“கையை விடு. என் கையை விடுடா…” என்றவளின் சத்தம் அத்தனை பெரிய பள்ளியில் வெளியே கேட்கவில்லை.
“விட முடியாது. என்ன பண்ண முடியும் உன்னால? என் கன்னத்துல வேற அறைஞ்சுட்ட. விட்டுடுங்கன்னு கெஞ்சிருந்தா கூட யோசிச்சிருப்பேன். ஆனா எவ்வளவு துணிச்சல் இருந்தா என் மேல கையை வைப்ப…” என்றவர் இன்னும் அவளின் கையை பிடித்து பின்பக்கமாய் திருப்பியதும் வலியில் கத்தினாள்.
“மறந்துட்ட போல? இன்னைக்கு ஸ்பெஷல் கிளாஸ். ஸ்கூல்ல எல்லாரும் இந்நேரம் கிளம்பிருப்பாங்க. ரொம்ப சத்தம் போடாம நான் சொல்றதை கேட்டேன்னா இந்த வருஷம் ஒழுங்கா எக்ஸாம் எழுதலாம்…” என்றவர் இன்னும் அவளின் கையை திருக,
“ம்மா…” என்ற அலறலில் விநாயகத்தின் முகம் மிக கேவலமானது.
“இதுக்குத்தான் சொல்றேன். அமைதியா இருன்னு. தேவையில்லாம இப்ப என்னையும் கோவப்பட்டு உன்னையும் புண்ணாக்கிக்க பார்க்கற. ஆனாலும் உன்னோட இந்த முகம்…” என பின்பக்கமிருந்து தன்னை நெருங்கியவரின் கையை பலம் கொண்டமட்டும் விலக்கி திரும்பினாள் சௌபர்ணிகா.
என்னவென்று யோசிக்கும் முன் மேஜையில் இருந்த தன் ஜாமென்ட்ரி பாக்ஸில் இருந்து காம்பஸ் எடுத்தவள் வினாயகத்தில் புறங்கையில் ஓங்கி குத்திவிட ரத்தம் தெறித்து விநாயகம் அலறினார்.
“நீயும் கத்து. உன் சத்தம் கேட்குதான்னு பார்ப்போம்…” என்றவள் மீண்டும் கோபம் தீருமட்டும் விநாயகத்தை அறைந்து தள்ளியவள் பயத்தில் அங்கிருந்து தன் பொருட்களை எடுத்துக்கொண்டு கீழே ஓடி வந்தாள்.
ட்ரைவர் காரின் அருகில் கிடந்த பெஞ்சில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க சௌபர்ணிகா வரவும்,
“என்ன பாப்பா? கையில என்னமோ காயம்?…” என்று கேட்க அப்போது தான் தன் கையையும் சேர்த்தே தான் கிழித்திருப்பதே தெரிந்தது.
“ஒண்ணுமில்லை ண்ணா. நீங்க காரை எடுங்க…” என்றவள் பேக்கில் இருந்த தண்ணீர் பாட்டிலால் கையை கழுவியவள் கைக்குட்டையை நனைத்து கிழிந்த இடத்தில் இறுக்கமாய் கட்டிக்கொண்டாள்.
இதுவரை இல்லாத பதட்டமும், அழுகையும் பொங்க முதலில் தாயிடம் சென்று சேரவேண்டும் என்ற உந்துதல் அவளை செலுத்தியது.
ஐந்து நிமிடத்தில் வாகனம் அவளின் வீட்டை அடைய மாடியில் சபர்மதியின் பேச்சுக்குரல்.
அத்தனை வேகமாய் மாடிக்கு சென்றவள் கால்கள் அவள் கேட்ட விஷயத்தில் அங்கேயே வேரோடிவிட்டது.
“சுலோக்ஷனா கூட எப்போ இருந்து இந்த பழக்கம்?…” என்றார் சபர்மதி தன்னெதிரே குறுகி போய் நின்ற ஜெயந்தனிடம்.
“மதி நான்…” என்றவரை கை காண்பித்து பேசவேண்டாம் என்பதை போல நிறுத்தியவர் தன் கையிலிருந்த ஜெயந்தனின் கைபேசியில் வந்திருந்த குறுஞ்செய்திகளை பார்த்தபடியே பேசினார்.
