‘என் பொண்ணுக்கு எதுவும் தெரியலை. எனக்கு இது போதும். இதுமட்டும் போதும். அவங்க நிம்மதியா இருக்கட்டும்’ என மானசீகமாய் நினைத்துக்கொண்டவர் முகம் தெளிந்தது.
தெளிந்தவரின் முகம் பள்ளியில் நடந்த விஷயத்தில் இறுகியது. மறுநாளே சௌபர்ணிகாவை அழைத்துக்கொண்டு பள்ளிக்கு சென்றவர் நேராக பள்ளியின் உரிமையாளர் அறைக்கு சென்றுவிட்டார்.
“மேம் நீங்க பிரின்ஸிபால் ரூம்ல வந்து வெய்ட் பண்ணுங்க…” என்று சௌபர்ணிகாவின் ஆசிரியரில் ஒரு பெண் வந்து சொல்ல,
“இல்லை. இங்கயே பேசலாம்…” என்று சொல்லியவர் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்துவிட,
“தப்பு பண்ணினது உங்க பொண்ணு. உங்க பொண்ணை கண்டிச்சு வைப்பீங்கன்னு பார்த்தா இப்படி பன்றீங்களே நீங்களே. நீங்க பெரிய இடம்ன்னு இங்க பார்க்கமாட்டோம் மேம். இங்க டிஸிப்ளின், டிக்னிட்டி தான் முக்கியம்…” என சபர்மதிக்கு பாடம் எடுத்துக்கொண்டிருக்க விஷயம் கேள்விப்பட்டு முதல்வர் அங்கே வந்துவிட்டார்.
“இங்க என்ன மேம் பன்றீங்க? எங்க மேம் வந்தா பிரச்சனையாகிரும். எதுவானாலும் என் ரூம்க்கு வாங்க…” என்றார் முதல்வர்.
“உங்க மேம் இப்ப வந்திருவாங்களா?…” என சபர்மதி கேட்டுக்கொண்டிருக்கும் பொழுதே பள்ளியின் உரிமையாளர் புவனேஸ்வரி வந்துவிட்டார்.
“குட்மார்னிங் மேம்…” என முதல்வர் அவரிடம் சொல்ல,
“மார்னிங்….” என்றவர் சபர்மதியை பார்த்து,
“உட்காருங்க. நீங்க யார்?…” என்றார் அவர்.
“நான் சௌபர்ணிகா அம்மா. இன்னைக்கு என் பொண்ணு மேல என்கொயரி இருக்குன்னு வர சொன்னாங்க உங்க ஸ்கூல்ல இருந்து. அதான் என் பொண்ணோட வந்திருக்கேன்…” என்றார் சபர்மதி.
அவரின் பேச்சும் தோரணையும் மற்றவர்களை புருவம் உயர்த்த செய்தது. புவனேஸ்வரி தலையசைத்துவிட்டு,
“என்ன பேசறீங்க நீங்க? உங்க பொண்ணு அவளுக்கு பாடம் சொல்லி குடுக்கற வாத்தியாரையே தாக்கி இருக்கா. நீங்க என்னனா இப்படி நடந்துக்கறீங்க?…” என்றார் அவர்.
“என்கொயரியை இங்கயே வச்சுக்கலாம்ன்னு சொல்றேன். இது ரூடா? ஓகே, இதை நான் லீகலா பேஸ் பன்றேன்….” என எழுந்துகொண்ட சபர்மதியை பதறி போய் பார்த்தார்கள் அங்கிருந்தவர்கள்.
“மேம், ப்ளீஸ் உட்காருங்க….” என ஆசிரியை சொல்ல,
“என்ன மிரட்டறீங்களா? நீங்க ஸ்டேஷன் போனா உங்க பொண்ணு ப்யூச்சர் தான் ஸ்பாயில் ஆகும். பரவாயில்லையா?…” என்று புவனேஸ்வரி கேட்க,
“இவ்வளோ தூரம் நான் சொல்லும் போதே தப்பு யார் பக்கமிருக்கும்ன்னு யோசிக்கமாட்டீங்களா மேம்?…” என சபர்மதி அமர்த்தலாக கூறவும் அனைவரின் முகத்திலும் குழப்பம்.
“நீங்க என் பொண்ணுக்கு ஒரு சப்ஜெக்ட் எடுக்கறீங்க தானே?…” என அங்கிருந்த ஆசிரியையிடம் சபர்மதி கேட்க,
“எஸ் மேம்…” என்றார் அவர்.
