சபர்மதி நொறுங்கி போய் அமர்ந்திருந்தார் மருத்துவமனையில். சௌபர்ணிகா கையில் தையல் போடப்பட்டிருக்க மயக்கத்தில் தான் இன்னும் இருந்தாள்.
ஜெயந்தன் அறையின் வெளியில் நிற்க அவருடன் ஒருவார்த்தையும் சபர்மதி பேசவில்லை.
தன்னுடைய அறையிலிருந்து சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தவரின் விழிகள் அப்படியே அதிர்ச்சியில் நின்றுவிட்டது.
மகள் மயங்கி விழுந்திருக்க உடைந்த பீங்கான் ஜாடியின் ஒரு பகுதி ஏற்கனவே காயமாகியிருந்த கையில் இன்னும் ஆழமாய் குத்தியிருந்தது.
“பயப்பட ஒண்ணுமில்லை. கை நரம்பு எதுவும் அறுபடலை. ஆனாலும் காயம் ஆழம். தையல் போட்டாச்சு. பத்திரமா பார்த்துக்கோங்க…” என்று சொல்லி சென்றிருந்தார் மருத்துவர்.
மகளின் தலையை வருடியபடி இருந்த சபர்மதிக்கு உள்ளூர தவிப்பு. தங்களுடைய பேச்சுக்கள் எதையும் மகள் கேட்டிருந்தால்?
அந்த நினைப்பே அவரை கொன்று குவித்தது. இந்த வயதில் அவள் கேட்கவேண்டிய விஷயமா இது? என மனது கொதித்தது.
மாலையாகிவிட்டது. இஷாந்த் வந்து பார்த்துவிட்டு ஜெயந்தனை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றுவிட்டான்.
வீட்டில், தங்கையின் பள்ளியில் நடந்தது எதுவும் அவனுக்கு தெரியவில்லை. நள்ளிரவு வரை சௌபர்ணிகா கண்விழிக்கவே இல்லை.
அடுத்தடுத்து தான் கண்டுவிட்ட அதிர்ச்சியில் மூளையும், மனதும் வேலை நிறுத்தம் செய்திருக்க அவளால் அதிலிருந்து மீள முடியவில்லை.
சௌபர்ணிகா நடுநிசியில் கண் விழித்து பார்க்க சபர்மதி அமர்ந்தவிதத்தில் உறங்கி போயிருந்தார்.
தாயை பார்த்தவளுக்கு உதடுகள் அழுகையில் பிதுங்க அவரை எழுப்பவும் மனமில்லாது அவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
கையின் வலி, மனதின் வலி, நடந்தவைகளின் நினைவுத்தடம் என்று மாறி மாறி அவளை அலைகழிக்க,
“சௌபிம்மா, குட்டி என்னடா?…” என மகளின் கன்னம் பற்றி அவர் கேட்க சௌபர்ணிகா உடல் அனலாய் கொதித்தது.
“ம்மா…” என்றவளுக்கு பேசமுடியவில்லை.
தொண்டை எல்லாம் வலித்து மூச்சடைக்க, சுவாசத்திற்கே திணறியவளுக்கு மீண்டுமொரு மயக்கம்.
“சௌபி…” என மகளை எழுப்ப பார்த்தவர் மருத்துவரை அழைக்க அவர் வந்து பரிசோதித்துவிட்டு,
“ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்காங்க. அதான் அழுகையும், மயக்கமும். சரியாகிடும்…” என்று சொல்லிவிட்டு செல்ல அதற்கு மேல் பொட்டு உறக்கமில்லை சபர்மதிக்கு.
விடியும்வரை மகளையே பார்த்துக்கொண்டிருந்தவர் காலையில் ஜெயந்தனின் வருகையை திரும்பாமலே கவனித்தார்.
“மதி உனக்கு ட்ரெஸ், மத்த திங்க்ஸ் எல்லாம் கொண்டு வந்திருக்கேன். ப்ரெஷாகிட்டு வா…” என்றார் ஒரு பேக்கை நீட்டி.