“இதுவரைக்கும் நம்மோட தாம்பத்திய வாழ்க்கையில உங்களுக்கு அதிருப்தி இருக்கும்ன்னு நான் நினைச்சதே இல்லை ஜெயந்தன்…” என்று சொல்ல,
“மதி ப்ளீஸ். நான் அப்படி சொல்லவே இல்லை. சத்தியமா நான் வேண்டாம்ன்னு தான் அவாய்ட் பண்ணனும்ன்னு தான் இருந்தேன். ஆனா…” என்ற ஜெயந்தன் முகத்தில் சொல்லொண்ணா வேதனை.
“ஆனா, உங்களால முடியலை. உங்களை ஒரு பொண்ணு சுத்தி வந்தா தடுமாறி போறீங்கன்னா அப்போ நாம வாழ்ந்த வாழ்க்கைக்கு என்ன அர்த்தம்?…” என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்லிவிட முடியும் அவரால்?
சுலோக்ஷனா சபர்மதியின் நெருங்கிய தோழியும் கூட. பார்த்து பழகிய இடங்களில் எங்கணம், எப்படி இந்த ஈர்ப்பு வந்ததென்று இன்றுவரை அவருக்கும் தெரியவில்லை.
என்றோ ஒருநாள் வீடு செல்ல உதவியதற்கு நன்றி என்ற வார்த்தையில் ஆரம்பித்த பழக்கம் சுலோக்ஷனா அனுப்பும் குறுஞ்செய்திகளுக்கு பதில் வழங்காமல் இருந்தவர் காலப்போக்கில் என்னவென்ற வார்த்தையில் ஆரம்பித்து சரளமாக பேசும் நிலைக்கு வந்து நின்றுவிட்டார்.
அந்த பெயர் சொல்லப்படாத உறவில் கிடைத்த கிளர்ச்சி அவரை மீள விடவில்லை.
இது தவறு என்று சுலோக்ஷனாவை தவிர்க்க நினைத்த நேரங்கள் பலவும் இருக்க அதையும் மீற செய்தது சுலோக்ஷனாவின் பேச்சுக்கள்.
இருதலைகொள்ளி எறும்பாய் அவர் தவித்திருக்க எல்லாவற்றிற்கும் முற்று புள்ளியாய் இதோ இன்று மாட்டிக்கொண்டார் மனைவியிடம்.
இருவருக்குள்ளான பேச்சுக்கள் இதுவரை வெறும் பேச்சுக்களாக மட்டும் இருந்துவர,
“எனக்கு உங்களோட கன்சன்ர் அன்ட் ப்ரெண்ட்ஷிப் மட்டும் போதும் ஜெயந்தன். நான் இப்படியே இந்த அன்போடவே வாழ்ந்திடுவேன். உங்களை நெருங்க நினைக்கமாட்டேன்…” என்ற சாயம் பூசப்பட்ட வார்த்தைகளில் மடிந்து போயிருந்தார் ஜெயந்தன்.
பேச்சுவார்த்தைகளில் இருந்த உறவு இன்று அழைப்பாக மாறி இருக்க நிதர்சனம் பொட்டில் அறைந்தது ஜெயந்தனுக்கு.
வேண்டும், வேண்டாம் என்ற மனநிலை ஜெயந்தனை அலைகழித்திருக்க மனைவி மக்கள் என ஒருபுறமும், வெளியில் தெரிந்தால் அசிங்கம் என்று வேறு புத்தி அறிவுறுத்த அன்று அதற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்திருந்தவரின் வாழ்க்கையே அஸ்தமனமாகி போனது.
“சத்தியமா சொல்றேன் மதி. இன்னைக்கு நான் நேர்ல பேசி சுலோக்ஷனா ப்ரெண்ட்ஷிப்பை கட் பண்ணலாம்ன்னு தான் கிளம்பிட்டிருந்தேன். ப்ளீஸ் நம்பு. இதுவரைக்கும் பேசிக்கிட்டோமே தவிர நான் அவளை நெருங்கவே இல்லை. இனியும்…”
“ஸ்டாப்பிட்…” என்று கத்திய சபர்மதி ஜெயந்தனின் கைபேசியை வீசி எரிந்து சுக்குநூறாக்கினார்.
