அவனின் புன்னகை தன்னை சுற்றிக்கொண்டு கைகோர்த்திருப்பதை போலொரு பிரம்மை சௌபர்ணிகாவிற்கு.
‘என்ன எண்ணம் இது?’ என தன் தலையை உலுக்கிக்கொண்டு பார்வையை அங்கிருந்து திருப்பினாள் அவள்.
ஆரோனின் கண்ணில் அவளின் முயற்சி தப்பாமல் விழ இன்னுமே அவள் மீது சுவாரஸியம் மிகுந்தது அவனுக்கு.
“இன்ட்ரெஸ்ட்டிங்…” என சொல்லி புன்னகைத்தவன் கன்னக்குழியில் தான் அங்கிருந்த அத்தனை பெண்களின் பார்வைகள்.
மயங்கித்தான் பார்த்திருந்தனர் அவனின் ஒவ்வொரு அசைவுகளையும், புன்னகையையும், உடல்மொழியையும்.
“ஸ்யப்பா, இவங்களை…” என்று பல்லை கடித்த சௌபர்ணிகாவுக்கு தன்னால் அதற்கு மேல் அங்கிருக்க முடியாத அளவுக்கு பொறுமை எல்லை கடந்தது.
‘இவன் என்ன பெரிய இவன், இவன் மேல் இப்படி ஒரு ஈர்ப்பு’ என்று உள்ளுக்குள் எங்கோயோ சுறுசுறுவென எரிந்து புகைந்தது.
“சௌபி, எல்லாம் ஓகே தானே?…” என்று வந்தான் இஷாந்த்.
“ஹ்ம்ம் ண்ணா…” என சொல்லியவள் அந்த முக்கிய பிரபலங்களையும் வரவேற்க அவர்கள் வந்ததுமே நிகழ்ச்சி ஆரம்பமாகியது.
சௌபர்ணிகா ஓரிடத்தில் சென்று நின்றுகொண்டாள். அவள் நகர்ந்து செல்லவும் துளசியும் உடன் வர,
“இங்க என்ன பன்ற நீ? அங்க போய் அவங்களுக்கு ஹெல்ப் பண்ணு….” என அதட்டல்.
“எஸ் மேம்…” என்ற துளசி துள்ளிக்கொண்டு அங்கே சென்று நிற்க ஆழ்ந்த பெருமூச்சுடன் திரும்ப இதழ்களுக்குள் ஒளிந்த புன்னகையுடன் தன் வேலையை பார்க்க ஆரம்பித்தான் ஆரோன் ரிஷபன்.
ஏனோ தானோவென்று கவனிக்க ஆரம்பித்தவளின் பார்வை உண்மைக்கும் ஆர்வம் கூடி பார்க்க ஆரம்பித்தது.
அத்தனை எளிதாய், இலகுவாய், நகைச்சுவையும், புன்னகையுமாய் பேசிக்கொண்டே சொல்லி தர அது பார்ப்பவர்களை லயிக்க செய்தது.
மதியம் வரை அந்த வகுப்பு நடக்க ஆரோன் சொல்லியதை போல அந்த புடவைகள் எல்லாம் வெகு நேர்த்தியாக அந்த பெண்களுக்கு பொருந்தியது.
அவளறியாமலே ஒரு மெச்சுதலான பார்வையை அவனிடத்தில் கொண்டு சேர்ப்பிக்க அவன் கவனிக்கவில்லை.
வகுப்பெடுக்கும் பொழுது முற்றிலும் வேறாகி இருந்தான் ஆரோன் ரிஷபன். சௌபர்ணிகாவை பார்த்தாலுமே அவளும் வந்திருக்கும் மாணவிகளிள் ஒருத்தி என்பதை போலான பார்வை தான்.
புடவையை கட்டி விடும் பொழுது வந்து நிற்கும் பெண்களின் மீதான அவன் விரல்களின் தொடுகை அத்தனை நாகரீகமாக இருந்தது.
‘சந்தர்பம் கிடைக்காத வரைக்கும் எல்லாரும் நல்லவங்க தான்’ என்ற சௌபர்ணிகாவின் பார்வையில் இவன் வித்தியாசப்பட்டான்.