“இதை எல்லாம் எடுத்துட்டு வரக்கூடாதுன்னு எதுவும் சொல்லி என்னை தள்ளி வச்சிடாத மதி…” என்று கூடுதலாய் சேர்த்து சொல்ல,
“கண்டிப்பா சொல்லமாட்டேன். இதை எல்லாம் கண்டிப்பா எனக்கு நீங்க செஞ்சு தான் ஆகனும். ஏன் வேற யாருக்கும் செய்யற ஐடியா இருக்கா என்ன?…” என்றவரின் குத்தல் பேச்சில் பதறி மகளை பார்த்தார் ஜெயந்தன்.
“பொண்ணு முழிச்சிக்க போறா மதி. எங்க வச்சு என்ன பேசற?…”
“நேத்து அந்த பொண்ணு ஞாபகம் இருந்ததா உங்களுக்கு? இவ்வளோ பதறி போறீங்க…” என்றவர்,
“ஆனா என்னோட பயமெல்லாம் எங்க என் பொண்ணு நேத்து நாம பேசினதை கேட்டிருப்பாளோன்னு தான். அப்படி மட்டும் என் பொண்ணுக்கு தெரிஞ்சது…” என கூறி,
“நான் ஏற்கனவே செத்துட்டேன். திரும்ப ஒருதடவை சாக உடம்பில தெம்பில்லை. என் பிள்ளைங்களுக்காகவாவது நான் உயிரோட இருக்கனும்…” என்று உணர்வற்ற பார்வையுடன் ஜெயந்தனிடம் முடித்தார்.
“உன் கால்ல வேணும்னாலும் விழறேன் மதி. நான் பண்ணினது பெரிய தப்பு தான்…” என மீண்டும் சொல்ல,
“ப்ச், அனாவசிய பேச்சு எனக்கு தேவை இல்லை. ட்ரைவர்கிட்ட என்னோட பர்சனல் போனை குடுத்து விடுங்க. மாத்தி பிஸ்னஸ் நம்பரை கொண்டு வந்துட்டான் இஷாந்த். இப்ப நீங்க கிளம்பலாம்….” என்று சொல்லியவர் அங்கிருந்த குளியலறைக்கு சென்று புகுந்துகொண்டார்.
ஜெயந்தன் செய்வதறியாமல் தவித்து பார்த்துவிட்டு மகளை பார்த்தார். கைகள் நடுங்க மகளின் தலையை வருடியவர் மனதும் நேற்றைய விஷயம் எதுவும் மகள் அறிந்திருக்க கூடாது என்றே வேண்டிக்கொண்டது.
ஒரு பெருமூச்சுடன் ஜெயந்தன் வெளியேறி செல்ல அறையின் நிசப்தத்தில் மெல்ல கண் விழித்தாள் சௌபர்ணிகா.
‘ம்மா எனக்கு தெரிஞ்சதுன்னு கண்டிப்பா உங்ககிட்ட சொல்லமாட்டேன். எனக்கு தெரியாதது உங்களுக்கு நிம்மதியை குடுக்கும்ன்னா எனக்கு தெரியலைன்னே இருக்கட்டும்.’
மானசீகமாக நினைத்துக்கொண்டவளுக்கு அந்த வயதில் அத்தனை பெரிய பாரத்தை தாங்க முடியவில்லை.
கதவு திறக்கப்பட்டு சபர்மதி வெளியே வரும் அரவம் கேட்க மீண்டும் கண்களை மூடிக்கொண்டாள் சௌபர்ணிகா.
முகம் கழுவிவிட்டு வந்து மகளின் அருகில் வெகுநேரம் அமர்ந்திருந்தவர் கைபேசியை ட்ரைவர் கொண்டுவந்து தந்துவிட்டு சென்றார்.