“என் பொண்ணு எப்படி படிப்பா?…”
“பர்ஸ்ட் கிளாஸ் ஸ்டூடன்ட். கண்டிப்பா ஸ்கூல் பர்ஸ்ட், ஸ்டேட் பர்ஸ்ட் வரக்கூடிய பொண்ணு…” என்று சொல்லும் பொழுது தான் அவரின் மூளையிலும் அந்த கேள்வி உரைத்தது.
“ஏதாவது புரிஞ்சதா?…” சபர்மதி கேட்கவும் அவர் தலையசைக்க,
“அந்த ஸார் யாருன்னு பார்க்கலாமா? வர சொல்றீங்களா?…” என்றதும் சற்று நேரத்தில் விநாயகம் வந்தார் கையில் கட்டுடன்.
சபர்மதியையும், அவரின் அருகில் இன்றும் அதே ஆவேச பார்வையும், கோபமுமாய் திமிர்ந்து நின்ற சௌபர்ணிகாவையும் பார்த்தவருக்கு பதட்டம் கூடியது.
சபர்மதியின் கொந்தளிப்பு விநாயகத்தை, அவரின் வயதை பார்த்ததும் இன்னும் அதிமானது.
கைகளை இறுக்கி நிதானத்திற்கு வந்தவர் மகளை திரும்பி பார்த்து தைரியமூட்டினார்.
மீண்டும் அதே ஆசிரியையை தங்களிடம் சொல்லியதை விநாயகத்திடன் முன்பும் சொல்ல வைத்து,
“அப்படி படிக்கிற பொண்ணு எதுக்காக அந்த ஸார் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம கோபப்பட்டு பேப்பரை கிழிச்சு போட்டு அவர் கையை குத்தனும்?…” என்ற கேள்விக்கு யாரிடமும் பதிலில்லை.
“அன்னைக்கு உங்க பொண்ணு எதுவுமே சரியா எழுதலை. எப்பவும் நல்லா படிப்பியே இப்ப என்னாச்சுன்னு கேட்டேன். அந்த கோவத்துல…” என விநாயகம் சொல்ல அவரை தீயாய் முறைத்தார் சபர்மதி.
“என் பொண்ணு சரியா எழுதலையா? ஓகே, இருக்கட்டும். இப்ப அதே கொஷின் பேப்பரோ, இல்லை வேற ஏதாவது அந்த சப்ஜெக்ட்ல இருந்து கேள்வியோ கேளுங்க. இப்ப இந்த இடத்துலயே என் பொண்ணு எழுதுவா. கேட்கறீங்களா?…” என்றவர்,
“என்ன சௌபி?…” என கேட்கவும்,
“எஸ். நான் எழுதுவேன். கேக்கலாம்…” என்றாள் சௌபர்ணிகாவும் தெள்ளத்தெளிவாய்.
அவளின் நிமிர்விலும், துணிச்சலிலும், அச்சமில்லாத பேச்சிலும் முதல்வர் மற்றும் புவனேஸ்வரி இருவரின் பார்வையே மாறியது.
“நாங்க எங்க என்கொயரி பண்ண? நீங்க தான் பண்ணிட்டிருக்கீங்க?…” என நக்கலும், எரிச்சலுமாக புவனேஸ்வரி சொல்ல,
“வெல் அப்படியே கூட இருக்கலாம். எங்க மேல தப்பில்லைன்னு நாங்க தான் சொல்ல முடியும். அன்னைக்கு என்ன நடந்ததுன்னு உங்க ஸ்டாஃப் ஒரு கதை சொல்லிட்டார். உண்மையை நீங்க பார்த்து தெரிஞ்சுக்கோங்க…” என்றவர்,
“மேம் நீங்க வாங்க…” என முதல்வரை அழைத்த சபர்மதி,
“சௌபி நீ சொல்லு…” என்று சொல்ல சௌபர்ணிகா சொல்லவில்லை. செய்தே காண்பித்தாள் விநாயகம் தன்னிடம் நடந்துகொண்டதை.
பெண்ணுக்கு பெண்ணாய் தனக்கு தாய் வயதில் இருப்பவரை அப்படியாக தொட்டு காண்பித்ததிலேயே சௌபர்ணிகா கூசி போக,
“ம்மா…” என்று ஓடி வந்து தாயை அணைத்துக்கொண்டாள்.