அவனையும் அவள் கடந்து வந்த சில கசப்பான மனிதர்களையும் ஒப்புமை செய்து பார்க்க ஆரம்பித்தது மனது.
‘தேவையில்லாத வேலை. இதென்ன புதிதாய்?’ என தன்னையே நிந்தித்துக்கொண்டாள்.
ஆனாலும் அவள் பார்வை வந்திருந்த திரை பிரபலங்களிலும், அவர்கள் ஆரோனிடம் பேசி பழகும் விதத்திலுமே சுற்ற ஆரம்பிக்க அதனை பார்க்க முடியவில்லை.
காலை நேர வகுப்பிற்கு வந்திருந்தவர்கள் அனைவருமே வகுப்பு முடிந்ததும் அவனுடன் புகைப்படம் எடுப்பதும், வீடியோ எடுப்பதுமாக இருக்க ‘இதுவே இப்படி வொர்க்ஷாப் வைப்பது இறுதி’ என்ற முடிவிற்கே வந்துவிட்டாள்.
எல்லாம் முடிந்து மதிய உணவுகள் நடக்க தன் அறைக்கு சென்றுவிட்டாள் சௌபர்ணிகா.
மனது எங்கெங்கோ சென்று நின்று சிக்கிக்கொண்டது. என்றுமில்லாமல் ஒரு ஆடவனை பற்றிய ஆராய்ச்சி இத்தனை தூரத்திற்கு.
‘கூல் ப்யூட்டி’ என அவன் தன்னிடம் ஆரம்பித்த விதமும், அதற்கு முன் அவள் பார்த்திருந்த அவனின் சில புகைப்படங்களும், வீடியோக்களும் என்று அவனை என்னவோ நினைத்திருந்தாள்.
வேலை நேரத்தில் அவனின் நேர்த்தி ஒருபுறம் இருந்தாலும் அவன் கடைபிடித்த ஒழுக்கம் அவளை நல்லவிதமாக பார்க்க வைத்தது.
“ப்ச், இதென்ன அவனையே நினைச்சிட்டிருக்கேன்…” என தன் தலையை தட்டிக்கொண்டாள் சௌபர்ணிகா.
இந்த நினைவோடு சில பழையவையும் சேர்ந்தே கிளறிவிடப்பட்டது அவளின் மனக்காயங்களை.
நினைக்கவே கூடாதென்றாலும் அவ்வப்போது எழுந்து நின்று அவள் திடனை பரிசோதிப்பதை போலிருக்க தலை வலித்தது.
“சௌபி வா சாப்பிடலாம்…” என இஷாந்த் வந்து அழைக்க,
“இல்லண்ணா, எனக்கு பசி இல்லை…” என சொல்லியவள் முகமே சிவந்து கண்கள் கலங்கி இருந்தது.
“என்னடா? ரொம்ப வலியா?…” என உள்ளே வந்தவன் தங்கையின் நெற்றியில் கைவைக்க,
“ப்ச், வெறும் தலைவலி மட்டும் தான். விடு…” என்றாள்.
“என்ன தலைவலி மட்டும். இப்ப தான் ஊர்ல இருந்து வந்திருக்க. எதுவும் இன்பெக்ஷன் மாதிரி இருந்தா?…” என்றவன்,
“சரி நான் குடுத்தனுப்பறேன். சாப்பிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடு. மதியம் செஷன் நான் இருந்து பார்க்கறேன். சந்தனாவையும் வர சொல்றேன்…” என சொல்லி செல்ல தலையை இரு கைகளாலும் தாங்கிக்கொண்டாள் சௌபர்ணிகா.
சற்று நேரத்திற்கெல்லாம் துளசி வந்து அவளுக்கான உணவை கொண்டுவந்துவிட பார்த்ததும் என்னவோ எரிச்சல்.
