்கொள்ள,
“நான்…” என்ற ஆரோனின் கேள்வியில்,
“டாடி…” என்று ரிஷாத்மிகா இரு கைகளையும் விரிக்க பிள்ளையின் நெற்றியில் முட்டியவன் முகமெல்லாம் புன்னகை மலர்கள்.
அந்த காட்சி ஓவியமாய் பார்த்தவர்களின் கண்களை பறிக்க, அந்த உயிரோவியத்தை புகைப்பட கலைஞர் தன் கருவியில் சேமித்துக்கொள்ள இயல்பாய் இருந்தது காண்பதற்கே.
“ஷூட் முடிஞ்சதா ரிஷி?…” என்றவள் மகளின் மேல் ஒட்டியிருந்த மணல் துகள்களை தட்டிவிட ஆரோன் மகனை தூக்கி தன் தோளில் போட்டுக்கொண்டவன்,
“உஷா ப்யூட்டி மத்ததை நீ கவனிச்சுக்கோ…” என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.
அந்த ப்யூட்டியை அவனால் இன்னும் விடமுடியவில்லை. சிறிதுகாலம் அதனை சொல்லாமல் இருக்க படாதபாடுபட, அவன் அவஸ்தையில்,
“உங்களை மாத்திக்கவே முடியாது. என்னமோ பண்ணுங்க…” என்றிருந்தாள் அவனின் மொத்தமுமானவள்.
“நான் ஒன்னும் உன் பர்மிஷனுக்காக சொல்லாம இல்லை. சும்மா செக் பண்ணி பார்த்தேன் என்னால முடியுதா இல்லையான்னு…” என்று அப்போதும் அவளை சீண்டிக்கொண்டு தான் இருந்தான்.
இன்றுவரை அந்த கலாட்டாக்களும், சீண்டல்களும் அவர்களின் வாழ்க்கையை அழகாக்கிக்கொண்டு தான் இருந்தது.
இருவருமாய் படப்பிடிப்பு ஆட்களிடமிருந்து தள்ளி பிள்ளைகளுடன் வந்து அலையருகில் அமர்ந்தனர்.
“மம்மி என் நியூ ட்ரெஸ்…” என்று தாயிடம் மகள் காண்பிக்க,
“லவ்லி…” என்று சொன்னாலும் சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது சௌபர்ணிகாவிற்கு.
குட்டியாய் குழந்தை பிள்ளைகள் அணியும் வகையிலான ஜீன்ஸ். ஓவர் கோர்ட் போலவும், அதற்குள் ஸ்லீவ்லெஸ் இலகு உடையில் லேஸ் வைத்து தைத்திருக்க குட்டியாய் ஷார்ட்ஸ்.