“இப்ப என்ன சொல்றீங்க? என்ன செய்யலாம்?…” என்ற சபர்மதியின் குரலே உடைந்து போனது.
அனைவருக்குமே இது அதிர்ச்சியான விஷயம் தான். புழுவை போல விநாயகத்தை பார்த்தவர்கள்,
“ஸாரி மேம். நாங்க தப்பா புரிஞ்சுக்கிட்டோம்…” என்று சபர்மதியிடம் மன்னிப்பு கேட்டார் புவனேஸ்வரி.
“யார் என்ன சொன்னாலும் அதை அப்படியே நம்பிடுவீங்களா? தப்பு என் பொண்ணே பண்ணியிருந்தாலும் நீங்க தீர விசாரிச்சிருக்கனும். அதை செய்யாம…” என்றவர் பல்லை கடித்துவிட்டு,
“ப்ச், இதை பேசவேண்டாம். அப்பறம் டிசி பத்தி சொன்னீங்க இல்லையா? கண்டிப்பா வாங்கிட்டு தான் போவேன். ஆனா இந்த டென்த் எக்ஸாம் முடிஞ்சதும். எவ்வளோ ஈஸியா சொல்றீங்க டிசி வாங்கிக்கோன்னு…” என சபர்மதி பல்லை கடிக்க,
“மேம் அப்படியெல்லாம் இல்லை. சௌபர்ணிகா இங்கயே கண்டினியூ பண்ணட்டும். எங்களுக்கு நோ அப்ஜெக்ஷன்…” என்றார் முதல்வர்.
“நீங்க அப்ஜெக்ஷன் பன்றதுக்காக எல்லாம் நான் சொல்லலை. என் பொண்ணு இங்க தான் டென்த் எக்ஸாம் எழுதுவா. முடிஞ்சதும் நான் வேற ஸ்கூல் மாத்திக்கறேன். இதுக்காக என் பொண்ணோட படிப்பையும், அவ பட்ட கஷ்டத்தையும் பாழக்க முடியாது. அதுக்கடுத்து இந்த ஸ்கூல் அவளுக்கு தேவையும் இல்லை….” என்றவர்,
“அப்பறம் இவரை என்ன செய்ய போறீங்க?…” என விநாயகத்தை காண்பிக்க,
“நாங்க ஆக்ஷன் எடுக்கறோம் மேம். இப்ப எக்ஸாம் நெருங்குது. முடியட்டும். கண்டிப்பா ஆக்ஷன் எடுக்கறோம்…” என முதல்வர் சொல்ல,
“ஓஹ், ஓகே. அப்போ நான் போலீஸ் கம்ப்ளைண்ட் குடுத்திடறேன்….” என்றார் சபர்மதி வெகு இலகுவாக.
“மேம்…” என்று புவனேஸ்வரி பதறி எழ,
“இந்த ஸ்கூல் டீச்சர்ன்னு தான் புகார்ல வரும். உங்க ஸ்கூல் நேம் பாழாகிடும்ன்னு எவ்வளோ பதட்டம் உங்களுக்கு?…” என்று நக்கலாக கேட்ட சபர்மதி,
“இந்தமாதிரி அயோக்கியனுங்க மத்தியில பெண் குழந்தைங்களுக்கு தான் பாதுகாப்பு இல்லை. என் பொண்ணு எதிர்த்து நின்னுட்டா. ஆனா இங்க எத்தனை பொண்ணுங்க வெளில சொல்ல முடியாம கஷ்டப்படறாங்களோ? இப்படி ஒருத்தன் எங்கயும் வேலை பார்க்க கூடாது….” என்றவர் கை கட்டி நின்றுவிட்டார்.
“என்ன செய்யலாம்னு நீங்களே சொல்லுங்க. கம்ப்ளைன்ட் குடுக்கவா? இல்லை நீங்க இப்ப ஆக்ஷன் எடுக்கறீங்களா?…” என கேட்டவர்,
“நீங்க ஸ்கூல் வச்சு நடத்தறீங்க. நான் பட்டு மாளிகை வச்சு நடத்தறேன். நானுமே செல்வாக்கான ஆளு தான் மேம்…” என்றார் கம்பீரத்துடன்.
புவனேஸ்வரிக்கு வேறு வழியிருக்கவில்லை. விநாயகத்தின் மேல் அவ்வளவு கோபம் இருந்தாலும் நல்ல ஆசிரியர் அவர். தனக்கு ஒருவகையில் சொந்தமும் கூட.