“ப்ச், இதென்ன இவ்வளோ சாப்பாடு? எனக்கு எதுவும் வேண்டாம் எடுத்துட்டு போ…” என்று அதற்கும் சத்தம் போட,
“ஸாரி மேம்…” என்ற துளசி வேகமாய் கொண்டுவந்ததை எடுத்துக்கொண்டு வெளியே வர,
“என்னம்மா நீ? இதென்ன இவ்வளோ எடுத்து வச்சிருக்க?…” என்றான் இஷாந்த் வெளியில் அவள் வந்ததுமே கையிலிருந்ததை பார்த்து.
ஆரோனும் இஷாந்த் அருகில் நிற்க பார்த்ததும் சிரிப்பு வந்துவிட்டது அவனுக்குமே.
“ஏற்கனவே தலைவலின்னு சொன்னா. இப்ப இதுவேறையா? கொஞ்ச நேரம் போகட்டும். நானே கொண்டு போறேன் நீ போ…” என அவளை சொல்லிவிட்டு,
“இப்ப வந்திடறேன் ஆரோன்…” என்றான் இஷாந்த்.
“ஓஹ், ஓகே…” என்றவன் இஷாந்த் செல்லவும் உஷாவை கை நீட்டி அழைத்தான்.
“நம்ம டெஸ்ட்டிங் ப்ராடக்ட் எங்க?…” என்றதும் உஷா தனது பேக்கில் இருந்து ஒரு பார்சலை எடுத்தாள்.
“ந்யூ ஒன் தானே உஷா? யூஸ் பண்ணலையே?…”
“இல்லை ஸார். ப்ரெஷ்…”
“ஓகே…” என்றவன் சௌபர்ணிகா அறை கதவை தட்டி அவள் சத்தம் கேட்டதும் உள்ளே செல்ல துளசியோ என்று நினைத்தவள் இன்னும் தலையிலிருந்து கையை எடுக்கவில்லை.
“ப்ச், துளசி சாப்பாடு வேண்டாம். சூடா காபி வேணும்…” என்று மெல்லிய குரலில் சொல்ல,
“சொல்லிட்டா போச்சு…” என்றவன் கதவை திறந்து,
“துள்சி, ரெண்டு காபி…” என்று சத்தமாய் துளசியிடம் சொல்லிவிட்டு திரும்ப சௌபர்ணிகா முறைப்பும், திகைப்புமாக அவனை பார்த்தாள்.
“காபி கேட்டீங்க. இல்லைன்னு சொல்ல முடியாதே? அதான் நானே சொல்லிட்டேன். ரெண்டு காபி நமக்கு தான். தனியா குடிச்சா மேனர்ஸ் இல்லையே. நீங்க தான் அதை நிறைய எதிர்பார்ப்பீங்களே. அதான் சேர்த்து சொல்லிட்டேன்…” என்றான் இலகுவாக.
அவள் அமர சொல்லாமலேயே இருக்கையை இழுத்து போட்டு அமர்ந்தவன் தன் கையிலிருந்த பார்சலை அவள் புறம் நீட்டினான்.
“என்ன இது?…” கத்தரித்ததை போல் வந்தது சௌபர்ணிகா கேள்வி.
“பிரிச்சு பார்த்தா தெரிஞ்சிருமே. பாருங்க ப்யூட்டி…” என்று புன்னகைக்க,
“ப்ச், ப்ளீஸ், நீங்க எதுவா இருந்தாலும் அண்ணாக்கிட்ட பேசிக்கோங்க…” என வரவழைத்துக்கொண்ட பொறுமையுடன் சௌபர்ணிகா சொல்ல,
“இந்த பிராஞ்ச் உங்களோட கட்டுப்பாட்டில் இருக்குன்னு சொன்னாங்க….” என்றவனின் மேல் மீண்டும் கோபம் வர ஆரம்பித்தது.
பட்டென்று பதில் கொடுக்கும் முன் துளசி வந்துவிட அவளுடன் இஷாந்தும் வந்துவிட்டான்.
“வாங்க ப்ரோ, உங்களுக்காக தான் வெய்ட்டிங்…” என்று அப்போதும் அலட்டிக்கொள்ளாமல் பேசிய ஆரோன்,
“தேங்க்ஸ் துள்சி…” என்று சொல்ல அவள் சிரித்துக்கொண்டே வெளியேற காபியே வெறுத்தது சௌபர்ணிகாவிற்கு.