“மதி…” என அவர் அருகே வர முயல,
“பக்கத்துல வந்தீங்க அந்த போன் நிலைமை தான் உங்களுக்கும்…” என்று எச்சரித்தவர்,
“அந்த கடவுளுக்கு நன்றி சொல்லிக்கோங்க. இதுவரை அவளை நீங்க தொடாம இருந்த காரணத்துக்காக. அப்படி ஒரு விஷயம் நடந்திருந்தாலோ இனிமே நீங்க நடத்தனும்ன்னு நினைச்சாலோ சிம்பிள். என் பிள்ளைங்களை அப்பா இல்லாமலே என்னால வளர்க்க முடியும்…” என்று சொல்லியதன் அர்த்தத்தில் உறைந்து போனார் ஜெயந்தன்.
“ஊர் உலகத்துக்கு முன்னாடி உங்களோட அசிங்கத்தை என் பிள்ளைங்க சுமக்க நான் அனுமதிக்கமாட்டேன். என் பசங்களை காட்டி இவங்களோட அப்பா தான் அப்படின்ற பெயர் என் பிள்ளைங்களுக்கு வேண்டாம். அதுக்கு நீங்க இந்த உலகத்துல இல்லைங்க பெயரோடவே அவங்க வாழ்ந்திடுவாங்க…”
“மதி என்ன பேசற? நான் தெரியாம தப்பு பண்ணிட்டேன் தான். அந்த பொண்ணு என்னவோ ப்ரெண்ட்லியா பேசுதேன்னு நினைச்சு தான். நான் விலகி தான் இருந்தேன் மதி. நம்பு….”
“நம்பனுமா? உண்மையிலையே இது தப்புன்னு நீங்க நினைச்சிருந்தா, உங்களுக்கு அவ பேசறதுல வித்தியாசம் தெரிஞ்ச அன்னைக்கே என்கிட்ட சொல்லியிருக்கனும். இல்லையா அவளை கண்டிச்சு அவகூட பேசறதை மொத்தமா நிறுத்தியிருந்திருக்கனும்…”
“பொண்டாட்டி நான் இருக்கும் போதே என்னை பக்கத்துல வச்சிட்டு எத்தனை நாள் பேசியிருக்கீங்க. உங்களை அவ ரசிக்கிறதை என்ஜாய் பண்ணியிருக்கீங்க. சந்தர்ப்பம் கிடைக்கிற வரைக்கும் தான் எவனும் ஒழுக்கமானவனா இருக்க முடியும்ன்னு சொல்றது எத்தனை நிஜம்….” என்றவரின் கொதிப்பு அடங்கவில்லை.
“வயசு பொண்ணை வச்சிருக்கோம், வயசு வந்த பையனை வச்சிருக்கோம். கொஞ்சமும் அசிங்கமா தோணலை இல்லையா? உங்களுக்கான தேவையை நான் கவனிக்கலைன்னா என் பொண்டாட்டி என்னை பார்த்துக்கலைன்னு சொல்லலாம். எங்க சொல்லுங்க?…” என்றார் சபர்மதி.
சபர்மதி பேச பேச செத்துக்கொண்டிருந்தார் ஜெயந்தன். இப்படி சறுக்கிவிட்டோமே என மனது தவியாய் தவித்தது.
மனைவியின் பேச்சுக்கள் ஒவ்வொன்றிலும் அவர் தன் மீது வைத்து அன்பும், நேசமும் பொய்த்து போனதன் ஆற்றாமை என புரிந்தவருக்கு அதனை எப்படி சரி செய்வதென்றே தெரியவில்லை.
தன்னை நினைத்தே வெட்கி போய் நின்றிருந்தார் ஜெயந்தன். கண்கள் கலங்கியது. வார்த்தைகளில், மன்னிப்பில் ஆற கூடிய காயம் அல்லவே.