செல்லும் முன்பு பள்ளியில் இருந்து வரும்பொழுதே சௌபர்ணிகா கையில் காயம் இருந்ததையும் சொல்ல,
“ஏன் நேத்தே சொல்லலை? எப்படி அடிபட்டுச்சுன்னு தெரியுமா?…” என்றார் சபர்மதி.
“கார்ல ஏறும்போது தான் பார்த்தேன் மேடம். பாப்பா எதுவும் சொல்லலை. வீட்டுக்கு போங்கன்னு பாப்பா சொல்லவும் நான் கூட்டிட்டு வந்தா கொஞ்ச நேரத்துல மயங்கிருச்சு…” என்றார் அவர்.
“சரி, நீங்க போங்க…” என்ற சபர்மதி யோசனையுடன் மகளை பார்க்க அதற்குள் பள்ளியில் இருந்து அழைப்பு வந்துவிட்டது அவருக்கு.
“சௌபர்ணிகா அம்மாவா?…” என்ற குரலில்,
“ஆமா. நான் தான்….” என்றார் சபர்மதி.
“மேம், நாங்க உங்க பொண்ணோட ஸ்கூல்ல இருந்து பேசறோம்….”
“சொல்லுங்க என்ன விஷயம்?…”
“உங்க பொண்ணு நேத்து ஸ்பெஷல் க்ளாஸ்க்கு வந்தப்போ எங்க டீச்சிங் ஸ்டாஃபை காம்பஸால குத்தியிருக்கா. எக்ஸாம் சரியா எழுதலைன்னு கேட்டதுக்கு ஆர்க்யூ பண்ணினவ கோவத்துல அந்த பேப்பரை கிழிச்சு போட்டுட்டு அவர் கையையும் குத்தியிருக்கா….” என்று சொல்ல சபர்மதியால் நம்ப முடியவில்லை.
“உங்க பொண்ணோட கிளாஸ் டீச்சர் விநாயகம் கை பலமா காயப்பட்டிருக்கு. நீங்க உங்க பொண்ணோட நாளைக்கு ஸ்கூலுக்கு வரனும். என்கொயரி இருக்கு…” என்று கடுமையாக சொல்லிவிட்டு வைத்துவிட சபர்மதி இன்னும் அதிர்வில் இருந்து மீளவில்லை.
‘என்ன நடந்திருக்கும் சௌபி கோபப்படற அளவுக்கு அந்த டீச்சர் என்ன சொல்லியிருப்பார்?’ இப்படித்தான் யோசித்தார் சபர்மதி.
மனதிற்குள் என்னென்னவோ தோன்றி மறைய தாயாய் அவர் உடல் ஒருமுறை குலுங்கியது.
“சௌபி…” என நடுக்கத்துடன் மகளை பார்க்க சௌபர்ணிகாவும் விழித்து தாயை தான் பார்த்திருந்தாள்.
“சௌபிம்மா முழிச்சிட்டியா? இப்ப எப்படிடா இருக்கு?…” என மற்ற எதையும் உடனே கேட்காமல் அவளின் உடல் நலனை கேட்க,
“ம்மா…” என்றவள் தன் கை நீட்டி இன்னும் அருகில் வரும்படி தாயிடம் பார்வையால் இறைஞ்ச,
“ஒன்னுமில்லடா. அம்மா இருக்கேன்ல. பயப்பட கூடாது. எதுவுமே இல்லை. கை காயமும் சரியாகிடும்…” என்று மகளை நெஞ்சோடு அணைத்துக்கொண்டவர் உள்ளத்தை மகளின் கதறல் உலுக்கியது.
“ம்மா, அந்த ஸார் அவன்…” என சொல்லமுடியாமல் அழ,
“எதையும் சொல்லிடாத சௌபி, அம்மா தாங்கமாட்டேன்…” என்ற சபர்மதியின் குரல் அவருக்கே கேட்கவில்லை.