செய்வதறியாமல் அவர் நிற்க சபர்மதி அவரை பார்த்துவிட்டு மகளுடன் வெளியேற பார்த்தார்.
“மேம், நில்லுங்க. இப்பவே நான் பயர் பன்றேன்…” என்ற புவனேஸ்வரி முதல்வரை பார்க்க,
“பண்ணிடலாம் மேம்…” என அதற்கு ஆவன செய்ய ஆரம்பித்தார்.
“அதுக்கு முன்னாடி…” என்ற சபர்மதி யாரும் எதிர்பாராத நேரத்தில் விநாயகத்தை நெருங்கி கன்னத்தில் பொளீர் என்று வைக்க காது கிழிந்தது அவருக்கு.
ஒரே அறையில் கண்ணில் நீர் கட்டிவிட தலையெல்லாம் கிறுகிறுத்து நின்றார் விநாயகம்.
“தொலைச்சிடுவேன் ராஸ்கல்…” என மீண்டும் ஒரு அறை விட்டு வெளியேறினார் சபர்மதி.
அந்த வருடத்தின் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் மாவட்டத்தில் முதலாவதாக தேர்ச்சி பெற்றாள் சௌபர்ணிகா.
சபர்மதி சொல்லியதை போல பதினொன்றாம் வகுப்பிற்கு வேறு பள்ளிக்கு மாற்றிக்கொண்டார்.
எத்தனையோ சொல்லி பார்த்தனர் பள்ளி நிர்வாகத்தினரும், சௌபர்ணிகாவின் ஆசிரியர்களும்.
சபர்மதி மறுத்துவிட்டார். வீட்டில் நடந்த விஷயத்தை மறைக்கவில்லை அவர். முக்கியமாக ஜெயந்தனிடம்.
“வயசானா அறிவு மழுங்கி வேற விதமா தான் தோணும் போல. இப்படி ஜென்மங்கள் இருக்கறதுக்கு செத்து ஒழியலாம்…” என்று சொல்லிவிட்டு செல்ல மகளின் பாராமுகத்தில் செத்து தான் போனார் மனதளவில்.
மகளின் ஒதுக்கத்திற்கு காரணம் அந்த நிகழ்வு தான் என்று நினைத்தவர் பழையபடி தன்னிடம் கலகலப்பாக மகள் பேசுவாளா என முயன்று பார்க்க அவரிடம் மட்டுமல்லாது அனைத்திலிருந்தும் சௌபர்ணிகா விலகி நின்றாள்.
தாயின் நெருங்கிய தோழியே தன் தகப்பனை அபகரிக்க முயன்றது. அதற்கு மயங்கி தகப்பனும் ஒழுக்க நிலைபிறழ்ந்து போனது.
நல்லதை கற்று தரவேண்டிய ஆசிரியரே அத்துமீற முயன்றது, விஷயம் வெளியே தெரியவர பழியை போடவும் தயங்காதது என எல்லாம் அவளை நெருக்கியது.
தோழிகள் வட்டமே இல்லாது வளர்ந்தாள். அது அவளுக்கு தேவையாய் இருக்கவும் இல்லை.
எதுவும் பேசவேண்டும் என்றால் தாயிடம், அண்ணனிடம். இஷாந்தும் தங்கையின் மனதறிந்து நடந்துகொண்டான்.
சௌபர்ணிகா வாழ்வில் நம்பிக்கை என்ற வார்த்தை கேள்விக்குறியானது. நாளடைவில் பெரும் இறுக்கத்திற்குள் சென்று ஒடுங்கிவிட்டாள்.
இத்தனை வருடத்தில் தந்தையை பற்றிய உண்மையும் தனக்கு தெரியும் என காட்டிக்கொள்ளாமல் தாய்க்காகவே மனதிற்குள் வைத்து புதைத்துவிட்டு நடமாடினாள்.
அவ்வளவு இறுக்கத்திலும், கடந்து சென்ற சில வருடங்களில் பாறையாய் மாறியிருந்த சௌபர்ணிகாவின் மனதின் இடுக்கில் புன்னகை பூவாய் ஆரோன் ரிஷபன்.
ஆம், அவனை பிடித்திருந்தது ஏதோ ஒரு வகையில். காரணமின்றி, கணிப்புகள் இன்றி, எவ்வித அபிப்பிராயங்களும் இன்றி அவளின் மனதிற்குள் அவன் நின்றிருந்தான்.