துரோகம். கட்டிய மனைவிக்கு உண்மையாக இருக்க முடியாத தன் மீதே வெறுப்பு உண்டாக,
“என்னை மன்னிச்சிடு மதி. எனக்கு வேற என்ன கேட்கறதுன்னு தெரியலை. ஆனா நான் பேச மட்டும் தான் செஞ்சேன். அதுவும் ஓரிரு வார்த்தைல தான். நீயே அந்த சாட்ஸ் பார்த்த தானே? ப்ளீஸ்….” என்றவர் மடங்கி அமர்ந்து கை கூப்ப,
“உங்க விரலால நீங்க தொட்டா தான் தப்புன்னு அர்த்தமா ஜெயந்தன்? ஒழுக்கம் மனசுல வேணும். மனசால நீங்க என்னலாம் நினைச்சிருப்பீங்க? அவ பேசறதை ரசிக்க முடியுதுன்னா அப்போ நான்?…” என்று கேட்டவருக்கு அதற்கு மேல் பேச முடியவில்லை.
தனது போனை எடுத்தவர் சுலோக்ஷனாவிற்கு அழைப்பு விடுத்து எதிர் நின்றவரை பார்க்க ஜெயந்தன் இன்னும் தரையில் அமர்ந்திருந்தார்.
“ஹாய் மதி, என்ன இந்த நேரத்துல? எதுவும் முக்கியமான விஷயமா?…” என எவ்வித குற்ற உணர்ச்சிகளும் இல்லாமல் தன் தோழி தன்னிடம் உரையாட காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றியதை போல உணர்ந்தார் சபர்மதி.
“ஷட்அப் அன்ட் எங்க லைப்ல இருந்து கெட் லாஸ்ட். இனி எங்க வாழ்க்கையில மிஸ்டர் ஜெயந்தனோட வாழ்க்கைக்குள்ள வரனும்ன்னு நீ முயற்சி பண்ணின அது வெறும் முயற்சியோடவே முடிஞ்சிரும்….” என்ற சபர்மதியின் வார்த்தைகள் இரும்பிலிருந்து அச்சேறியதை போலிருந்தது.
“மதி நான் சுலோக்ஷனா…” என அப்போதும் தன்னிடமா சொல்கிறாள் என்று நம்ப முடியாமலும், நடுக்கத்துடனும் கேட்க,
“உங்ககிட்ட தான் பேசறேன் மிசஸ் சுலோக்ஷனா திருப்பதி. புரிஞ்சதா? இல்லை உங்க ஹஸ்பன்ட் கிட்ட பேசனுமா? ஏனா வாழ்கையில் அன்பே கிடைக்கலைன்னு அடுத்தவ புருஷன்கிட்ட அதை தேடறியே. உன் புருஷன்கிட்டவே சொல்லிடலாம் பாரு. தாராளமா கிடைக்கும்…”
“மதி என்ன பேசற?….” என்று சுலோக்ஷனா அலற,
“அப்பறம் எத்தனை மணிக்கு கெஸ்ட் ஹவுஸ் வர சொன்ன ஜெயந்தனை? இப்ப சொல்லு. என்கிட்ட சொல்லு. ஜெயந்தன் வரனுமா?…” என்ற கேள்விகள் வாளாய் தாக்க சுலோக்ஷனா பயந்து போனார்.
“நீ எதுவும் பேசவேண்டாம். ஏதாவது பேசின நான் அங்க இருப்பேன் அடுத்த நிமிஷம். அசிங்கம்…” என்றவர் அழைப்பை துண்டித்துவிட்டு ஜெயந்தனிடம் ஒற்றை விரல் காண்பித்து எச்சரிக்க வெளியே என்னவோ விழும் சத்தம்.
வீட்டில் வெளிய செய்பவர்கள் அனைவரையும் வெளியில் அனுப்பிவிட்டு தான் கணவரிடம் பேசவே ஆரம்பித்தார் சபர்மதி.
இப்போது யார் இந்த நேரத்தில் என்று வெளியே வந்து பார்க்க அலங்காரத்திற்கு ஆளுயரத்தில் வைக்கப்பட்டிருந்த பீங்கான் ஜாடியை தள்ளிக்கொண்டு கீழே மயங்கி விழுந்திருந்தாள் சௌபர்ணிகா.