தான் உடைந்து போய்விட்டால் மகளை யார் தேற்றுவதாம்? அனைத்தையும் உள்ளே போட்டுக்கொண்டு இரும்பாய் நிமிர்ந்து நின்றவர் கண்ணில் வழியும் கண்ணீரை உள்ளிழுத்துக்கொண்டார்.
“சரியாகிடுச்சு. அம்மா இருக்கேன்ல…” என மகளின் உச்சந்தலையில் முத்தமிட்டவர் சௌபர்ணிகாவின் முகத்தை துடைத்துவிட்டார்.
“ம்மா அங்க…” என்றவளின் பேச்சை விரல் கொண்டு தடுத்தவர்,
“இப்ப எதுவும் பேச வேண்டாம். டாக்டர் வந்திருவாங்க. அதுக்கு முன்னாடி நீ ப்ரெஷாகிக்கோ. சாப்பிட்டுடு. மனசை அமைதியா வச்சுட்டு அப்பறமா நிதானமா சொல்லு. அம்மா இங்க தானே இருக்கேன்…” என சொல்லவும் தலையசைத்தாள் சௌபர்ணிகா.
அவளை குளியலறை அழைத்து சென்று முகம் கழுவ வைத்து அழைத்து வந்தவர் உணவை தருவித்து ஊட்டி முடிக்க அதற்குள் மருத்துவரும் வந்துவிட்டார்.
“நடக்கும்போது பார்த்து நடக்கனும். பாரு, நீ கீழ விழுந்து கைல அடி படவும் ரத்தத்தை பார்த்த பயத்துல மயங்கியிருக்க…” என்றார் மருத்துவர் சௌபர்ணிகாவிடம்.
“ஓகே டாக்டர்…” என்றாள் சௌபர்ணிகா.
“இன்னும் ரெண்டு பாட்டில் ட்ரிப்ஸ் போட்டுக்கலாம். ஈவ்னிங் டிஸ்சார்ஜ் பண்ணிடுவோம்…” என்று சொல்லிவிட்டு செல்லவும் சில நொடிகள் அறையில் மௌனம்.
“எனக்கு அந்த நிமிஷம் ஏதாவது பண்ணிடனும்ன்னு தான் அவன் கையில குத்திட்டேன் ம்மா. அப்பறம் தான் பயமாகிருச்சு. நான் தப்பு பண்ணலை தான். ஆனா ஸ்கூல்ல என்ன சொல்லுவாங்களோ, இனி எல்லாரும் என்னை என்னன்னு பார்ப்பாங்க ம்மா?…” என்றாள் கலக்கத்துடன் சௌபர்ணிகா.
“எப்படி பார்ப்பாங்களா? போல்டா நீ அதை ஹேண்டில் பண்ணியிருக்கன்னு பிரமிச்சு பார்க்கனும். சரியான சிந்தனை இருக்கறவங்க அப்படித்தான் பார்ப்பாங்க. குதர்க்கமா யோசிக்கிறவங்க எப்படி நினைச்சா நமக்கென்ன சௌபி?…” என்ற சபர்மதி,
“நாளைக்கு ஸ்கூலுக்கு போறோம். நீ தைரியமா இரு…” என்றார்.
அதற்குமேல் மகளிடம் எப்போது வீட்டிற்கு வந்தாள் என்ன என கேட்க நினைத்து கேட்க முடியாமல் முகத்தில் அலைப்புறுதல்.
கணவரிடம் அத்தனை நிமிர்வாய் நின்ற பெண்மணி மகளின் முன் குழந்தையாய் தவித்து போனார்.
அவரின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த சௌபர்ணிகா மனது தாயின் சஞ்சலம் கண்டு,
“அதை சொல்ல வரும்போது தான் படியேறும் போதே தலை சுத்தி ஜாடி மேல விழுந்து இப்படி ஆகிடுச்சு. உங்களை கூப்பிட வேகமா வந்தேன்…” என்று சொல்ல சபர்மதி முகத்தில் நிம்மதி பரவியது.